Lekha Books

A+ A A-

திருட்டு நாய் - Page 4

Thiruttu Naai

'என்ன குட்டி சங்கரா, நீ என்ன சொல்றே?'

'திருட்டு நாய் நாசமாப் போற காரியத்தைச் செஞ்சிருச்சு தேவு.'

அப்போது அங்கு வந்த ஆசாரிப் பெண் கல்யாணி சொன்னாள்:

'இரண்டு படி அரிசி இருந்தது. கடனுக்கு வாங்கியது. நான் என்ன செய்வேன்? என் பகவதீ...'

'திருட்டு நாய் இங்கே வரலையே, கல்யாணீ' -தேவு கல்யாணியின் முகத்தைப் பார்க்காமலே கூறினாள்.

'நாராயணா... நாராயணா...'

'திருட்டு நாயை நான் பார்த்தேன். உஸ்மானின் வீட்டிற்குப் பின்னால் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அரிசியும் பையும் வாயில் இல்லை'- குட்டி சங்கரன் கூறினான்.

'நீ நிலம் முழுவதையும் பார்த்தியா? அங்கே எங்காவது விழுந்து கிடக்கும்'-தேவு கூறினாள்.

'நான் பார்த்தேன். திருட்டு நாய் இந்தப் பக்கம்தான் வந்ததுன்னு உஸ்மானோட உம்மா சொன்னாங்க.'

'நல்லா போய் பாரு, குட்டி சங்கரா. கிடைக்கலைன்னா, என் பிள்ளைங்க பட்டினி கிடக்க வேண்டியதிருக்குமே, பகவதீ.'

'வேலியைத் தாவிக் குதித்து கடந்து இந்தப் பக்கம்தான் வந்ததுன்னு உஸ்மானோட உம்மா சொல்றாங்க. உடனேயே திரும்பிப் போனேன். வாயில் பை இல்லை. அப்படின்னா, பை இங்கேதான் எங்கேயாவது இருக்கும். இன்னொரு முறை பார்க்குறேன்.'

குட்டி சங்கரன் வேட்டியை மடித்துக் கட்டி, நிலத்திற்குள் நுழைந்து சென்றான்:

'இரண்டு படி அரிசி. பிள்ளைகளோட அப்பா வந்தால், நான் என்ன சொல்றது? என்னைக் கொன்னுடுவாரு'- கல்யாணி திண்ணைக்கு வந்து தலையில் கையை வைத்தவாறு அமர்ந்தாள்.

'நேற்று இரவு திருட்டு நாய் சமையலறைக்குள் நுழைஞ்சது. அப்போ நான் பார்த்துட்டேன். இல்லாவிட்டால்... அதோட காலை அடிச்சு ஒடிக்கிறதுக்கு இந்த ஊர்ல யாருமில்லையே!'

'பிள்ளைகளோட அப்பா வாசல்ல கொண்டு வந்து வைத்தார். 'கல்யாணீ, இதை அங்கே எடுத்து வை'ன்னு சொல்லிட்டு படி இறங்கிப் போயிருப்பாரு. வாசல்ல போய் பார்க்குறப்போ...'

'நாராயணா...'

'என் பிள்ளைங்க...'

குட்டி சங்கரன் நிலம் முழுவதும் தேடி திரிந்து விட்டு, திரும்பி வந்தான். பை கிடைக்கவில்லை.

'யாரோ சதி வேலை பண்ணியிருக்காங்கன்னு தோணுது. திருட்டு நாய்க்குப் பின்னால், நான் வேகமாக ஓடினேன். உஸ்மானோட வீட்டிற்குப் பக்கத்துல அது எண் கண்கள்ல இருந்து மறைஞ்சிடுச்சு. திருட்டு நாய் இங்கே வரைதான் வந்ததுன்னு உஸ்மானோட உம்மா சொன்னாங்க. அப்படின்னா, பை எங்கே போனது? அதை யாரோ எடுத்து வச்சிருக்காங்கன்னு நான் நினைக்கிறேன்.'

'உன் அரிசியையும் பையையும் யார் திருடி வச்சிருப்பாங்க, குட்டி சங்கரா?'- தேவு சொன்னாள்.

'மிகப் பெரிய பாவ காரியத்தைச் சொல்லாதே. அதை எங்காவது கொண்டு போய் வச்சிருக்கும். நீ இன்னொரு முறை பார்த்துட்டு வா'- நல்ல மனம் கொண்ட கல்யாணி கூறினாள்.

'என்னால முடியாது. அது இனிமேல்தான் கிடைக்கப் போகுதா?'

குட்டி சங்கரன் வேட்டியைப் பிரித்து விட்டு, திண்ணையில் போய் அமர்ந்தான்.

'இனி என்ன செய்வது தேவு? என் பிள்ளைங்க பட்டினி கிடக்க வேண்டியதாகி விட்டதே?'- கல்யாணி கண்களைத் துடைத்தாள்.

'அதை மட்டும் இப்போ என் முன்னாடி பார்த்தால்...'- குட்டிசங்கரன் கையைக் கசக்கினான்: 'அடிச்சு காலை ஒடிச்சி வீசி எறியணும்.'

குட்டிசங்கரனுக்குப் பின்னால் கண்களைத் துடைத்தவாறு ஆசாரிப் பொண்ணான கல்யாணி  சென்றாள்.

'கண்களில் இரத்தம் இல்லாதவள்... மகா பாவி?'- கிழவி தேவுவைப் பார்த்து முணுமுணுத்தாள்.

தேவு திண்ணையில் தூணில் சாய்ந்து அமர்ந்தாள்.

பத்மநாபனின் அழுகைச் சத்தம் அதற்குப் பிறகும் கேட்க ஆரம்பித்தது. ஜானுவின் இடுப்பில் அமர்ந்து அவன் நெளிந்து கொண்டிருந்தான். அவனைத் தரையில் இறக்கி வைத்து விட்டு, ஜானு கூறினாள்: 'இவனை தூக்கி வச்சிக்கிட்டு நடக்க என்னால முடியல. இப்படியும் ஒரு பையன் இருப்பானா?'

தரையில் கவிழ்ந்து படுத்து கையையும் காலையும் தரையில் அடித்து, பத்மநாபன் உரத்த குரலில் சத்தம் போட்டு அழுதான். தேவு சமையலறைக்குள் நுழைந்து நெருப்பைப் பற்ற வைத்தாள். முறத்திற்குக் கீழே இருந்த பையை எடுத்து, அரிசியைக் கொட்டி விட்டு, பையை அடுப்பிற்குள் போட்டு எரியச் செய்தாள். அதை கல்யாணி எங்காவது பார்க்க நேர்ந்தால்... சிறிய பாத்திரத்தில் நீரை நிறைத்து, அடுப்பின் மீது வைத்தாள். நீர் கொதித்ததும், நாழி அரிசியை எடுத்து கல், நெல் ஆகியவற்றை நீக்கி கழுவி, நீருக்குள் போட்டாள். பிறகு திண்ணைக்குச் சென்று தரையில் படுத்து முனகிக் கொண்டிருக்கும் பத்மநாபனைத் தூக்கியவாறு அவள் சொன்னாள் : 'மகனே, அழாதே. உனக்கு நான் இப்போ சோறு தர்றேன்.'

'சோறா? அரிசி எங்கேயிருந்து கிடைச்சது?' -ஜானு ஆச்சரியப்பட்டாள்.

'அது உனக்கு தெரிய வேண்டாம்டீ...'

'அடியே ஜானு... உன் அம்மாவுக்கு இப்போ திருடுறதுக்கும், பொய் சொல்றதுக்கும் தயக்கமே இல்லை.'

'அம்மா என்ன திருடினாங்க?'

'பட்டினி கிடந்தாலும், கழுத்தையே அறுத்தாலும், பொய் சொல்லவோ திருடவோ கூடாது. அது மகா பாவம்...'

'பேசாமல் இருக்குறதுதான் உங்களுக்கு நல்லது'- தேவுவின் பொறுமை எல்லை கடந்தது.

'பேசினால் என்னடீ? நீ என்னை என்ன செய்வே? திருடி...'

'பேசினால்...'- பத்மநாபனை தரையில் போட்டு விட்டு, வாசலிலிருந்த திருட்டு நாயை எறிந்த துடைப்பத்தை எடுத்தவாறு தேவு சொன்னாள்: 'இதைப் பார்த்தீங்களா? பார்த்தீங்களா இதை? நான் கொன்னுடுவேன். வாயில நாக்கு இருந்தால், அதை அங்கேயே அடக்கி வைக்கணும்.'

'என்னடீ தேவு உனக்கு? பைத்தியம் பிடிச்சிருச்சா?'

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel