Lekha Books

A+ A A-

இயேசுவும் கண்ணாடியும் - Page 3

Yesuvum Kannaadiyum

இயேசு ததேவூஸைப் பார்த்துப் புன்னகைத்தார். ததேவூஸ் எழுந்து உட்கார்ந்தார். ஒரு வார்த்தை கூடப் பேசாமல், சவரம் செய்யும் நாற்காலியில் அமரும்படி சைகை காட்டினார். இயேசுவை அவர் அடையாளம் கண்டது மாதிரி தெரியவில்லை. அப்போதுதான் நாற்காலிக்கு முன்னால் இருந்த தட்டில் ஒரு பொருளை இயேசு பார்த்தார். அது ஒரு கண்ணாடி! பூக்கள் கொத்தப்பட்ட பலகையால் ஆன சதுரத்திற்குள் ஒரு கண்ணாடி! இயேசு கண்ணாடியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை ததேவூஸ் கவனித்தார். அவர் கொட்டாவி விட்டவாறே சொன்னார் : “ரோம் நாட்டுப் படைத் தளபதியோட மகளுக்கு நடந்த கல்யாணத்தப்போ கிடைச்ச பரிசுப்பொருள் இது. இரண்டு வாரம் திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளுக்கு முடி வெட்டிவிட்டதும், சவரம் செய்ததும் நான்தான். ஆனால், இந்தக் கண்ணாடி அதற்காகக் கிடைச்சது இல்ல. படைத் தளபதியோட மனைவியின் சில உறுப்புகளுக்குச் சவரம் செய்ததனால் இது கிடைச்சது. படைத்தளபதி அதைப் பார்த்திருப்பார் போல! ஹோ... ரோமர்களோட இந்தப் போக்கு எங்கு போய் முடியப்போகுதோ? வாழ்க்கையில அவங்களுக்கு எப்பவும் இருக்குறது ஒரே ஒரு சிந்தனைதான்!” – ததேவூஸ் தன் கைவிரலால் ஒரு மாதிரி காட்டினார். அதைப்பார்த்து இயேசு புன்னகைத்தார். இயேசு இப்போதும் கண்ணாடியையே பார்த்தார். திடீரென்று தன்னை எதுவோ பிடித்துக் குலுக்குவதுபோல் அவர் உணர்ந்தார். தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனைத் தட்டி எழுப்புவதைப்போல, யாரோ தனக்குள் இருந்துகொண்டு தன் மனக்கதவைத்தட்டி என்னவோ சொல்வது போல் உணர்ந்தார் இயேசு: ‘போ... போ... கண்ணாடிக்குப் பக்கத்தில் போ. இந்தக் கண்ணடியை எடுத்து உன்னோட முகத்தைப் பார். நீ அழகானவன்தானா? தெய்வத்தின் சாயல் உனக்கு இருக்குதா? கடவுள் ராஜ்யத்தின் அடையாளம் எதுவாவது உன்னோட முகத்தில் தெரியுதா? இதையெல்லாம் நீ பார்க்க வேண்டாமா? சவரம் செய்றதுக்கு முன்னாடி உன்னோட மீசை எப்படி இருக்குன்னு நீ பார்க்க வேண்டாமா?’ அவ்வளவுதான் - அடுத்த நிமிடம் இயேசுவின் உடல் நடுங்கியது. விரல்கள் ஏனோ துடித்தன. இயேசு ஒருவித நடுக்கத்துடன் தன் இரு கைகளையும் மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொண்டார். இயேசுவின் தலைக்குள் யாரோ பேசினார்கள். ‘ரெண்டடி முன்னால் வா. பிறகு... குனிந்து பார். நீ யார்னு உனக்குத் தெரியும். உன்னைப் பற்றிய எல்லா ரகசியங்களையும் நீ தெரிஞ்சுக்கலாம். தண்ணீர்லயும், சீனப் பீங்கான்லயும் பார்த்திருக்கிற உன்னோட முகத்தை இல்ல.. வா... வா... உன்னோட உண்மையான முகத்தைக் காண வா...’ வெளியே காய்ந்துகொண்டிருந்த வெயிலை ஒரு விளக்கு போலக் காட்டிய கண்ணாடி இயேசுவை அழைத்தது. இயேசு உண்மையிலேயே நடுங்கினார். அவருக்கு மூச்சடைப்பதுபோல் இருந்தது. ‘வேண்டாம்... வேண்டாம்...’ - இயேசு நிசப்தமாக கண்ணாடியைப் பார்த்துச் சொன்னார்: “நீ என்னை எனக்குக் காட்டித் தரவேண்டாம். நான் என்ன பார்க்கிறேன் என்பது எனக்குத் தெரியவே வேண்டாம். எனக்கு பயமா இருக்கு!” - கண்ணாடி மணி முழக்கம் போன்ற உரத்த குரலில் சொன்னது: “வா இயேசு வா... உனக்கு தெரியுமா? நீ எனக்குள்ளே இருக்கே. ரெண்டே ரெண்டடி முன்னாடி வந்து நின்னு கொஞ்சம் குனிந்து பார். நாம மூணு பேருமே ஒண்ணு!” இயேசு சொன்னார் : “இல்ல... இல்ல... நான் பார்க்க வேண்டியதை நீ காட்டுவியா? இல்ல... இல்ல...” - தன் அங்கிக்கடியில் வியர்வை ஆறாய் பெருகி வழிவதை இயேசுவால் உணரமுடிந்தது. கொடுங்காற்றில் தான் சிக்கிக் கொண்டதைப்போல இயேசு ஆடினார். மணி ஒலிப்பதுபோல கண்ணாடி மீண்டும் பேசியது. “நீ முதல்ல என் முன்னாடி வந்து என்னைப்பார். உன் உதடுகளைப்பார். உன் கண்களைப்பார். தாடி, மீசையைப் பார். மூக்கைப் பார். நெற்றியைப் பார். எல்லாம் பார்த்தப்புறம் மற்ற விஷயங்களை நாம தீர்மானிப்போம்.” “வேண்டாம்... வேண்டாம்...” - இயேசு நிசப்தமாக அலறினார். வெயிலின் ஒரு கீற்றை எடுத்துப் பிரதிபலித்த கண்ணாடி கரகரப்பான சத்தத்தில் சொன்னது: “முட்டாள்... நீ தேடுறதெல்லாம் இங்கே இருக்கு. நீ ஒரு தடவை என்னைப் பார்த்தால் போதும். நீ ஏன் இப்பவும் பார்க்கத் தயங்குறே? சக்திகள்... மரணமில்லாமை...” - இயேசு தன் இருகைகளாலும் தன் காதுகளை இறுக மூடிக்கொண்டார். ஓங்கிக் கத்த வேண்டும் போலிருந்தது. அதை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார்.

“கண்ணாடியை உனக்கு மிகவும் பிடிச்சிருக்குல்ல...?” - ததேவூஸ் கேட்டார். தட்டில் இருந்த கண்ணாடியை எடுத்து இயேசுவிற்கு நேராக நீட்டிய அவர் சொன்னார் : “வா... வாசலுக்கு நேராகத் திரும்பி வெளிச்சத்தில் நின்னு நல்லா இதைப்பாரு. இப்பவும் உனக்கு நல்ல பிரகாசமான முகம்தான். இவ்வளவு காலம் நீ எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு திரும்பியிருந்தாலும், உன்னோட முகத்துல ஒரு ஒளி இருக்கவே செய்யுது!” இயேசு அதிர்ந்துபோய் பின்னால் நகர்ந்து நின்று தளர்ந்து போன குரலில் சொன்னார்: “வேண்டாம்... வேண்டாம்... நான் இன்னொரு நாள் வர்றேன்.” ததேவூஸ் சிரித்தார்: “சரி இயேசு... என்னோட மூணாவது மகளை நீ பார்த்திருக்கியா? இவ்வளவு அழகான ஒரு பெண் கலீலில் இல்லவே இல்ல... லைலாவோட தோழிதான் அவள். அவள் எப்போதும் உன்னைப் பற்றிச் சொல்லுவா. இனியாவது நீ ஒரு குடும்பமா - நான்கு பேர் மதிக்கிற மாதிரி வாழவேண்டாமா?” - இயேசு ஒரு அப்பாவியைப் போல ததேவூஸை உற்று நோக்கியவாறு சொன்னார்: “எனக்கு நேரமாயிடுச்சு... எனக்கு நேரமாயிடுச்சு... நான் ஓடிப்போகட்டுமா?” அடுத்த நிமிடம் ததேவூஸுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வெளியே இறங்கி படுவேகமாக நடக்க ஆரம்பித்தார் இயேசு.

இரண்டு நாட்கள் கழித்து இயேசு பெத்தனியில் இரக்கும் மார்த்தாவின் வீட்டிற்கு வரும்போது சாயங்காலம் ஆகிவிட்டிருந்தது. மரியம் மாலை வெயிலைப் பார்த்தவாறு வாசலில் உட்கார்ந்திருந்தாள். இயேசுவின் முகம் காற்றும், வெயிலும், குளிரும் பட்டு மிகவும் கருத்துப் போயிருந்தது. கண்கள் குழிக்குள் கிடந்தன. அங்கி வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டிக்கிடந்தது. கால்களில் முட்டிவரை செம்மண்ணும், தூசியும், அழுக்கும் ஒட்டி இருந்தன. இயேசுவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மரியம் அடித்துப் பிடித்து எழுந்து நின்றாள். இயேசு தன் தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தபோது, அதிலிருந்து தூசு பறந்தது. மரியம் மகிழ்ச்சியுடன் முற்றத்தை நோக்கி வந்தாள் : ‘’மரியம்...” - இயேசு சொன்னார் : “எனக்கு ரொம்பவும் தாகமா இருக்கு. குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடு.” “மது இருக்கு. தரட்டுமா?” - மரியம் கேட்டாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel