Lekha Books

A+ A A-

இயேசுவும் கண்ணாடியும் - Page 2

Yesuvum Kannaadiyum

இவ்வளவு வருடங்கள் கழித்து தான் வீடு திரும்பி வருகிறபோது, கையில் காசு எதுவுமே இல்லாமல் இருப்பதைப் பார்த்து யாரும் இதுபற்றி ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை என்றாலும்கூட, வீட்டில் உள்ளவர்கள் மனதில் அந்தக் கவலை இருக்கிறது என்பதை இயேசு உணராமல் இல்லை. அவரின் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. அவரால் எதுவுமே பண்ண முடியாது. தம்பிமார்கள் வெறுமனே ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். திருமணம் செய்ய வேண்டிய சகோதரிகள் இன்னும் வீட்டில் இருக்கிறார்கள். மொத்தத்தில் - சொல்லப்போனால் பெண்களின் கடுமையான உழைப்பால்தான் அந்த வீட்டில் உள்ள வறுமையை வீட்டுவாசலுக்கு வெளியே நிறுத்தி இருக்கிறார்கள். எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்த இயேசு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். ‘நான் கடவுள் ராஜ்யத்தைப் பற்றிய அறிவுடன் இந்த வீட்டுக்கு வந்து என்ன பிரயோஜனம்? அம்மாவையும், தங்கச்சிகளையும் இந்தக் கஷ்டத்திலிருந்து மீட்க என்னால் முடியலியே!’ என்று வருத்தத்துடன் நினைத்துப் பார்த்தார். அடுத்த நிமிடம் அவர் வீட்டைப் பார்த்தார். அவரின் தாய், அடுப்புக்குப் பக்கத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள். கடைசி தங்கை லைலா கறந்த ஆட்டுப்பாலை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். இயேசு தன் தங்கை லைலாவின் முகத்தைப் பார்த்தார். ‘உண்மையிலேயே இவள் ஒரு பேரழகிதான்!’ - இயேசு நினைத்தார். ‘வாழ்க்கையில் வாழ்வதற்கான வழியை நல்லா தெரிஞ்ச ஒரு பையன் இவளுக்குக் கணவனா வந்தா இவளோட அழகை அனுபவிக்கக்கூடிய பாக்யசாலியாகவும் அவன் இருப்பான்.’

மீசையை நீக்கலாமா என்று முதலில் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று தீர்மானித்தார் இயேசு. புகையால் கண்கள் கலங்கிப் போயிருந்த அவரின் தாய், இயேசுவைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவள் சொன்னாள் : “உனக்குப் பசி எடுக்குதா? இதோ... வெந்த கொழுக்கட்டை இருக்கு. சாப்பிடு.” இயேசு சொன்னார் : “இப்ப ஒண்ணும் வேண்டாம்மா. தாடியையும் மீசையையும் இல்லாமப் பண்ணிடலாமான்னு பார்த்தேன். இது இருந்தா, ஒரே சூடா இருக்கு. அடிக்கடி சொறிய வேண்டியதிருக்கு!” லைலா பாலைச் சூடாக்குவதில் ஈடுபட்டிருந்தாள். தாயும் லைலாவும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்: “அய்யோ... வேண்டாம்.” லைலா தொடர்ந்து சொன்னாள் : “இப்படியிருக்கிறதுதாண்ணே உங்களுக்கு நல்லா இருக்கு! இதுதான் பார்க்குறதுக்கு அழகா இருக்கு. நீங்க எங்கேண்ணே இந்தத் தாடியையும், மீசையையும் வச்சீங்க?” இயேசு வீட்டை விட்டுப் புறப்பட்ட காலத்தில் லைலா பிறந்திருக்கவே இல்லை. ஆனால், இதுவரை கண்ணால் பார்த்திராத அண்ணனை அவள் ஏகப்பட்ட பாசத்துடன் வரவேற்றாள். லைலா அப்படிச் சொன்னதும், இயேசுவின் மனம் குளிர்ந்துவிட்டது. இயேசுவின் தாய் சொன்னாள் : “எது எப்படி இருந்தாலும், ரோமர்களைப் போல நாம முகத்தைச் சவரம் செய்றதுன்றது, அவ்வளவு நல்லதில்லை. தாடி, மீசை இருக்குறதுதான் யூதனுக்கு கவுரவம்.”

“பேன் உள்ளே இருக்குதுன்னு நினைக்கிறேன். அதனால ஒரே அரிப்பா இருக்கு...” - இயேசு சொன்னார். அதற்கு லைலா சொன்னாள்: “பரவாயில்லண்ணே.. .நான் ஆடுகளை மேயவிட்டுட்டு வந்து பேன் எடுக்குறேன்!” ஒரு கோழியை வேகமாக விரட்டிக் கொண்டு வந்த ஒரு சேவல் சமையலறைக்குள் நுழைந்தது. இயேசு ஒரு காலால் வீசி இரண்டையும் விரட்டியடித்தார். அவர் சொன்னார் : “அம்மா, நான் பெத்தனிக்குப் போயிட்டு வரட்டா? லாஸரஸையும் மார்த்தாவையும் பார்த்து எவ்வளவோ நாட்களாயிடுச்சு!” இயேசு மனதிற்குள் நினைத்தார்: ‘மார்த்தா, லாஸரஸ் - இரண்டு பேர்கிட்டயும் நிச்சயம் ஏதாவது காசு இருக்கும். மரியம் அவ்வளவு விவரம் இல்லாதவளா இருந்தால்கூட, அவள்கிட்ட இருந்து இன்னும் கொஞ்சம் காசு கடன் வாங்கணும். ஏற்கனவே அவள்கிட்ட வாங்கின காசையே திருப்பித் தரல. அதனால பரவாயில்லை. ஏதாவதொரு வழி பிறக்காமலா இருக்கும்? குளத்துப் பக்கம் போயி ரெண்டு வார காலத்திற்கு வலை வீசினால்கூட போதும்... எதுவுமே சரியா வரலைன்னா, உளியை மீண்டும் கையில எடுக்க வேண்யடியதுதான். பல வருஷங்களுக்கு முன்னாடி அப்பா சொல்லித் தந்ததை நான் இப்பவும் மறக்கல. உண்மையிலிலேயே ஊர் ஊரா சுற்றித் திரிஞ்சது எவ்வளவு சுகமான அனுபவம்! அப்படி அலையுறவங்க மேலதான் இந்த உலகத்துல இருக்குற மனிதர்களுக்கு எத்தனை ஈடுபாடு!’ இயேசுவின் தாய் சொன்னாள் : “இந்த வெயில்லயா? ரெண்டு நாட்கள் பயணம் செஞ்சேன்னா, நீ ரொம்பவும் களைச்சுப் போயிட மாட்டியா?” அதற்கு இயேசு சொன்னார் : “பரவாயில்லம்மா... ஊர் ஊரா சுத்தி எனக்குப் பழகிப்போச்சு. நான் போயிட்டு ஒரு வாரத்துக்குள்ள திரும்பி வந்திர்றேன்.” லைலா சொன்னாள் : “அண்ணே, மீசையை எடுக்கக்கூடாது தெரியுதா?” அதற்கு இயேசு சிரித்தவாறே சொன்னார் : “பார்க்கலாம். முடியே இல்லைன்னா என் முகம் எப்படி இருக்குதுன்னு நான் பார்க்க வேண்டாமா?” லைலா சொன்னாள் : “அண்ணே, தாடியும், மீசையும் இல்லைன்னா, நீங்க ஒரு அழகான பெண்ணைப்போல இருப்பீங்க.” “அதாவது - உன்னைப்போல....” - இயேசு சிரித்தார். அவரின் தாய் மகிழ்ச்சியுடன் சொன்னாள் : ‘’எது எப்படி இருந்தாலும்... என் பிள்ளைகளுக்கு என்ன குறைச்சல்!” இயேசுவின் முகத்தைப் பார்த்து, அந்த முகம் முடியில்லாமல் இருந்தால் எப்படியிருக்கும் என்று அந்தத் தாய் நினைத்துப் பார்த்தபோது, பல வருடங்களுக்கு முன்னால் கண்ட தேவதூதனைப் போன்ற ஒரு மனிதரின் முகம் ஒரே நிமிடம் மின்னலைப்போல அவள் மனதில் தோன்றி மறைந்தது. அவள் ஒரு கையால் தன் முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்தாள்.

‘ததேவூஸ்கிட்ட கடன் சொல்லலாம்’ - நாவிதனின் சிறு வீட்டில் கால் வைக்கும் நிமிடத்தில் இயேசு மனதிற்குள் நினைத்துக் கொண்டார். அவர் போகும்போது கடையில் யாருமே இல்லை. ததேவூஸ் ஒரு பழைய பெஞ்சின் மேல் காலை நீட்டிப் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். ‘எனக்கு முதல் முறையா முடி வெட்டின ததேவூஸ் இன்னைக்கும் அப்படியேதான் இருக்காரு!’ - இயேசு ஆச்சரியப்பட்டு நின்றார். ததேவூஸின் தலை முடி இலேசாக நரை விட்டிருந்தது. கொஞ்சம் தொந்தி போட்டிருந்தது. அவ்வளவுதான் வித்தியாசம். இன்னும் அவரிடம் இளமையின் மிடுக்கு இருந்தது. மனைவியும், மகளும் போக அவருக்கு மூன்று வைப்பாட்டிகள் வேறு. அந்த வைப்பாட்டிகளுக்கும் குழந்தைகள் இருக்கின்றன. சவரக்கத்தியை வைத்து அவர்கள் எல்லோரையும் அவர் எந்தவித குறைவும் இல்லாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இயேசு இலேசாகக் கனைத்தார். அடுத்த நிமிடம் ததேவூஸ் கண்களைத் திறந்தார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel