Lekha Books

A+ A A-

நீலாம்பரி - Page 3

neelambari

தன்னோட தாயைப் பார்க்க குருவாயூருக்குப் போயிருக்காங்க" இப்படிப்பட்ட பொய்கள் சுபத்ராவை மிகவும் வேதனையடைச் செய்தன.

"என்னோட நோயாளி செத்துப்போனா உங்களுக்கு ஒண்ணுமில்ல...அப்படித்தானே?"- அவள் கேட்டாள்.

"சாகுற அதிர்ஷ்டம் இருந்தா நோயாளி சாகத்தான் செய்வான். உன்னால நிச்சயம் அப்படிச் சாகப்போகுற நோயாளியைக் காப்பாத்தவே முடியாது, கடவுளைவிட டாக்டர் பெரியவங்களா என்ன?"

சில இரவுகளில், தொலைபேசி ஒலிக்காத அபூர்வமான வேளைகளில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த அழகியின் தலைமுடியிலிருந்து வரும் இனிய மணத்தை முகர்ந்தவாறு மேனன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பார். தலைமுடியில் நரைவிழுந்த பிறகும் தன்னுடைய மனைவியின் அழகிற்கு எந்தவொரு குறைவும் உண்டாகவில்லை என்பதை நினைக்கும்போது அவருக்கே ஆச்சரியமாக இருக்கும். அவளைக் கட்டிப்பிடிக்கும்போது எந்தவித மறுப்பும் சொல்லாத அந்த மனைவி தானே வலியவந்து கட்டிப்பிடிப்பதோ, காதலை வெளிப்படுத்துவதோ ஒருநாள் கூட நடந்ததில்லை.

"உன் நோயாளிகளைப் பார்க்குறப்போ எனக்குப் பொறாமை வருது"- மேனன் சொன்னார்.

"ஒரு டாக்டர் தன்னுடைய நோயாளிகளுடன் நெருங்கிப் பழகுவது தவறா?" என்று சுபத்ரா தன் கணவரைப் பார்த்துக் கேட்டாள்.

"அப்படி நெருக்கமா பழகுறது நல்லதே இல்ல. அப்படி நட்பா பழகுறது ஸென்டிமென்டாலிட்டிக்கு வழி உண்டாக்கிக் கொடுக்கும். சிகிச்சை செய்யிற டாக்டருக்கும் சிகிச்சை பெறுகிற நோயாளிகளுக்கும் ஒரே நேரத்துல அது ஆபத்தை உண்டாக்கும். அப்படி நெருங்கிப் பழகுற நோயாளியோட வயிறை அறுக்குறப்போ, உன்னோட விரல்கள் நடுங்குறதை நீ பார்த்ததே இல்லியா?"

சந்திரசேகரமேனன் திட்டமிட்டு தனக்கென்று வகுத்துக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகிறார். அவருக்கு இருப்பதே மூன்றோ நான்கோ நண்பர்கள் மட்டும்தான். அவர்களின் வீடுகளுக்குச் சென்று உணவு சாப்பிட அவர் தயங்கியதில்லை. அவர்களை மட்டும் தன்னுடைய வீட்டிற்கு அவர் அழைப்பார். தனக்குத் தெரிந்தவர்களை க்ளப்களிலோ பொது இடங்களிலோ பார்க்கும்போது வெறுமனே சிரிப்பார். இல்லாவிட்டால் மூன்றே வார்த்தைகளில் ஏதாவது நலம் விசாரிப்பார். அவ்வளவுதான். தனக்கு அறிமுகமில்லாத மனிதர்கள் முன்னால் பூட்டப்பட்ட வீடு மாதிரி ஆகிவிடுவார் அவர்.

வருடத்திற்கொரு முறை சுபத்ரா தன் கணவருடன் சேர்ந்து குருவாயூர் கோவிலுக்கு சாமி கும்பிடச் செல்வதுண்டு. கோவிலுக்குச் செல்லும் பாதையில் நடந்து செல்லும்போது கையை நீட்டிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுப்பதற்காக ஐம்பது ரூபாய் நோட்டை நாணயங்களாக மாற்றி மேனன் தன்னுடைய துவாலையில் முடிச்சுப் போட்டு வைத்திருப்பார். சுபத்ரா மீது அந்தக் கூட்டத்தில் யாரும் வந்து விழுந்துவிடக்கூடாது என்று ரோமம் வளர்ந்திருக்கும் தன்னுடைய கையால் அவளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டாக்கிக் கொண்டுதான் மேனன் கோவிலுக்கு அவளுடனே நடப்பார்.

ஐம்பது ரூபாயையும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுத்து முடித்து விட்டால் ஐம்பத்தொன்றாவதாக இருக்கும் பிச்சைக்காரனிடம் அவர் சண்டை போடுவது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். திடீரென்று அதுவரை அவரின் முகத்திலிருந்த சாந்தம் வேறெங்கோ போய் மறைந்து கொள்ளும். "போ... போ...ஆளைத் தொந்தரவு பண்ணாம இங்கேயிருந்து போறியா இல்லியா?"- மேனன் உரத்த குரலில் கத்துவார். கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நிற்கும்போது யாராவதொரு ஆண் தன்னை அறியாமல் தன்னுடைய மனைவியின் மீது தொட்டுவிட்டால், அவ்வளவுதான் ஒரு ரகளையே பண்ணிவிடுவார் மனிதர்.

"முகத்துல கண்ணு இல்லியா என்ன? பெண் மீது கை படுதுன்ற நினைப்பு இருக்க வேண்டாமா?"- அவர் கேட்பார். ஆறடி உயரத்தைக் கொண்ட ஆஜானுபாகுவான மனிதராக இருந்ததால், யாரும் அவருடன் சண்டை போட பொதுவாக வரமாட்டார்கள். ஆனால், வெட்கத்தாலும் அவமானத்தாலும் சுபத்ராவின் முகம்தான் என்னவோ போலாகிவிடும்.

தங்களுக்குக் குழந்தைகள் பிறக்காததற்காக மிகவும் வருத்தப்பட்ட மேனன் சுபத்ராவின் தொழில் பக்தியையே ஒரு காரணமாகக் காட்டி சொன்னார்:

"குழந்தைகளைப் பார்த்துக்கிறதுக்கு உன்னால முடியாது. அதற்காக நேரமே உனக்குக் கிடைக்காது. உனக்கு எப்போ பார்த்தாலும் நோயாளிகளைப் பற்றிய நினைப்புத்தான்..."

நோயாளிகளை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டிருந்த அந்த மனிதர் திடீரென்று ஒருநாள் நோயாளியாக மாறியபோது சுபத்ராவிற்கே ஒருவித குற்றஉணர்வு உண்டாக ஆரம்பித்தது. அவருக்குத் தரவேண்டிய அன்பையும் பாசத்தையும் தான் தரவில்லை என்று அப்போது அவள் நினைக்க ஆரம்பித்தாள். அவரைவிட பத்து மடங்கு அதிகமாகச் சம்பாதித்ததால் தன்னிடம் அந்த ஆணவம் வந்து ஒட்டிக்கொண்டதோ என்று அவள் நினைத்தாள்.

ஆரம்ப காலத்தில் அவள் அவரிடம் மிகவும் மரியாதை வைத்திருக்கத்தான் செய்தாள். அவரைப் பார்த்து அவள் பயப்பட்டாள். பழமையும் மதிப்பும் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து ஒரு மனிதர் தன்னுடைய கணவராக வரப்போகிறார் என்பதை அவள் சிறிதும் எதிர் பார்த்திருக்கவில்லை. தான் தமிழ்நாட்டில் வளர்ந்ததாலும், தன்னுடைய நிறம் தவிட்டு நிறத்தில் இருந்ததாலும் தன் தாயின் ஊருக்கு ஓணம் பண்டிகையின்போது போகும்போது அங்குள்ள தன்னுடைய சொந்தக்காரர்கள் தன்னை 'செட்டிச்சி' என்று அழைத்ததை சுபத்ரா நினைத்துப் பார்ப்பாள். நினைத்திருந்தால் சந்திரசேகர மேனன் அழகியாக இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருக்கலாம். நவநாகரீகமான ஒரு பெண்ணைத் தமிழ் கலந்த மலையாளம் பேசும் தன்னை எதற்காக அவர் மனைவியாகத் தேர்ந்தெடுத்தார்? இதைப் பல நேரங்களிலும் நினைத்துப் பார்த்திருக்கிறாள் சுபத்ரா.

ஒருநாள் அவர் சொன்னார்: "திரௌபதியின் உடலமைப்பு கொண்டவள் நீ. ஆனால், எனக்கு மிகவும் பிடித்தது உன்னோட அமைதியான குணம்தான்."

அந்த அமைதியான குணம் எங்குபோய் ஒளிந்து கொண்டது? நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் கண்கண்ட கடவுளாகத் தான் மாறியபோது தன்னைப்பற்றி மிகவும் உயர்ந்த மதிப்பு அவளுக்கு உண்டாக ஆரம்பித்தது. தான் உலகத்தின் தூண்களில் ஒன்றாக மாறிவிட்டதைப்போல் அவள் உணர்ந்தாள். வீட்டைப் புதுப்பித்தாள். படுக்கையறையில் குளிர்சாதன மெஷினைக் கொண்டு வந்து பொருத்தினாள். வேலைக்காரர்களின் எண்ணிக்கை அதிகாரித்தது. கரையில்லாத விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் மட்டுமே அவள் அணிய ஆரம்பித்தாள். புதிய இருக்கைகளைக் கொண்டு வந்து போட்டாள். திரைச்சீலைகளையும், விரிப்புகளையும் புதிதாக வாங்கினாள். புதிதாகக் கொண்டு வரமுடியாதது அவளுடைய கணவர் மட்டும்தான். அவர் வீட்டு வாசலிலும், உட்பகுதியிலும் பழைய பனியனும், வேஷ்டியும் அணிந்து உலாத்திக் கொண்டிருந்தார். முன் பக்கமிருந்த ஒரு பல் விழுந்தபோது, செயற்கைப் பல் வாங்கிப் பொருத்திக் கொள்ள அவர் கறாராக மறுத்துவிட்டார்.

"பல் இருந்தாலும் இல்லைன்னாலும் சந்திரசேகரமேனன் சந்திரசேகரமேனன்தான்"- அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். அந்தச் சிரிப்பில் பங்கு கொள்ள சுபத்ராவால் முடியவில்லை. தன்னுடைய வாழ்க்கையில் ஒருவித அலுப்பு தட்டியிருக்கிறது என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel