Lekha Books

A+ A A-

ஒட்டகம்

Ottagam

ல்லாரும் அவனை ஒட்டகம் என்றுதான் அழைப்பார்கள். நீண்டு மெலிந்த இரும்புத் தூண்களைப்போல இருக்கும் கால்கள், கடப்பாரைகளைப் போன்ற கைகள், நீளமான கழுத்தைக் கொண்ட சீனா பெட்டியைப் போன்ற நெஞ்சு... இந்த உறுப்புகளுக்கு மேலே காய்ந்த தேங்காயைப்போல ஒரு தலை! அதுதான் ஒட்டகம்.

நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பீப்பாய் வண்டியை இழுத்துக் கொண்டு ஒட்டகம் காலை நேரத்திலும் மாலை வேலையிலும் தெருவில் போவதே ஒரு கண் கொள்ளாக் காட்சிதான். நான்கு சிறிய சக்கரங்களைக் கொண்ட அந்த பீப்பாய் வண்டி, ஒரு வினோதமான சத்தத்தை எழுப்பியவாறு பிரசவமான பன்றியைப்போல நகர்ந்து கொண்டிருக்கும்போது, அதைப் பின்னாலிருந்து தள்ளுகிறோம் என்ற பெயரில் ஐந்தாறு சிறுவர்களைப் பார்க்கலாம். சிறுவர்களில் சிலர் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு சில குறும்புத்தனமான சேட்டைகள் செய்து, முணுமுணுத்தவாறு நடந்து கொண்டிருப்பார்கள். சிலர் கழுத்தைத் திருப்பி தெருவில் நடக்கும் ஏதாவது காட்சிகளைப் பார்த்து பல்லைக் காட்டுவார்கள். வண்டியைத் தொடாமல் அதை விரல்களால் தட்டியவாறு அவர்கள் எல்லாரும் பின்னால் நடப்பார்கள். ஒட்டகத்திற்கு அது எதுவுமே தெரியாது. அவன் மட்டும் முன்னால் தனியே, கைகள் இரண்டையும் வண்டியின் இரும்புக் கைப்பிடியில் வைத்துக்கொண்டு, உதடுகளை பலமாக இறுக்கியவாறு, முகத்தை உயர்த்தி, முன்னால் சாய்ந்தவாறு வண்டியை இழுத்து நடந்து கொண்டிருப்பான். அடிக்கொருதரம் கீழுதடை நீட்டியவாறு மூக்கை ஒரு மாதிரி சுளித்துக் கொண்டு, தெருவின் இரண்டு பக்கங்களையும் அவன் பார்ப்பான். அந்த வினோதமான பார்வைதான் அவனுக்கு ஒட்டகம் என்ற பெயரைச் சம்பாதித்துத் தந்தது.

ஹோட்டலில் சாப்பிடும் மேஜைமீது விரிக்கப்பட்ட பழைய நாற்றமெடுத்த ஒரு துண்டுத் துணியைத்தான் அவன்

உடுத்தியிருக்கிறான். அது இல்லாமல் வலது கணுக்காலுக்கு நடுவில் ஒரு துணியையும் எந்நேரமும் அவன் சுற்றியிருப்பதைப் பார்க்கலாம். பல வருடங்களுக்கு முன்னால் உண்டான ஒரு காயத்தின் ஞாபகம் அது. காயம் முற்றிலும் குணமாகி அதற்குமேல் ரோமம் முளைத்துவிட்ட பிறகும், அந்த துணியை அவன் அந்த இடத்தில் இன்னும் கட்டிக்கொண்டுதான் இருக்கிறான். அந்தக் கட்டு அவிழ்த்துவிட்டால், தான் அந்த நிமிடமே கீழே விழுந்து எங்கே இறந்து விடுவோமோ என்று அவன் மனதில் நினைத்திருக்கலாம். காலில் ஒரு அலங்காரம் என்பதைப்போல அவன் அந்தத் துணியுடன் நடந்துகொண்டிருப்பான்.

ஹோட்டலுக்குப் பின்னாலிருக்கும் விறகு போடப்பட்டிருக்கும் அறைக்குப் பக்கத்தில், எச்சில் தொட்டிக்கு அருகில்தான் அவன் ஓய்வாக இருக்கும்போது அமர்ந்திருப்பான். மாலை நேரம் வேலை முடிந்த பிறகு ஒரு துண்டு சுருட்டைப் புகைத்தவாறு அவன் அங்கு கழுத்தை நீட்டிக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பான். அவனுடைய உதவியாளர்களான தெருச் சிறுவர்கள் அவனுடைய முதுகிலும் தோளிலும் விழுந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவனுக்கு அது ஒரு பொழுதுபோக்கு மாதிரி. சிறிது நேரம் அப்படி உட்கார்ந்து விட்டு, திடீரென்று அவன் வேகமாக அந்த இடத்தை விட்டு எழுந்து நிற்பான். சிறுவர்கள் நாய்க்குட்டிகளைப்போல கீழே விழுவார்கள். அந்த தமாஷான காட்சியைப் பார்த்து அவன் கழுதை கத்தும் குரலில் விழுந்து விழுந்து சிரிப்பான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel