ஒட்டகம் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6539
நிர்வாகி மேஜையைத் திறந்து அதில் இருந்த ஒரு பெரிய காலி சிகரெட் டின்னில் அடுக்கி வைக்கப்பட்டிருந்து ரூபாய் நோட்டுகளிலிருந்து மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து மேஜைமீது வைத்தார்.
"உன் சம்பளப்பணம் இங்கே இருக்கு. இது பத்தலைன்னா, என் அன்பளிப்பா கொஞ்சம் பணத்தையும் நான் தர்றேன். என்ன, உனக்கு சம்மதம்தானா?''
ஒட்டகம் பதிலெதுவும் கூறாமல் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தான்.
பெண், திருமணம் போன்ற விஷயங்கள் தனக்கு சம்பந்தமில்லாதவை என்றோ, தனக்கு அவற்றை வாழ்க்கையில் அடைய எந்தவிதமான உரிமையும் இல்லை என்றோதான் அதுவரை அவன் நினைத்திருந்தான். நிர்வாகியின் பேச்சு மரத்துப்போயிருந்த அவனுடைய நரம்புகளில் சில உணர்ச்சி ஓட்டங்களை உண்டாக்கியது. ஒட்டகம் மூக்கை ஒரு மாதிரி சுளித்து வைத்துக்கொண்டு சிரித்தவாறு அறையின் இரு பக்கங்களிலும் முகர்ந்து பார்த்தான்.
"சீக்கிரமா பதில் சொல்லு. உனக்கு சம்மதம்தானே?'' -நிர்வாகி அதிகார தோரணையில் சற்று குரலை உயர்த்திக் கேட்டார்.
ஒட்டகம் பற்களை இளித்துக் கொண்டு தலையை ஆட்டினான்.
"சரி... அப்போ நீ கிளம்பு. நாளைக்கு ராத்திரி உனக்கு கல்யாணம். நாளைக்கு நீ தண்ணி கொண்டு வர வேண்டாம். விறகு பிளக்கவும் வேண்டாம்.''
ஒட்டகம் மெதுவாகப் படிகளில் இறங்கி, ஹோட்டலின் பின்பக்கம் வந்தான். சிறிது நேரம் சென்றதும் அவன் பிச்சையெடுக்கும் சிறுவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களின் காதுகளில் மெதுவான குரலில் சொன்னான்: "நாளைக்கு எனக்கு கல்யாணம்.''
முதலில் அவர்கள் யாரும் அதை நம்பவில்லை. "என்ன கல்யாணம்? சுன்னத் கல்யாணமா?'' -அவர்கள் அவனைக் கிண்டல் பண்ணினார்கள்.
அன்று மாலை ஹோட்டல் நிர்வாகி ஒட்டகத்தை அழைத்து, அவனிடம் ஒரு புதிய சட்டையையும் இரட்டை மடிப்பு வேஷ்டியையும் கொடுத்தார்.
புது மாப்பிள்ளை அணியக்கூடிய புத்தாடைகளைப் பார்த்த பிறகுதான் ஒட்டகம் கூறியது. உண்மை என்ற எண்ணம் சிறுவர்களுக்கு வந்தது.
"பொண்ணு யாரு?'' அவர்கள் ஒட்டகத்தின் முதுகில் சவாரி செய்தவாறு கேட்டார்கள்.
"நாளைக்கு தெரிஞ்சிக்கங்க...'' ஒட்டகம் மிடுக்கான குரலில் சொன்னான்.
மறுநாள் இரவு வந்தது. ஹோட்டலின் ஆரவாரமெல்லாம் ஓய்ந்து, அமைதியானது.
பத்தாம் எண் அறையில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறைப்படி செய்யப்பட்டிருந்தன.
புத்தாடைகள் அணிந்து சற்று பதைபதைப்பு இருக்க, ஒட்டகம் அறைக்குள் வந்தான். அவனுடைய கணுக்காலில் துணி அப்போதும் கட்டப்பட்டிருந்தது.
மணப்பெண் கீழே விரிக்கப்பட்டிருந்த புல்லால் ஆன பாயில் புத்தாடைகள் அணிந்து உட்கார்ந்திருந்தாள். ஒட்டகம் அவளையே பார்த்தான். தவிட்டு நிறத்தில் தடித்து கொழுத்துப் போய் காணப்பட்ட
அந்தப் பெண் அந்த ஹோட்டலில் சமையல் வேலை செய்யும் மாதுதான் என்பதைப் பார்த்தவுடன் ஒட்டகம் புரிந்து கொண்டான். மிருகத்தனமான சந்தோஷம் உண்டானதை அடக்கிக் கொண்டு அவன் அவளையே கண்களை அகல விரித்துக் கொண்டு பார்த்தான்.
நிர்வாகி, அவரின் சில நண்பர்கள் ஆகியோர் முன்னிலையிலும், அவர்களின் உதவியுடனும் திருமணச் சடங்குகள் அனைத்தும் நடந்தன.
சிறுவர்களை அங்கு யாரும் நுழைய அனுமதிக்கவில்லை. அவர்கள் விறகுகள் இருக்கும் அறைக்கு மேலே ஏறி நின்று எல்லாவற்றையும் பார்த்தார்கள்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,