
"என்ன?"
அவர் தலையை உயர்த்தியபோது, அவரின் கண்ணாடி பிரகாசித்தது.
என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. என்னுடைய தலைமுடியை வருடியவாறு என் தந்தை கேட்டார்.
"பள்ளிக்கூடத்துக்கு போறேல்ல?"
"ம்..."
அதற்குமேல் அவர் எதுவும் கேட்கவில்லை. நானும் எதுவும் சொல்லவில்லை.
ரப்பர் ஆந்தை ஒரு பக்கம் இருக்கட்டும். வகுப்பறையில் தேவையில்லாமல் பையன்கள் என்னை ஏன் வெறுப்பேற்ற வேண்டும்?
என் தந்தை வந்திருக்கும் விஷயமும் அவருடன் ஒரு சிறுமி வந்திருப்பதும் எவ்வளவு வேகமாக ஊர்க்காரர்கள் மத்தியில் பரவியிருக்கிறது! என் வீட்டிற்கு ஒரு சிறுமி வந்திருப்பதை அறிந்து கொண்டு அதைப் பற்றி முதலில் பேசியது என் வகுப்பில் இருக்கும் ஜானுதான்.
என் காதில் விழ, அவள் சொன்னாள்:
"இவனோட அப்பா வர்றப்போ அவர் கூட ஒரு சின்ன பொண்ணையும் அழைச்சிட்டு வந்திருக்காரு."
"எங்கேயிருந்து?"- அருகில் அமர்ந்திருந்த நாணி கேட்டாள்.
"கொழும்புல இருந்து. பிறகு... எங்கம்மா சொன்னாங்க. இவனோட அப்பாவுக்கு அங்கே ஒரு பொண்டாட்டியும் பிள்ளைங்களும் இருக்காங்களாம்..."
அவ்வளவுதான். எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. அந்த ஒல்லிப்பெண்ணின் கன்னத்தில் ஒரு அடி கொடுக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு. ஆனால், நான் அதைச் செய்யவில்லை. காரணம்- அவள் எனக்கு முந்திரிப்பருப்பு தந்திருக்கிறாள்.
இருந்தாலும் அவள் சொன்னது ஒரு அக்கிரமமான காரியம்தான். என் தந்தையைப் பற்றி... அதுவும், அவர் கொழும்பில்... சே... அது பொய்! அவளுடைய தாய்க்கு என்ன கேடு வந்தது? அவளின் தாயும் பாட்டியும் எப்போதும் நிறைய பொய் சொல்லக்கூடியவர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
அவள் அப்படி என் தந்தையைப் பற்றி சொன்னதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். மனதில் உண்டான சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மாலையில் குளத்திலிருந்து திரும்பி வரும்போது நான் என் தாயிடம் கேட்டேன்...
"அம்மா, என் வகுப்புல இருக்குற ஜானு சொன்னா...-"
"என்ன சொன்னா?"
"அப்பாவைப் பற்றி... அவருக்கு கொழும்புல ஒரு பொண்டாட்டியும் பிள்ளைங்களும் இருக்காங்கன்னு...."
ஜானுவிற்கு நான் தரவேண்டுமென்று நினைத்திருந்த அடி எனக்குக் கிடைத்தது.
"உன் அப்பாகிட்டயே போயி இதைக் கேளு..."
இந்த விஷயத்தைப் பற்றி இனிமேல் யார் எது சொன்னாலும், அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தேன். யாரிடமும் எதுவும் கேட்கக் கூடாது என்று முடிவெடுத்தேன்.
என் தந்தை வந்த ஆறாம் நாள் இரவில் அது நடந்தது-.
அவர் படுத்திருக்கும் அறைக்கு அடுத்த அறையில்தான் நான் படுத்திருந்தேன். இரவு சாப்பாடு முடிந்து படுப்பதற்காகச் சென்ற போது என் தந்தையுடன் நெருக்கமாக நின்று கொண்டு லீலா பேசிக் கொண்டிருந்தாள். அறைக்குள்ளிருந்து சுருட்டின் வாசனை வெளியே வந்து கொண்டிருந்தது.
நான் அதைப் பார்க்காததைப் போல் நடித்தேன். என் தந்தையுடன் அவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டு நான் எந்தச் சமயத்திலும் பேசியதில்லை. அதைப் பார்த்து என் மனதில் பொறாமை தோன்றியது. நான் மிகவும் அசிங்கமாக இருக்கிறேனோ என்ற எண்ணம் உண்டானது. நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும் ஆடைகளும், ரப்பர் ஆந்தையும், பார்ப்பதற்கு அழகான முகமும் என்னிடம் இல்லை என்பதென்னவோ உண்மை. பட்டன்கள் இல்லாத என் காற்சட்டையில் பெரும்பாலும் சேறும் அழுக்கும் இருக்கும். ஒருவேளை அதனால்தான் தனக்கு அருகில் வைத்து என்னுடன் என் தந்தை பேசமாட்டேன் என்கிறாரோ?
எனக்கு அழ வேண்டும்போல் இருந்தது. படுக்கையில் முகத்தை புதைத்துக் கொண்டு நான் அசையாமல் படுத்திருந்தேன்.
"வாசு..."
என் தந்தை அழைத்தார்.
"ம்..."
"வா... இங்கே வா..."
நான் மெதுவாக அந்த அறைக்குள் சென்றேன். என் தந்தையின் தோளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த லீலாவை நேருக்கு நேராகப் பார்க்க எனக்கு என்னவோ போல் இருந்தது.
"வா மகனே..."
என் தந்தை என்னைத் தன்னுடைய உடம்போடு சேர்த்து வைத்துக் கொண்டு என் தலைமுடியைக் கையால் கோதியவாறு லீலாவிடம் என்னவோ சொன்னார்.
அந்தமொழி இப்போது கூட எனக்குத் தெரியாத ஒன்று. ஆனால், அதன் அர்த்தம் இப்போது எனக்குத் தெரியும்.
"மகளே, இவன் உன் அண்ணன்."
மனதில் வேதனையுடன் இப்போது நான் அதை நினைத்துப் பார்க்கிறேன்.
அன்று குடும்பத்திற்குள் ஒரு சூறாவளியே வீசியது. கடந்த ஆறு நாட்களாகவே அது வடிவமெடுத்து வந்திருக்கிறது என்பதே அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. என் தந்தையும் தாயும் ஒருவருக்கொருவர் சண்டை போட ஆரம்பித்தார்கள். வீட்டிலுள்ள யாரும் அவர்கள் சண்டையில் தலையிடவில்லை. வார்த்தைகளின் கனமும் கூர்மையும் படிப்படியாகக் கூடின. என் தந்தை தன்னால் முடிந்தவரை அமைதியாக இருக்க முயன்றார்.
"நீ தேவையில்லாம என்னை தப்பா நினைக்கிற."
"நீங்க சொல்றதைக் கேட்க நான் தயாரா இல்ல. எனக்கு எல்லாம் தெரியும்."
"என்ன தெரிஞ்சிக்கிட்ட?"
"என் வாயாலயே அதைச் சொல்ல வைக்காதீங்க. மாதவன் எனக்கு எல்லா விஷயத்தையும் எழுதிட்டான்."
மாதவன் யார் என்பது எனக்குத் தெரியும். என் தந்தை வேலை செய்யும் இடத்திற்குப் பக்கத்தில்தான் மாதவன் மாமாவின் வீடு இருக்கிறது. என் தாயின் சகோதரர் அவர்.
அதற்குப் பிறகு என் தந்தை எதுவும் பேசவில்லை. என் தாய்தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் வாயிலிருந்து நெருப்பென வார்த்தைகள் சிதறிக் கொண்டிருந்தன.
நான் முகத்தை மூடிக் கொண்டு படுத்திருந்தேன். இதயம் அழுதது. நான் என் மனதிற்குள் பிரார்த்தித்தேன்:
"பகவதி... எதுவும் நடந்திடக்கூடாது."
மேஜை மீது கண்ணாடி டம்ளர்கள் நொறுங்கின.
நான் காதுகளைப் பொத்திக் கொண்டேன்.
தலையணை மீது என்னுடைய கண்ணீர்த் துளிகள் விழுந்த வண்ணம் இருந்தன.
"கடவுளே..."
சிறிது நேரம் சென்றதும் என் தாய் படிகளிலிறங்கிச் செல்வதைப் பார்த்தேன். அடக்கி வைக்கப்பட்டிருந்த அழுகை...
அடுத்த நாள் அதிகாலையில் நான் படுக்கையைவிட்டு எழுந்தபோது நான் கண்ட காட்சி- என் தந்தையும் லீலாவும் பயணம் புறப்படுவதற்குத் தயாராக நின்றிருந்தார்கள். முன்னறையில் பெட்டிகள் தயாராக வைக்கப்பட்டிருந்தன.
"அப்பா எங்கே கிளம்பிட்டாரு?"
நான் என் அண்ணனிடம் மெதுவாகக் கேட்டேன்.
என் அண்ணன் எரிச்சல் குரலில் சொன்னான்: "யாருக்குத் தெரியும்?"
அப்போது வேதனையுடன் நான் நினைத்தேன்- இங்குள்ளவர்களுக்கு என்ன ஆயிற்று?
என் தந்தை முதலில் பாட்டியிடம் விடை பெற்றார். பிறகு எங்களிடம்.
அண்ணன்கள் தங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook