
என் தந்தை அதை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். வாசலுக்குச் சென்றவர் பெரிய கொழும்பு குடையைக் கையில் வைத்துக் கொண்டு அழைத்தார்:
"லீலா.."
"டாடி..."
அவள் கிளம்பத் தயாரான நிலையுடன் வெளியே வந்தாள். பெரிய சூரியகாந்திப் பூக்கள் வரையப்பட்ட கவுனை அவள் அணிந்திருந்தாள். இடையில் நீலவண்ணப்பட்டு நாடா ஒன்றைக் கட்டியிருந்தாள். கையில் ரப்பர் ஆந்தை இருந்தது.
வாசலில் தூணின் மீது சாய்ந்தவாறு நின்றிருந்த என்னைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். நான் சிரிக்கவில்லை. என் பக்கத்தில் வந்து என் கைகளில் அந்த ரப்பர் ஆந்தையை அவள் தந்தபோது நான் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டேன். மீண்டும் ஒரு முறை என்னைப் பார்த்து புன்னகைத்த அவள் என்னவோ மெதுவான குரலில் சொன்னாள். அவள் தன் சிறிய குடையை ஆட்டியவாறு வாசலை விட்டு நகர்ந்தாள்.
என் தந்தை முன்னாலும் லீலா அவருக்குப் பின்னாலும் படிகளில் இறங்கினார்கள். நீண்டு கிடக்கும் ஒற்றையடிப் பாதை வழியாக அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களை விட்டுப் போகிறார்களா?
தூரத்தில் அந்த சூரியகாந்திப் பூக்களும் நீலவண்ணப்பட்டு நாடாவும் என் பார்வையிலிருந்து மறைந்தன.
இருபது வருடங்களுக்குப் பிறகு இன்று நான் லீலாவைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்துவிட்டேன்.
அன்புள்ள சகோதரி, எத்தனையோ மைல்களுக்கப்பால் இருந்து உன்னை நான் வாழ்த்துகிறேன்.
உன் நினைவாக நான் இதை எழுதுகிறேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook