Lekha Books

A+ A A-

திருட்டு நாய் - Page 2

Thiruttu Naai

தேவு மூத்த மகளை அழைத்தாள். முற்றத்திலிருந்த படியில் அமர்ந்து புளியங்கொட்டையை உடைத்து அவள் தின்று கொண்டிருந்தாள். பத்து... பன்னிரெண்டு வயதுகள் ஆகிவிட்டாலும், குழந்தை குணத்தை அவள் இன்னும் விடவில்லை.

புளியங்கொட்டையை ரவிக்கைக்குள் பத்திரமாக வைத்து விட்டு, ஜானு வந்தாள்.

'இந்தப் பையனை கொஞ்சம் தூக்கிக்கோ. சாலைக்குக் கொண்டு சென்று காரைக் காட்டு. என்ன ஒரு அழுகை இது!'

தரையில் கிடந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த பத்மநாபனை ஜானு தூக்கினாள். அப்போது அவன் மேலும் சற்று பலமாக அழுதான்.

'வாசுதேவனும் குஞ்ஞிகிருஷ்ணனும் எங்கே போனாங்க?'

'எனக்குத் தெரியாது.'

ஜானு பத்மநாபனைத் தூக்கிக் கொண்டு சாலைக்குச் சென்றாள். முனையிலிருந்த மம்மது மாப்பிள்ளையின் கடையின் அருகில் போய் நின்றால், பிரதான சாலையில் கடந்து செல்லக் கூடிய கார்களையும் பேருந்துகளையும் பார்க்கலாம். அதைப் பார்த்த பிறகாவது, அவனுடைய அழுகை நிற்கட்டும்.

பத்மநாபன் மட்டுமே ஒரு பிரச்சினை. எஞ்சியிருக்கும் மூன்று பிள்ளைகளால் எந்தவொரு சிரமமும் இல்லை. ஜானு விவரமுள்ளவள். கூறினால் அவளுக்குப் புரிந்து விடும். அவள் மூத்தவள் அல்லவா? கிணற்றிலிருந்து குளிர்ந்த நீரை அள்ளிக் பருகியும், புளியங் கொட்டையைத் தின்றும் அவள் நாட்களை ஓட்டி விடுவாள். அதற்குப் பிறகு இருப்பவர்கள் வாசுதேவனும், குஞ்ஞி கிருஷ்ணனும். தூங்கிக் கொண்டிருக்கும் பாயிலிருந்து நேராக எழுந்து செல்வது மாலோட்டு கோவிலுக்குத்தான். கோவிலின் வாசலில் ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பார்கள். பூஜை இருக்கும் நாளாக இருந்தால், பிரசாதம் கிடைக்கும். கொஞ்சம் அவலும் சர்க்கரையும் பழமும். அதை வைத்து அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்வார்கள். இல்லாவிட்டால் மாங்காய் எறிந்து கீழே விழ வைக்கவோ, முந்திரிக் கொட்டை பொறுக்கவோ செய்வார்கள். முந்திரிக் கொட்டைகளைச் சேகரித்து மம்மது மாப்பிள்ளையிடம் கொடுத்து காசு வாங்குவதில் பெரிய திறமைசாலி வாசுதேவன்.

பள்ளிக் கூடம் அடைக்கப்பட்டிருந்த காலம். திறந்து விட்டால், மிகப் பெரிய ஒரு நிம்மதியாக இருக்கும். ஜானுவும் வாசுதேவனும் படிக்கிறார்கள். படிக்கட்டும்... அதிர்ஷ்டமிருந்தால், நன்றாக வருவார்கள். இன்னொரு முறை 'படிக்காத காரணத்தால்தான் இப்படி ஆகி விட்டோம்!' என்ற கவலை தோன்றாது அல்லவா? அது மட்டுமல்ல- பள்ளிக் கூடத்தில் மதிய கஞ்சி கிடைக்கும். அது ஒரு நிம்மதி அளிக்கும் விஷயமாக இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து ஏதாவது சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஜானுவிற்கும் வாசுதேவனுக்கும் உண்டாகும். மதிய நேரத்தில் பள்ளிக் கூடத்தில் வயிறு நிறைய சாப்பிடும் கஞ்சி, அவர்களுக்கு இருபத்து நான்கு மணி நேரத்திற்குப் போதும்!

குஞ்ஞிகிருஷ்ணனுக்கு ஐந்து வயது முடியவில்லை. உரிய வயதிற்கு வந்து விட்டால், அவனையும் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டும். ஒரு நேர கஞ்சி கிடைப்பது என்பது, ஒரு பெரிய உதவி ஆயிற்றே!

ஒரு நாள் தேவுவிற்கு ஒரு யோசனை தோன்றியது. ஜானுவும் வாசுதேவனும் பள்ளிக் கூடத்திற்குச் செல்லும்போது அவள் சொன்னாள்: 'நீங்க இந்த குஞ்ஞிகிருஷ்ணனையும் அங்கே கொண்டு போங்க.'

'அதற்கு குஞ்ஞிகிருஷ்ணனுக்கு ஐந்து வயது முடியலையே!' - ஜானு சந்தேகத்துடன் கேட்டாள்.

'அது இல்லடீ விஷயம்! அவன் வெளியே எங்காவது விளையாடிக் கொண்டு இருக்கட்டும். கஞ்சி குடிக்கிறப்போ நீ அவனை அழைச்சிட்டுப் போயி பக்கத்துல வச்சிக்கோ.'

தன் தாயின் யோசனை ஜானுவிற்கும் பிடித்தது. பள்ளிக் கூடத்திற்குச் செல்லும்போது, அவள் குஞ்ஞிகிருஷ்ணனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றாள்.

ஜானுவும் வாசுதேவனும் வகுப்பறையில் அமர்ந்திருக்கும்போது, குஞ்ஞிகிருஷ்ணன் வாய்க்காலில் அயிரை மீன் பிடித்துக் கொண்டோ, மம்மது மாப்பிள்ளையின் நிலத்திலிருக்கும் மாமரத்தின் மீது கல்லெறிந்து கொண்டோ இருப்பான். மதிய கஞ்சிக்கு பள்ளிக் கூடம் விடக் கூடிய மணி அடிப்பதைக் கேட்டவுடன், அவன் மெதுவாக வாசலுக்கு நடந்து செல்வான். பத்து... ஐநூறு பிள்ளைகள் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் குஞ்ஞிகிருஷ்ணனை யார் கவனிக்கப் போகிறார்கள்?

குஞ்ஞிகிருஷ்ணன் ஒரு வார காலம் சந்தோஷமாக கஞ்சியும் அவியலும் சாப்பிட்டான்.

ஒருநாள் பரிமாறும்போது, குட்டன் நாயரின் கண்களில் அவன் பட்டு விட்டான்: 'உன் பெயர் என்னடா?'

'குஞ்ஞிகிருஷ்ணன்.'

'நீ எந்த வகுப்புல படிக்கிறே?'

குஞ்ஞிகிருஷ்ணன் வாய் திறக்கவில்லை. பூனை வெளியே தாவியது. குட்டன் நாயர் அவனை கஞ்சிக்கு முன்னாலிருந்து காதைப் பிடித்து எழுந்திருக்கச் செய்தார். கேட்டிற்கு வெளியே அவனை அனுப்பி விட்டு, உரத்த குரலில் கூறினார்: 'ஓடு... இனிமேல் இந்தப் பக்கம் இந்த காரியத்துக்காக வந்து நின்றால், காலை அடிச்சு ஒடிச்சிடுவேன். பார்த்துக்கோ.'

கஞ்சி தருவது அரசாங்கம்தான். குட்டன் நாயருக்கு அதிலென்ன நஷ்டம்? மோசமான ஆள்!

'நாராயணா... நாராயணா...'

'நீங்க கொஞ்சம் பேசாமல் இருக்கக் கூடாதா?'

'என்னடி உனக்கு? பட்டினி கிடக்குறது போதாதுன்னு, வாயைத் திறக்கவும் கூடாதா?'

'மத்தவங்க மூக்கு முட்ட சாப்பிட்டுட்டுல்ல இருக்காங்க?'

'நீ என்னைக்கு இந்த குடும்பத்துல கால் வச்சியோ, அன்று ஆரம்பிச்சது இங்கே பட்டினி...

'என்னை ஏதாவது பேச வச்சிடாதீங்க.'

'என்னடீ நீ? சொல்லு... சொல்லுன்றேன்.'

தேவு எதுவும் கூறவில்லை. கிழவியுடன் சண்டை போடக் கூடாது என்று எப்போதும் மனதிற்குள் நினைப்பாள். முள் இலையின் மீது விழுந்தாலும், இலை முள்ளின் மீது விழுந்தாலும், இலைக்குத்தானே பாதிப்பு! கிழவியின் முனகலைக் கேட்கும்போது, சில நேரங்களில் நாக்கு அசைய ஆரம்பித்து விடும்!

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel