
முதன் முதலாக நான் பால் குடித்தது அவளிடம் தான். அவளின் மகன் ஸ்ரீதரன் என்னைவிட இரண்டு மாதங்கள் மூத்தவன். அவளின் இன்னொரு மகனாகத்தான் நான் வளர்ந்தேன். “இன்னொரு அம்மா” என்றுதான் நான் அவளை அழைப்பேன்.
நானும் ஸ்ரீதரனும் ஒன்றாகவே வளர்ந்தோம். நாங்கள் ஒன்றாகவே படித்தோம். படிப்பை நிறுத்தியது கூட ஒன்றாகவேதான். ஒரே தொழிற்சாலையில் ஒரே நாளில் இருவரும் வேலையில் சேர்ந்தோம். எங்களின் சம்பளம்கூட ஒரே மாதிரி தான். ஆனால், யூனியனில் ஸ்ரீதரனுக்கு என்னைவிட முக்கியமான இடமும் வேலைகளும் இருந்தன.
யூனியனின் தீர்மானப்படி ஒரு பொது வேலை நிறுத்தம் நடந்தது. தொழிலாளர்களின் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலமும் நடைபெற்றது. அன்று துப்பாக்கிச் சூடு நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கையும் செய்யப்பட்டது. தொழிலாளர்களின், அப்பாவி ஏழை களின் உரிமைகளைக் கேட்டுப் போராடும் அந்தப் போராட்டத்தை முதலாளிகளும், ஜன்மிகளும் அரசாங்கத்தின் உதவியுடன் எதிர்க்க திட்டமிட்டிருந்தார்கள்.
இருந்தாலும் தொழிலாளர்கள் அந்தப் போராட்ட ஊர்வலத்தை நடத்துவதில் தீர்மானமாக இருந்தார்கள்.
முதல் நாள் இரவு ஸ்ரீதரன் என்னை வந்து பார்த்தான். அவன் அப்போது சொன்ன வார்த்தைகளை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.
“ராமா, அம்மாவை உன்கிட்ட ஒப்படைக்கிறேன். நீ ஊர்வலத்துக்கு வர வேண்டாம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து போக வேண்டாம். அது அறிவில்லாத ஒரு செயலாக இருக்கும்.”
மறுநாள் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஏராளமான பேர் அதில் இறந்தார்கள். சிலர் அதிலிருந்து தப்பினார்கள். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்த வீடுகள் நெருப்புக்கு இரையாகின. இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் எல்லாரும் இருந்தார்கள். துப்பாக்கிச் சூட்டில் மரங்கள்கூட சாய்ந்து விழுந்தன.
அன்று எங்களின் ஊரிலும், அருகிலிருந்த ஊர்களிலும் இருக்கும் வீடுகளில் ஒரே கூப்பாடும் அழுகையுமாக இருந்தன. அந்த வீடுகளிலிருந்து போராட்ட ஊர்வலத்திற்குப் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதற்காக அல்ல அந்த ஓலங்கள். ஏராளமான பேர் இறந்துவிட்டார்கள் என்பதுதான் தெரியுமே தவிர, யாரெல்லாம் இறந்தார்கள், யாரெல்லாம் தப்பினார்கள் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. தப்பித்து வந்தவர்களைப் பார்த்தும் அழுதார்கள். தப்பித்திருக்கலாம் என்று எண்ணி இறந்து போனவர்களின் உறவினர்கள் தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டும் அழுதார்கள். ஆனால், மரணம் அடைந்திருக்கலாம் என்ற எண்ணம் பொதுவாக நிலவிய அமைதியான சூழ்நிலையைக் குலைத்ததென்னவோ உண்மை.
நேரம் ஆக ஆக அந்த வயதான கிழவி ஸ்ரீதரன் இறந்துவிட்டான் என்று நம்ப ஆரம்பித்தாள்.
“அவன் ஊர்வலத்துல முன்னாடி போனானே!”
அவள் சொன்னது சரிதான். ஸ்ரீதரன் ஊர்வலத்தில் போன ஒரு பிரிவுக்கு தலைவனாக இருந்தான். இருந்தாலும் நான் அதைச் சொல்ல முடியுமா? ஸ்ரீதரன் இறக்கவில்லை என்றுதான் நான் சொன்னேன்.
எனினும், என் மனதிலும் அந்தச் சந்தேகம் இல்லாமலில்லை. ஸ்ரீதரன் மரணத்திலிருந்து தப்பித்திருக்க வேண்டும் என்று மனதில் விருப்பப்பட்டாலும், அவன் மரணமடைந்திருப்பதற்கான சாத்தியம்தான் அதிகம் என்பது மாதிரி மனதில் தோன்றியது. ஸ்ரீதரன் தைரியசாலி. வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளி. மரணத்தைப் பார்த்து பயப்படக்கூடிய ஆளில்லை அவன்.
பக்கத்து வீடுகளில் கூப்பாடும் அழுகைச் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது. தெற்குப் பக்கமிருக்கும் வீட்டில் ஐந்து சிறு குழந்தைகளும் கர்ப்பிணியாக இருக்கும் ஒரு மனைவியும் இருக்கிறார்கள். அந்த வீட்டின் தலைவன் போராட்டத்திற்குப் போனவன், இன்னும் திரும்பி வரவில்லை. வடக்குப் பக்கமிருக்கும் வீட்டில் தாய் இல்லாத மூன்று குழந்தைகள், காலையில் போன தங்கள் தந்தையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். மேற்குப் பக்கமிருக்கும் வீட்டில் ஆதரவு என்று யாருமில்லாத ஒரு சகோதரி தன்னுடைய சகோதரனை வாயால் அழைத்து அழுதுகொண்டிருக்கிறாள். அந்த அழுகைச் சத்தம் இங்கு வரை கேட்கிறது.
கிழவியும் வாய்விட்டு அழ ஆரம்பித்தாள். எனக்கு ஒரே வழிதான் தோன்றியது. அவளின் முகத்தைப் பார்த்தவாறு பிசிறில்லாமல் உறுதியான குரலில் நான் சொன்னேன்.
“ஸ்ரீதரன் இறக்கல...”
எவ்வளவு கஷ்டமான ஒரு விஷயம் அது என்பதை நினைத்துப் பாருங்கள். மகனை இழந்த அந்தத் தாயின் முகத்தில் பரவி விட்டிருக்கும் அந்தப் பாசத்தின் வெளிப்பாட்டை கண் திறந்து பார்க்க வேண்டும். அப்போது என் கால்கள் இடறி விடக் கூடாது. இதயத்தின் அனுமதியே இல்லாமல் அந்த வார்த்தைகளை நிச்சயமான குரலில் நான் கூற வேண்டும். அந்த நிமிடத்தில் எனக்கு இருக்கும் ஒரு மிகப் பெரிய பொறுப்புணர்வை சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். ஆனால், அதை நான் சரியாகவே நிறைவேற்றினேன். கண்கள் நனையாமல், தொண்டை இடறாமல் அந்தப் பெரிய பொய்யை நான் சொன்னேன். அப்போது கிழவி என்னைப் பார்த்துக் கேட்டாள்:
“அப்படின்னா இப்போ நடுராத்திரி நேரமாயிடுச்சே. அவன் ஏன் இன்னும் வராம இருக்கான்?”
ஒரு நொடி நேரத்திற்கு எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் போய்விட்டது. நான் தோற்றுக் கொண்டிருக்கிறேனோ என்பது மாதிரி எனக்குத் தோன்றியது. மூச்சைப் பிடித்துக் கொண்டுதான் நான் இவ்வளவு நேரமும் சமாளித்துக் கொண்டிருந் தேன். இன்னும் ஒரு நிமிடத்தில் என்னுடைய பொய் பிரயோஜனமில்லாத ஒன்றாகப் போகிறது. எப்படியோ என்னால் சொல்ல முடிந்தது.
“நான் நாளைக்கு அவன் எங்கே ஒளிஞ்சிருக்கான்றதை விசாரிச்சிட்டு வந்து சொல்றேன்.”
“என்னை ஒரு தடவை பார்த்துட்டு, அதுக்குப் பிறகு அவன் ஊரை விட்டு வெளியே போய் ஒளிஞ்சிக்கக் கூடாதா?”
எப்படியோ அன்றைய இரவு கழிந்தது.
நான்கு மைல் தூரத்தில் இருக்கிறது அந்தத் துப்பாக்கிச் சூடு நடந்த இடம். அந்த இடம் முழுக்க முழுக்க பட்டாளக்காரர்களின் காவலில் இருந்தது. ஒளிந்தோ அல்லது பதுங்கியோ உயிரைக் காப்பாற்றிக் கொண்டவர்களை அவர்கள் வேட்டையாடி தேடிக்கொண்டிருந்தார்கள். ஒரு எல்லையிலிருந்து பிணங்களை அவர்கள் சேகரிக்கத் தொடங்கினார்கள். அவன் இறந்துவிட்டான் என்பதை உறுதியாக எப்படிக் கூற முடியும்?
யூனியன் உறுப்பினர்கள் எல்லாரையும் பிடிக்கப் போகிறார்களாம். அப்படியென்றால் என் விஷயம்கூட ஆபத்துதான். நான் அடுத்த நிமிடம் வீட்டை நோக்கி விரைந்தேன். கிழவியை எப்படி சமாளிப்பது?
அன்றுகூட ஏதாவது சொல்லி அவளைச் சமாளித்து விடலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு எப்படி சமாளிப்பது? இறந்து விட்டான் என்று கூறிவிட்டால்...? அவன் மரணமடையாமல் இருந்தால் அப்படிச் சொல்வது நன்றாக இருக்காதே!
எது எப்படியோ, கிழவிக்கு ஆறுதல் உண்டாகிற மாதிரி என்னால் சிரிக்க முடிந்தது. மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேச முடிந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook