Lekha Books

A+ A A-

ஒரு பிறந்தநாள் ஞாபகம் - Page 3

oru-piranthanaal-enabagam

தாமோதரன் எதைப் பார்த்தாலும் எச்சில் ஒழுக விடுவான். ஆனால், பாட்டியின் பார்வையில் நான்தான் எச்சில் ஒழுக விடுபவன். தாமோதரனுக்கு வயிற்றுபோக்கு உண்டானதற்குக் காரணம் கூட நான் அவனைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொண்டதுதான் என்றாள் பாட்டி.

சிறிது நேரம் சென்றதும் என் தாய் அழைப்பது கேட்கும். "குஞ்ஞி கிருஷ்ணா, இங்கே வாங்க..."

எங்களுக்கு முன்னறையில் பரிமாறி வைத்திருப்பார்கள். சாதமல்ல. வரிசையாக மண் பாத்திரங்களில் கஞ்சி. கஞ்சி மஞ்சள் நிறத்தில் இருக்கும். காரணம், குழம்பும் அதில் கலந்திருக்கும்.

அதைப் பார்க்கும் போது எனக்கு கோபம் கோபமாக வரும். யார் மீது என்றில்லை. முழு உலகத்தையும் மனதில் திட்டிக் கொண்டே நான் அதை வயிற்றுக்குள் தள்ளுவேன்.

அப்பு ஒரு வழியைப் பின்பற்றுவான். அவன் பாத்திரத்தை உதட்டோடு சேர்த்து வைத்துக் கொண்டு வேகமாக ஒரு இழு இழுப்பான். கீழே பாத்திரத்தை வைக்கும் போது வற்றிப்போன குளத்தைப் போல அது முழுமையாக ஒன்றுமே இல்லாமல் இருக்கும்.

கஞ்சி சாப்பிடும் சமயத்தில் நான் வெறுமனே என் தாயுடன் சண்டை போடுவேன். அம்மா இதில் எதுவுமே செய்ய முடியாது என்ற விஷயம் எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் கஞ்சி குடிக்க என்னவோ போல் இருக்கும். அப்படி கஞ்சி குடிப்பதையே நான் மிகவும் தாழ்வான ஒரு விஷயமாக நினைத்தேன். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த சாத்தனின் குடிசைகளிலும் வாசல் பெருக்கும் மாணியின் வீட்டிலும் அவர்கள் குடிப்பது கஞ்சிதான். அவர்களிடம் நெல் இல்லாததால் கஞ்சி குடிக்கிறார்கள். என் வீட்டில் தானியக் கிடங்குகளில் எவ்வளவோ நெல் இருக்கிறது. மாமாவும் தாமோதரனும் சாதம் சாப்பிடுகிறார்கள். எங்களுக்கு மட்டும் ஏன் அவர்கள் கஞ்சி தர வேண்டும்?

பெரிய மாமாவிற்கு எங்கள் மீது அந்த அளவிற்கு விரோதம் இருப்பதற்குக் காரணம் என்ன? எவ்வளவு யோசித்தும் என்னால் அதை மட்டும் தெரிந்து கொள்ளவே முடியவில்லை. தாமோதரனுக்குக் கொடுப்பதைப் போல புதிய பந்தும், ஜாகை போட்ட முண்டும் எனக்குத் தர வேண்டாம். வாய்க்கு வந்தபடி பேசாமல் இருக்கலாமே? எப்போது பார்த்தாலும் எங்களைத்திட்டிக் கொண்டே இருப்பார்.

"என்னடா சைத்தான்களா... என்ன பண்ணுறீங்க?" எங்களைப் பார்த்து அவர் கேட்கும் கேள்வி இது.

வாயில் நெருப்பை வைத்துக் கொண்டு நாங்களொன்றும் நள்ளிரவு நேரத்தில் நடந்து திரியவில்லை. பிறகெப்படி நாங்கள் சைத்தான்களாக ஆனோம்?

உள்ளேயிருந்து ஏதாவது சத்தம் கேட்டால் போதும். எங்களைப் பார்த்து ஒரே கூச்சல்தான்.

"பேசாம இருக்கீங்களா என்ன? கொன்னுடுவேன் நான்."

அவ்வளவுதான்- நாங்கள் நடுங்கிப் போவோம்.

வீட்டிலுள்ள எல்லார்மீதும் மாமாவுக்கு வெறுப்பு.

"இந்த வீட்டைத் தரை மட்டம் ஆக்க ரெண்டு கரும்பூதங்கள் இருக்கு..."

அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறிது நாட்கள் சென்ற பிறகுதான் எங்களுக்கே புரிந்தது. கரும்பூதம் என்பது என் தாய்க்கும் சித்திக்கும் அவர் வைத்த பட்டப்பெயர் என்பதே.

பாட்டிக்குக் கூட மாமா பயப்படமாட்டார். என் தாய் என்னை அடிப்பாள். அதே மாதிரி பாட்டி மாமாவை அடித்தாலென்ன?

ஒரு நாள் கோபியை நடு முற்றத்துத் தூணில் கட்டிப் போட்டு ஒரு புளியங்கொம்பால் அது ஒடியும் வரை மாமா அடித்தார். அதைப் பார்த்த பாட்டி சொன்னாள். "டேய், இந்த அளவுக்கு மோசமானவனா நடக்காதே. சின்னப்பிள்ளைங்களோட சாபம் காலைப் பிடிச்சாலும் போகாது."

அதற்குப் பெரிய மாமா சொன்னார். "அம்மா, நீங்க உங்கப் பாட்டுக்கு இருங்க. இதுல எல்லாம் தலையிடாதீங்க."

அதற்கு மேல் பாட்டி வாயைத் திறக்கவில்லை.

பெரியவர்களின் பிறந்த நாட்களின் போது மட்டுமே விருந்துகள் இருந்தன என்பதுதான் என் எண்ணம். பள்ளிக்கூட மேனேஜரும் பெரிய மாமாவும் வயதானவர்கள்தானே? வயதான பிறகு என்னுடைய பிறந்த நாளையும் மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும். ஊரிலுள்ளவர்கள் எல்லோரையும் அழைக்க வேண்டும்.

என்னுடைய பிறந்தநாள் ஒரு சாதாரண நாளைப் போலத்தான் இருக்கும். காலையில் குளிக்க வேண்டும் என்பதொன்றுதான் விசேஷம். அது எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். என் தாயின் கட்டாயத்தின் காரணமாகவே நான் அதைச் செய்வதற்கு உடன்படுவேன்.

பெரியவர்களின் பிறந்த நாட்களின் போது மட்டுமல்ல, குழந்தைகளின் பிறந்த நாட்களின் போதும் விருந்து இருக்குமென்று முதல் முறையாகச் சொன்னது எங்கள் வகுப்பில் இருந்த மணிதான். அவனுடைய பிறந்த நாளின் போது விருந்து இருக்குமாம். அவனுடைய பிறந்த நாள் மட்டுமல்ல, அவன் தங்கையின் பிறந்த நாளுக்குக் கூட விருந்து இருக்குமாம். எனினும், அவன் சொன்ன அந்த விஷயத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. அவன் எப்போதும் பொய் சொல்வான். தன்னுடைய வீட்டில் பாம்பு புற்றுக்குப் பக்கத்தில் மூன்று செப்புக் குடங்கள் நிறைய தங்கம் புதைத்து வைக்கப்பட்டிருந்தது என்று சொன்ன வீரனாயிற்றே அவன்!

ஆனால், பிறந்த நாள் விஷயமாக மணி சொன்னது உண்மைதான் என்பது தெரிய வந்தது. என்னுடைய வீட்டில் தாமோதரனின் பிறந்த நாள் முதல் தடவையாகக் கொண்டாடப்பட்டது.

பொதுவாக தன்னுடைய பிறந்த நாளின்போது தாமோதரன் அவன் வீட்டில்தான் இருப்பான். அந்த வருடம் முதல் தடவையாக அது என் வீட்டில் கொண்டாடப்பட்டது.

அதற்கு முந்தைய நாள் மாமரத்தடியில் உட்கார்ந்திருக்கும் போது தாமோதரன் சொன்னான். "நாளை என்னோட பிறந்த நாள்."

அதனால் எங்களுக்கு என்ன? நாங்கள் யாரும் எதுவும் பேசவில்லை.

"நாளைக்கு பாயசம் செய்வாங்க."

பூ! எங்களுக்குச் சிரிக்க வேண்டும்போல் இருந்தது. அவன் சொன்னதைக் கேட்டீர்களா?

ஆனால், அடுத்த நாள் நாங்கள் உண்மையிலேயே ஆச்சரியத்தின் உச்சிக்குச் சென்று விட்டோம். தாமோதரனின் பிறந்த நாளுக்கு விருந்து ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். அப்படியென்றால் குழந்தைகளின் பிறந்த நாளன்றும் விருந்து பண்ணலாம் என்பதுதானே அர்த்தம்! என் தாய்க்கு இதுவரை இந்த உண்மை தெரியாதா என்ன?

என்னுடைய பிறந்த நாள் வரட்டும்... அடுத்த என் பிறந்த நாள் வருவதை எதிர்பார்த்து நான் காத்திருந்தேன்.

பாட்டிக்கு ஊரிலுள்ளவர்கள் எல்லோருடைய பிறந்த நாட்களும் இறந்த நாட்களும் மனப்பாடம். பல விஷயங்களுக்கும் அவள் நாள் குறித்துத் தருவாள். கணக்குக் கூட்டிப் பார்த்து சொல்லுவாள். "வர்ற புதன்கிழமை இந்த விசேஷத்தை வச்சுக்கடா..."

நான் மனதிற்குள் முணுமுணுப்பேன். "பாட்டிக்கு இதெல்லாம் தெரியுமா என்ன?"

நான் என் தாயைப் பார்த்துச் சொன்னேன்.

"என் பொறந்த நாளுக்கு விருந்து வைக்கணும்."

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel