Lekha Books

A+ A A-

ஒரு பிறந்தநாள் ஞாபகம் - Page 2

oru-piranthanaal-enabagam

வீட்டில் விருந்து நடப்பது நாங்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயம். நாங்கள் என்றால் குழந்தைகள் என்று அர்த்தம். தாமோதரனையும் சேர்த்தால் நாங்கள் மொத்தம் ஐந்து பேர். தாமோதரன் கோடை விடுமுறையின் போது மட்டும்தான் வீட்டிலிருப்பான். அவன் எங்களைவிட பலசாலி. படகு எருமை என்றுதான் நானும் அப்புவும் அவனைத் தனிப்பட்ட முறையில் அழைப்போம். அதை வெளியே தெரியும்படி அழைக்க மாட்டோம். என்ன இருந்தாலும் அவன் பெரிய மாமாவின் மகனாயிற்றே! நாங்கள் பல நேரங்களில் சேர்ந்து பந்து விளையாடுவோம். கல்லால் ஆன பந்தை வைத்து சில நேரங்களில் விளையாடுவோம். அந்தப் பந்தால் அடிபட்டவன் உடம்பில் வேதனை குறைந்தது மூன்று நாட்களாவது இருக்கும். பெரும்பாலும் தாமோதரனை அந்தக் கல் பந்தால் தான் நாங்கள் தாக்குவோம்.

பெரிய மாமாவின் பிறந்த நாளன்று நாங்கள் மதிய உணவு சாப்பிடுவது பிற்பகல் நேரத்தில்தான். அழைக்கப்பட்டு வந்தவர்கள் எல்லாம் சாப்பிட்டு முடிக்க வேண்டும். தாமோதரன் மட்டும் மாமாவுடன் உட்கார்ந்து சாப்பிடலாம்.

சாதாரண நாட்களில் கூட தாமோதரன் பெரிய மாமாவுடன் உட்கார்ந்துதான் சாப்பிடுவான். வடக்கு பக்கம் பெரிய பலகையையும் நீளமான இலையையும் கொண்டு வந்து போட்டுவிட்டால் நாங்கள் அந்த இடத்தைவிட்டு போய்விட வேண்டும். போகவில்லையென்றால் எங்களைப் பார்த்து இந்த வார்த்தைகள் வரும். "சொல்றபடி ஒரு நாளும் நடக்கிறது இல்ல. எதைப் பார்க்குறதுக்குடா இங்கே நின்னுக்கிட்டு இருக்கீங்க?"

பெரிய மாமாவின் தாய்தான் எங்களைப் பார்த்து இப்படிக் கேட்பாள்.

சொன்னபடி கேட்காதவர்கள் நாங்கள் நான்குபேர். நான், கோபி, அப்பு, குஞ்ஞிமாளு, தாமோதரன் இந்தப் பட்டியலில் இடம் பெற மாட்டான். அவனைப் பாட்டி ராகத்துடன் அழைப்பாள். "தாமோதரா..."

அம்மாவோ, சித்தியோ சொல்வார்கள்: "நீங்க போயி விளையாடுங்க. பிறகு அழைக்கிறோம்."

அதன்படி நடக்க நாங்கள் தயாராக இருப்போம். அவர்கள் பார்வையில் நாங்கள் சொன்னபடி கேட்காதவர்களும், பிசாசுக்களும் அல்ல. தேவையில்லாமல் எங்களை அவர்கள் திட்டமாட்டார்கள். ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். தோட்டத்தை விற்கும் போது எல்லாவித கெட்ட நேரத்திற்கும் காரணம் நாங்கள்தான் என்ற விருதையும் எங்களுக்குப் பாட்டி தந்தாள்.

பல நேரங்களில் நான் நினைப்பேன். என் தாய் பாட்டிக்கு நான்கு உதைகள் கொடுத்தால் என்ன என்று.

என்ன இருந்தாலும் என் தாய்க்குப் பாட்டியைக் கண்டால் பயம் என்பது மட்டும் உண்மை. சித்திக்கும்தான். பெரிய மாமாவின் தாய் என்பது காரணமாக இருக்கலாம். பெரிய மாமா வாசலில் உட்கார்ந்திருக்கும் பொழுது அந்த வழியே குளித்துவிட்டுப் போவதற்குக் கூட என் தாய்க்கும் சித்திக்கும் மிகவும் பயம்.

ஆனால், பாட்டி தானிய அறைக்குள் இருக்கும்போது என் தாயும் சித்தியும் அவளைப் பற்றி மெதுவான குரலில் ஏதாவது பேசிக் கொண்டிருப்பது காதில் விழும். பாட்டியின் கழுத்தில் டாலருடன் தொங்கிக் கொண்டிருக்கும் தங்க மாலையின் எடை நான்கு பவுனாம். காப்பு செய்ய கொடுத்திருக்கிறாளாம். புதிதாக நிலம் வாங்க இருக்கிறாளாம்... இப்படிப் பல தகவல்களும் நமக்கு அவர்கள் மூலம் தெரியவரும்.

என் தாயிடம் தங்க மாலையோ தங்கக் காப்போ எதுவுமில்லை. சித்தியிடம் சிறு மாலையொன்றும் வளையலுமிருக்கின்றன. அப்புவின் தந்தை கடை வியாபாரம் செய்வதால் தாராளமாக அவர் கையில் பணம் புரள்கிறது. என் தந்தையின் கையில் காசு இல்லாததால் என் தாயிடம் தங்க மாலை இல்லை.

பெரிய மாமாவும் தாமோதரனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் வேலி வழியாக எட்டிப் பார்ப்போம். அப்பளமும் குழம்பும் மற்ற உணவுப் பொருட்களும் இலையில் இருப்பதை நாங்கள் பார்ப்போம். இலையில் பயறு கொண்டு செய்யப்பட்ட உருண்டை இருக்கும். அந்தப் பயறு உருண்டையை எனக்கு மிகவும் பிடிக்கும். தாமோதரன் அதைச் சாப்பிடும் போது என்னுடைய வாயில் நீர் நிறையும். நாங்கள் வேலி வழியே எட்டிப் பார்ப்பது பாட்டிக்குத் தெரியாது.

நாங்கள் நான்கு பேரும் மாமரத்தின் அடியை நோக்கி நடப்போம்.

பெரிய மாமாவைவிட நாங்கள் அன்பும், மதிப்பும் கொண்டிருந்தது அந்த மாமரத்தின் மீதுதான். அந்த மாமரத்திற்கு அடியில் இருந்த புற்களை முழுமையாக வெட்டி அகற்றி, குப்பைகளையெல்லாம் அங்கிருந்து நீக்கி, இடத்தைச் சுத்தப்படுத்தி, விடுமுறை நாட்களில் பகல் முழுவதும் அங்கு போய் நாங்கள் அமர்ந்திருப்போம். அந்த மாமரத்தில் காய்க்கும் மாங்காய்கள் மிகவும் சிறியதாக இருக்கும். ஒரு எலுமிச்சம்பழம் அளவிற்கே அது இருக்கும். இருப்பினும், அதன் சுவை இருக்கிறதே...

சுற்றிலும் மதிய நேர வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும். நாங்கள் நான்கு பேரும் இருக்கும் போது எங்களுக்குள் எந்தச் சண்டையும் உண்டாகாது. வடக்கு வீட்டைச் சேர்ந்த குழந்தைகள் வந்தால் மட்டுமே சண்டை வரும். அவர்களின் திமிர்த்தனமான போக்கை நாங்கள் ஒன்று சேர்ந்து பலமாக எதிர்த்து நிற்போம்.

அணில் மரத்தில் ஏறுவதையும் காற்று வீசுவதையும் அனுபவித்தவாறு நின்று கொண்டிருக்கும் போது எங்கள் மனம் வடக்கு வீட்டின் மீதே இருக்கும். ஆவி பறந்து கொண்டிருக்கும் சாதம், பயறு உருண்டை, அப்பளம்...

"நாமளும் பெரிய மாமாவுக்கு மகனா பொறந்திருக்கணும்."

அப்புவின் கருத்தை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வோம்.

தாமோதரன் ஏப்பம் விட்டவாறு தன்னுடைய வயிறைத்தடவிக் கொண்டு எங்களை நோக்கி நடந்து வரும் போது குழம்பு மணம் எங்கள் நாசிக்குள் நுழையும். அது பெருங்காயத்தின் மணமாக இருக்குமா? பயறு உருண்டை எப்படி இருந்தது என்பதை அவனிடம் கேட்டால் என்ன என்று தோன்றும். இருந்தாலும் கேட்க மாட்டோம்.

சில வேளைகளில் இலையில் பரிமாறப்பட்ட பயறு உருண்டையைச் சாப்பிடாமல் தனியாக தன் கையில் அவன் எடுத்து வைத்திருப்பான். எங்கள் முன்னால் இருந்து அதைச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு. அதைப் பிய்த்து எங்களுக்கும் கொஞ்சம் தந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைப்பேன். அப்புவும், கோபியும், குஞ்ஞிமாளுவும் இருக்கும் பொழுது அதைக் கேட்பதற்கு எனக்கு கூச்சமாக இருக்கும்.

ஒரு நாள் நான் மெதுவான குரலில் கேட்டேன்: "எனக்கு கொஞ்சம் தா..."

அவன் வாயைத் திறந்து நாக்கை வெளியே நீட்டி காட்டியவாறு கேட்டான்: "அவ்வளவு பிரியமா உனக்கு?"

அவ்வளவுதான் என்னுடைய ஆசையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் ஒளிந்து கொண்டது.

மாங்காய் கிடைக்கும் போது அவன் ஏங்கும் வண்ணம் தின்பது, ஒரு சிறு துண்டு கூட அவனுக்குக் கொடுக்காமல் தின்பது, இப்படித்தான் நான் அவனை பதிலுக்கு பதில் பழி வாங்கினேன்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel