Lekha Books

A+ A A-

கவிதை எழுதும் பெண்

kavithai ezhudum pen

'தன்னுடைய வலையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு எட்டுக்கால் பூச்சியைப் போல...'

அவள் வாசற்படியைத் தாண்டி நடந்து தோட்டத்தை அடைந்தாள். படிகளுக்குக் கீழேயிருந்து ஒரு சிறு தவளை வெளியே வந்து அவளின் கால்களுக்கு நடுவில் ஓடியது.

'அர்த்தமில்லாத அந்த மரணத்தில் அவள் போய் விழுந்தாள்...'

அவள் தன் மனதிற்குள் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள். நடக்கும்போது, தூங்கும்போது என்று எல்லா நேரங்களிலும் அவள் கவிதை படைத்துக் கொண்டிருந்தாள்.

"ஆனால், அதெல்லாம் பின்னால்தான்!"

பல நாட்கள், அவள் ஒவ்வொரு மாறுபட்ட தெருக்கள் வழியாகவும் நடந்து கொண்டிருந்தாள்...

அர்த்தம் தேடிக்கொண்டு...

தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்தவாறு பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவளுடைய கணவன் தலையை உயர்த்திப் பார்த்தான்.

"இன்னைக்கு நான் சீக்கிரமே வந்துட்டேன்."

"அப்படியா?"

அவன் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டான். அவள் அவனுக்கு நேர் எதிரில் ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு அதில் உட்கார்ந்தாள். அவனை முத்தமிட வேண்டுமா என்று அவள் மனதிற்குள் நினைத்தாள். அவனுக்குப் பின்னால் போய் நின்று அவன்மீது தான் கொண்டிருக்கும் காதலை வெளியே தெரியுமாறு காட்டவேண்டுமோ என்று அவள் நினைத்தாள். அவனுக்கு இப்போது தேவை என்ன? தன்னிடமிருந்து விலகி விலகி அவன் மிகவும் தூரத்தில் தற்போது இருக்கிறான் என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவேளை அது தவறாகக்கூட இருக்கலாம் என்று அவள் நினைத்தாள். விலகி விலகிப் போய்க்கொண்டிருக்கும் இரண்டு கிரகங்களையும் நெருக்கமாகக் கொண்டுவர தான் முயற்சித்திருக்க வேண்டும். அவன் அலுவலகத்தில் நடைபெற்ற விஷயங்களைப் பற்றி அவனிடம் தான் விசாரித்திருக்க வேண்டும். நடக்கச்சென்றபோது வழியில் கண்ட காட்சிகளைப் பற்றி அவனிடம் ஒன்றுவிடாமல் சொல்லியிருக்க வேண்டும். அதுதானே தாம்பத்யம் என்பது? சந்தோஷத்திலும் கவலையிலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு எடுக்கிறோமோ அவ்வளவு நாம் கொடுக்கவும் வேண்டும்- இப்படி பல விஷயங்களையும் அவள் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தாள். இந்த விஷயங்களெல்லாம் தெரியாமலொன்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்களைப் பார்த்து எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்: "பொருத்தமான ஜோடி..."

உயரம், நிறம்- இரண்டிலும் அவர்கள் சரியான ஒற்றுமையைக் கொண்டிருந்தார்கள். ஆனால், அப்போது அவள் காதல், அன்பு போன்ற விஷயங்களை முழுமையாக நம்பினாள். அவனுக்காகத் தூக்கமில்லாமல் இருக்கவோ, சாப்பாட்டை விட்டுத்தரவோ கூட அவள் தயாராகவே இருந்தாள்.

"நீ ஒரு நல்ல பெண்."- அவன் சொன்னான். அவன் தன்னுடைய நண்பனின் மனைவியுடன் தன்னை மறந்து பேசியவாறு அதே அறையில் உட்கார்ந்திருந்தபோது கூட அவள் தன் கண்களை உயர்த்தவேயில்லை. அவள் கைகளில் இருந்த நடுக்கத்தையும் அந்தக் கண்களில் இருந்த ஈரத்தையும் அவன் பார்க்கவில்லை. காரணம்- சிறு வயதிலிருந்தே அவள் மிகச்சிறந்த ஒரு நடிகையாகவும் இருந்தாள். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு இளம் பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டு அவள் எல்லோரையும் கவர்ந்து கொண்டிருந்தாள்.

"இவளுக்கு எப்பவும் சிரிப்புத்தான்..."

அவளைப் பார்த்து எல்லோரும் சொன்னார்கள். அழுகை என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை அவள் எப்போதோ புரிந்து கொண்டிருந்தாள். அவள் தந்தையும் தாயும் எந்த நேரம் பார்த்தாலும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். சண்டையின் முடிவில் தன்னுடைய தாய் அழுவதைப் பார்த்து என்னவோ போலாகிவிடுவார் அவள் தந்தை.

மூக்கு சிவந்து துடித்துக் கொண்டிருக்கும் உதடுகளுடன் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்கும் தன்னுடைய தாயைப் பார்த்தவாறு அவள் தன் மனதிற்குள் நினைத்தாள்- இனி எந்தக் காலத்திலும் அழக்கூடாது என்று. அழுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதே உண்மை.

வீட்டிலிருந்த சூழ்நிலைகளும் வாழ்க்கையில் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருந்த தோல்விகளும் அவளைப் பாடாய்ப்படுத்தின. ஆனால், மற்ற மனிதர்களின் முன்னால் அவள் பிரகாசிக்கும் கண்களுடன் நின்று கொண்டு புன்னகை செய்வாள்.

திருமணம் முடித்து வீட்டைவிட்டுப் புறப்பட்டபோது, அவள் சிறிது கூட அழவில்லை. ஆனால், எல்லோரும் சொன்னார்கள்: "அப்பாவையும், அம்மாவையும் விட்டுப் பிரிஞ்சு போறப்போ, மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கும். என்ன இருந்தாலும் அவள் செல்லமா வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணாச்சே!"

அந்த நேரத்தில் சிரித்தால் அந்தச் சூழ்நிலைக்கு நன்றாக இருக்காது என்ற காரணத்திற்காக அவள் அப்போது சிரிக்காமல் இருந்தாள். அவள் தந்தை அவளுடைய கண்களைப் பார்க்காமல் சொன்னார்: "அடிக்கொருதரம் கடிதம் எழுதணும்."

ஒருமுறை கூட அந்த வீட்டில்தான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்ற உண்மை அவள் சொல்லாமலே அவளுடைய தந்தைக்கு நன்றாகவே தெரியும். அந்த வீட்டில் அன்பு என்ற ஒன்று இருந்ததா என்ன? எப்போது பார்த்தாலும் கோபமே வடிவாக இருக்கும் தந்தை, அழுது கொண்டேயிருக்கும் தாய், எந்தவொரு காரணமும் இல்லாமலே சதா நேரமும் சிரித்துக் கொண்டிருக்கும் மகள். அவர்களுக்கு மத்தியில் அன்பைவிட பலமாக மற்றொன்றிருந்தது. அது அவர்களின் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளும் அறிவு. அங்கு கவலை என்ற ஒன்றைத் தவிர, மாறுபட்ட ஒரு சூழ்நிலை இருந்ததே இல்லையெனினும், மற்ற மனிதர்களுக்கு முன்னால் அவர்கள் மூன்று பேரும் ஒருவரோடொருவர் மிகவும் பாசத்துடன் இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள்.

"மகளைப் பார்க்காம ஒரு நிமிடம் கூட இருக்கக்கூடாது."

ஆட்கள் கூறுவார்கள். ஆட்கள் நிறைய கூடும் விருந்துகளிலும், ஏதாவது திருவிழாக்களிலும் அவள் தந்தை அடிக்கொருதரம் அவளை அழைத்துக்கொண்டே இருப்பார். அவள் தாய் அவளை விட்டு சற்று கூட விலகிச் செல்ல மாட்டாள். அவளுக்கு அருகிலேயே எப்போதும் தான் இருப்பது மாதிரி அவள் பார்த்துக்கொள்வாள். அவள் அவர்கள் இரண்டு பேரையும் விட்டு தனியே போய்விட்டால், எங்கே அங்கிருக்கும் மற்றவரிடம் அந்த வீட்டில் நடக்கும் ரகசியங்களைப் பற்றி அவள் சொல்லிவிடுவாளோ என்ற பயம் அவர்களுக்கு. அப்படி அவள் ஏதேனும் சொல்லிவிட்டால் அதற்குப்பிறகு மற்றவர்களின் முன்னால் அவர்கள் இரண்டுபேரும் தலையை உயர்த்திக்கொண்டு நடக்கமுடியாத சூழ்நிலை உண்டாகிவிடுமே! அதை நன்கு புரிந்து கொண்டதால்தான் கூடுமானவரை அவர்கள் அவளை வெளியே விடாமலே வளர்த்தார்கள்.

திருமணம் என்ற ஒன்றின் மீது நம்பிக்கை இருந்த காரணத்துக்காக அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை. எப்படியாவது அந்த வீட்டை விட்டும், அந்த வீட்டில் யாருக்குமே தெரியாமல் மறைந்திருக்கும் மகிழ்ச்சியறற சூழ்நிலையிலிருந்தும் தான் தப்பிக்க வேண்டும் என்ற ஒரே ஆசைதான் அவள் மனதில் அப்போது இருந்தது. அன்பு என்ற ஒன்றை வாழக்கையில் இதுவரை அனுபவித்திராத அவள் அதை எதிர்பார்த்து, திருமண வலைக்குள் போய் விழுந்தாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel