Lekha Books

A+ A A-

இவரின் வீட்டில்தான் அண்ணாவும், கலைஞரும் எம். ஜி. ஆரும் தங்கினார்கள்

அழியாத கோலங்கள்சுரா (Sura)

இவரின் வீட்டில்தான் அண்ணாவும்,  கலைஞரும் எம். ஜி. ஆரும் தங்கினார்கள்

புகைப் படத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் திரைப் படத் தயாரிப்பாளர் ஆறுமுகநேரி எஸ்.பி.முருகேசன். கலைஞர் கதை, வசனம் எழுத, இளவேனில் இயக்கிய 'உளியின் ஓசை' இவர் தயாரித்த முதல் படம். அந்த படத்திற்கு நான் மக்கள் தொடர்பாளர். இளவேனில் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் மூலம்தான் எனக்கு ஆறுமுகநேரி முருகேசன் அறிமுகம்.

அந்த படத்திற்குப் பிறகு, அடுத்த படத்தையும் இளவேனிலே இயக்குவதாக இருந்தது. அதுவும் கலைஞர் எழுதிய கதைதான். அந்தப் படத்திற்கும் நான்தான் மக்கள் தொடர்பாளர். அப்படத்திற்காக லொக்கேஷன் பார்ப்பதற்காக தயாரிப்பாளர் ஆறுமுகநேரி முருகேசன், இயக்குநர் இளவேனில், ஒளிப்பதிவாளர் கண்ணன், ஆர்ட் டைரக்டர் ராம்கி, இணை மற்றும் துணை இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகி ஆகியோருடன் நானும் சென்றேன். பொதுவாகவே என்னை தயாரிப்பாளர் முருகேசனுக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் படங்களுக்காக போடப்பட்டிருந்த அலுவலகத்திலும், படப்பிடிப்பு நடைபெறும் இடங்களிலும் திரைப்பட உலகம் பற்றி எனக்கு தெரிந்த பல விஷயங்களையும் நான் கூறிக் கொண்டிருப்பேன். அதை ஆர்வத்துடன் கேட்பார் முருகேசன்.

அதனால் லொக்கேஷன் பார்க்க சென்னையிலிருந்து கிளம்பும்போதே 'சுரா சார் நான் இருக்கும் காரில் இருக்கட்டும். அவர் படவுலகம் பற்றியும், பத்திரிகைத் துறை பற்றியும், இலக்கியங்கள் குறித்தும் நிறைய தகவல்களைக் கூறுவார். நான் அவரிடமிருந்து ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்' என்று இளவேனிலிடம் கூறி விட்டார்.

பிறகென்ன?ஆறுமுகநேரி முருகேசனின் காரில் நான் அமர, பயணம் தொடர்ந்தது. ஓட்டுநர் காரைச் செலுத்த, நானும், முருகேசனும் தீவிரமாக உரையாடலில் ஈடுபட்டிருப்போம். நான் பல திரைத்துறை பற்றிய அரிய தகவல்களை அவரிடம் கூறுவேன். அவர் மிகுந்த ஆர்வத்துடன் அவை ஒவ்வொன்றையும் கேட்பார். புதிய பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அளவற்ற ஆர்வம் அவருக்கு. அவரின் அந்த ஆர்வ குணம் எனக்கு பிடித்திருந்தது.

அருமையான மலையாள திரைப்படங்களின் கதைகள், வங்க மொழி படங்களின் கதைகள், ஹாலிவுட் படங்களின் கதைகள், ஈரான், இத்தாலி, ஃப்ரெஞ்ச்,

ஸ்பெயின், ஜெர்மனி, சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களின் கதைகள் என்று நேரம் போவதே தெரியாமல் அவரிடம் நான் கூறிக் கொண்டே வருவேன். அவற்றை மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்பார் முருகேசன்.

குற்றாலம், பாபநாசம், அம்பாசமுத்திரம், முண்டந்துறை, அச்சன் கோவில், புனலூர், மூணாறு, தேக்கடி என்று எங்கள் பயணம் தொடர்ந்தது. லொக்கேஷன் பார்ப்பதற்கு மத்தியில், எங்களின் உரையாடலும் தொடர்ந்து கொண்டிருக்கும். மூணாரில் நான் பல மிகச் சிறந்த மலையாள திரைப்படங்களின் டிவிடிக்களைத் தேர்வு செய்ய அவை எல்லாவற்றையும் வாங்கினார் முருகேசன்.

நான்கு நாட்களுக்குப் பிறகு, நாங்கள் சென்னை திரும்பினோம். எனக்கும், ஆறுமுகநேரி முருகேசனுக்குமிடையே ஒரு நெருங்கிய நட்பு அந்த பயணத்தால் உண்டானது.

அதற்குப் பிறகு, சில தவிர்க்க முடியாத காரணங்களால், அந்தப் படம் கை விடப்பட்டது. ஆறுமுகநேரி முருகேசன் கலைஞர் கதை, வசனம் எழுத, 'பெண் சிங்கம்'என்ற படத்தைத் தயாரித்தார். அதை வேறொரு இயக்குநர் இயக்கினார்.

இதற்கிடையில் நான் மொழி பெயர்த்த இலக்கிய நூல்களைக் கேட்டார் முருகேசன். நான் சில நூல்களைக் கொடுத்தேன். அவற்றை ஆர்வத்துடன் படித்த அவருக்கு, இலக்கியத்தின் மீது தணியாத தாகம் உண்டாகி விட்டது. நக்கீரன் அலுவலகத்திலிருந்து என்னுடைய மொழி பெயர்ப்பு படைப்புகளைத் தாங்கி வரும் 'இனிய உதயம்' மாத இதழுக்கு இவர் சந்தா கட்டி, ஒவ்வொரு மாதமும் அதில் வரும் படைப்புகளை தவறாமல் படித்து வருகிறார் என்ற தகவலே எனக்கு சமீபத்தில்தான் தெரியும். தெரிந்தபோது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். 'உளியின் ஓசை' படத்தின்போது படத்துறையைப் பற்றியோ, இலக்கியம் குறித்தோ எதுவும் தெரியாமல் இருந்த முருகேசன் இப்போது தன் கையில் டைரி வைத்துக் கொண்டு, தினமும் அதில் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

முருகேசனின் கையிலும், அவருடைய அலுவலக மேஜையிலும் தின இதழ்கள், வார மற்றும் மாத இதழ்கள், அரசியல் பத்திரிகைகள், இலக்கிய நூல்கள். . . !

முன்பெல்லாம் என்னைப் பார்த்து 'என்ன சார், எப்போ பார்த்தாலும், கையில் புத்தகங்களுடனே இருக்கீங்க?' என்று புன்னகைத்துக் கொண்டே கேட்பார் முருகேசன். இப்போது அவரும் என்னை மாதிரியே ஆகி விட்டார். எப்போது பார்த்தாலும், கையில் புத்தகங்கள்தான். . . 'கடைசியில என்ன சார், என்னை மாதிரி ஆயிட்டீங்க?என்றேன் நான்-அவரைப் பார்த்து. அதற்கு அவர் புன்சிரிப்பை மட்டும் பதிலாக தந்தார். அந்தப் புன்சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். . .

ஆறுமுகநேரி முருகேசன் வளரும் தொழில் நுட்ப விஷயங்களையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார். முக நூலில் இப்போது அவர் மிகவும் பிஸி. 'முருகேசன் பொன்னையா'என்ற பெயரில் கவிதை எழுதுவதும், தத்துவங்கள் எழுதுவதும், லைக் போடுவதும், ஷேர் பண்ணுவதும். . . உண்மையிலேயே ஆறுமுகநேரி முருகேசனைப் பார்த்து நான் ஆச்சரியப் படுகிறேன். மனதில் ஆர்வம் இருந்தால், எதையும் கற்றுக் கொள்ளலாம், அதன் மூலம் நம்மையும் வளர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு ஆறுமுகநேரி முருகேசனே ஒரு சரியான உதாரணம்!

முருகேசன் இப்போது பதிப்பகத் துறையிலும் காலடி எடுத்து வைக்கிறார். தன் மகனின் பெயரில் 'தமிழ் குமரன் பதிப்பகம்' என்ற பெயரில் புதிய பதிப்பகம் ஒன்றை இவர் ஆரம்பித்திருக்கிறார். அப்பதிப்பகத்தின் மூலம் என்னுடைய பல நூல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன. 

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel