Lekha Books

A+ A A-

திருட்டு நாய் - Page 3

Thiruttu Naai

'அவள் சொல்லுவாளாம்! நீ என்னடீ சொல்லுவே?'

'நான் ஒண்ணும் சொல்லலை.'

அதற்குப் பிறகும் கிழவியின் நாக்கு அடங்கி நிற்காது. முற்றத்திற்கு வந்து முணுமுணுத்துக் கொண்டிருப்பாள்.

தேவு பாயில் படுத்தாள். வயிறு எரிந்து கொண்டிருந்தது. அவளுக்கு பசி இருக்கிறது. ஆனால், மற்றவர்களின் பசிக்கு மத்தியில் அது மறந்து போய் விடுகிறது. அடுப்பில் இதுவரை நெருப்பு பற்ற வைக்கவில்லை. எங்கிருந்தாவது நாழி அரிசிக்கான பணத்தைத் தயார் பண்ணி விட்டுத்தான் வருவேன் என்று கூறிவிட்டுத்தான் கோபாலன் காலையில் சென்றான். கிடைத்தால், அடுப்பில் தீ பற்ற வைக்கலாம். இல்லாவிட்டால்...

இந்த மாதம் தரித்திரம் சற்று முன்பே வந்து விட்டது. பொதுவாக மாத இறுதியில் ஐந்தோ ஆறோ நாட்கள் மட்டுமே சிரமங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். இன்று தேதி இருபதுதான் ஆகியிருக்கிறது. இன்னும் பத்து நாட்கள்! இந்த நாட்களை எப்படி ஓட்டுவது?

இந்த பிரச்சினைகளையெல்லாம் உண்டாக்கியதே கிழவிதான். பல வருடங்களாக கிழவிக்கு உடல் நலக்கேடு. வாதம்... உடனடியாக எதுவும் குணமாகாது. இடையில் அவ்வப்போது குஞ்ஞண்ணி வைத்தியரைப் போய் பார்க்க வேண்டும். பொதுவாக அங்கு போய் பார்ப்பதுதான் வழக்கம். இந்த முறை வைத்தியரை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வர வேண்டிய சூழ்நிலை உண்டானது. கிழவியால் ஒரு அடி கூட நடக்க முடியவில்லை. நகரத்தின் மையத்திலிருந்து வருகிறார். வைத்தியரின் கையில் இரண்டு ரூபாய்களாவது கொடுக்க வேண்டாமா? கஷாயம், களிம்பு, நெய் - இறுதியில் பிள்ளைகள் பட்டினியில் கிடக்க வேண்டியதாகி விட்டது!

ஒரு வயது தாண்டினால் மரணமடைய வேண்டும். ஏன் மற்றவர்களுக்கு சுமையாக வாழ வேண்டும்? இந்த கிழவி அவ்வாறு இறந்தால் என்ன?

'என் மாலோட்டு பகவதி, என்னைக் காப்பாற்று!'

'திருட்டு நாய்!'

'பகவதி ஏமாத்திட்டாளே!'

'குட்டி சங்கரா ஓடு... மேற்கு பக்கம்தான் போனது... ஓடு... என் குட்டி சங்கரா.'

ஆசாரிப் பெண் கல்யாணியின் வீட்டிலிருந்துதான் ஆரவாரம். தேவு பாயை விட்டு எழுந்தாள். கல்யாணி பதைபதைப்புடன் வாசலில் நின்றிருந்தாள். குட்டி சங்கரன் வேட்டியை மடித்துக் கட்டியவாறு மேற்கு திசை நோக்கி அம்பைப் போல வேகமாக பாய்ந்து போய்க் கொண்டிருந்தான்.

திருட்டு நாய் எதையோ அபகரித்துச் சென்றிருக்க வேண்டும். திருட்டு நாயின் தொல்லைகள் அதிகமான நேரமிது. சமீபத்தில்தான் அது பிரசவித்தது. பிரசவம் முடிந்து விட்டால், திருட்டு நாய்க்கு வெறி உண்டாகி விடும். எவ்வளவு சாப்பிட்டாலும், திருப்தியே உண்டாகாது. ஒவ்வொரு பிரசவத்திலும் மூன்றோ நான்கோ குட்டிகள் பிறக்கும். இந்த முறையும் மூன்று குட்டிகள் பிறந்தன. ஆசாரி நாராயணன் மூன்று குட்டிகளையும் ஒரு கோணியில் இட்டு கட்டி, கோணியைத் தரையில் மோதச் செய்து கொன்றான். அப்படி இல்லாமல் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது? மனிதர்களே இங்கு பட்டினி கிடக்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதைவிட நல்லது, பிறந்த உடனேயே குட்டியைக் கோணிக்குள் போட்டு தரையில் அடித்து கொல்வது.

ஆனால், அதனால் என்ன பயன்? திருட்டுநாய் உடனே கர்ப்பம் தரிக்கும். பிரசவிக்கவும் செய்யும். திருட்டு நாயைப் பார்க்கும்போதெல்லாம் அதற்கு கர்ப்பம் உண்டாகும். திருட்டு நாய்க்கு ஒரு பெயர் இருக்கிறது- 'பாரு' என்று. திருட்டு நாய் உண்மையிலேயே ஆண் நாய் அல்ல- பெண் நாய். 'பாரு' என்று யாரும் அழைக்க தயாராக இல்லை. திருட்டு நாய் என்ற பெயரில்தான் பாரு நீண்ட காலமாகவே அறியப்பட்டு வருகிறது.

நேற்று இரவு ஏதோ சந்தேகம் உண்டானபோதுதான் தேவு சமையலறைக்குள் சென்றாள். திருட்டு நாய் தலையை வைத்து மெதுவாக கதவைத் தள்ளி திறந்து கொண்டிருக்கிறது! தாழ்ப்பாள் இல்லாத கதவு. தள்ளினால், திறந்து கொள்ளும். சற்று தாமதித்திருந்தால், பானையில் மூடி வைத்திருந்த கஞ்சி முழுவதையும் திருட்டு நாய் சாப்பிட்டிருக்கும்!

தேவு வாசலுக்கு வந்தாள். அப்போதுதான் வடக்குப் பக்க வீட்டைச் சேர்ந்த உஸ்மானின் வேலியைத் தாவி கடந்து, திருட்டு நாய் வருவதைப் பார்த்தாள். வாயில் ஒரு பெரிய சாக்குப் பை தொங்கிக் கொண்டிருந்தது. இரு பக்கங்களிலும் ஒரு முறை பார்த்துவிட்டு திருட்டு நாய் முற்றத்தை நோக்கி வேகமாக வந்தது. முற்றத்திலிருந்த மதிலின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஈர்க்குச்சி துடைப்பம்தான் தேவுவின் கண்களில் பட்டது. எடுத்து ஒரு அடி கொடுத்தாள். முதுகில் விழுந்தது. வாயிலிருந்து கனமாக இருந்த பை நழுவி விழுந்தது. ஒரு முனகலுடன் திருட்டு நாய் சற்று தூரத்தில் விலகி நின்றது. பிறகு வேலியைத் தாவிக் குதித்து உஸ்மானின் நிலத்திற்கே திரும்பிச் சென்றது...

தரையில் கிடந்த பையை எடுத்து தேவு திறந்து பார்த்தாள். அரிசி இருந்தது. இரண்டு படி அரிசியாவது இருக்கும். அவள் சுற்றிலும் பார்த்தாள். யாருமில்லை. தேவு வேகமாக சமையலறைக்குள் நுழைந்து, பையைத் தரையில் வைத்து முறத்தைக் கொண்டு மூடி வைத்தாள்.

'என்ன தேவு, நீ இங்கே என்ன செய்யிறே?'

கிழவிதான்.

'நீங்க பேசாமல் இருங்க.'

'சொல்லிச் சொல்லி நீ திருடவும் ஆரம்பிச்சாச்சா?'

'தேவு அக்கா!'

தேவு திரும்பிப் பார்த்தாள். குட்டி சங்கரன் வாசலில் நின்றிருந்தான். திருட்டு நாய்க்குப் பின்னால் ஓடித் தளர்ந்த அவன் நின்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

'உங்களுக்கு அரிசியும் பையும் கிடைச்சதா?'

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

நான்

நான்

February 17, 2015

நிலவு

நிலவு

April 2, 2012

பாலம்

பாலம்

June 18, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel