Lekha Books

A+ A A-

டி.க்யூலாவின் முத்தம்

D.Culavin-mutham

ன்று என் பெரிய மாமா என்னை அழைத்துச் சொன்னார்:

"டேய், கோபி. நாளைக்குத்தான் உஷாவோட நாள். சிஸேரியன். கட்டாயம் இரத்தம் வேணும். ஓ-நெகட்டிவ் இரத்தம் இருக்கிற ஆளுங்க யாரையும் உனக்குத் தெரியுமா?"

"பெரிய மாமா...." - நான் சொன்னேன்: "எனக்கு இருக்கிறது ஓ- நெகட்டிவ் இரத்தம்தானே?"

"அப்படின்னா நல்லதாப் போச்சு"- பெரிய மாமா சொன்னார்: "நீ ஒருத்தன் மட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் கவனமா இருந்தா, பின்னாடி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அதுனால, உன்னோட நண்பர்கள் யாருக்காவது ஓ-நெகட்டிவ் இரத்தம் இருக்குதான்னு பாரு. முரளியும் ஒரு பக்கம் இரத்தம் சம்பந்தமா விசாரிச்சுக்கிட்டுத்தான் இருக்கான்."

உஷாவுக்கு இரத்தம் கொடுப்பதற்கு உண்மையாகவே நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவளின் வயிற்றில் இருக்கும் குழந்தை அவள் கணவன் முரளிக்குக் சொந்தமானதாக இருந்தால்கூட என்னைப் பொறுத்தவரை அது என் குழந்தை என்றுதான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு உஷாவை நான் காதலிக்கிறேன். ஆனால் பெரிய மாமாவுக்கு பயந்துகொண்டு நான் இந்த விஷயத்தை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை என்பதே உண்மை.

நான் சொன்னேன்: "பெரிய மாமா, அதைப்பத்தி நீங்க கவலையேபடாதீங்க. இரத்தம் கிடைக்கிறதுக்கான வழிகளை நான் பார்க்கிறேன்." ஆனால் நான் வங்கிக்குச் சென்று காலை நேர கடுமையான பணிகளுக்கு மத்தியில் ஒவ்வொருத்தரையும் அழைத்துக் கேட்டபோது, இரண்டே இரண்டு பேரிடம்தான் ஓ-நெகட்டிவ் இரத்தம் இருந்தது. ஜார்ஜும் இராமச்சந்திரனும். அவர்களோ எல்.டி.ஸி. எடுத்து குடும்பத்துடன் ஊட்டிக்குப் போய் விட்டிருந்தார்கள்.

வேகமாக வவுச்சர் எழுதிக்கொண்டிருப்பதற்கு மத்தியில் நான் உஷாவின் வயிறு எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தேன். மதியநேரம் கழிந்தபிறகு எனக்கு ஒரே படபடப்பாக இருந்தது. நான் பெரிய மாமாவை தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன்: "பெரிய மாமா, ஒரு பிரச்னை. இரத்தம் வாங்கிடலாம்னு நான் நினைச்சு வச்சிருந்த யாரும் இப்போ இங்கே இல்ல. முரளி என்ன சொன்னான்?"

"அவன் யார்கிட்டயோ சொல்லி வச்சிருக்கான்னு நினைக்கிறேன். எனக்கு அதைப்பத்தி சரியா தெரியல!"

"பெரிய மாமா..."- நான் சொன்னேன்: "ரிஸ்க் எடுக்க வேண்டாம். கொஞ்சம் இரத்தம் வாங்கினா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்."

"சரி... அப்படியே செய்வோம்"- பெரிய மாமா சொன்னார்.

"ஆனா, ரொம்ப கவனமா இருக்கணும். இப்போ எய்ட்ஸ் அது இதுன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு!"

"அதைவிட பயங்கரம் ஹெப்பட்டைட்டீஸ்-பீ" நான் சொன்னேன்: "அதை நான் கவனமா பார்த்துக்குறேன்."

"உன் கையில பணம் இருக்கா?"

"இருக்கு!"

"அப்படின்னா நீ உஷா இருக்கிற மருத்துவமனைக்குப் போயி சீட்டு வாங்கிட்டு இரத்த வங்கிக்குப் போயி ஆகவேண்டிய வேலைகளைப் பாரு. அவளோட அறை எண்: 34."

நான் மூன்று மணி கழிந்ததும், மெதுவாக எழுந்துபோய் மேலாளரிடம் சொன்னேன்: "சார்... நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும். என்னோட பெரிய மாமா மகளுக்கு சிஸேரியன். அதுக்கு இரத்தம் தயார் பண்ண வேண்டியதிருக்கு..."

இரண்டு கைகளிலும் ஒவ்வொரு தொலைபேசியை வைத்துப் பேசிக் கொண்டிருந்த மேலாளர் நான் சொன்னதைக் கேட்பதற்காக தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தினார். பிறகு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தவாறு என்னிடம் கேட்டார்: "இரத்தமா?"

உலர்ந்து போயிருந்த உதடுகளை நாக்கால் நக்கி நனைத்தவாறு அவர் என்னைப் பார்த்தார்.

"ஆமா, சார்..." - நான் சொன்னேன்.

"வெரிகுட்..." -மேலாளர் சொன்னார்: "ஆமா... நீ எந்த ப்ளட் பேங்குக்குப் போற?"

"ஒரு நல்ல ப்ளட் பேங்கா பார்க்கணும், சார்"- நான் சொன்னேன்.

"நல்ல ஒரு ப்ளட் பேங்க் இருக்கு"- மேலாளர் சொன்னார்: "புல்காடு பள்ளி கல்லறைக்குப் பின்னாடி கற்பகுஸுமம் சாலை தெரியுமா?"

"தெரியும்!"

"அந்த சாலையில ஒரு புதிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இருக்கு. பாத்திருக்கியா? நித்யஜீவன் ப்ளாஸா, அந்தக் கட்டிடத்தோட மூணாவது மாடிக்குப் போனா, சிரஞ்சீவி ப்ளட் பேங்க்னு ஒண்ணு இருக்கு. நல்ல நம்பிக்கையான பேங்க். நாமதான் அதுக்கு பண உதவி செஞ்சிருக்கோம்!"

"அப்படியா? ரொம்ப ரொம்ப நன்றி, சார்"- நான் சொன்னேன்: "நமக்குத் தெரிஞ்ச இடமா இருக்குறது ஒரு வகையில நல்லதாய் போச்சு!"

"நோ மென்ஷன்" -மேலாளர் சொன்னார்.

நான் உஷாவின் வார்டுக்குப் போய் 34ஆம் எண் கொண்ட அறையைப் தேடிப்போனேன். இதோ.... 34ஆம் எண் அறை! உஷாவிற்கு இப்போது பிரசவம் ஆகிக்கொண்டிருக்குமோ என்றொரு நினைப்பு மனதில் எழுந்தது. என் நெஞ்சு என்ன காரணத்தாலோ 'படபட'வென்று அடித்தது. நான் கதவை இலேசாகத் தள்ளித் திறந்து, ஒரு கண்ணால் உள்ளே பார்த்தேன். உஷா ஒரு வெள்ளைத் துணியைப் போர்த்திக்கொண்டு மேற்சுவரைப் பார்த்தவாறு கட்டிலில் படுத்திருந்தாள். உஷாவின் வயிறு துணிக்கு மேலே வீங்கி குன்றைப் போல உயரமாகத் தெரிந்தது. பக்கத்துக் கட்டிலில் அத்தை படுத்து குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள். உஷாவை மூடியிருந்த வெள்ளைத் துணியை நீக்கி தொப்புள்வரை ரோமங்கள் இலேசாகப் படர்ந்திருந்த அவளின் வயிற்றின்மேல் தலையை வைத்து, என் தலையையும் துணியால் மூடிப் படுத்துக் கொள்ள வேண்டும் போல் எனக்குத் தோன்றியது. உஷாவின் குன்றைப்போல் உயர்ந்திருக்கும் வயிற்றின்மேல் இன்னொரு சிறு குன்றுபோல் என் தலை இருக்கும். முரளியின் குழந்தை உஷாவின் வயிற்றுக்குள் நீந்திக் கொண்டிருப்பதை நான் கேட்கலாம் அல்லவா?

நான் மெதுவாக அழைத்தேன்: "உஷா..."

உஷா மேலே இருந்த தன் பார்வையை விலக்கி என்னைப் பார்த்தவாறு சொன்னாள்: "யாரு...? கோபியா? நான் நினைச்சேன் முரளின்னு." மீண்டும் அவள் மேற்சுவரைப் பார்க்க ஆரம்பித்தாள்.

நான் அறைக்குள் ஒரு காலை எடுத்து வைத்து அத்தை எங்கே எழுந்துவிடப் போகிறாளோ என்று எண்ணியவாறு சொன்னேன்: "உஷா... நான் ப்ளட் வாங்குறதுக்காகப் போறேன். இங்கே அதற்காக சீட்டு வாங்கணும். உன்னோட பதிவு எண் என்ன?"

அத்தை என் பேச்சைக் கேட்டு உறக்கம் நீங்கி எழுந்து பாதி திறந்த கண்களால் என்னைப் பார்த்தவாறு கேட்டாள்: "ப்ளட்டா?" எச்சியை உள்ளே விழுங்கினாள் அத்தை.

உஷா ஒரு கையால் மேஜைப்பக்கம் சுட்டிக்காட்டியவாறு சொன்னாள்: "அங்கே இருக்குற பேப்பர்ல இருக்கு. பார்த்துக்கோ கோபி"- சொல்லிவிட்டு அவள் கண்களை மூடிக் கொண்டாள். அத்தையும் குறட்டைவிடத் தொடங்கினாள்.

நான் பதிவு எண்ணைத் தேடிக் கொண்டே உஷாவைப் பார்த்தேன். துணிக்கு அடியில் உஷாவின் வயிறு அவள் மூச்சு விடுவதால் உயர்வதும் தாழ்வதுமாய் இருந்தது. கீழே ஒரு குழியைப் போல் துணிக்குக் கீழே அவளின் தொடைகள் தெரிந்தன.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel