Lekha Books

A+ A A-

வனவாசம்

வனவாசம்

டி. பத்மநாபன்

தமிழில் : சுரா

 

'ம

ழை நிற்பதற்கான அறிகுறி எதுவுமே இல்லை. எனினும், அதன் சக்தி குறைந்து கொண்டு வந்தது.

பள்ளிக்கூடத்தின் வாசலில் நான் தயங்கி நின்றேன். வெளியேறி நடக்க வேண்டுமா? இல்லாவிட்டால்.... இன்னும் கொஞ்சம்.....

ஈரமான வானம் அப்போதும் கறுத்துதான் கிடந்தது.

எனக்கு சிறிதும் அறிமுகமற்ற இந்த இடத்தில் வசிக்க வந்த பிறகு முதல் தடவையாக இந்த வழியாக செல்கிறேன். வீட்டிலிருந்து வெளியேறிய போது, குறிப்பிட்டுக் கூறும் வகையில் எந்தவொரு நோக்கமும் இல்லாமலிருந்தது, இடத்தையும் வழிகளையும் தெரிந்து கொள்ளலாம்....... மனிதர்களைப் பார்க்கலாம். முடியுமானால், குழம்பு வைப்பதற்கு எதையாவது வாங்கலாம்.... பிறகு..... காலை நேரத்தில் ஒரு நடை நடந்தது மாதிரியும் ஆயிற்றே! இங்கு வெறுமனே அமர்ந்து கொண்டு .... இப்படித்தான் சிந்தித்தேன்.

ஆனால், மழை சதி செய்து விட்டது.

பள்ளிக்கூடத்தின் வாசலில் ஏறி நின்றேன் என்று கூறினேன் அல்லவா? ஆனால், அந்தச் சமயத்தில் அது ஒரு பள்ளிக்கூடம் என்று தெரியாது. முதலில் பார்த்த ஒரு பாதுகாப்பான இடத்தில் ஏறி நின்றேன் என்ற எண்ணமே இருந்தது. ஓலை வேய்ந்த, மண் கட்டியால் ஆன ஷெட்டாக இருந்தது அது. பஞ்சாயத்து சாலைக்கு அருகில் அது நீளமாக கிடந்தது. மிகவும் பழமையாக தோன்றிய அதன் சுவர்களில் விரிசல்கள் காணப்பட்டன. பல இடங்களிலும் சுண்ணாம்பு உதிர்ந்து விழுந்த அடையாளங்கள் இருந்தன.

எனக்கு அவசரம் எதுவுமில்லை. அதனால் மழை நிற்பதை எதிர்பார்த்தவாறு ஒவ்வொன்றையும் சிந்தித்துக் கொண்டும் சாலையை வெறுமனே பார்த்துக் கொண்டும் நான் அங்கு நேரத்தைச் செலவிட்டேன்.

பிறகு எப்போதோ குழந்தைகளின் சத்தம் ஒலிக்க ஆரம்பித்தபோதுதான்....

நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு சாளரம் இருந்தது. அதன் வழியாக பார்த்தபோது கிட்டத்தட்ட பள்ளிக்கூடம் முழுவதும் என் பார்வையில் பட்டது. முதலில் எனக்கு ஆச்சரியம்தான் உண்டானது. சிறிய வகுப்புகளில் குழந்தைகளுக்கு நுழைவு கிடைப்பதில் இருக்கக் கூடிய சிரமங்களைப் பற்றி எனக்கு நேரடியாக தெரியாமலிருந்தாலும், நிறைய கேள்விப்பட்டிருந்தேன்.

ஆனால், இங்கு.... குழந்தைகள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். இருந்தவர்களுக்கோ... நல்ல அழகான துணியால் தைக்கப்பட்ட சீருடையோ டையோ ஷூக்களோ எதுவுமில்லை. உயர்ந்த பல வர்ணங்களைக் கொண்ட பைகளோ புத்தகங்களோ இல்லை. எதற்கு பையும்  புத்தகங்களும்? அவர்கள் குளித்து கூட பல நாட்கள் ஆகியிருக்கும் என்பதாக எனக்கு தோன்றியது. வயலிலிருந்தோ முந்திரி மரத்திற்குக் கீழேயிருந்தோ வருபவர்களைப் போல அவர்கள் அனைவரும் இருந்தார்கள்.

எனினும், இப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், அவர்களின் கையில் கொஞ்சம் புத்தகங்கள் இருந்தன.....

நான் கூறினேனே .... நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகில் ஒரு சாளரம் இருந்தது என்று. அதன் வழியாக என்னால் எல்லாவற்றையும் நன்கு பார்க்க முடிந்தது.

வகுப்பறைகளுக்கு நடுவில் சுவரோ, ஏதாவது வகைப்பட்ட மறைப்போ எதுவுமில்லை.

குழந்தைகள் மட்டுமல்ல - ஆசிரியர்களும் ஒருவரோடொருவர் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு மிகவும் முன்னாலிருந்த வகுப்பில் அதுவரை  ஆசிரியர் வரவில்லை. குழந்தைகள் ஒருவரோடொருவர் சத்தமாக பேசிக் கொண்டும், பிடித்து இழுத்துக் கொண்டும். கிள்ளிக் கொண்டும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் மிகவும் சந்தோஷத்தில் இருந்தார்கள்.

அப்போது ஆசிரியர் வந்தார். குழந்தைகள் மிகவும் அமைதியானவர்களாக ஆனார்கள்.

அவருக்கு மிகவும் அவசரமான வேலை இருப்பதைப் போல..... அங்குள்ள பணியைச் சீக்கிரமாக முடித்து விட்டு, வேறெங்கோ போக இருப்பதைப் போல தோன்றியது.

ஆசிரியர் சுற்றிலும் பார்த்து விட்டு கூறினார்:

'எல்லோரும் வந்திருக்கீங்கள்ல?'

குழந்தைகளில் சிலர் அதற்கு என்னவோ பதில் கூறினார்கள். ஆனால், மிகவும் மெதுவான குரலில் இருந்ததால் அது எனக்கு தெளிவாக கேட்கவில்லை. ஆசிரியரும் அதைப் பற்றி எதுவும் அதற்குப் பிறகு கேட்பதையும் பார்க்கவில்லை.

       ஆசிரியர் மீண்டும் கூறினர்:

       'எல்லோரும் புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள் அல்லவா? நான் சொன்னதைப் போல.....'

       யாரும் எதுவும் கூறவில்லை.

       அப்போது ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்து நின்று விட்டு ஆசிரியர் கூற ஆரம்பித்தார்:

'இன்று கேட்டு.... எழுதுவது. நான் பாட புத்தகத்தின் ஆறாவது பாடத்திலிருந்து சில வரிகளை வாசிப்பேன். பிறகு நீங்களே புத்தகத்தைப் பார்த்து எழுதிக் கொள்ள வேண்டும். எல்லோரும் காப்பி புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்கள் அல்லவா? யாரும் சத்தம் போடக் கூடாது. நான் இப்போது போய் விட்டு சீக்கிரமா.... இதற்கிடையில் நீங்கள் இந்த பாடம் முழுவதையும்.... யாரும் சத்தம் போடக் கூடாது....'

அவர் சுற்றிலும் பார்த்தார்.

குழந்தைகள் தங்களுடைய புத்தகங்களை எடுத்து முன்னால் விரிக்க ஆரம்பித்தார்கள்.

ஆசிரியர் தொடர்ந்து உரத்த குரலில் வாசித்தார்:

'பாடம் ஆறு....

ஶ்ரீராமனின் வனவாசம்.

அயோத்தியின் மன்னரான தசரதனின் நான்கு பிள்ளைகளில் மூத்தவர் ஶ்ரீராமன். தன் தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக ஶ்ரீராமன் பதினான்கு வருடங்கள் காட்டில் வாழ்ந்த கதை மிகவும் பிரபலமானது. ஶ்ரீராமன் நாட்டை விட்டு, காட்டிற்குச் சென்ற போது, அவருடன் மனைவியான சீதையும் தம்பியான லட்சுமணனும்.....’

ஆசிரியர் திடீரென்று நிறுத்தி விட்டு, வகுப்பறையின் ஒரு மூலையையே வெறித்துப் பார்த்தார்.

அங்கு ஒரு சிறுவன் எழுதிக் கொண்டிருந்தபோது, இடையில் தூக்கத்தில் மூழ்கி விட்டிருந்தான். அப்போது அவனுடைய தலை புத்தகத்தில்....

ஆசிரியர் அவனைச் சுட்டிக் காட்டியவாறு கோபத்துடன் கூறினார்:

'ராமன் குட்டி!'

அவன் அதை கேட்கவில்லை. அப்போதும் அவனுடைய தலை நிலை குலைந்து நோட்டு புத்தகத்தில்.....

வகுப்பு முழுவதும் எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு, அதை பார்த்துக் கொண்டிருந்தது.

ஆசிரியர் மீண்டும் உரத்த குரலில் கூறினார்.

'ராமன் குட்டி!'

இந்த முறை அவன் அதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். என்னால் அவனை தெளிவாக பார்க்க முடிந்தது. அவன் ஒரு சிறிய குழந்தையாக இருந்தான்.

அவன் தாங்க முடியாமல் நடுங்குவதைப் போல எனக்கு தோன்றியது:

ஆசிரியர் அவனை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டியவாறு கூறினார்:

'இங்கே வா!'

சிறுவன் எழுந்து அவருக்கு அருகில் செல்ல ஆரம்பித்த போது, அவர் மீண்டும் கூறினார்:

'உன்னுடைய எல்லா புத்தகங்களையும் எடு.'

சிறுவனின் கையில் ஒரு சிலேட்டும் ஒரு பழைய நோட்டு புத்தகமும் மட்டுமே இருந்தன.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel