Lekha Books

A+ A A-

இயேசுவும் கண்ணாடியும்

Yesuvum Kannaadiyum

ரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த கதை இது. ஒரு பாலைவனத்தைத் தாண்டி, வறண்டுபோய்க் காட்சியளிக்கும் ஒரு நாட்டில் நடைபெற்றது இந்தச் சம்பவம். அங்கு தண்ணீருக்கு மிகவும் தட்டுப்பாடு. வாரத்திற்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோதான் அங்குள்ள மக்கள் குளிப்பார்கள். தினமும் பல் தேய்க்கும் பழக்கம் உண்டா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

குளிக்காததால் தாடியிலும் முடியிலும் வியர்வையும் தூசியும் கலந்து ஒருவித நாற்றம் உண்டாவது தவிர்க்க முடியாத ஒன்று. கையிடுக்குகளிலும் கால் இடைவெளிகளிலும் கூட இவ்வகை நாற்றம் இருக்கும். பாலஸ்தீன் போன்ற வறண்டு போன நாடுகளில் வாழ்பவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொடுமையான விஷயங்கள் இவை. அதற்காக அங்குள்ள ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பதோ, முத்தம் கொடுத்துக் கொள்வதோ, உடலுறவு கொள்வதோ அங்கு நடக்காமல் இல்லை. அது எந்தவித தடையும் இல்லாமல் அங்கு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த நாற்றம் கூட அவர்கள் விருப்பப்படக் கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது என்பதே உண்மை. நீங்கள் மிகவும் கவனமாகப் பார்த்தால் பாலஸ்தீனியர்களின் உடலில் ஒருவகை வெடிமருந்து வாசனை வீசுவதைக்கூட நம்மால் உணர முடியும். சாவுக்கடலில் கலந்திருந்த கந்தகத்தின் வாசனைக்கும் இவர்களின் உடம்பில் இருந்து வீசும் வெடிமருந்து வாசனைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதுபோல் தோன்றும். முன்பு பாவம் செய்தவர்கள் நிறைந்த ஸோதோம் - கொமோராவை தெய்வம் கந்தகத்தில் இறக்கிவிட்டு அழித்ததன் எச்சம்தான் சாவுக்கடல் என்று அழைக்கப்படுகிறது. தெய்வத்திற்கு கந்தகம் எங்கே இருந்து கிடைத்தது என்று கேட்பதை விட எளிது, பாலஸ்தீனியர்களின் உடலில் பழைய பாவத்திற்காகப் பெற்ற தண்டனையின் மணம் இன்னும் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறது என்று நம்புவதுதான். இங்கு கூறப்படும் சிறு சம்பவத்தில் வருகிற இயேசு என்ற இளைஞர் இன்று எல்லோராலும் அறியப்பட்டவரும் வணங்கப்படுபவருமான ஒரு மனிதர். அதனால், அவருக்குத் தனியான ஒரு அறிமுகம் தேவையில்லை. இந்தச் சம்பவம் நடக்கும்போது இயேசுவிற்கு முப்பது அல்லது முப்பத்தொரு வயது இருக்கும். முப்பத்து மூன்று வயது ஆகிறபோது, அவர் இந்த உலகத்தைவிட்டு நீங்கிவிட்டார். நடுத்தர வயதிற்குப்பிறகு உலக வழக்கங்களுடன் ஒத்துப்போயோ, வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக விட்டுக் கொடுத்துப் போகும் மனோபாவத்துடன் பார்த்தோ வாழாமலே அவர் இங்கிருந்து போய்விட்டார்.

இயேசு பாலஸ்தீனில் உள்ள கலீலி என்ற இடத்தில்தான் பதின்மூன்று வயது வரை வளர்ந்தார் என்றாலும் அதற்குப் பிறகு கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் பாலஸ்தீனை விட்டு அவர் எங்கோ இருந்துவிட்டுத் திரும்பி வந்ததால், மேலே சொன்ன வியர்வை நாற்றமும், மற்ற வாசனைகளும் அவரிடம் இல்லாமல் இருந்தன. பாலஸ்தீனை விட்டு வெளியே வாழ்ந்த கால கட்டத்தில் இயேசு தண்ணீர் அதிகமாக நிறைந்திருக்கும் பல நாடுகளில் வாழ்ந்ததால், பல் தேய்க்கவும், குளிக்கவும், ஒழுங்காகத் தலை வாரவும், தாடியைச் சீராக வைக்கவும் அவர் நன்கு படித்திருந்தார். அப்படி இருப்பதுதான் சொல்லப்போனால் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. பயணத்தின்போது கிடைத்த உலக அனுபவங்களிலிருந்தும், வழியில் சந்தித்த குருக்களிடமிருந்தும் தனக்குக் கிடைத்த அறிவுடன் - மொத்தத்தில் முழுமையான நம்பிக்கையுடன் கலீலியில் இருக்கும் நாசரேத் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் தாயையும், தந்தையையும் தேடி வந்த இயேசு, இனி என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த காலம் அது. காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், இயேசுவிற்குக் குளிக்க வேண்டும் என்று தோன்றும். குறைந்தபட்சம் தலையையும் தாடியையும் கழுத்தையும் நீரில் கழுவி சுத்தப்படுத்த வேண்டும என்று தோன்றும். ஆனால், ரொம்ப தூரத்தில் இருக்கும் ஒரு கிணற்றில் இருந்து தன் வயதான தாயும், சகோதரிமார்களும், சகோதரர்களின் மனைவிமார்களும் சுமந்துகொண்டு வரும் தண்ணீர்தான் தற்போது வீட்டில் இருப்பது என்பதை இயேசு நன்றாகவே அறிவார். அது குளித்து மகிழ்ச்சியாக இருப்பதற்காக அல்ல. குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் உள்ள நீர் அது. சிறு பிள்ளையாக இருந்தபோது, இயேசுவும் தண்ணீர் சுமந்துகொண்டு வருவதில் அவர்களுக்கு உதவியாக இருந்திருப்பதால், அது எவ்வளவு கஷ்டமானது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இறந்துவிட்டதாக எல்லோரும் நினைத்திருந்த தான் உயிருடன் திரும்பி வந்ததில் அவர்கள் எவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்பதையும், அந்த மகிழ்ச்சியில் எந்தவித தயக்கமும் இல்லாமல் அவர்கள் தனக்கு குளிக்க நீர் கொண்டு வந்து தருவார்கள் என்பதையும் அவர் நன்றாகவே அறிந்திருந்தார். ஆனால், அது நியாயமாகப்படவில்லை அவருக்கு. ‘நான் இவ்வளவு காலம் பல நாடுகளையும் சுற்றி அலைந்து அறிவு சம்பாதிச்சதாலும், குளித்து சுத்தமாக இருக்க படிச்சதாலும், இவர்களின் கஷ்டங்கள் குறைந்திருக்கிறதா என்ன!’ என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுப் பார்த்தார் இயேசு. விளைவு - குளிக்க வேண்டும் என்ற ஆசையை அவர் ஒதுக்கி வைத்தார். ஆனால் தாடி, மீசை இவற்றிலிருந்து புறப்பட்டு வந்த ஒரு மணமும், மீசைக்குள்ளே பேன் இருக்கிறதோ என்று சந்தேகப்படும்படி உண்டான அரிப்பும் இயேசுவை என்னவோ செய்தது. என்ன செய்வது என்று இயேசு யோசித்துப் பார்த்தார். மீசையை நீக்கிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமே என்று நினைத்தார். முற்றத்தில் இருந்த ஒரு மர நிழலில் கிடந்த ஒரு கட்டிலில்தான் இயேசு அமர்ந்திருந்தார். மெதுவாக எழுந்து நின்று அவர் உடலை நிமிர்த்தினார். தன்னையும் அறியாமல் அவர் தான் அணிந்திருந்த ஆடையின் தோள் பாகத்தை நுகர்ந்து பார்த்து, முகம் சுளித்தார். ஆடையை நீரில் சுத்தம் செய்து எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. சரி... முகத்தைச் சவரம் செய்துவிட்டு, கலீலித் தடாகத்தை நோக்கிப் போகலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அங்கே போனால் நன்றாகக் குளித்து முடித்து, அணிந்திருக்கும் ஆடையைத் துவைத்துக் காயப்போட்டு, காற்று வாங்கி, கிடைத்தால் கொஞ்சம் நல்ல மீன்களையும், அத்திப் பழத்தையும் வாங்கிக் கொண்டு வந்து தாயையும் சகோதரிகளையும் மகிழ்ச்சிப்படுத்தலாம் என்று தீர்மானித்தார் இயேசு.

நடக்க ஆரம்பித்த இயேசு பின்னர் என்ன நினைத்தாரோ திடீரென்று நின்றார். தன் கையில் காசு எதுவும் இல்லை என்பது அப்போதுதான் அவரின் ஞாபகத்தில் வந்தது. அணிந்திருந்த அங்கியின் பைக்குள் வெறுமனே கையை நுழைத்துப் பார்த்தார். ஒரு சல்லிக்காசு கூட அங்கே இல்லை. முதல்நாள் மாலை வீடு திரும்புகிறபோது வரும் வழியில் சீமோனின் பாட்டி தந்த, வறுத்த, உப்புப்போட்ட சோளத்தின் இரண்டு, மூன்று மணிகள் பைக்குள் கிடந்தன. அந்தச் சோளத்தைத் தின்றுகொண்டேதான் இயேசு வீட்டிற்கு வந்தார்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel