Lekha Books

A+ A A-

உன் நினைவாக... - Page 3

un-ninaivaga

எங்கேயோ போர் நடந்து கொண்டிருந்த காலமது. என் தந்தை வேலை செய்யும் இடத்திலும் போர் நடந்திருக்கிறது. அதுதான் என் தந்தை உடனே புறப்பட்டு வருவதற்கான காரணம். தினந்தோறும் செய்தித்தாள்களை வாசிக்கக்கூடிய பெரிய அண்ணனுக்கு போர்களைப் பற்றிய சகல விஷயங்களும் நன்றாகத் தெரியும்.

என் வீட்டின் சூழ்நிலையே மாறியது. என் தந்தை வரப்போகிறார்! ஆறு வருடங்களுக்குப் பிறகு நான் என் தந்தையைப் பார்க்கப் போகிறேன்.

"கொழும்புல இருந்து இங்கே வர்றதுக்கு எவ்வளவு நாட்கள் ஆகும்?"

நான் விசாரித்தேன். மூன்று நாட்கள் கப்பலில் இருக்க வேண்டும். இரண்டு நாட்கள் வண்டியில் பயணம் செய்ய வேண்டும்.

கப்பல்நீர் மீது பயணம் செல்கின்ற வாகனம் என்று ஐந்தாம் பாடத்தில் படித்திருக்கிறேன். நீர் மீது பயணம் செய்கின்ற வாகனங்களை நினைக்கும் போது எனக்கு ஒரே பயமாக இருக்கும். பகவதி கோயிலுக்கு கடவுளைத் தொழப் போகும் போது படகில்தான் போக வேண்டும். அப்போது பயத்தில் நான் நடுங்கிப் போவேன். எங்கே கீழே விழுந்து இறந்து விடுவோமோ என்ற பயமே காரணம். படகு ஆற்றில் இருக்கிறது. கப்பல் கடல் மீது செல்கிறது. கடலில் பெரிய பெரிய அலைகள் உண்டாகும். கப்பல் கீழே விழுமோ?

என் தந்தையே, நீங்கள் சீக்கிரம் வீட்டிற்கு வரவேண்டும்.

என் தாயின் கணக்குப்படி திங்கட்கிழமை என் தந்தை இங்கு வந்து சேர வேண்டும்.

அன்று பள்ளிக்கூடம் இருந்தாலும் போகக்கூடாது என்று நான் முடிவெடுத்தேன். அண்ணன்மார்களும் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று தீர்மானித்தார்கள். எல்லோருக்குமே விடுமுறை அளிக்கப்பட்டது.

தூக்கம் வரும்வரை வாசல்படியையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என் தந்தை இன்னும் வரவில்லை.

அடுத்தநாள் பொழுது புலரும் நேரத்தில் என் தந்தை வந்தார்.

தானிய அறைக்கு மேலே நின்றிருந்த சின்ன அண்ணன்தான் முதலில் அவரைப் பார்த்தார். வயல்வரப்பு வழியாக என் தந்தை வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் பெரிய பெட்டிகளைச் சுமந்து கொண்டு கூலிக்காரர்கள்.

வாசலில் கால் வைத்த உடனே, என் தந்தை என்னை வாரி எடுத்தார்.

ஒரு விஷயத்தை மட்டும் எனனால் உறுதியாகக் கூற முடியும் அண்ணன்மார்களுக்கு முன்னால் எப்போதாவது நான் என்னைப் பற்றி உயர்வாக நினைத்திருக்கிறேன் என்றால், அது அந்த நிமிடத்தில்தான்...

அடுத்தது அவர்கள் முறை. என் தந்தை ஒவ்வொருவரையும் வாஞ்சையுடன் தடவினார். காற்சட்டையை மேலே இழுத்துவிட்டுக் கொண்டு சிறிது வெட்கப்பட்டவாறு நின்றிருந்த நான் என் தந்தையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

புகைப்படத்தில் இருந்ததைவிட அதிகமாக அவர் கறுத்திருந்தார். பருமனும் சற்று அதிகம்தான். நல்ல சித்திர வேலைப்பாடுகளமைந்த சால்வை ஒன்றை கழுத்தில் சுற்றியிருந்தார்.

அப்போதுதான் நான் ஒரு ஆச்சரியமான விஷயத்தைப் பார்த்தேன். என் தந்தைக்குப் பின்னால் ஒரு சிறுமி நின்றிருந்தாள்.

வெளுத்த நிறத்தில் வட்ட முகத்தையும் மலர்ந்த கண்களையும் கழுத்து வரை வளர்ந்திருக்கும் செம்பு நிற முடியையும் கொண்டிருந்த ஒரு சிறுமி அவள்.

வெண்மையான சில்க்கில் சிவப்பு நிறத்தில் பெரிய பூக்கள் போட்ட ஒரு கவுனை அவள் அணிந்திருந்தாள். என்னைவிட அவள் உயரமாக இருந்தாள். என் தந்தை அவளிடம் என்னவோ சொன்னார். அவர் பேசிய மொழி எனக்குத் தெரியாத ஒன்றாக இருந்தது. அவள் தலையை ஆட்டினாள். பிறகு மெதுவாக முன்னறைக்குள் நுழைந்து ஒருவித பதைபதைப்புடன் நின்றாள்.

வாசலிலும் ஜன்னல் வழியாகவும் ஆர்வம் நிறைந்த கண்கள் தெரிந்தன.

ஆறு வருடங்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பி வரும் என் தந்தையைவிட மற்றவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது அந்தச் சிறுமிதான்.

கூலிக்காரர்கள் பெட்டியையும் பொருட்களையும் கீழே இறக்கி வைத்தார்கள். மிகவும் பெரிய பெட்டிகள். அவற்றுடன் வெளிர் நீல நிறத்தில் துணி உறை போட்ட ஒரு தோல் பெட்டியும் இருந்தது. அதைத் தரையில் வைத்த போது அந்தச் சிறுமி மெதுவாக அதைத் தனக்கு அருகில் நகர்த்தி வைத்தாள்.

முன்னறைக்கு தேநீர் வந்தது. உள்ளேயிருந்து என்னவோ முணுமுணுத்தவாறு பாட்டி முன்னறைக்கு வந்தாள்.

"காலை வண்டியில வந்தியா?"

"ஆமா... நல்ல கூட்டம். இரண்டாம் வகுப்புல இருக்குறதுக்குக் கூட இடம் இல்லைன்னா பார்த்துக்கங்களேன்."

கண்களைக் கசக்கியவாறு என் தந்தை சொன்னார்.

"காலம் எவ்வளவோ மாறிடுச்சு. முன்பெல்லாம் ஆளுங்க காசிக்குப் போறதுன்னா கூட நடந்து தான் போவாங்க."

"எல்லாம் கொழும்புல இருந்து வர்றவங்கதான். அங்கே குண்டு போட்டவுடனே, எல்லாரும் கிளம்பிட்டாங்க..."

பாட்டி அவ்வப்போது சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்த அந்தச் சிறுமியையே பார்த்தாள். அவளோ பூமிக்குள்ளிருந்து முதல் தடவையாக பகல் வெளிச்சத்தில் வந்து நின்று கொண்டிருக்கும் ஒரு வினோத உயிரைப் போல நின்றிருந்தாள்.

என் தாய் இன்னும் முன்னறைக்கு வரவில்லை. அவளை அழைத்தால் என்ன என்று என் மனதில் தோன்றியது- ஆறு வருடங்களுக்குப் பிறகு என் தந்தை வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்படியென்றால் என் தாய் உடனே வெளியே வரவேண்டுமா இல்லையா? வீட்டில் அர்த்தம் நிறைந்த ஒரு அமைதி நிலவிக் கொண்டிருந்தது. எனக்கு அதற்கான காரணம் என்னவென்று புரிந்தது.

பாட்டியிடம் கூறுவது மாதிரி தான் வேலை பார்க்கும் இடத்தில் குண்டுபோட்ட விவரத்தை எல்லோரும் தெரிந்து கொள்வதுமாதிரி என் தந்தை கூறிக் கொண்டிருந்தார். என் தந்தை வசிக்கும் தெருவின் ஒரு முனையில் கூட குண்டு போடப்பட்டதாம். ஒரு பெரிய துணிக்கடை முழுவதும் நெருப்பில் எரிந்து விட்டதாகச் சொன்னார். கட்டிடங்கள் பலவும் தரையோடு தரையாக இடிந்து விட்டனவாம். பலரும் அந்த விபத்தில் இறந்திருக்கிறார்கள். இறந்தவர்களின் பட்டியலில் என் தந்தையின் ஒரு நண்பர் கூட இருக்கிறார். அந்த மனிதர் ஒரு சிங்களர். அவரின் மகள்தான் இப்போது என் தந்தையுடன் வந்திருக்கும் லீலா.

லீலாவிற்குச் சொந்தமென்று இந்த உலகில் யாருமில்லை. அவளுடைய தாய் அவள் சிறு குழந்தையாக இருந்தபோதே இந்த உலகைவிட்டுப் போய்விட்டாள். தந்தை குண்டு விபத்தில் மரணத்தைத் தழுவிவிட்டார். இனிமேலும் அங்கு குண்டுகள் போடப்படலாம். அப்போது அவளை எந்தவித அபாயமும் உண்டாகாமல் காப்பாற்ற வேண்டுமானால் உடன் அழைத்து வருவதைத் தவிர வேறு வழியில்லை.

நான் தந்தையும் தாயும் இல்லாத அந்தச் சிறுமியையே பார்த்தேன். என் மனதில் வேதனை தோன்றியது. பாவம்...

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel