Lekha Books

A+ A A-

ஒரு பிறந்தநாள் ஞாபகம்

oru-piranthanaal-enabagam

நாளை என்னுடைய பிறந்த நாள்.

        எனக்கு இது ஞாபகத்திலேயே இல்லை. அவளுடைய கடிதத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கே இது தெரிய வந்தது.

அவள் எழுதியிருக்கிறாள்: "வரும் வியாழக்கிழமை பிறந்த நாள். காலையில் எழுந்து குளித்து முடித்தபிறகுதான் எதையும் சாப்பிட வேண்டும். வியாழக்கிழமை பிறந்தநாள் வருவது என்பது பொதுவாகவே நல்ல விஷயம். நான் சிவன்கோவிலில் சாதமும் பாயசமும் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். அங்கு அருகில் கோவில் இருக்கிறது அல்லவா? இருந்தால், குளித்து முடித்து அங்கு போய் கடவுளைத் தொழ வேண்டும்..."

என்னுடைய நன்மைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அது எல்லாவற்றையும் என்னுடைய மனைவி செய்து கொள்வாள். அந்த உறுதியான நம்பிக்கைதான் என்னை வழிநடத்திச் செல்ல வைக்கிறது. அவள் நீண்ட காலமாகவே எனக்காக கடவுளிடம் வேண்டி வருகிறாள். அவளின் பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்க வழி இருக்கிறது. தேவர்களின், தேவிகளின் உயிருக்குயிரான ஒருத்தியாக வளர்ந்தவள் அவள்.

நாளை எனக்கு விடுமுறை நாள்தான். பிறந்தநாள் என்ற உண்மையை யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைப்பதே நல்ல விஷயமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். இந்த விஷயம் தெரிந்தால் நண்பர்கள் எல்லோரும் இங்கு வந்து விடுவார்கள். பார்ட்டி வேண்டுமென்று சொல்வார்கள். பிறகு பர்ஸ்தான் காலியாகும். நண்பர்கள் பலரின் பிறந்த நாட்களன்று நடைபெறும் பார்ட்டியிலும், விருந்துகளிலும் நானும் கலந்து கொண்டிருக்கிறேன்.

பிறந்த நாள் நெருங்க நெருங்க முன்பெல்லாம் மனதில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். இப்போது அதற்கு மாறாக, மனமெங்கும் வேதனைதான் நிறைந்திருக்கிறது. வாழ்க்கையில் வசந்த காலம் என்று கவிஞர்கள் குறிப்பிடுகிற இந்தக் கட்டத்தின் இறுதி நெருங்கி விட்டிருக்கிறது.

நாளை செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்பதை நினைத்துப் பார்த்தேன். காலை ஒன்பது மணி வரை இருக்கும் தூக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. சாதாரணமாக விடுமுறை நாள் என்றாலே, ஒன்பது மணி வரை தூங்குவதுதான் வழக்கம். அதற்குப் பிறகு குளிக்க வேண்டும். அப்படித்தானே என்னுடைய மனைவி கடிதத்தில் எழுதியிருக்கிறாள்! பிறகு ஆனந்தபவனில் இருந்து வரவழைக்கப்பட்ட பூரி மசாலாவையும், காப்பியையும் சாப்பிட வேண்டும். இருந்தாலும் ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை மேஜை மீது வைத்துவிட்டு ஒரு பாக்கெட் சிகரெட் கொண்டு வரும்படி சொல்லும்போது ராஜன் கேட்பான். "என்னடா... ரொம்பவும் குஷியா இருக்கே! உன் மனைவி பிரசவம் ஆயிருக்காளா என்ன?"

"அப்படின்னா நான் வருத்தப்பட இல்ல செய்வேன்?"- என்று கூறும் நான் பின்னர் மெதுவாக என்னுடைய பிறந்த நாள் விஷயத்தைச் சொல்வேன். சாப்பாட்டிற்கு ஸ்பெஷல் குருமா கொண்டு வரும்படி சொல்லலாம். பிறந்த நாளன்று மாமிசம் சாப்பிடும் உண்மை அவளுக்குத் தெரியப் போவதில்லை. சாயங்காலம் ஒரு திரைப்படம் பார்க்கப் போகலாம். நாள் அத்துடன் முடிந்துவிடும். பிறந்தநாள் மாதத்தின் ஆரம்பத்திலேயே வருவதாக இருந்தால், பட்ஜெட்டில் புகைப்படம் எடுக்கும் திட்டத்தையும் அரங்கேற்றியிருக்கலாம்.

ராஜன் இன்னும் வரவில்லை. அவன் தினமும் அலுவலகம் முடிந்த பிறகு, க்ளப்பிற்குப் போவான். "பிஸ்பாங்" விளையாடாவிட்டால் அவனுக்குத் தூக்கமே வராது.

கூஜாவிலிருந்து குளிர்ந்த நீர் எடுத்து குடித்த நான் வாசலுக்கு வந்து சாய்வு நாற்காலியில் படுத்தேன்.

பக்கத்து வீட்டுக்கார சேட்டின் ஐந்து வயதுள்ள மகன் எதிர்பக்கமிருந்த வீட்டின் முன்னால் புகை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

நான் பலவித ஞாபகங்களிலும் ஆழ்ந்துவிட்டேன். நான் சிறு குழந்தையாக இருந்த காலத்தை மனதில் நினைத்துப் பார்த்தேன். கடந்து போன பிறந்தநாள்கள் ஒவ்வொன்றாக என் மனதில் வலம் வந்தன. இருபது வருடங்களுக்கு முன்னால் கடந்து போன ஒரு பிறந்த நாள் என் மனதில் பசுமையாக நின்று கொண்டிருக்கிறது.

அந்தப் பிறந்தநாளைப் பற்றி நினைக்கும் போது வேதனை தரும் நினைவுகள் நிறைய இருக்கின்றன என்பது வேறு விஷயம். அது மட்டுமல்ல- அன்று இன்னொரு சம்பவமும் நடந்தது. அன்று நான் ஒரு மனிதனைக் கொலை செய்ய திட்டமிட்டேன்.

கொலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் பலமாக இருந்தது. எந்த விதத்திலும் கட்டாயம் கொலையைச் செய்தே ஆக வேண்டும் என்று திட்டமிட்டேன். பழைய முறைகளைப் பின்பற்றி கொலை செய்ய ஆறோ ஏழோ வயதான எனக்குத் தெரியவில்லை. கடைசியில் கொலைச் செயலுக்கு ஒரு புதிய நாகரீக வழியைக் கண்டு பிடித்தேன். அது- குளித்துவிட்டு கடவுளைத் தொழுவது.

எனக்கு இந்த வழியை யார் சொல்லித் தந்தார்கள் என்பது தெரியாது. விஷயம் இதுதான். ஊரில் இருக்கும் தெய்வங்களின் கூட்டத்தில் கொல்வதில் பிரபலமான சில தெய்வங்கள் இருக்கின்றன. அய்யப்பன், பகவதி ஆகியோர் இதில் வரமாட்டார்கள். அவர்களுக்கும் கீழே உள்ளவர்கள்தான் இந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள். அவர்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்தால் எதிரிகளின் கதை முடிந்தது.

நான் பிரார்த்தனை செய்தேன். மனம் உருக வேண்டினேன். என்னுடைய விரோதி என்ன காரணத்தாலோ இறக்கவில்லை. அவனைக் கொல்ல நான் தீர்மானித்தது என்னுடைய பிறந்த நாளன்று.

இப்போது நான் அதை நினைத்துப் பார்க்கிறேன். பிறந்தநாள் என்பது ஒரு முக்கியமான நாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அது மிகவும் ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அது வயதான மனிதர்களின் விஷயத்தில் மட்டும்தான் என்று நான் நினைத்திருந்தேன்.

எங்களின் பள்ளிக்கூடத்தில் வருடத்திற்கொருமுறை அவல், சர்க்கரை ஆகியவற்றை எல்லோருக்கும் தருவார்கள். அன்று மேனேஜரின் பிறந்தநாள். அவருடைய வீட்டில் மதிய நேரம் அடை, அவியல், பெரிய அப்பளம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றுடன் விருந்து. எங்களின் ஆசிரியர்களுக்கு அன்று மதியம் மேனேஜரின் வீட்டில்தான் சாப்பாடு. தம்பிடி மாஸ்டர் மட்டும் போகவில்லை. அவர் மேனேஜரை விட உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். அப்படியென்றால் அங்கு போய் சாப்பிடக்கூடாது அல்லவா?

ஓணம் பண்டிகையைவிட பிறந்தநாள் சிறப்பானதா என்று நான் மனதில் நினைத்தேன். எங்கள் வீட்டில் ஓணத்திற்கு விருந்து இருக்கும். ஆனால், பாயசம் இருக்காது.

மேனேஜர் மிகவும் வயதானவர். அவருக்குத் தலை முழுவதும் நரைத்திருக்கும். என்னுடைய பெரிய மாமாவின் தலையும் முழுமையாக நரைத்திருக்கும். ஆனால், அவருக்குப் பாட்டி அளவிற்கு வயதாகவில்லை. பாட்டியின் மகன்தானே பெரிய மாமா!

பெரிய மாமாவின் பிறந்த நாளும் படு அமர்க்களமாகக் கொண்டாடப்படும். அன்று மதிய நேரம் எராளமான ஆட்கள் சாப்பிட வருவார்கள். வாசலிலும் திண்ணையிலும் கூட வரிசையாக இலை போடுவார்கள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel