Lekha Books

A+ A A-

திருட்டு நாய்

Thiruttu Naai

திருட்டு நாய்

எம்.முகுந்தன்

தமிழில் : சுரா

த்மநாபனுக்கு வரும் 'சிங்ங' மாதத்தில் மூன்று வயது முடிகிறது. எனினும், அவன் தாய்ப் பால் குடிக்க வேண்டும். சோறு, கஞ்சி எதுவும் பத்மநாபனுக்குப் பிடிக்காது. பசிக்கும்போது தாய்ப்பால் கட்டாயம் கிடைக்க வேண்டும். கிடைக்காவிட்டால், கிடைக்கும் வரை அவன் அழுவான். அதுதான் பத்மநாபனின் குணம். அழ ஆரம்பித்து விட்டால், சிறிது கூட நிறுத்த மாட்டான்.

வாய் முழுவதையும் திறந்து, கண்களை இறுக அடைத்துக் கொண்டு அழுவான். அழ ஆரம்பித்த பிறகும், தான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டால், அவன் தன்னுடைய உத்தியைச் சற்று மாற்றுவான். பிறகு... தரையில் படுத்து கையையும் காலையும் தரையில் அடித்துக் கொண்டே அழுவான். ஆனால், அதே நிலையில் நீண்ட நேரம் அழுவதற்கு உடல் நலமில்லாத பத்மநாபனால் இயலாது. படிப்படியாக அந்த அழுகை பலவீனமாகி ஒரு நாய்க்குட்டியின் முனகலாக மாறும்.

பத்மநாபன் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமென்றாலும், தாய்ப் பால் குடித்துக் கொள்ளட்டும். தேவுவிற்கு அந்த விஷயத்தில் புகார் இல்லை. வாசுதேவன் ஐந்து வரை தாய்ப் பால் குடித்தான். ஆனால், மார்பில் பால் இல்லாவிட்டால் என்ன செய்வது? வாசுதேவனைப் பெற்றெடுக்கும்போது இருந்த உடல் நலம் எதுவும் இப்போது இல்லை. நீளமான கழுத்து, ஒட்டிப் போன கன்னங்கள், நாரைப் போன்று காட்சியளிக்கும் கைகள்... தேவு ஒவ்வொரு நாளும் மெலிந்து கொண்டே வருகிறாள். இனிமேலும் பத்மநாபனுக்கு பால் கொடுப்பது என்பது ஆபத்தான விஷயமென்று ஆசாரிப் பெண் கல்யாணி தேவுவிடம் பல தடவைகள் கூறியிருக்கிறாள். அது உண்மைதான் என்று ஒரு நாள் தேவுவிற்கும் தோன்றியது. அன்றே கல்யாணி, குஞ்ஞண்ணி வைத்தியரின் மருந்துக் கடையில் ஒரு அணாவிற்கு 'மொசு மொசுகாய்' வாங்கிக் கொண்டு வந்தாள். தேவு இரண்டு மார்பகங்களின் நுனியிலும் மொசு மொசுகாயைத் தேய்த்து விட்டாள். வழக்கம்போல தாய்ப் பால் குடிப்பதற்காக ஆர்வத்துடன் முயற்சித்த பத்மநாபனின் முகத்தை அப்போது பார்க்க வேண்டுமே! அவன் பலமான சத்தத்துடன் வாந்தி எடுத்தான். கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரையில் கைகளையும் கால்களையும் போட்டு அடித்தான். அதற்குப் பிறகு பத்மநாபன் தாய்ப் பாலைத் தொடவேயில்லை...

அப்படிச் செய்திருக்க வேண்டியதில்லை என்று இப்போது தேவுவிற்குத் தோன்றியது. அவன் காலையில் அழ ஆரம்பித்தான். அழுது, அழுது தளர்ந்து போன அவன் இப்போது எந்தவித அசைவுமில்லாமல் தரையில் கிடந்து முனகிக் கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டு நின்றிருக்க தேவுவால் முடியவில்லை. நெஞ்சு வெடித்து விடுவதைப் போல இருந்தது. சிறிய குழந்தைதானே! பசியை எவ்வளவு நேரம் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? பெரியவர்களாக இருந்தால், வேட்டியை இறுக்கமாக அணிந்து கொண்டு எங்காவது சுருண்டு படுத்துக் கிடக்கலாம். பாவம்.. பத்மநாபன்! மூன்று வயது ஆனாலும், அதற்கான வளர்ச்சி இல்லை. மெலிந்து போன கை, கால்களும், வெளிப்படையாக தெரியக் கூடிய இடுப்பு எலும்புகளும்... வளர்வதற்கு தின்ன கொடுக்க வேண்டாமா? தாய்ப் பாலை நிறுத்திய பிறகு, அவன் முழுமையான பட்டினியில் கிடக்கிறான். கஞ்சியும் சோறும் சாப்பிட ஆரம்பித்தபோது, அதைக் கொடுக்க முடியவில்லை. இந்த சிரமங்களுக்கு முடிவே இல்லாமலிருக்கும்!

அவள் பத்மநாபனைத் தூக்கினாள். தாய்ப்பால் குடிக்க மாட்டான் என்ற விஷயத்தை அறிந்திருந்தாலும், அவள் ரவிக்கையின் கொக்கியை அவிழ்த்தாள். கொஞ்சம் உதடு ஈரமாக ஆகட்டும்... ஆனால், பத்மநாபன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவன் வாந்தி எடுத்தான். கசப்பு எடுக்கும் மொசு மொசு காயின் ஞாபகம் வந்திருக்க வேண்டும். தேவு தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். ஆசாரிப் பெண் கல்யாணியையும். வெறுமனே சிறுவனின் பால் குடிக்கும் பழக்கத்தை நிறுத்தியாகி விட்டது. பால் இல்லையென்றாலும், அவன் சப்பிச் சப்பி உறங்கியிருப்பான். இனி என்ன செய்வது?

இரவில் அரை நாழி அரிசியை வைத்து கஞ்சி வைத்தாள். குழந்தைகளுக்கும், குழந்தைகளின் தகப்பனுக்கும் கொடுத்தவுடன், பானை காலியாகி விட்டது. எஞ்சியிருந்ததை ஒரு கோப்பையில் ஊற்றி, மூடி வைத்தாள். காலையில் பத்மநாபன் அழ ஆரம்பித்த போது, அவள் போய் பார்த்தாள். புளித்து நாறிக் கொண்டிருந்தது! ஒரு கோப்பை கஞ்சியை வீணாக, வெளியே ஊற்றினாள்.

இரண்டு துண்டு வெல்லம் இருந்தால், ஒரு குவளை கருப்பு காபி தயாரிக்கலாம். ஆனால், அதுவும் அந்த வீட்டிற்குள் இல்லை. வீடு... வீடு... என்று அதற்கு பெயர் மட்டுமே இருக்கிறது. அரிசி இல்லை, தேங்காய் இல்லை, மிளகாய் இல்லை. எங்கிருந்தாவது நாழி அரிசி கிடைத்தால், அதை வேக வைப்பதற்கு ஒரு பானை இருக்கிறதா? ஓரம் சேதமடைந்த ஒரு பழைய பானையில் கஞ்சி வைக்கிறாள். அது முழுமையாக எப்போது உடையும் என்று தெரியவில்லை.

வீடு அல்ல... நகரம் அது!

'நாராயணா... நாராயணா...'

கிழவிதான் அப்படி கூறினாள். பசிக்கும்போது எல்லோரும் எதுவும் பேசாமல் எங்காவது போய் அமைதியாக இருப்பார்கள். கிழவி நேர் எதிரானவள். வாயில் நாக்கு அடங்கி இருக்காது.

'பையனை ஏன் இப்படி அழ வைக்கிறே?'- கிழவி தலையை வெளியே நீட்டியவாறு கேட்டாள்.

'இங்கே மூட்டை மூட்டையா அரிசி இருக்குதுல்ல...'

இப்போதும் பத்மநாபன் முனகிக் கொண்டிருந்தான். அழுவதற்குக் கூட பையனால் முடியவில்லை.

'ஜானு...'

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel