Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்?

kanavukku en azhudhai

“உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை, என்கிட்டேயும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதனால குழந்தைபேறுக்கு எந்தத் தடையும் இல்லைன்னு நாம பார்த்த எல்லா டாக்டர்களும் சொல்றாங்க. ஆனா, இன்னும் நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கலியேங்க...” கவலையுடன் பேசிய சுசிலாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

“டாக்டர்களுக்கெல்லாம் மேல ஆண்டவன்னு ஒரு பெரிய டாக்டர் இருக்கானே. அவன் கண் திறக்கணுமே சுசிலா...”

“நான் போகாத கோயிலா, வேண்டாதா தெய்வமா? நான் இருக்காத விரதமா? பயன் ஏதும் இல்லாம சலிப்பா இருக்குங்க...”

“நம்பிக்கையை தளர விடாத சுசிலா. எதுக்குமே நேரமும், காலமும் கூடி வரணும்.” அதற்கு மேல் எதுவும் பேச முடியாதவராய், உள் அறைக்குச் சென்றார் சிவலிங்கம். தனது அறையில் அவருக்கென்று இருந்த அந்தரங்க அலமாரியைத் திறந்தார். அங்கே ஒரு அழகிய வெள்ளிப் பெட்டி இருந்தது. அதைத் திறந்தார். உள்ளே ஒரு இளம்பெண், புகைப்படத்தில் அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தப் புகைப்படத்தின் அருகே இரண்டு கருகமணிகள் இருந்தன.

சிவலிங்கத்தின் கண்கள் கலங்கின. ‘புஷ்பா, புஷ்பம் போன்ற உன்னைப் புழுதியில் வீசி எறிந்தேனே.. அதற்குரிய தண்டனையை அனுபவிச்சுக்கிட்டிருக்கேன்மா. கைதட்டி கூப்பிட்டா கைகட்டி வந்து நிற்கறதுக்கு ஆள், சமைக்கறதுக்கு ஆள், அதைப் பரிமாறுவதற்கு ஆள், வெயில் படாம வெளியே போறதுக்கு சொகுசு கார், இந்த மதுரையில் பங்களா, கோடை காலத்துல குளுகுளுன்னு தங்கறதுக்கு ஊட்டி, கொடைக்கானல்ல பங்களா, லட்சக்கணக்குல பேங்க் பேலன்ஸ் எல்லாமே நிறைஞ்சிருந்தும், எதுவுமே இல்லாதது போல என் வீடு சூன்யமா இருக்கே புஷ்பா. எங்க அப்பாவோட கண்டிப்புக்கு பயந்து, நம்ம காதலை அவர்கிட்ட சொல்லாம விட்டுட்டேன். அவர் பார்த்த பொண்ணு சுசிலா கழுத்துல தாலி கட்டி உன்னை ஏமாத்திட்டேன். அதுக்கான தண்டனையை கடவுள் குடுத்துட்டார் புஷ்பா. நீ எங்கே இருக்கியோ... எப்படி கஷ்டப்படறியோ... நிச்சயமா என் மேல உனக்குக் கோபம் இருக்கும். ஏழையான உன்கிட்ட ஆசை வார்த்தை சொல்லி, நான் கோழையாயிட்டேன் புஷ்பா...’

காலடியோசை கேட்டதும் அவசர அவசரமாக அலமாரியின் கதவைப் பூட்டினார். சுசிலா உள்ளே வந்தாள். கண்கள் சிவந்த நிலையில் சோகம் அப்பிய முகத்துடன் காணப்பட்ட சிவலிங்கத்தைப் பார்த்தாள். பதறினாள்.

“என்னங்க இது, என்னோட மன ஆறுதலுக்காக நான் உங்ககிட்ட பேசினா, நீங்க இவ்வளவு வேதனைப்படறீங்க...? நீங்க இந்த அளவுக்கு வருத்தப்படறீங்கன்னா, நான் இனிமேல் அதைப்பத்தி பேசவே மாட்டேங்க.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சுசிலா...”சமாளித்தார் சிவலிங்கம்.

“ரெண்டு நாள்ல உங்க அப்பாவோட நினைவு நாள் வருது. அதுக்குரிய வேலைகள் எல்லாம் தலைக்கு மேல் கிடக்கு. வாங்க, உட்கார்ந்து லிஸ்ட் போடுவோம். முதல்ல என்னென்ன வேலைகள் இருக்குன்னு எழுதுவோம். பிறகு அதுல இருந்து வாங்க வேண்டிய சாமான் லிஸ்ட் பிரிச்சு எழுதலாம்...”

சிவலிங்கத்தின் மனதை மாற்றுவதற்காக, முயற்சி எடுத்தாள் சுசிலா. பேப்பரும், பேனாவும் எடுத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள். சிவலிங்கமும் அவளைப் பின் தொடர்ந்தார். அவரது அப்பாவின் பெரிய சைஸ் படம் ஹால் சுவரில் மாட்டப்பட்டிருந்தது.

“உங்க அப்பா தெய்வமா இருந்து சீக்கிரமாவே நமக்கு ஒரு வாரிசு வரும்படி அருள்புரிவார்ங்க. அன்னதானம், ஆடை தானம் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்யணும்ங்க.”

“உன் இஷ்டப்படி என்னென்ன செய்யணுமோ, எல்லாம் செஞ்சுடலாம் சுசிலா.” வாயில் இருந்து பேச்சு வெளிப்பட்டாலும் உள் மனது புஷ்பாவையே சுற்றி வந்தது.

‘ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லி ஏமாத்தியாச்சு. இன்னொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு, அவகூட சந்தோஷமா வாழற மாதிரி ஏமாத்திட்டிருக்கேன். நான் வாழற இந்தப் பொய்யான வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? நெஞ்சுல ஒருத்தியோட நினைவை சுமந்துக்கிட்டு நேர்ல இன்னொருத்திகூட கடமைக்காக வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.’ விரக்தியின் பிரதிபலிப்பு அவரது பெருமூச்சில் வெளிப்பட்டது.

2

புகைப்படத்தில் கம்பீரமாக புன்னகைத்துக் கொண்டிருந்தார் சிங்காரவேலர். சிவலிங்கத்தின் தந்தை. இளைய மகன் சிவலிங்கத்தின் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றும் பொருட்டு, சிறு வயதிலிருந்தே அவன் விரல் நீட்டி சுட்டிக்காட்டும் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தார். பணபலம் நிரம்பப் பெற்ற அவரால், மகன் கேட்ட அனைத்தையும் அடைய வைக்க முடிந்தது. ஆனால், ‘ஏழைகளைக் கண்ணால் பார்ப்பது கூட பாவம்’ என்ற அகம்பாவமும், ஆணவமும் அடங்கிய அவரது மனம், மகனின் உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. தந்தையின் இந்த மனோபாவத்தால், ஒரு ஏழைப் பெண்ணைக் காதலித்த உண்மையை சிவலிங்கம் மறைத்துவிட நேர்ந்தது. அதன் விளைவு? அப்பாவின் ஆசைப்படி அவரது அந்தஸ்திற்கு சமமான குடும்பத்தைச் சேர்ந்த சுசிலாவைக் கைப்பிடிக்க நேர்ந்தது. ஏழைப் பெண்ணான புஷ்பாவைக் கைவிட நேரிட்டது.

பயம்... பயம். அந்தஸ்து வெறியரான அப்பாவிடம் புஷ்பா மீதான காதலை வெளியிடத் தடுத்தது பயம். அவரை மீறி புஷ்பாவைக் கல்யாணம் செய்து கொள்ளத் தடுத்தது அவர் மீது கொண்ட பாசம்... காதலுக்கும், பெற்ற பாசத்திற்கும் நடுவே எழுந்த போராட்டத்தில் பாசம் வெற்றி பெற்றது. பயம் அதற்குத் துணை புரிந்தது.

சிவலிங்கத்தின் குழந்தைகளைக் கண்டு மகிழ வேண்டும் என்ற சிங்காரவேலரின் ஆசை நிராசையானது. காலம் செய்த கோலம் அவரது உயிரை எடுத்துக் கொண்டது. அவர் உயிரோடு இருக்கும்வரை சிவலிங்கத்திற்கு குழந்தை பிறக்கவில்லை. அந்த ஏக்கம் சிங்காரவேலருக்கு அவரது மரணகாலம் வரை இருந்தது. அந்த ஏக்கத்திலேயே அவரது இதயமும் நின்றுபோனது.

மூத்த மகன் ராமகிருஷ்ணனைவிட, இளைய மகன் மீது அதிக ஒட்டுதலும், பாசமும் வைத்திருந்தார் சிங்காரவேலர். அந்த அளவற்ற பாசத்தை மீறி தன் காதலைப் பற்றிச் சொல்ல இயலாத மனநிலையில் தடுமாறினார் சிவலிங்கம். நினைவுகள் அளித்த துன்பத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தவித்தார் சிவலிங்கம்.

புஷ்பாவின் முகம் கண்ணுக்குள் தோன்றும்போதெல்லாம் இதயத்திற்குள் தோன்றும் ஒரு வலி. அந்த வலிக்கு வழி தேடியதே தனது கோழைத்தனம்தானே என்ற இயலாமை உணர்வில் உள்ளம் தவிர்த்தார்.

“என்னங்க, நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்... நீங்க எதுவுமே பதில் சொல்லாம இருக்கீங்க?” சுசிலாவின் குரல் கேட்டுத் தன் உணர்விற்கு மீண்டார் சிவலிங்கம்.

“என்ன சுசிலா? என்ன கேட்ட?”

“அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆயிடறீங்க. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா...?” சுசிலா பேசி முடிக்கும் முன், டெலிபோன் ஒலித்தது.

சுசிலா எழுந்து ரிசீவரை எடுத்தாள். குரல் கொடுத்தாள்.

“ஹலோ...”

“......”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

March 18, 2016,

June 3, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel