
"அப்படி என்ன சுவாரசியமான விஷயம்? நான் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமா?"
அவளுக்கு தலைவலி வருவதைப் போல இருந்தது. மதிய நேரத்தில் ஓய்வு எடுக்காமல் இருக்கும் நாட்களில் அவளுக்கு இந்த மாதிரி தொந்தரவுகள் வருவதுண்டு. இருந்தாலும் மதிய நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவளால் பாஸ்கரனைப் பார்க்க முடியாது. மதியம் மூன்று மணி ஆவதற்கு முன்பு அவள் அவனைப் பார்ப்பதற்காகச் செல்வாள். அவர்களின் வயதுக்கேற்றபடி அவர்களின் சந்திப்பு இருக்காது. அவள் தான் ஒரு திருமணமான பெண் என்பதை மறந்து விடுவாள். அவன் தன்னுடைய சூழ்நிலையை மறந்து விடுவான். அவர்கள் இரண்டு பேரும் தங்களை ஏமாற்றிய வாழ்க்கையை பழிக்குப் பழி வாங்குகிற மாதிரி செய்யக்கூடாததையெல்லாம் செய்தார்கள். அவனுடைய கடந்த காலத்திற்கு வறுமையின் சகிக்க முடியாத நாற்றமிருந்தது. அதனால் அவன் அந்த நாட்களை எப்போதும் மறக்கவே முயற்சித்தான்.
"உங்களுடைய சிறுபிள்ளைக் காலத்தைப் பற்றி சொல்லுங்க."
அவள் அவனை வற்புறுத்தினாள். அவன் நாட்கள் ஏடுகளைப் போல திருப்பினான். ஆராய்ந்து பார்த்தான். அதன்மூலம் அழகான ஏதாவதொரு பக்கத்தைக் கண்டுபிடித்து அவளிடம் சொல்லலாமென்று பார்த்தான். ஆனால், அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நிறைய குழந்தைகள் இருந்த வறுமை நிறைந்த ஒரு குடும்பம். கிழிந்து போன பாய்கள்.’ எண்ணெய் கறை படிந்த தலையணைகள், செல்கள்... அழகான விஷயம் ஏதாவது இருக்குமா என்று எவ்வளவு யோசித்தாலும் அவனால் அதைப் பார்க்கவே முடியவில்லை.
அதை மட்டுமே அவன் சொன்னான். அதுவும் ஒரு முழுமையான உண்மை அல்ல. தன் தாய் ஒருமுறை கூட தன்னைத் தூக்கியெடுத்து மடியில் வைத்ததாகவோ ஆசையுடன் கொஞ்சி முத்தமிட்டதாகவோ தனக்கு ஞாபகமில்லை என்றான் அவன். இருந்தாலும், மெலிந்து போன கால்களையும் பெரிய கண்களையும் கொண்டிருந்த ஒரு சிறு குழந்தையாக இருந்தபோது அவன் தன்னுடைய தாயின் அன்பிற்காக ஏங்கினான். தன் தாயின் அருகில் படுத்து தூங்க விரும்பினான். ஆனால், இரவு நேரத்தில் பக்கத்து அறையில் படுத்திருந்த அவனுடைய தாய் அழுது கொண்டிருந்தாள். பணமில்லாத ஒரு மனிதனைத் தன்னுடைய கணவனாகத் தந்த விதியை நினைத்து அதுவும் குறைப்பட்டுக்கொள்ள மட்டுமே அந்தத் தாய்க்கு நேரமிருந்தது.
"என் தாய் ரொம்பவும் அழகா இருப்பாங்க."
அதைச்சொல்லும்போது அவன் கண்கள் நீரால் நிறைந்து விட்டன. தன் தாயைப் பற்றி நினைத்ததால் அல்ல அவனுக்குக் கண்ணீர் வந்தது. தன்னுடைய சிறு வயது காலத்தை நினைத்தே அவன் அழுதான். அன்று அவன் ஆசைப்பட்டது எதுவுமே நடக்கவில்லை. சிறு ரப்பர் பந்து வேண்டும் என்றால் கூட அவனுக்கு அது கிடைக்காது.
"அவனுக்கு ரப்பர் பந்து வேணுமாம்!"- சகோதரிகள் ஆச்சரியம் கலந்த குரலில் கூறுவார்கள். தன் மனதில் இருந்த ஆசையை வெளியே சொன்னது கூட தப்பாகி விட்டதே என்று அந்தச் சிறுவன் அப்போது நினைத்தான்.
அப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இருந்து புறப்பட்டு வந்த அவனும் அவளும் இந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? முதலில் எந்த காரணமும் இல்லை என்பதே உண்மை. அவள் வீட்டிற்கு ஒருமுறை விருந்தினராக வந்தான் அவன். இளமை தாண்டிய வயது, வழுக்கையை நோக்கி போய்க் கொண்டிருந்த நெற்றி, பருமனான உடல், ஈரம் தாங்கிய கண்கள்... அவன் பெண்களைப் பற்றிப் பேசினான். திரைப்படங்களைப் பற்றிப் பேசினான். இந்த மாதிரியான ஆட்களைப் பொதுவாகவே அவளுக்குப் பிடிக்காது. வெறுமனே நடிப்பது என்பதை அவளால் சிறிதுகூட பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களுக்குள் நன்கு அறிமுகமான பிறகு அவள் சொன்னாள்: "நடிக்குறது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காது."
"ஏன் அப்படிச் சொல்ற?"
அவள் சிரித்தாள்.
அவளுடன் பழக்கமான பிறகு தன்னுடைய நிர்வாண உடம்பை ஒரு கண்ணாடியில் பார்த்ததைப்போல் உணர்ந்தான் அவன். எதையும் மறைத்து வைக்கவேண்டிய அவசியமே இல்லை என்பதை அவன் புரிந்து கொண்டான். அதனால் அவன் சொன்னான்: "நான் ஒரு சாதாரண மனிதன்..."
அவள் மீண்டும் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவனை மேலும் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கியது. அப்போது வேறு எதுவும் சொல்லத் தோன்றாததால் அவன் தலையைக் குனிந்து கொண்டு சொன்னான்: "என்னை நீ வெறுத்துட மாட்டியே!"
இப்படித்தான் அவள் அவனை விரும்ப ஆரம்பித்தாள். வருடங்கள் உண்டாக்கிய மாற்றங்கள் மட்டுமல்ல- ஒரு அத்திமரத்தின் இலைகூட அவன் மேல் படாமல் அவள் பார்த்துக் கொண்டாள். அவன் மீண்டும் பெரிய கண்களையும் மெலிந்து போன கால்களையும் கொண்ட சிறு குழந்தையாக மாறினான். ஆனால், தான் தேடிக்கொண்டிருந்த காதலை வாழ்க்கையில் பெற்றாகிவிட்டது என்பதை மட்டும் அவன் புரிந்து கொண்டான்.
"அவளால வர முடியல. குழந்தைக்கு உடம்பு சரியில்ல. காய்ச்சல். எப்போ பார்த்தாலும் அம்மா அம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு அழுதுகிட்டே இருக்கும்."
ஓவியன் உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். அவளின் மனது தன்னுடைய கடந்த காலத்தை நோக்கி, ஒரு இருட்டறையை நோக்கிப் பாய்ந்தோடியது. டாக்டரின் கண் முன்னால் மேஜையின் மேல் சிறிதும் வெட்கமின்றி தான் படுத்துக்கிடந்ததை அவள் இப்போது நினைத்துப் பார்த்தாள்.
"என்ன சிரிக்கிற?"
தன் கணவன் தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான் என்பதே அப்போதுதான் அவளின் ஞாபகத்தில் வந்தது. அவள் சொன்னாள்: "சும்மா..."
"நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்!"
"ம்..."
அவன் எதையாவது பார்த்திருப்பானோ? அவளுடைய மேஜை டிராயருக்குள் கிடக்கும் கடிதங்கள், புகைப்படங்கள்- இவற்றில் எதையாவது பார்த்திருப்பானோ? அவள் கண்களை மூடியவாறு மரத்தின் மேல் தலையைச் சாய்த்துக் கொண்டாள். தோட்டத்தின் இன்னொரு பக்கத்தில் தூணுள்ள ஒரு சதுர விளக்கிற்குக் கீழே மூன்று நான்கு ஆட்கள் வட்டமாக நின்று கொண்டு தாழ்ந்த குரலில் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.சுவரையொட்டியிருந்த செம்பருத்திச் செடிகள் மிகவும் கறுத்துப்போய் காணப்பட்டன. ஆகாயத்தில் இங்குமங்குமாய் சில நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அவள் அந்த நட்சத்திரங்களுக்கேற்ற வர்ணங்களை யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால், களைப்படைந்து போன ஒரு குதிரையைப் போல அவள் மனம் இருந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. கறுப்பு, வெள்ளை, கறுப்பு, வெள்ளை...
"நமக்கென்ன ஆச்சு?"- அவளின் கணவன் அவளுக்கு மிகவும் அருகில் அமர்ந்து கொண்டு கேட்டான்.
"ம்...?"
"நம்ம வாழ்க்கை ஒரே குழப்பமா இருக்கு..."
"என் வாழ்க்கையா?"
"இல்ல... நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையும்."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook