Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 14

kanavukku en azhudhai

கையெழுத்து போட்டவன், பெட்டியை அங்கே இருந்த மேஜை மீது வைத்ததை மறந்து போய், பர்ஸை மட்டும் எடுத்துக் கொண்டு காருக்கு வந்தான். காரை ஸ்டார்ட் செய்து கிளம்பி ஆபீஸிற்கு வந்தான்.

அவனைப் பார்ப்பதற்காக வந்திருந்த முக்கியமான நபர்களுடன் பேசி முடித்து அவர்களை அனுப்பிய பிறகுதான் பெட்டியின் நினைவு வந்தது.

காரில்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் காருக்குச் சென்று கார் கதவைத் திறந்த உள்ளே பார்த்தவனுக்கு அதிர்ச்சி. பெட்டி அங்கே இல்லை. பரபரவென்று தேடினான். கிடைக்கவில்லை. “கடவுளே” நெஞ்சில் இடி விழுந்தது போல் ஆனான்.

காரை விட்டு இறங்கி ஆபீஸிற்குள் தன் அறையை நோக்கி நடந்தான். தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு டென்ஷனாக இருந்தான்.

“ஸார்” குரல் கேட்டதும் நிமிர்ந்தான். ஒரு இளைஞன் நின்றிருந்தான். அடர்ந்த தலைமுடி... முகத்தில் பயம் கலந்த ஒரு குழந்தைத் தனம் தென்பட்டது. நிறம் சற்று கறுப்பு எனினும் களை பொருந்திய முகம்.

“நான் இப்ப யாரையும் பார்க்கற மனநிலையில் இல்லை. ஐ ஆம் வெரி ஸாரி...”

“என்ன ஸார், அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்களா?”  இந்தாங்க ஸார் உங்க பெட்டி. பெட்ரோல் பங்க்ல க்ரெடிட் கார்ட் சைன் பண்ணிட்டு பர்ஸை மட்டும் எடுத்துக்கிட்டு, பெட்டிய டேபிள் மேலயே வச்சுட்டு வந்துட்டீங்க. நான் கூப்பிடக் கூப்பிட நீங்க காரைக் கிளப்பிப் போயிட்டீங்க. நான் கூப்பிட்டது உங்க காதில விழலை. இதில உங்க பேர், அட்ரஸ் எல்லாம் இருக்கு. அதனால உங்ககிட்ட ஒப்படைச்சிடலாம்னு கொண்டு வந்தேன் ஸார்.”

பெட்டியைப் பார்த்ததும் போன உயிர் திரும்ப வந்தது போலிருந்தது தியாகுவிற்கு.

“உட்காருங்க தம்பி. ரொம்ப தாங்க்ஸ். இதைக் காணோம்னு தான் டென்ஷனா இருந்தேன். அது சரி, இது எப்படி உங்க கைக்கு?”

“நீங்க உங்க காருக்கு பெட்ரோல் போடற அந்த பங்க்ல தான் ஸார் நான் வேலை பார்க்கறேன். உங்களுக்கு பில் போட்டுக் குடுத்ததும் நான்தான். அப்போ நான் ட்யூட்டியில இருந்ததுனால யூனிஃபார்ம் போட்டிருந்தேன். அதனால உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலைன்னு நினைக்கிறேன்.”

“இருக்கலாம். தம்பி, நான் ஒண்ணு கேக்கறேன். தப்பா நினைச்சுக்காதே... உன்னைப் பார்த்தா பெட்ரோல் பங்க்ல வேலை செய்யக் கூடியவனா தெரியலை. பெரிய வீட்டுப் பிள்ளை மாதிரி இருக்கியே.”

“அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லை ஸார். அப்பா இல்லை. எங்க அம்மா என்னை ரொம்பக் கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க ஸார். கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிருக்கேன். ஆனா, அதுக்கேத்த வேலை கிடைக்கலை. இந்த படிப்பை படிக்க வைக்க எங்கம்மா பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை ஸார். அவங்க உடம்பு தேய என்னை வளர்த்தது மட்டும் இல்லை. மரியாதையான கல்வியும் எனக்குக் கிடைக்க வச்சாங்க. வீட்டு வேலை செஞ்சாங்க, சமையல் வேலை செஞ்சாங்க. கூடை... பின்னி வித்தாங்க. ராத்திரி, பகல்னு பார்க்காம உழைச்சாங்க. இப்ப அவங்களை சுகமா வச்சிருக்கணும்னு நான் ஆசைப்படறேன். ஆனா, இந்த வேலைதான் கிடைச்சது.”

“ஸாரி, உன் பேரைக் கூட கேட்க மறந்துட்டேன்.”

“என் பேர் பாஸ்கர் ஸார்.”

“உங்க அம்மா எங்கே இருக்காங்க?”

“திண்டுக்கல்லதான் நாங்க இருந்தோம். அம்மா இப்ப அங்கதான் இருக்காங்க. நான் மட்டும் வேலை தேடி இங்கே வந்தேன். நல்ல வேலை கிடைச்சா அம்மாவையும் இங்கே கூட்டிட்டு வந்துடணும்னு நான் நினைக்கிறேன். ஆனா, ஏனோ தெரியலை. அம்மா எந்த ஊருக்கும் வரமாட்டேன்னு சொல்றாங்க. இப்போதைக்கு இருக்கட்டும். கொஞ்ச நாள் கழிச்சு அவங்களை சம்மதிக்க வைக்கலாம்னு இருக்கேன். நான் பெட்ரோல் பங்க்ல வேலை செய்றேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டேன். கொஞ்ச கொஞ்சமா வேலைக்கு முயற்சி செய்யினு அம்மா அறிவுரை சொன்னாங்க. அம்மா வாக்கு வேத வாக்கு ஸார் எனக்கு. அவங்கதான் நான் கும்பிடற தெய்வம்...”

“அடேயப்பா! அம்மா மேல இவ்வளவு பாசமும், பக்தியும் வச்சிருக்கிறே! நீ எனக்கு செஞ்ச இந்த உதவிக்கு உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். உன்னோட படிப்புக்கு ஏத்த வேலையை என் ஆபீஸ்லயே போட்டுத் தரேன்.”

“நிஜமாவா ஸார்?!... ரொம்ப தாங்க்ஸ் ஸார்... நான் எதிர்பார்க்கவே இல்லை ஸார். இந்த விஷயத்தை இப்பவே எங்கம்மாகிட்ட சொல்லணும்னு ஆசையா இருக்கு ஸார்...”

“ஹலோ அம்மா பையன,` கொஞ்சம் பொறு. லஞ்ச் டைம் ஆச்சு. எங்க வீட்டிலதான் உனக்கு இன்னிக்கு லஞ்ச். வந்து சாப்பிட்டுட்டு நிதானமா உங்க அம்மாவுக்கு லெட்டர் எழுதிப் போடலாம், சரியா...”

“உங்க வீட்டுக்கா? அதெல்லாம் வேணாம் ஸார். எனக்கு உங்க ஆபீஸ்ல வேலை போட்டுத் தர்றேன்னு சொன்னதே பெரிய விருந்து சாப்பிட்ட மாதிரி ஸார்.”

“ம்கூம். நீ கண்டிப்பா இன்னிக்கு என் கூடத்தான் சாப்பிடணும். வா போகலாம்.”

பாஸ்கரின் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு காருக்குச் சென்றான் தியாகு. இருவரும் காரில் அமர்ந்தார்கள். தியாகுவின் வீட்டை நோக்கி கார் கிளம்பியது.

24

“கல்யாணி, கல்யாணி...” தியாகுவின் குரல் கேட்டதும் கல்யாணி டி.வி.யை நிறுத்திவிட்டு வந்தாள்.

அறிமுகம் இல்லாத ஒரு இளைஞன் தியாகுவுடன் இருப்பதைப் பார்த்தாள் கல்யாணி.

“கல்யாணி, இன்னிக்கு காலையில நீ என்கிட்ட ஞாபகமா குடுத்த பெட்டியை நான் மறந்த போய் பெட்ரோல் பங்க்ல விட்டுட்டு ஆபீஸ் போயிட்டேன். இந்தத் தம்பிதான் பார்த்து எடுத்துட்டு வந்து குடுத்தான்...”

“அடக்கடவுளே, அஞ்சு லட்ச ரூபா பணம், முக்கியமான ஃபைல்னு திரும்ப திரும்ப என்கிட்ட சொல்லிட்டு இப்படி பெட்ரோல் பங்க்ல விட்டுட்டு போயிருக்கீங்களே... உங்க பாஸ்போர்ட் கூட அதிலதாங்க இருந்துச்சு, நல்ல வேளை பத்திரமா கிடைச்சதே...”

“இந்த தம்பிக்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும்.”

“ரொம்ப தாங்க்ஸ் தம்பி, உங்க பேர்?”

“பாஸ்கர்ங்க, ஸார் சொல்ற மாதிரி பெரிசா எந்த உபகாரமும் நான் செய்யலீங்க. கண்ணில பட்டதை உரியவர்கிட்ட சேர்க்கறது சாதாரண மனுஷத் தன்மைதானேங்க?”

“உங்களுக்கு அது சாதாரணமாத் தெரியலாம். அந்தப் பெட்டியைப் பொறுத்தவரைக்கும் காணாமப் போன அது திரும்ப கிடைச்சதும், அதை நீங்க பொறுப்பா கொண்டு வந்து அவர்கிட்ட ஒப்படைச்சதும் சாதாரண விஷயம் இல்லை. கஷ்டமான நிலைமையில இருக்கிற நீங்க, பணத்தைப் பார்த்தும் கூட மனசு மாறாம அப்படியே கொண்டு வந்து குடுத்திருக்கீங்க.”

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel