Lekha Books

A+ A A-

ஒரு பிறந்தநாள் ஞாபகம் - Page 4

oru-piranthanaal-enabagam

"உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்காடா?"

என் தாய் இவ்வளவு சாதாரணமாக இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வாள் என்று நான் நினைக்கவில்லை.

எனக்கு அழுகை வந்தது.

"தாமோதரனோட பொறந்த நாளுக்கு..."

"யானை சாணி போடுறதைப் பார்த்துட்டு முயல் முக்கினா எப்படி இருக்கும்? தாமோதரன் பெரிய மாமாவோட மகன்டா..."

என்னால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

என் தாய்க்கு என்னுடைய மன வேதனையைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிந்தது. "அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? மாமாதானே நமக்கு நெல் அளந்து தர்றது?" என்றாள் அவள்.

என் தாய் சொன்னது சரிதான். மாமாதான் வீட்டுக்குத் தேவைப்படும் நெல்லை அளந்து கொடுப்பார். தானிய அறைகளின் சாவிகள் அவர் கையில்தான் இருக்கின்றன.

வாரத்திற்கொருமுறை தானிய அறைக்குள் கீழே இருக்கும் பெரிய பெட்டியை மாமா திறப்பார். நான்கு வீடுகளையும் பார்த்தவாறு அடுத்த நிமிடம் உரத்த குரலில் சத்தமிடுவார். "யாரு உள்ளே இருக்குறது?"

என் தாய் உடனே வெளியே வராவிட்டால் மாமாவின் குரல் மேலும் சற்று உயர்ந்து ஒலிக்கும். "இந்த நாசம் பிடிச்சவங்க காதுல விழுந்தால் தானே!"

அதற்குள் என் தாய் கூடையை எடுத்துக் கொண்டு அங்கு வந்து நின்றிருப்பாள். மாமா மூன்றுபடி நெல் அளந்து போடுவார். ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தக்கூடியது அது. அந்த நெல் போதாது என்று பாட்டி சொன்னபோது, பெரிய குரலில் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார் மாமா.

"இங்கே என்ன பத்தாயிரக்கணக்குல விளைஞ்சா கிடக்கு? அஞ்சுக்கு ரெண்டாவது கிடைக்குதேன்னு நினைச்சு கடவுளைக் கும்பிடுறதை விட்டுட்டு..."

அப்படியென்றால் என்னுடைய பிறந்த நாளுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றால் மாமா கூடுதலாக நெல் அளக்க வேண்டும். மாமாவுக்குத் தருவதற்கென்ன? தானிய அறைகளில்தான் நெல் ஏராளமாக இருக்கிறதே!

என்னால் அந்தக் கேள்வியைக் கேட்க முடியாது. கேட்டு, அவர் எங்கே அடித்து விடுவாரோ என்ற பயமே காரணம். என் தாய் கேட்டால் நன்றாக இருக்கும்.

மாலையில் குளித்துவிட்டு வரும் போது நான் என் தாயிடம் சொன்னேன். "அம்மா, கேளுங்க..."

"என்னடா சொல்ற?"

நான் எதுவும் பதில் சொல்லவில்லை.

"என்ன கேட்கணும்?"

"மாமாக்கிட்ட..."

"உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?"

அவ்வளவுதான்- என் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. நான் என்ன சொன்னாலும் எனக்குக் கிடைப்பது "பைத்தியக்காரன்" பட்டம்தான்.

என் தாய் என் முகத்தையே பார்த்தாள். அப்போது என் கண்களிலிருந்து நீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது.

"டேய், அதுக்கு உன் தலையெழுத்து நல்லா இருக்கணும்."

என் தாய் ஈரத்துணியால் என் கண்களைத் துடைத்துவிட்டாள்.

அவனைத்தான் புளியங்கொம்பால் நான்-கு முறை சாத்த வேண்டும். என்னுடைய தலையிலும் என் தாயின் தலையிலும் தவறான கோடுகளைப் போட்ட அவனை.

இரண்டு இரவுகளும் ஒரு பகலும் கடந்து போயின. மனம் முழுக்க வேதனையாக இருந்தது. யாரிடமும் ஒரு வார்த்தை கூட நான் பேசவில்லை. என்ன செய்வது? அந்த அளவிற்கு நான் தரம் தாழ்ந்தவனாகிவிட்டேன்.

புதன்கிழமை பிறந்தது. அன்றுதான் என்னுடைய பிறந்தநாள். என் மனதில் சிறிது கூட உற்சாகம் தோன்றவில்லை. அன்று என்னுடைய பிறந்தநாள் என்பது தாமோதரனுக்குத் தெரியக்கூடாதே!

அன்று நெல் அளந்து கொடுக்கும் நாள். காலையில் தானிய அறை திறக்கப்பட்டது. மாமா உள்ளே நுழைந்தார். "யார் அங்கே?"

என் தாய் கூடையை எடுத்துக் கொண்டு தானிய அறையை நோக்கி நடந்தாள்.

வாசலில் மேற்குப் பக்கத்தில் சிதிலமடைந்து போயிருக்கும் தூணின் மீது சாய்ந்தவாறு நான் நின்றிருந்தேன்.

ஜன்னல் வழியாகப் பார்க்கும் போது, மாமா நெல் அளந்து போடுவதை நன்றாகப் பார்க்கலாம்.

மூன்று படிகள் அளந்த பிறகு மாமா தானிய அறையை அடைக்க போனபோது, என் தாய் மெதுவாகச் சொன்னாள். "இன்னைக்கு குஞ்ஞி கிருஷ்ணனோட பிறந்த நாள்..."

என் இதயம் 'டக்...டக்...'கென்று அடித்துக் கொண்டது. நான் மனதில் நினைத்ததைப் போல் அல்ல. "என் அம்மா எவ்வளவு நல்ல அம்மா..."

"அதுக்கு?"

"நம்ம கோவில்ல பாயசம் போடுறதா நேர்ந்திருக்கேன். நாலு படி அரிசி அதிகமா..."

இடி முழங்கும் குரலில் மாமா கூறினார். "யாரு கடவுள்கிட்டட வேண்டச் சொன்னது? அப்படி நேர்த்திக்கடன் செய்யிறதா சொல்லியிருந்தா, அப்படிச் சொன்னவங்க செய்துக்கட்டும்..."

"அவனுக்குக் காய்ச்சல் வந்திருந்தப்போ நேர்ந்தது அது."

"இதை அவனோட அப்பாக்கிட்ட போய் சொல்லு. அந்த ஆளால காலணாவுக்குப் பிரயோஜனம் உண்டா?"

"விருப்பப்படி நடந்தது இல்லியே அது!"

"என்னடி சொல்ற?"

"அண்ணன்கிட்ட சொல்லாம வேற யாருக்கிட்ட சொல்ல முடியும்? அண்ணனை விட்டா...."

"என்ன பேசுற? உன்னை நான்..."

ஒரு அடி விழும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாகப் பார்த்த போது என் தாய் தானிய மூட்டைகள் மீது குப்புற விழுந்து கிடப்பது தெரிந்தது.

"அம்மா..."

நான் என்னையும் மீறி, உரத்த குரலில் கத்தினேன்.

உள்ளேயிருந்தவர்கள் எல்லோரும் அங்கு வந்தார்கள். தானிய அறையைப் பார்த்துவிட்டு திரும்பிப் போனார்கள். பாட்டி மட்டும் இரண்டு முறை உரத்த குரலில் சொன்னாள். "நாராயணா... நாராயணா..."

சிறிது நேரம் சென்றதும் நெல் கூடையை எடுத்துக் கொண்டு தானிய அறைக்கு வெளியே என் தாய் வந்தாள்.

அப்போது அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இடது பக்க புருவத்திற்கு மேலே இரத்தம் தெரிந்தது.

அந்தப் பிறந்தநாளை நான் கொண்டாடவில்லை. என் தாய் என்னைக் கட்டாயப்படுத்தவுமில்லை.

அதற்குப் பிறகு இருபது பிறந்த நாட்கள் கடந்து போய்விட்டன. இப்போது என் தாய், மாமா, பாட்டி யாரும் இல்லை.

இருள் படர்ந்திருக்கும் வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் போது நான் என் மனதிற்குள் நினைக்கிறேன். "நாளை என்னோட பிறந்தநாள்...."

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel