Lekha Books

A+ A A-

ஒட்டகம் - Page 6

Ottagam

போலீஸ்காரரைப் பார்த்ததும் ஒட்டகம் பீப்பாய் வண்டியைப் போட்டு விட்டு ஓட ஆரம்பித்தான்.

எங்கு ஓடலாம் என்று அவன் யோசித்தான். ஹோட்டலைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர, வேறு எந்த இடத்தையும் அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. குழந்தையைக் கையில் இறுக்கியவாறு அவன் நேராக ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

அங்கும் போலீஸ்காரரின் தலை தெரிந்ததும், அவன் பதைபதைப்புடன் ஹோட்டலில் மாடிப் பகுதிக்கு வேகமாக ஏறினான். அந்தப் பழைய பத்தாம் எண் அறை திறந்து கிடந்தது. அவன் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.

ஹோட்டல் நிர்வாகியும் கொஞ்சம் ஆட்களும் மாதுவும் போலீஸ்காரரும் அறைக்கு வெளியே கூட்டமாக நின்றிருந்தார்கள்.

"டேய், கதவைத் திற'' நிர்வாகி கட்டளையிட்டார்.

பதிலில்லை.

கதவைத் தட்டியவாறு நிர்வாகி மீண்டும் அழைத்தார்: "மரியாதையா கதவைத் திறக்குறியா இல்லியா?''

"குழந்தையை நான் தர மாட்டேன்'' ஒட்டகம் உள்ளேயிருந்தவாறு அழும் குரலில் சொன்னான்.

"அதைப் பிறகு பார்ப்போம். நீ கதவைத் திறந்து வெளியே வா.''

"இந்தக் குழந்தை எனக்கு வேணும்'' உள்ளேயிருந்து மீண்டும் அழுகைக் குரல்.

"முதல்ல உன்னை கதவை திறக்கச் சொன்னேன்'' -நிர்வாகி பலமாக கதவைத் தட்டினார்.

"தாய் எனக்கு கிடைக்கல. குழந்தை எனக்கு வேணும்'' ஒட்டகம் கெஞ்சுகிற குரலில் சொன்னான்.

"அவன் என்ன சொல்றான்? இது யாரோட குழந்தை?'' போலீஸ்காரர் கேட்டார்.

"இது இவளோட குழந்தை'' நிர்வாகி அலட்சியமாக சொன்னார்.

"அது புரியுது. குழந்தையோட தகப்பன்?''

போலீஸ்காரரின் கேள்வியைப் பொருட்படுத்தாமல் நிர்வாகி உரத்த குரலில் உள்ளே அழைத்துக் கேட்டார். "நீ குழந்தையை என்ன செய்ய போறே?''

"நான் தனியா அதை வளர்ப்பேன். இல்லாட்டி விற்பேன். இல்லாட்டி கொல்லுவேன். இது என் குழந்தை'' ஒட்டகம் பதில் சொன்னான்.

"நீ அந்த அளவுக்கு ஆளாயிட்டியா? நீ கதவைத் திறக்கலைன்னா, கதவை உடைச்சு உள்ளே வந்து உன்னை நான் கொல்லுவேன்.''

"இனிமேல் கதவைத் தட்டினா, நான் குழந்தையை ஜன்னல் வழியா கீழே வீசி எறிஞ்சிடுவேன். ஆமா...'' ஒட்டகம் ஒரு பயங்கரமான குரலால் பயமுறுத்தினான்.

குழந்தையின் அழுகைச் சத்தம் உள்ளே கேட்டது.

"அய்யோ! அந்த மிருகம் குழந்தையைக் கொன்னுடும்'' மாது அலறினாள்.

"குழந்தை... பாவோ... பாவோ...'' உள்ளே ஒட்டகத்தின் தாலாட்டுப் பாடல் கேட்டது.

நிர்வாகி இக்கட்டான நிலையில் தவித்துக்கொண்டிருந்தார். ஆட்களில் சிலர் அங்கு இப்போது என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் பதைபதைத்துப் போய் நின்றிருந்தனர். சிலருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கக் கூடிய விஷயமாக இருந்தது. "இது சிவில்தான். கிரிமினல் இல்ல. நான் இதுல ஒண்ணும் செய்யிறதுக்கு இல்ல" என்ற எண்ணத்துடன் போலீஸ்காரர் கீழே இறங்கிச் செல்ல முயன்றபோது, நிர்வாகி அவரைத் தடுத்து நிறுத்தினார்.

"இங்கே ஒரு கொலைச் செயல் நடக்கப் போற நிலைமையில் இருக்குறப்போ, அதைப் பற்றி கவலையே படாம நீங்க போனா எப்படி?'' நிர்வாகி கடுமையான குரலில் கேட்டார்.

"அது நடந்த பிறகு என்னை அழைச்சா போதும். அதுவரை எனக்கு அதுல என்ன வேலை இருக்கு?'' என்று சொன்ன போலீஸ்காரர் மிடுக்காக படிகளில் இறங்கி நடந்தார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel