Lekha Books

A+ A A-

திருட்டு நாய் - Page 5

Thiruttu Naai

'பைத்தியம் பிடிக்காதவர்களுக்கு நீங்க பைத்தியம் பிடிக்க வைப்பீங்க.'

துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வேகமாக திண்ணைக்கு வந்த தேவுவின் முகத்தைப் பார்த்து கிழவி பயந்து போய் விட்டாள்.

'நாராயணா...'

கிழவி தற்போதைக்கு அமைதியாக இருந்தாள். பத்மநாபனைத் தூக்கிக் கொண்டு தேவு சமையலறைக்குச் சென்றாள்.

மாலோட்டு கோவிலின் வாசலில் விளையாடி முடித்து, வாசுதேவனும் குஞ்ஞிகிருஷ்ணனும் வந்தார்கள். வியர்வையில் குளித்து, மிகவும் களைத்துப் போய் காணப்பட்டார்கள். வீட்டுக்குள் நுழைந்த உடனே குஞ்ஞிகிருஷ்ணன் சொன்னான்:

'என்னால பசியோட இருக்க முடியல.'

'இன்னைக்கு பூஜை நடக்கல. பிரசாதம் கிடைக்கல'- வாசுதேவன் சொன்னான்.

'இன்று நமக்கு சோறு இருக்குடா. பிள்ளைகளே...' ஜானு சொன்னாள்.

'சோறா?'

'ஆமாம்டா. சோறுதான்...'

அதற்குப் பிறகு குஞ்ஞிகிருஷ்ணனும் வாசுதேவனும் அங்கு இல்லை. சமையலறைக்குள் சென்றபோது, அம்மா பத்மநாபனை மடியில் வைத்தவாறு, சோற்றை வாய்க்குள் ஊட்டிக் கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். ஜானு கூறியது பொய் அல்ல! கையையும் முகத்தையும் கழுவுவதற்குக் கூட நேரமில்லை. இருவரும் பலகையைப் போட்டு அமர்ந்து விட்டார்கள். சோறு!

வயிறு நிறைய உணவு சாப்பிட்டு விட்டு பத்மநாபன் தூங்கினான். பாவம் பையன்! காலையிலிருந்து அழ ஆரம்பித்திருந்தானே! திண்ணையில் கிழிந்த பாயில் அவனை படுக்கப் போட்டு விட்டு, தேவு தூணில் சாய்ந்து உட்கார்ந்தாள். கிழவி மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். இரண்டு கால்களையும் நீட்டி வைத்துக் கொண்டு சுவரில் சாய்ந்து கொண்டு, எந்த வித உணர்ச்சியுமில்லாத சமாதி நிலையில்!

பிள்ளைகள் சாப்பிட்டு முடித்ததும், தேவு கிழவியை அழைத்தாள்: 'எழுந்து போய் சோறு சாப்பிடுங்க.'

'உன் சோறு எனக்கு வேண்டாம்.'

'பசிக்கலையா?'

'திருடியதையும் கொள்ளை அடிச்சதையும் சாப்பிட்டு எனக்கு பழக்கமில்லைடீ...'

நாவில் சனியன்!- வாயைத் திறந்தால் தேவையற்றதையே பேசுவாள்.

'இங்கே சாப்பிடுவதற்கு வேறு எதுவும் இல்ல.'

'நான் பட்டினி கிடப்பேன்.'

'மனசு இருந்தால், சாப்பிடுங்க.'

அதற்குப் பிறகு தேவு கட்டாயப்படுத்தவில்லை. பாயில் பத்மநாபனுக்கு அருகில் போய் படுத்தாள். எதையெதையோ சிந்தித்துக் கொண்டே அப்படியே உறங்கி விட்டாள். அப்போது சமையலறையிலிருந்து ஒரு சத்தம் கேட்டது. அவள் அதிர்ச்சியடைந்து கண் விழித்தாள். திருட்டு நாயா? வேகமாக எழுந்தாள். எறிந்து காலை ஒடிக்க வேண்டும். இனி யாருடைய பொருட்களையும் திருடக் கூடாது. தேவு சமையலறைக்குள் வேகமாக பாய்ந்து சென்றாள்.

தடிமனான பலகையின் மீது அமர்ந்து கிண்ணத்திலிருந்து சோற்றை அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் கிழவி. கால் சத்தத்தைக் கேட்டதும், தலையை உயர்த்தி பார்த்து விட்டு மீண்டும் மிகவும் அமைதியாக சோற்றை வாரி வாரி சாப்பிட்டாள். என்ன ஒரு வெறி! தேவுவின் இரத்தம் கொதித்தது.

'இப்போ நீதி போதனை எங்கே போனது? சத்தமே உண்டாக்காமல் வந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கீங்க... பூனையைப் போல...'

கிழவி வாய் திறக்கவில்லை.

'என்ன... பேசவே இல்ல? வாய்ல ஒரு முழத்துக்கு நாக்கு இருக்குல்ல...! அது எங்கே போச்சு?'

'பசி எடுக்குறப்போ புலி புல்லையும் தின்னும்டீ, தேவு'- கிழவி கிண்ணத்திலிருந்து தலையை உயர்த்தாமலே கூறினாள்.

'பிறகு எதற்கு தேவையில்லாத விஷயங்களைப் பேசணும்? எனக்காகவா நான் அதைச் செய்தேன்? பத்மநாபன் பசியெடுத்து அழுது கொண்டிருந்ததை நீங்கள் பார்த்தீங்கள்ல? நேற்று இரவு கொஞ்சம் கஞ்சி குடிச்சது... சின்ன குழந்தையல்லவா? எவ்வளவு நேரத்துக்கு பசியைத் தாங்கிக் கொண்டு இருக்க முடியும்? நான் கண்ணுல இரத்தம் இல்லாதவள்தான்! மகாபாவிதான்!'

தேவு தான் அணிந்திருந்த துணியால் நுனிப் பகுதியைக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

'அதற்கு நீ ஏன்டி அழறே? நான் ஏதாவது சொன்னேனா?'

தேவு கண்களைத் துடைத்துக் கொண்டு, மூக்கைச் சிந்தினாள்.

'இனி சொல்லி என்ன பலன்? நடந்தது நடந்திருச்சு. நீ கொஞ்சம் சோற்றை எடுத்து சாப்பிடு. பசியோட இருக்க வேண்டாம்.'

கிழவி தடிமனான பலகையிலிருந்து எழுந்து, கிண்ணத்தைக் கழுவி வைத்தாள். பிறகு உள்ளே சென்று பாயை விரித்து படுத்தாள். இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்கவில்லை. குறட்டை விட ஆரம்பித்தாள்.

அதற்குப் பிறகு தேவுவால் தூங்க முடியவில்லை. சிந்தனைகள் அவளுடைய மனதை ஆக்கிரமித்தன. வயிறு எரிந்து கொண்டிருந்தது. பானையில் நிறைய சோறு இருந்தும், ஏன் பட்டினி கிடக்க வேண்டும்? பிள்ளைகள் சாப்பிட்டு விட்டார்கள். அவர்கள் அவளுடைய பிள்ளைகள். நீதி போதனைகள் கூறிய கிழவியும் சாப்பிட்டு விட்டாள். ஒரு பிடி சோறு எடுத்து சாப்பிடலாம். மனப்பூர்வமாக செய்யவில்லையே! மாலோட்டு பகவதி தன்னை மன்னிப்பாள். தேவு சமையலறைக்குள் திரும்பச் சென்று கிண்ணத்தில் சோற்றைப் பரிமாறினாள். பலகையைப் போட்டு அமர்ந்தாள்.

வாசலில் கண்களைத் துடைத்துக் கொண்டிருக்கும் கல்யாணியின் முகம் அப்போது மீண்டும் மனதில் தோன்றியது. ஆசாரி நாராயணன் இரவில்தான் திரும்பி வருவான். அப்போதுதான் விஷயங்கள் அவனுக்குத் தெரியும். உடனே 'பூரம் திருவிழா' ஆரம்பித்து விடும். அந்த நாசமாய் போனவன் கல்யாணியைக் கொன்று விடுவான். கல்யாணிக்கும் பத்மநாபனையும் வாசுதேவனையும் போல பிள்ளைகள் இருக்கிறார்கள். அவள் அவர்களைப் பட்டினியாக கிடக்கும்படி செய்து விட்டாள். கல்யாணியை அழ வைத்தாள். அதைச் செய்திருக்கக் கூடாது. 'மன்னித்து விடு, மாலோட்டு பகவதி! நான் அறிந்து, செய்தது இல்லையே!'

பசி இருந்தாலும், தேவுவால் ஒரு உருளைச் சோற்றைச் சாப்பிட முடியவில்லை. கிண்ணத்தைத் தள்ளி வைத்து விட்டு, அவள் எழுந்தாள். பிறகு பத்மநாபனின் அருகில் சென்று படுத்தாள். வயிறு நிறைந்த திருப்தியுடன் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். ஆனால்...?'

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel