Lekha Books

A+ A A-

நீலாம்பரி

neelambari

முப்பத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு தான் இழந்த ஏதோவொன்றைத் தேடி மதுரைக்கு வந்திருந்தாள் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சுபத்ராதேவி. நீங்கள் எதை இழந்து விட்டீர்கள் என்று யாராவது அவளைப் பார்த்து கேள்வி கேட்டால் அந்தக் கேள்விக்குச் சரியான ஒரு பதில் சொல்ல சுபத்ராவால் முடியாது.

'பல வருடங்களுக்கு முன்பு இந்த நகரத்தில் அனுபவித்து முடித்த வேதனையைத் தேடி திரும்பி வந்திருக்கிறேனா நான்? அந்த வேதனையின் இனிமையைத் தேடி வந்திருக்கிறேனா நான்? அந்த வேதனையைத் தேடி மட்டும்தானே பலவித பொய்க்காரணங்களைச் சொல்லிவிட்டு நோயாளிகளையும் மருத்துவமனை அதிகாரிகளையும் விட்டுவிட்டு, ஏன் என்னுடைய டிரைவரையே கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு காரில் நான் மட்டும் இந்தப் பயணத்தைச் செய்து இங்கு வந்திருக்கிறேன். அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்ட ஒரு உறுப்பைத் தேடி நோயாளி மருத்துவமனைக்குத் திரும்பவும் வருவதுண்டா? அது எப்போதும் நடக்காத விஷயம். இந்தப் பயணம் என்னுடைய அறிவற்ற தன்மையைத்தான் காட்டுகிறது...'- சுபத்ரா தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

மதுரையை விட்டுப் போய் சென்னையில் படித்திருந்தபோதும் அதற்குப் பிறகு கணவருடன் கோழிக்கோட்டில் வாழ்ந்தபோதும் மதுரை என்ற நகரம் ஒளி மங்கிய ஒரு கனவைப்போல சுபத்ராவின் மனதில் நிரந்தரமாகத் தங்கி இருந்தது. முல்லையும் பிச்சும் சாமந்தியும் காட்டு துளசியும் மணம் வீசும் தெருக்களும் புதுத்துணிகளின் வாசனை மிதந்து கொண்டிருக்கும் ஜவுளிக் கடைகளும் மீனாட்சி கோவிலின் குளிர்ச்சியான பளபளப்பான உட்பகுதிகளும் தீபங்களில் எரிந்து கொண்டிருக்கும் திரிகளும் மாலை நேரத்தில் தன்னுடைய குருநாதர் பாடிய நீலாம்பரியும் சுபத்ராவின் மனதில் நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருந்தன. அந்த நினைவுகளைக் குளத்திலிருந்து செடிகளை அகற்றுவதைப் போல் பறித்து எறிய அவளுடைய கணவர் பல நேரங்களிலும் முயற்சி செய்தார். அந்த நினைவுகள் அவளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரையில் அவள் தனக்குச் சொந்தமாக மாட்டாள் என்று உள்ளபடியே பயந்தான் அவன்.

"மதுரையைப் பற்றி பேசுறப்போ சுபத்ரா, நீ இன்னொரு ஆளா மாறிடுறியோ!"- அவர் சொன்னார். தனக்கு சங்கீதம் கற்றுத்தந்த பிராமண இளைஞனைப் பற்றி சுபத்ரா எப்போதோ ஒருமுறை கூறுவாள். இருந்தாலும் அந்த குரு-சிஷ்யை உறவின் கருப்பு நிழல் அவளுக்கும் அவளுடைய கணவருக்கும் நடுவில் விழுந்து கிடந்ததென்னவோ உண்மை.

"உண்மையைச் சொல்லு... நீ வேற யாருக்கும் காதலியா இருந்திருக்கியா?" அவளுடைய கணவர் கேட்டார்.

"திருமணமாகும் வரை நான் கன்னியாகத்தான் இருந்தேன்"- அவள் சொன்னாள். அந்த உண்மையை அவள் மதிப்போடு சொல்லவில்லை. கன்னித்தன்மையை இழக்காமல் இருந்தது தன்னுடைய தவறு என்று தான் கருதுவதைப்போல் இருந்தது அவள் பதில் சொன்ன முறை. அவளின் கணவர் கவலையில் மூழ்கிவிட்டார்.

டாக்டர் சுபத்ராதேவியும் அவளுடைய கணவர் சந்திரசேகரமேனனும் ஆதர்ஷத் தம்பதிகள் என்று நண்பர்களும் தெரிந்தவர்களும் எல்லோருக்கும் தெரிய அறிவித்தபோது சுபத்ரா அப்படி அவர்கள் சொன்னதை எதிர்க்கவில்லை. அந்த அறிவிப்பில் அவள் ஆனந்தம் கொள்ளவுமில்லை. இதயத்தின் தெரியாத ஒரு மூலையில் உண்டான மரத்துப்போன உணர்வுடன் அவள் கணவருடன் படுத்தாள். தன் மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு நல்ல இந்துப்பெண்ணின் இல்லறக் கடமைகளை இரவும் பகலும் நிறைவேற்றினாள். எனினும் கணவர் அவள் மீது குறை சொல்லிக்கொண்டே இருந்தார்.

"நீ நூறு சதவிகிதம் உண்மையா இருக்குறது உன்னோட நோயாளிகள் கிட்ட மட்டும்தான். டாக்டருக்கும் நோயாளிகளுக்கும் இருக்கும் உறவை மட்டுமே உன்னால புரிஞ்சுக்க முடியும். உன்னோட நோயாளிகளைப் பார்க்குறப்போ எனக்கு சொல்லப் போனா பொறாமையா இருக்கு."

அவளுடைய கணவரின் அந்த வார்த்தைகளைக் கேட்டு அவளுக்கு என்னவோ போல் இருந்தது. மனைவி என்ற நிலையில் தான் தோல்வி அடைந்து விட்டோமோ, பெண் என்ற நிலையில் தான் முழுமையற்ற ஒருத்தியாய் ஆகிவிட்டோமோ என்றெல்லாம் அவள் பயந்தாள்.

தன்னுடைய நரம்புகளுக்கு வெப்பம் தர தன் கணவரால் முடியவில்லை என்பதை சுபத்ரா நினைத்துப் பார்த்தாள். சாஸ்திரிகள் குளிக்கும் கோவில் குளத்தில் அவரின் அக்கா மகள் ஞானாம்பாளுடன் தான் நீந்துவதற்காக இறங்கியதையும் நீரைக்குடித்துக் கீழே மூழ்கியதையும் அவள் மீண்டும் நினைத்துப் பார்த்தாள். ஞானாம்பாளின் கூச்சல் கேட்டு அவர் நீந்தி வந்து தன்னைத் தூக்கிக் காப்பாற்றியதையும் அவள் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். தன்னை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவர் நீந்தியபோது தன்னுடைய உடம்பு நீர் சுழிவுகள் கொண்ட சமுத்திரம் போலாகி விட்டதை அவள் உணர்ந்தாள். ஊஞ்சலில் அமர்ந்திருக்கும்போது திடீரென்று கீழே விழுந்ததைப்போல் ஒரு தோணல் அவளின் அடிவயிற்றில் அனுபவப்பட்டது. அதுதான் காமத்தின் முதல் ஆக்கிரமிப்போ? பூணூல் ஒட்டிக்கிடக்கும் அந்த மார்பின் ஸ்பரிசம் மீண்டும் கிடைக்காதா என்று அவள் எத்தனை முறை மனதிற்குள் ஏங்கினாள்! வியர்வையில் நனைந்த செந்தூரப்பொட்டும் அந்தக் கழுத்தில் அணிந்திருந்த ஒரு ருத்ராட்ச மாலையும் அவளின் கனவுகளில் சதா நேரமும் தோன்றிக் கொண்டே இருந்தன. திருமணமான பிறகும் அந்த செந்தூரப்பொட்டு ஞாபகத்திலிருந்தோ கனவிலிருந்தோ சிறிதும் மறையவேயில்லை.

மதுரையில் பிரபல கண் டாக்டராக இருந்தார் சுபத்ராவின் தந்தை. தன்னுடைய தோழிகள் ராமானுஜம் சாஸ்திரிகளின் மடத்திற்குப் போய் சங்கீதம் படிப்பதாகச் சொன்னபோது, சுபத்ராவும் அந்த வகுப்பில் சேர அனுமதி தந்தார் அவளின் தந்தை. தனக்கு மிகவும் பிடித்தமான சினேகிதி ஞானத்தின் மாமாதான் சாஸ்திரிகள் என்று சுபத்ரா சொன்னபோது, அவளின் தந்தை அவளை சாயங்கால நேரத்தில் மடத்திற்கு அனுப்ப சிறிதும் யோசிக்கவில்லை. ஞானத்துடன் சேர்ந்து அவள் போவாள். அவளுடனே மீண்டும் திரும்பி வருவாள்.

ஞானம் ஆட்டின் முகத்தைக் கொண்டிருந்தாள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவள் சுபத்ராவை 'தடிச்சி' என்று அழைத்து கிண்டல் பண்ணுவாள். சுபத்ரா அணிந்திருந்த ஆடைகளின் அடர்த்தியான நிறங்கள் அவளின் கருத்த உடம்பிற்குச் சிறிதும் பொருத்தமாக இல்லை என்று ஞானம் ஒவ்வொரு நேரமும் திரும்பத் திரும்பக் கூறுவாள். சுபத்ராவின் அடர்த்தியான கூந்தல் அசுரர்களிடம் இருக்கும் முடி என்று ஞானம் சொன்னாள். ஞானம் அப்படிச் சொல்ல சொல்ல சுபத்ராவிடம் அது ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கியது. தான் ஒரு உயர்ந்த குலத்தில் பிறந்த பெண் என்பதை அவ்வப்போது இந்தச் செயல்கள் மூலம் ஞானம் தன் தோழிக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாள்.

"நீ மீனும் மாமிசமும் சாப்பிடுறவதானே? உன்னால சங்கீதத்துல பெருசா வரவே முடியாது.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel