Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 7

kanavukku en azhudhai

“என்னங்க இது? இவ்வளவு நேரம் ஆச்சு? வழக்கமா நாலு மணிக்கெல்லாம் எழுந்து வெளியே வந்துருவீங்க? இன்னைக்கு மணி அஞ்சு ஆகியும் வரலை? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?” கேட்டபடியே சிவலிங்கத்தின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

“உடம்புக்கு ஒண்ணும் இல்லை. களைப்பா இருக்கு. அதான் கொஞ்ச நேரம் படுத்துட்டேன்.”

தற்செயலாக அலமாரியைப் பார்த்தவள் ஆச்சரியப்பட்டாள்.

“என்னங்க இது? அந்த அலமாரியில சாவியை வைக்கவே மாட்டீங்க?! இப்ப கதவுலயே சாவி இருக்கு?!” சுசிலா அலமாரியை நோக்கி நடந்தாள்.

கதவைத் தட்டும் சப்தம் கேட்டதும், பதற்றத்தில் சாவியை எடுக்க மறந்திருந்தார். அந்த அலமாரியின் சாவியை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது குறித்து பலமுறை கேட்டுப் பார்த்தாள் சுசிலா. முதலில் சமாளிப்பதற்காக எதையோ காரணமாகக் கூறி வந்தவர், மீண்டும் மீண்டும் சுசிலா கேட்டதும் கோபம் தலைதூக்க, “அதைப் பத்தி இன்னொரு முறை கேட்காதே. எனக்குக் கோபம் வரும். இந்த விஷயத்துல நீ தலையிடாதே” என்று கடுமையாகப் பேசிவிட்டார்.

‘கணவன், மனைவிக்குள் அந்தரங்கமான ரகசியம் இருக்குமா? நான் அவர்கிட்ட மனம் திறந்த புத்தகமா இருக்கேன். ஆனா, அவர் என்கிட்ட மூடு மந்திரமாவே இருக்கார்... ம்...’ புஷ்பா வேதனைப்பட்டாள்.

9

“ஏ, மாலு, உங்க அண்ணனைப் பார்க்க பொண்ணோட வீட்டில இருந்து வரப் போறாங்க. அவங்க வர்ற சமயம் நீ முன்னால வந்து நிக்காதே. அந்தப் பெண்ணை போட்டோ படத்துல பார்த்ததுமே எனக்குப் பிடிச்சிருச்சு. அவங்க வீட்டிலயும், எல்லோருக்கும் உங்க அண்ணனைப் பிடிச்சு, இந்த சம்பந்தம் கைகூடணும்னு நான் நினைச்சுகிட்டிருக்கேன். துக்கிரியா நீ வந்து முன்னால நின்னு, காரியத்தைக் கெடுத்துடாதே.”

பாட்டியின் சுடு சொற்கள் அவளைத் தேளாகக் கொட்டினாலும், அண்ணனுக்குக் கல்யாணம் என்ற செய்தி அவளுக்குத் தேனாக இனித்தது.

“சரி பாட்டி நான் மாடி ரூமுக்குப் போயிடறேன். அவங்க வரும்போது” இதைச் சொல்லும்போது மாலு தவித்த தவிப்பு! வேர் விட்ட மரமான சீதம்மா அந்தப் பிஞ்சு மனம் எத்தனை பாடுபடும் என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல், கண்களை உருட்டி, மேலும் அவளை மிரட்டி வைத்தாள்.

ஆபீஸில் இருந்து திரும்பி வந்த தியாகு, தன் அறைக்குச் சென்று உடைகளை மாற்றினான். முகம் கழுவி விட்டு வெளியே வந்தான்.

“மாலு, மாலுக்குட்டி...” தங்கையை அழைத்தான்.

“என்ன அண்ணா?”

கையில் ஒரு பார்பி பொம்மையுடன் குடுகுடுவென ஓடி வந்தாள் மாலு.

“சாப்பிட்டியாம்மா?”

“ஓ... சாப்பிட்டுட்டேன். அண்ணா, உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.”

“அட என்னம்மா நீ, பெரிய மனுஷி மாதிரி பேசற? என்ன கேக்கப் போற? கேளேன்.”

“அண்ணா, உங்களுக்கு கல்யாணம்னு பாட்டி சொல்றாங்களே? பொண்ணு வீட்டுக்காரங்க உங்களைப் பார்க்க வர்றாங்களாமே?”

“ஆமாம்மா.”

“அண்ணி வந்துட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா.”

“அவசரப் படாதம்மா. அண்ணியா வர்றவ, உனக்கு அம்மாவாகவும், அன்பு செலுத்தறவளா இருக்கணும். என்னோட கல்யாணத்துல நான் முக்கியத்துவம் குடுக்கறது அதுக்குத்தான்.”

“நல்ல அண்ணியா வரணும்னு தினமும் சாமி கும்பிடறேண்ணா. நிச்சயமா நல்ல அண்ணிதான் வருவாங்க.”

“மாலுக்குட்டி, நீ சந்தோஷமா இருக்கணும். நீ நல்லாப் படிச்சு, ஸ்கூல்ல நல்ல பேர் எடுக்கணும்.”

“சரிண்ணா.”

“நல்ல பொண்ணு. நீ போய் படிம்மா. நான் சில வெளிநாட்டு கம்பெனிகளுக்கு லெட்டர் எழுதணும்.”

“சரிண்ணா.” மாலு போவதைப் பார்த்துக் கொண்டிருந்த தியாகு உணர்ச்சி வசப்பட்டான். ‘விபரம் தெரியாத வயசுல நான், முகம் பார்க்கத் தெரியாத குழந்தையா இருந்த இந்த மாலு, எங்க ரெண்டு பேரையும் தவிக்க விட்டுட்டு எங்க அம்மா, அப்பா தீ விபத்துக்கு பலியாயிட்டாங்க. ஆசையா அம்மான்னு கூப்பிடவும், அன்பா அப்பான்னு கூப்பிட்டுப் பேசவும் எங்களைப் பெத்தவங்க இல்லாம போயிட்டாங்களே... மாலுவுக்கு எதிர்காலம் அமைச்சுக் குடுக்கற பெரிய பொறுப்பு என்னை எதிர்நோக்கி இருக்கு. என்ன செய்யப்போறேன்? அவ வாழ்க்கை எப்பிடி அமையப் போகுது?...’ கலங்கிப் போன நெஞ்சில் உருவாகிய எண்ணங்கள், கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

10

திருச்சி சென்று தியாகுவைப் பார்த்த சிவலிங்கத்திற்கும், சுசிலாவிற்கும் திருப்தியாக இருந்தது.

தங்கை மாலுவின் மீது அவன் கொண்டிருந்த பாசத்தையும் புரிந்து கொண்டனர். கல்யாணியை அவனுக்குக் கொடுப்பதில் இருவர் மனதிலும் முழுமையான சம்மதம் தோன்றியது.

சீதம்மா தூரத்து உறவு என்றாலும், குடும்பத்தின் அப்போதைய தலைவி ஸ்தானத்தில் இருப்பவள் என்ற மரியாதையைக் கொடுத்து, அவளிடமும் பேசினார்கள்.

“பெரியம்மா, தியாகுவை எங்களுக்குப் பிடிச்சிருக்கு. இனி மேல் பையனுக்கு பொண்ணைப் பிடிக்கணும். பொண்ணுக்குப் பையனைப் பிடிக்கணும். அதுதான் முக்கியம். அதனால நீங்களே ஒரு நல்ல நாள் பார்த்து தியாகுவை கூப்பிட்டுக்கிட்டு மதுரைக்கு, எங்க வீட்டுக்கு வாங்க. ஒரே சமயத்துல பொண்ணும், மாப்பிள்ளையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப் பாங்க. அதுக்கப்புறம் மத்த விஷயங்களைப் பேசலாம்.”

“எனக்கும் உங்க பொண்ணை போட்டோவுல பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு. என் மனசுக்குள்ள உங்க பொண்ணு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டா. இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கணும். நல்லது நடக்கணும்னா, என்னை மாதிரி அமங்கலி அங்கே வரக்கூடாது. தியாகுவோட பெரியம்மா பொண்ணு ஒருத்தி மதுரையிலதான் இருக்கா. அவகூட தியாகுவை உங்க வீட்டுக்கு வரச் சொல்றேன். பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் பிடிச்சிடுச்சுன்னா, அதுக்கப்புறம் வேற என்ன பேச்சு வேண்டியிருக்கு? அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்தை நடத்திட வேண்டியதுதான்.”

“அம்மா... பேச்சுன்னு நான் சொன்னது. பொண்ணுக்கு நகை, சீர் போடற விஷயம் பத்தி. எல்லாமே பேசிடணும்ல. அதைத்தான் சொன்னேன்.”

“மூச்... நகை நட்டு, சீர் செனத்தி இதைப் பத்தி எதுவும் வாயே திறக்கக் கூடாதுன்னு எங்க தியாகு கண்டிப்பா சொல்லி இருக்கான். அந்த நிபந்தனைக்கு நான் சம்மதிச்சாத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஏற்கெனவே சொல்லிட்டான். பொண்ணைப் பத்தி மட்டும் பேசுவோம். பொன் நகையைப் பத்தி எதுவும் பேசாதீங்கன்னு சொல்லி இருக்கான்.” சீதம்மாவின் குரலில் பெருமிதம் வழிந்தது.

“அம்மா, நீங்க இந்தக் குடும்பத்துக்குப் பெரியவங்க. நல்ல காரியங்கள் செய்றதுக்கு சுமங்கலிதான் வரணும்ங்கறது அவசியம் கிடையாது. நல்ல மனசு உள்ளவங்களோட ஆசிகள் இருந்தா போதும். நீங்களும் தியாகுகூட வந்தீங்கன்னா, எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel