Lekha Books

A+ A A-

உன் நினைவாக...

un-ninaivaga

20.9.1954

சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு நான் லீலாவைப் பற்றி இன்று நினைத்தேன்.

லீலா என்றதும் நீங்கள் திடீரென்று ஒரு எண்ணத்திற்கு வரலாம். தவறாக நீங்கள் நினைத்து விடுவதற்கு முன்னால் நானே சொல்லி விடுகிறேன்- அவள் என் சகோதரி.

இந்த உண்மையை அறிந்திருக்கும் நபர்கள் உலத்திலேயே மிகவும் குறைவான அளவிலேயே உள்ளனர்.

லீலாவைப் பற்றிய நினைவு இன்று எனக்கு வந்ததற்குக் காரணம் பெட்டிக்கு அடியிலிருந்து எனக்குக் கிடைத்த ரப்பரால் ஆன ஆந்தை. வேண்டாமென்று ஒதுக்கி வைத்த சட்டையும் பேன்ட்டும் பழைய தாள்களும் இருந்த பெட்டியை இன்று நான் சோதித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கும் போதுதான் அந்தப் பழைய ரப்பர் ஆந்தை என் பார்வையில் பட்டது. அதன் நிறம் மங்கலாகி கவர்ச்சி இல்லாத ஒரு பொருளாகக் காட்சியளித்தது. கண்ணாடியால் ஆன கண்கள் மட்டும் சிறிதும் ஒளி குறையாமல் அப்படியே இருந்தன.

ஒரு காலத்தில் அது என்னுடைய நெருங்கிய தோழனாக இருந்தது. அதன் சொந்தக்காரனாக நான் இருந்ததற்காக நானே மிகவும் பெருமைப்பட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு எனக்குக் கிடைத்த பொருள் அது. அதைப் பையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குப் போகும் போது நான் எனக்குள் மிகவும் உயர்ந்து விட்டதைப் போல் உணர்வேன். அதற்குக் காரணம் என் பைக்குள் இருந்த அந்த விலை மதிப்புள்ள பொருள்தான். அப்புக் குட்டனின் கண்ணாடி டப்பாவை விட, எம்ப்ராண்குட்டியின் மவுத்ஆர்கனைவிட விலை மதிப்புள்ளது என்னுடைய ஆந்தை. உண்மைதான். அது கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டது.

ரப்பர் ஆந்தையிடம் இரண்டு சிறப்புகள் இருந்தன. அடிப்பகுதியை இலேசாகத் தட்டினால் அதன் வயிற்றுப்பகுதி திறக்கும். வயிற்றிற்குள் மெத்தென்று இருக்கும். ஒரு சிறிய மெத்தைக்கு மேலே அடர்த்தியான நீல நிறத்தில் ஒரு சிறு புட்டி இருக்கும். அதில் சென்ட் இருந்தது. அதன் மூடியைத் திறந்தால் முல்லை மலரின் மணம் வகுப்பு முழுவதும்  பரவும். அப்போது மாணவிகள் உட்கார்ந்திருக்கும் பெஞ்ச் பகுதியிலிருந்து முணுமுணுப்புகள் அப்போது உண்டாகும்.

"அந்தப் பையனோட கையில இருக்குது."

"அந்தப்பையன்..." என்று சொல்லப்படுபவன் நான் என்பதில் எனக்குப் பெருமையாக இரக்கும்.

அதைத் தொடர்ந்து அது முஸ்லிம்கள் பயன்படுத்தும் சென்ட் என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சொன்ன சங்குண்ணியுடன் சண்டை போட்டதற்காக இப்போதும் நான் வருத்தப்படவில்லை.

இரண்டாவது சிறப்பு: பின்னாலிருந்த கம்பியைப் பிடித்து இழுத்தால் ஆந்தை கண்களை உருட்டும்.

மதிய நேரத்தில் எல்லோர் முன்னாலும் ஆந்தையைக் காட்டியவாறு உட்கார்ந்திருக்கும் போது மாயக்குதிரையின் சொந்தக்காரனான இளவரசனின் கதையை பாட்டி சொன்னது என்னுடைய ஞாபகத்தில் வரும். அந்த ஆந்தை என்னுடைய உயிராக இருந்தது. வேறு யாரிடமும் அதைத் தர எனக்கு மனமே வராது. அதை எப்படி இயக்க வேண்டும் என்ற 'மெக்கானிஸம்' எனக்கு மட்டும் தானே தெரியும்?

நான் ஆரம்பித்தது... ஓ, லீலாவைப் பற்றி அல்லவா? நான் ஒரு விஷயத்தை மறந்துவிட்டேன். அந்த ரப்பர் ஆந்தையை எனக்குப் பரிசாகத் தந்தது லீலாதான்.

வாழ்க்கையிலிருந்து பிரித்து எடுக்கின்ற ஒரு பழைய தாள் அது.

பட்டன்கள் சரிவர போடப்படாத ஒரு கசங்கிப் போன பேண்ட்டை இடுப்பில் கஷ்டப்பட்டு இறுக்கிக் கொண்டு நடந்து திரிந்த காலமது. அப்போது எனக்கு வயது பத்தோ அல்லது பதினொன்றோ இருக்கும். என் தாயிடமும் அண்ணன்மார்களிடமும் அவ்வப்போது அடி, உதை வாங்கிக் கொண்டிருப்பேன். அம்மாளு அம்மாவின் மகன் வாசு நிறைய சேட்டைகள் செய்யக்கூடிய பையன் என்ற பெயரை பொது மக்களிடம் நான் பெற்றிருந்தேன். அப்படியொரு கருத்தைப் பெரிய அளவில் பரவவிட்டது பக்கத்து வீட்டிலிருக்கும் பாருவம்மாதான். மதிய நேரத்தில் அவள் மெதுவாக எங்கள் வீட்டிற்குள் வருவாள் என் தாயின் தலையில் பேன் பார்த்துக் கொண்டே பாருவம்மா ஏதாவது பேசிக் கொண்டிருப்பாள். அதைக் கேட்க பொதுவாகவே நான் விரும்புவேன். தன் வீட்டில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தைப் பற்றியோ, கர்ப்பமாக இருக்கும் ஆட்டைப் பற்றியோ- ஏதாவதொன்றைப் பற்றி அவள் பேசிக் கொண்டிருப்பாள். அவள் பேச்சு கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். பேச்சுக்கு இடையில் பாருவம்மா கூறுவாள்:

"மகனே, அந்த வெற்றிலைப் பெட்டியை இங்கே கொஞ்சம் எடுத்துட்டு வா."

அதுதான் பிரச்சினையே. அவள் சொன்னபடி நான் அதை எடுத்துக் கொண்டு வரவில்லையென்றால், பெரியவர்கள் சொன்னபடி நடக்காத பையன் என்ற முடிவுக்கு வந்துவிடுவாள் என் தாய். அதற்குப் பிறகு என் தாயும் சொல்லிப் பார்ப்பாள். நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், கிண்டலாக ஏதாவது சொல்வேன். அடுத்த நிமிடம் என் முதுகில் விழும் அடி.

சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு சம்பவம் இது.

பக்கத்திலுள்ள பெண்கள் மத்தியில் என் தாய் ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருந்தாள். அதற்குக் காரணம் என் தாயின் கையிலிருந்து அவர்களுக்கு பணமோ, அரிசியோ கடனாகக் கிடைக்கும். ஏதாவது விசேஷங்களுக்குப் போவது என்றால் என் தாயிடமிருந்து யார் வேண்டுமானாலும் நகையைக் கடனாக வாங்கிச் செல்லலாம்.

"ஒவ்வொரு மாசமும் அந்த அம்மாவுக்கு எவ்வளவு பணம் வருது?"

"அந்த ஆளுக்கு கொழும்புல எவ்வளவு பணம் வருது தெரியுமா?"

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

என் தந்தை நீண்டகாலமாக கொழும்பில்தான் இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் அவரிடமிருந்து தாராளமாகப் பணம் வரும்.

நாங்கள் மொத்தம் நான்கு ஆண்பிள்ளைகள். சகோதரிகள் என்று எங்களுக்கு யாருமில்லை. மற்றவர்களின் பார்வையில் அது ஒரு நல்ல விஷயமாகப்பட்டது. ஆனால், பாருவம்மாவின் பார்வையில் அது என் தாய் மனதில் இருக்கும் குறைபாடு. அதற்குக் காரணம் என்னவென்பது எனக்கு நன்றாகவே தெரியும். பாருவம்மாவின் வீட்டில் அடுத்தடுத்து பிறந்த பெண்களே அவள் அப்படி நினைப்பதற்குக் காரணம். பதின்மூன்று பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பமது.

ஒரு பெண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்குமென்று என் தாயும் தந்தையும் விரும்பினார்கள். மூன்று ஆண் குழந்தைகளுக்குப் பிறகு, என் தாய் கர்ப்பம் தரித்தபோது சோதிடர் சொன்னார்: "இப்போ பொறக்கப்போறது பெண் குழந்தை தான்."

அதைக் கேட்டு எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சி. செய்யாத வழிபாடுகள் இல்லை. ஏறாத கோவில்கள் இல்லை.

ஆனால், எதிர்பார்ப்பைத் தூக்கியெறிந்துவிட்டு ஒரு குறும்புக்காரப் பையன் பிறந்தான். அந்தத் துரதிர்ஷ்டசாலி பையன் நான்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel