Lekha Books

A+ A A-

கவிதை எழுதும் பெண் - Page 3

kavithai ezhudum pen

ஆகாயத்தின் கீழ்ப்பகுதியில் இருந்த சிவப்பு நிறத்துடன் ஒன்றிரண்டு கறுப்புநிறக் கோடுகளும் இப்போது சேர்ந்திருந்தன. கடலுக்கு மேலே உயரத்தில் சில பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

"கடலோட அழகை ரசிக்க முடியாத நிலையில நான் இருக்கேன்."

அப்படிச் சொன்ன பிறகுதான் அவளுக்கே தோன்றியது, தான் அதைச் சொல்லியிருக்க வேண்டியது இல்லை என்று. காரணம்- அவர்கள் பேசுவதைக் கேட்பதற்காக ஒன்றிரண்டு பேர் அருகில் வந்து நின்றார்கள்.

"என்ன காரணம்?"

அப்படிப்பட்ட அழகான எதையாவது பார்க்குறப்போ நம் மனசுல மகிழ்ச்சி உண்டாகுதுன்னா, அதற்கு நாம கள்ளங்கபடமில்லாத வெள்ளை மனசோட இருக்கணும். அப்படிப்பட்ட எதையாவது பார்க்குறப்போ, நான் அதைப்பற்றிய பல விஷயங்களையும் மனசுல அலச ஆரம்பிச்சுடுறேன்."

அதைக் கேட்டு அவன் சிரித்தான். அவள் தோள் மீது கையைப் போட்டு அவள் கணவன் சொன்னான்: "நான் கொடுத்து வச்சவன்..."

பொதுவாகவே அவனுக்கு இந்த மாதிரி விருந்துகள் பிடிக்காது. பெண்கள் குறைவாகவே வந்திருந்தார்கள். அப்படி வந்திருந்தவர்களில் எல்லாப் பெண்களும் மிகவும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தார்கள். மின்னாமல் இருப்பது பொன்னல்ல என்று நினைக்கக் கூடிய அவனுக்கு இந்த வகைப்பட்ட பெண்களை அழகிகளாக நினைக்கவும் முடியவில்லை. பளபளவென்று பிரகாசித்துக் கொண்டிருப்பவர்களைத்தான் அவனுக்குப் பிடிக்கும். எப்போதும் கிளிகளைப் போல கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கொண்டும் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டும் ஒய்யாரமாக ஆட்டி ஆட்டி நடந்து கொண்டும் ஆண்களுடன் நெருங்கிப் பழகிக் கொண்டும் இருக்கும் பெண்களைத்தான் அவனுக்குப் பிடிக்கும். ஆனால், அறிவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்தவகைக் கூட்டத்தில் அவன் விரும்பக்கூடிய ரகத்தைச் சேர்ந்த பெண்களைப் பார்க்கவே முடியாது. ஒருநாள் ஒரு ஓவியனின் மனைவி அங்கு வந்திருந்தாள். பருந்துக் கூட்டத்திற்கு மத்தியில் பறந்து கொண்டிருக்கும் பட்டாம் பூச்சியைப் போல் அவள் இருந்தாள். அவள் தன்னுடைய உதடுகளில் சிவப்புச்சாயம் பூசியிருந்தாள். அவளின் கைகள் தோளில் தொங்கிக் கொண்டிருந்த தோள் பையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தன. அவன் அவளருகில் சென்று அமர்ந்தான். சிறிது நேரத்தில் அவள் சிரிக்கத் தொடங்கினாள். காரணம்- அவன் பேசிய மொழி அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது. அங்கிருந்த மற்றவர்களைப் போல உலகத்தின் முடிவைப் பற்றியும் கட்டுப்பாடு என்ற ஒன்றில்லாத கவிதைகளைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் அவன் பேசவில்லை. அவன் அவளுடைய பிரகாசித்துக் கொண்டிருக்கும் அழகைப் பார்த்து ஆனந்த அனுபவம் அடைந்தான். அவளே வெட்கப்படும்படியான சில நகைச்சுவையான விஷயங்களைச் சொல்லி அவளை அவன் சிரிக்க வைத்தான்.

இரவில் அவனுடைய மனைவி கேட்டாள்: "அந்த சின்னப் பொண்ணை உங்களுக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சுன்னு நினைக்கிறேன். எவ்வளவு நேரமா ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து பேசிக்கிட்டே இருந்தீங்க!"

அதைக் கேட்டு அவனுக்குக் கோபம் வந்தது. "பெண்ணுன்னா பெண்ணைப் போல நடக்கணும். அப்படி இருக்குறதுதான் எனக்குப் பிடிக்கும்..." என்றான் அவன்.

அது அவளை நோக்கி அவன் எறிந்த ஒரு கல் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவள் சிரித்தாள்.

"என்னைப் பார்க்குறப்போ நான் ஒரு பெண் அல்ல அப்படின்ற மாதிரி தெரியுதா என்ன?"

இல்லை. அவள் ஒரு முழுமையான பெண்தான். அவளின் உடல் நல்ல சதைப்பிடிப்புடன் அளவான வளைவுகளுடன் இருந்தது. அவள் நடந்து செல்லும்போது அறையில் அமர்ந்திருக்கும் திருமணமான ஆண்கள் ஒன்று தலையை வேறு பக்கம் திருப்பிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் தலையைக் குனிந்து கொள்வார்கள். திருமணமாகாத இளைஞர்கள் அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு அமர்ந்திருப்பார்கள். இருந்தாலும் அவளை ஒரு முழுமையான பெண்ணாக மனதில் நினைத்துப் பார்க்க அவனால் முடியவில்லை. அதற்குக் காரணம் இப்படிப்பட்ட ஒரு பெண்ணை அவன் தன் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. சில நேரங்களில் அவளைத் தனக்கு நெருக்கமாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் அவன் கூறுவான்: "இங்கே பாரு... நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நினைக்கிறேன்."

"ம்... என்ன? என்று அவள் கேட்டதுதான் தாமதம், அவள் பார்வையின் கூர்மையில் அவன் சுருங்கிப்போய் நின்றிருப்பான். அவள் தன் கண்களில் மை எதுவும் தீட்டவில்லை. தன் தலைமுடியைக் கூட ஒழுங்காக வாரி இருக்கமாட்டாள். இருந்தாலும் அவளைப் பார்க்கும் போது, ஒரு பேரழகைப் பார்க்கிறோம் என்ற உணர்வு அவனிடம் உண்டாகும். அவன் எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றிருப்பான்.

'அவள் எப்படி இப்படி ஆனாள்?'- அவன் பல நேரங்களில் தன்னிடம் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. காதலைப் பற்றி அவனிடம் பேசிக்கொண்டிருப்பாள். அதை அப்படியே நிறுத்திவிட்டாள். பக்தியுடன் அவனையே அவள் பார்த்துக் கொண்டிருப்பாள். அதுவும் இப்போது முழுவதுமாக நின்று விட்டது. அவன் நகைச்சுவையாக என்ன சொன்னாலும் அவள் விழுந்து விழுந்து சிரிப்பாள். அதுவும் இப்போது நின்று விட்டது. அவளுக்கு என்ன நேர்ந்து விட்டது?

"நீ ஏன் சிரிக்கவே மாட்டேங்குற?"

"ஒண்ணு சேர்ந்து வாழறப்போ, தேவையில்லாத நாடகங்கள் எதற்கு?"

அவர்கள் இரண்டு பேருக்குமிடையே எங்கு தவறு நேர்ந்தது? இரண்டு பேரும் இந்த விஷயத்தைப் பற்றி பல நேரங்களில் தனியே அமர்ந்து சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள். சில நேரங்களில் கட்டிலில் ஒன்றாகப் படுத்திருக்கும்போது அவன் அவளுடைய கைவிரல்களை இறுகப் பிடிப்பான். அப்போது அவன் கூறுவான்:

"என்னால உன்னைப் புரிஞ்சிக்கவே முடியல..."

அவள் தன் கண்களை மூடித் தூங்குவதைப் போல பாசாங்கு செய்வாள். ஆனால், அவள் தன் இதயத்தைக் கடிவாளம் போட்டுக் கட்டிக்கொண்டு, தனக்கு வாழ்க்கையில் நடந்த ஏமாற்றங்களை அப்போது நினைத்துக் கொண்டிருப்பாள். அவன் மற்ற பெண்களுடன் பழகினான். அவளுக்கு முன்னால் பல நேரங்களில் சில பெண்களின் கண்களையே ஒரு காதலனைப்போல உற்றுப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பான். அவர்களின் கைவிரல்களை அப்போது அவன் தொடுவதுகூட உண்டு. காதல் என்பது முட்டாள்தனமானது என்பதை அவளுக்கு அவன் காட்டினான். இப்படி வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு ஏமாற்றமும் அவளை மேலும் மேலும் கடினமானவளாக மாற்றியது. சிறு வயது பெண்ணாக இருந்தபோது, அழகின் மீது நாட்டம் கொண்டாள். காதலுக்கான ஒரு நுழைவாயிலாக அழகைக் கருதினாள். அப்படி அவள் நினைத்ததற்குக் காரணம்- அழகாக இருக்கும் ஒரு இளம்பெண் அவளின் நெருங்கிய தோழியாக இருந்தாள். அவர்கள் இரண்டு பேரும் ஒரு இளைஞனை விரும்பினார்கள். அவளின் தோழிக்கு நல்ல அழகான முகம். இவளோ எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாத நல்ல ஒரு குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel