உன் நினைவாக... - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6751
எனக்கு பதிலாக ஒரு பெண் குழந்தை பிறந்திருக்க வேண்டும். கடவுளை நான் மனப்பூர்வமாகத் திட்டினேன்.
பட்டன்களை சரிவர போடாமல் கசங்கிப்போன அரைக்கால் சட்டையுடன் பலவித சேட்டைகளும் செய்து நான் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது என் தந்தையை எனக்கு ஞாபகத்தில் இல்லை. தந்தையின் படம் அறையில் பல இடங்களிலும் இருக்க, நான் பார்த்திருக்கிறேன். எனக்கு நான்கு வயதான போது அவர் கொழும்பிற்குப் போனவர். அதற்குப் பிறகு அவர் திரும்பி வரவேயில்லை.
அதைப் பற்றி எப்போதாவது பேசினால் அண்ணன்மார்கள் என்னைக் கிண்டல் பண்ணுவார்கள். அவர்கள் முன்னால் நான் சுருங்கிப் போய் உட்கார்ந்திருப்பேன். அவர்கள் கொழும்பில் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள். என்னைவிட உரிமையுடன் என் தந்தையைப் பற்றி பேசுபவர்கள் அவர்கள்தான்.
நான் என் தாயின் வயிற்றில் இருக்கும் போது என் தாயும் சகோதரர்களும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தார்கள். அதற்குப் பிறகு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு என் தந்தை ஊருக்கு வருவார்.
என் தாய் என்னை அடிக்கடி அடித்துக் கொண்டே இருப்பாள். அண்ணன்மார்களும் கூட அவ்வப்போது என்னை அடிப்பார்கள். தனியாக இருக்கும் போது என்னுடைய மோசமான நிலையைப் பற்றி சிந்தனையில் ஆழ்ந்துவிடுவேன். ஒரு பெண் பிள்ளை பிறப்பதற்கு பதிலாக நான் பிறந்த வருத்தம் காரணமாகவே அவர்கள் அப்படி நடக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
என்மீது கொண்ட வெறுப்பு காரணமாகத்தான் ஒருவேளை என் தந்தை ஊர்ப்பக்கமே வரவில்லையோ?
இரவில் படுத்திருக்கும் பொழுது நான் பல விஷயங்களையும் மனதில் போட்டு அலசுவேன். நினைத்து நினைத்து கடைசியில் நானே வாயைத் திறந்து கேட்டும் விடுவேன்.
"அம்மா, நான் ஒரு வெள்ளைக்காரியாகப் பிறந்திருந்தால்...?"
"பேசாம படுடா."
அப்போதுதான் உறங்க ஆரம்பித்திருக்கும் என் தாய் கோபத்துடன் என்னுடைய தொடையில் மெதுவாகக் கிள்ளுவாள்.
ஒரு பெண் குழந்தை வீட்டில் இல்லை என்பதில் என் தாய்க்கும் தந்தைக்கும் மனதில் நிறைய கவலை. அந்த விஷயம் எனக்கு நன்றாகவே தெரியும்.
வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருப்பது என்பது நல்ல விஷயம்தான். என் வகுப்பில் படிக்கும் பையன்களுக்கு அக்காமார்களும் தங்கைமார்களும் இருக்கிறார்கள். கோபியின் எல்லா புத்தகங்களுக்கும் காலண்டர் தாளில் அழகாக அட்டை போட்டுக் கொடுத்தது பானு அக்காதான். அவனுடைய பானு அக்காதான் புத்தகங்களின் மீது பெயர் எழுதுவதும் என்ன அழகான கையெழுத்து! கருணாகரனின் மூத்த அக்காவுக்குத் திருமணமாகிவிட்டது. பெரிய மீசையும் சிறிய கைக் கடிகாரமும் உள்ள ஒரு ஆள்தான் அவனுடைய அக்காவைத் திருமணம் செய்தவர். அவரும் அவருடைய நண்பர்களும் திருமணப் பந்தலுக்குள் நுழைந்தபோது, அந்த ஆளின் கால்களைக் கழுவி விட்டது கருணாகரன்தான். அன்று இரவு முழுக்க குரவைச் சத்தமும், நாதஸ்வரமும் கேட்டுக் கொண்டேயிருந்தது.
அதெல்லாம் நல்ல விஷயங்கள்தான். இருந்தாலும், கால்களைக் கழுவிவிட்டது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
"பிறகு..."- அவன் தன்னைப் பற்றி சொன்னான்: "நான் அந்த ஆளை எப்படி அழைக்கிறேன் தெரியுமா? அத்தான்னு..."
கருணாகரனும் கோபியும் கொடுத்து வைத்தவர்கள் என்று தோன்றியது. வீட்டில் ஒரு திருமணம் நடப்பதென்பது உண்மையிலேயே நல்ல விஷயம் தான். அலங்கரிக்கப்பட்ட பந்தலும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் மனிதர்களின் கூட்டமும் உள்ளே நிறைந்திருக்கும் பெண்களும்... ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டேன். க்ராமபோன் பாட்டும்...
என்னுடைய வீட்டில் ஒரு திருமணம் நடப்பதற்கான வழியே இல்லை. காரணம்- எனக்கு ஒரு சகோதரி இல்லை!
என்னுடைய புத்தகங்களுக்கு அழகான அட்டைகளுமில்லை. அழகான எழுத்துக்களில் பெயர் எழுதப்படவில்லை. எனக்கு ஒரு அத்தான் இல்லை.
அப்படி எனக்கு இருந்திருந்தால் எப்படி இருக்கும்? கருணாகரனின் வீட்டைவிட என் வீடு மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். அந்தச் சமயத்தில் கருணாகரன் என்னைப் பார்க்க வேண்டும். அவன் வீட்டில் திருமணம் அப்படியொன்றும் சிறப்பாக நடந்திருக்காது. அவன் என்ன பெரிய இவனா?
என்னுடைய புத்தகங்களுக்கு நான்தான் அட்டை போடுகிறேன். அது அப்படியொன்றும் பாராட்டக்கூடிய விதத்தில் இருக்காது. அண்ணன்மார்களிடமும் அட்டைபோட்டுத் தரச் சொன்னால் அவர்கள் ஏதாவது பேசுவார்கள்.
அவர்களுக்கு எதிராக நான் ஏதாவது சொன்னால் சேட்டை செய்யக்கூடிய பையன் என்று எல்லோரும் சொல்லக்கூடிய கருத்தை அவர்களும் ஒப்புக் கொண்டு என் தலையில் குட்டவோ அடிக்கவோ செய்வார்கள். என் தந்தையின் கடிதங்கள் முறை தவறாமல் வந்து கொண்டிருக்கும். என் தாய் அதை மிகவும் கவனமெடுத்துப் படிப்பாள். பத்தாம் வகுப்பில் படிக்கும் மூத்த அண்ணன் கடிதத்தைப் படிக்கும் போது இன்னொருமுறை அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொல்வோம்.
"........பிள்ளைகள் எல்லோரும் நலமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களைப் பற்றிய விவரங்களைத் தனியாக மறக்காமல் எழுதுவாய் அல்லவா?"
சிறிதும் குறையாத ஆர்வத்துடன் நான் அந்தக் கடிதம் படிக்கப்படுவதைக் கேட்பேன். பிள்ளைகள என்று குறிப்பிடப்படுவதில் நானும் அடங்கியிருக்கிறேன் அல்லவா?
முந்நூறு மைல்களுக்கப்பால் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் என் தந்தையை நான் நினைத்துப் பார்ப்பேன். அவர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னுடைய அண்ணன்கள் எல்லோரும் அவரின் அலுவலகத்திற்குப் போயிருக்கிறார்கள்.
அவர்கள் கொழும்பைப் பற்றி சொல்வது ஒவ்வொன்றையும் நான் மிகவும் கவனத்துடன் கேட்பேன்- எந்த இடத்தில் இருந்து சொன்னாலும் சரி. அங்குள்ள மனிதர்கள் பேசுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் அவர்கள் பேசுவது வேறு ஏதோவொரு மொழியில். அங்குள்ளவர்கள் மிகவும் பயங்கரமானவர்கள். குழந்தைகளைச் சாலையில் பார்த்தால் இடுப்பிலிருந்து கத்தியை உருவி எடுத்து கழுத்தை அறுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என்று சொன்னார் சின்ன அண்ணன். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை தன்னுடைய கண்களாலேயே பெரிய அண்ணன் பார்த்தாராம்.
அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது எனக்கு பயம் உண்டாக ஆரம்பித்துவிட்டது. இவ்வளவு கொடூர குணம் கொண்ட மனிதர்களுக்கு மத்தியிலா என் தந்தை வாழ்ந்து கொண்டிருக்கிறார்? கடவுளே!
"குழந்தைகளை மட்டும்தான் அவங்க கொல்லுவாங்க, இல்லியா?"
"பணம் கிடைக்கிறதா இருந்தா யாரை வேணும்னாலும் கொல்லுவாங்க."
அதைக் கேட்டதும் எனக்குள் ஒரு நடுக்கம் உண்டானது. ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. கடவுளே... என் தந்தையின் கையில் நிறைய பணம் இருக்கிறது என்று பொதுவாக ஆட்கள் எல்லோரும் கூறுவார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தந்தி ஒன்று வருகிறது. என் தந்தை ஊருக்குப் புறப்பட்டு வருகிறாராம்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,