Lekha Books

A+ A A-

நீலாம்பரி - Page 2

neelambari

மாமிசம் சாப்பிடுற வாய் கீர்த்தனைகளுக்கு சரியா வரவே வராது" ஞானம் சொன்னாள்.

அவள் அப்படிச் சொன்ன பிறகு சைவம் மட்டுமே சாப்பிடக்கூடிய பெண்ணாக சுபத்ரா மாறினாள். மகளின் உணவு முறையில் உண்டான திடீர் மாற்றத்தைப் பார்த்து அவளுடைய தாய், தந்தை மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். வறுத்த மீன் இல்லாமல் சாப்பாடு சாப்பிட மறுக்கும் சுபத்ராவா தயிர் சாதமும் ஊறுகாயும் விரும்பிச் சாப்பிடுவது என்று அவர்கள் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தார்கள்.

ஞானத்தின் பிடிவாதம் காரணமாக சுபத்ரா ஃப்ராக்குகள் அணிவதை நிறுத்தினாள். பாவாடையும் தாவணியும் மட்டும் அணிய ஆரம்பித்தாள். முடியை நீளமாக வளர்க்கத் தொடங்கினாள். முடியில் மாலை நேரங்களில் முல்லைப் பூமாலை சூட ஆரம்பித்தாள். அவளுடைய நாக்கில் எந்த நேரமாக இருந்தாலும் ராகங்கள் புறப்பட்டு வந்த வண்ணம் இருந்தன.

இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்பொழுது ஒருநாள் ராமானுஜம் சாஸ்திரிகள் தன்னுடைய வயதான தாயை அழைத்துக் கொண்டு தன் மருத்துவமனைக்குச் சென்றார். அவரின் தாய்க்கு கண்ணில் சதை வளர்ந்திருந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அவளை அவர் சுபத்ராவின் தந்தையிடம் அழைத்து வந்திருந்தார்.

"நான் சுபத்ராவுக்கு சங்கீதம் கற்றுத்தருகிற சாஸ்திரிகள்..."- அவர் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பாகவதர் என்றால் மிகவும் வயதான கிழவராக இருப்பார் என்றுதான் இதுவரை சுபத்ராவின் தந்தை நினைத்திருந்தார். புராண இதிகாசங்களிலிருந்து எழுந்துவந்த ஒரு ஆணழகன் அவர் என்பதைப் பார்த்தவுடன் சுபத்ராவின் தந்தை புரிந்து கொண்டார். இந்த அழகான பிராமண இளைஞனின் மடத்திற்கா தன்னுடைய ஒரே மகள் தினமும் மாலை நேரங்களில் போய்க் கொண்டிருக்கிறாள் என்பதை அவர் யோசிக்க ஆரம்பித்தார்.

தன் மகளிடம் உண்டாகிக் கொண்டிருக்கும் மாற்றங்கள் ஒவ்வொன்றாக அப்போது அவருடைய மனதில் வலம் வந்தன. பிடிவாதம் பிடித்து மூக்கு குத்திக் கொண்டது, மாலை நேரங்களில் பூமாலைகள் சூடியது, புதிய முறையில் ஆடைகள் அணிந்தது, சைவ உணவுகள் சாப்பிட ஆரம்பித்தது... இவை ஒவ்வொன்றும் தன் மகள் தன்னுடைய குருநாதரைக் காதலித்ததால் உண்டான விளைவுகள் என்று அந்தத் தந்தை நினைத்தார். எப்படி அவர்மீது அவள் ஈர்க்கப்படாமல் இருப்பாள்? பதினாறு வயதே ஆன ஒன்றுமே தெரியாத அந்தக் கள்ளங்கபடமில்லாத பெண், குருநாதர் மேல் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கலாம். அவர் அவளை வசீகரித்திருக்கலாம்.

சுபத்ராவின் தந்தை சொன்னார்: "சுபத்ரா, நாளை முதல் பாட்டு படிக்க வரமாட்டா. மாலை நேரங்கள்ல வீட்டுக்குத் திரும்பி வர்றப்போ எங்கே அவளை நாய் கடிச்சிடுமோன்னு நினைச்சு எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது.”

தான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களின் வீட்டிற்கே வந்து சுபத்ராவிற்கு சங்கீதம் கற்றுத் தருவதாக சாஸ்திரிகள் பவ்யமான குரலில் சொன்னார்.

"வேண்டாம்... சுபத்ராவை சென்னைக்குக் கொண்டுபோயி கல்லூரியில சேர்க்கலாம்னு நான் இருக்கேன்!"- சுபத்ராவின் தந்தை சொன்னார்.

அடுத்த சில நாட்களிலேயே சுபத்ரா சென்னைக்கு வந்து விட்டாள். காதல்வயப்பட்ட மனதுடன் விரக்தியடைந்து அவளின் நாட்கள் அங்கு ஓடிக்கொண்டிருந்தன. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து சொந்த முயற்சியால் டாக்டராகி வீட்டிற்குத் திரும்பி வந்தாள்.

அவளுடைய திருமணத்தை அந்த வருடத்திற்குள்ளேயே நடத்த அவளின் தந்தை தீர்மானித்தார். அவர் தேர்ந்தெடுத்த மணமகன் பெரிய பணக்காரர். நிறைய படித்தவர். அவள் அதற்கு மறுப்பு சொல்லவில்லை.

சாஸ்திரிகள் அப்போது தன்னுடைய மருமகளான ஞானத்தைத் திருமணம் செய்துவிட்டிருந்தார். ஞானம் பிறந்தது முதல் அவளுக்கும் சாஸ்திரிக்குமிடையேதான் திருமணம் என்று அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்தார்கள். திருமணமான ஞானம் புதிய பட்டுச்சேலை அணிந்து முகத்தில் மஞ்சள் தேய்த்து சுபத்ராவைக் காண வந்தாள். அவள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். சாஸ்திரிகளுக்குத் தன்மீது இருக்கும் பிரியத்தைப் பற்றி ஞானம் குசலம் சொல்லத் தொடங்கியபோது, சுபத்ரா அவளின் வாயைப் பொத்தினாள்.

"இந்த ரகசியங்களையெல்லாம் தெரிஞ்சுக்க எனக்கு விருப்பமில்லை"- அவள் ஞானத்திடம்` சொன்னாள்.

"உனக்கு என்னைப் பார்த்து பொறமை வருது இல்லையா? உன் மனசுல அவரைச் சொந்தமாக ஆக்கணும்னு விருப்பம் இருந்தது எனக்குத் தெரியும்."

"ஏன் இப்படியெல்லாம் முட்டாள்தனமா பேசுற? ஒரு சாஸ்திரிகள்கிட்ட ஒரு சிஷ்யைக்கு இருக்கவேண்டிய பக்தியும் மதிப்பும்தான் என்கிட்ட இருந்துச்சு. அதை விட்டுட்டு..." சுபத்ரா சொன்னாள்.

அதைக் கேட்டு ஞானம் விழுந்து விழுந்து சிரித்தாள்.

"உன் பக்தியும் மதிப்பும் என்னன்னு எனக்குத் தெரியும். அவர் உன்னைத் தண்ணீர்ல இருந்து காப்பாத்தினப்போ நீ அவர் உடம்பை இறுகக் கட்டிப்பிடிக்கிறதை நான்தான் பார்த்தேனே! தண்ணியில மூழ்கி சாகுற நிலையில இருக்குற யாரோட கைகளுக்கும் தன்னைக் காப்பாத்தின மனிதனை இறுகப் பிடிக்கிற சக்தி இருக்காது!"- ஞானம் சொன்னாள்.

"தேவையில்லாம ஏதாவது பேசிக்கிட்டு இருக்காதே. எனக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயமாயிடுச்சு"- சுபத்ரா மெதுவான குரலில் சொன்னாள்.

தன்னுடைய படுக்கையறை ரகசியங்கள் ஒவ்வொன்றையும் தான் கூறப்போவதாக ஞானம் சொன்னதுதான் தாமதம், ஒருவகை வெறுப்புடன் சுபத்ரா இருந்த இடத்தைவிட்டு எழுந்து வெளியேறினாள். சாஸ்திரிகளைப் பார்க்கவேண்டுமென்றோ அவரைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டுமென்றோ சுபத்ரா நினைக்கவில்லை.

2

சுபத்ராவின் கணவர் அவளின் அன்பில்லாத நடத்தையை பல நேரங்களிலும் விமரிசித்தார். க்ளினிக்கிற்கு வருகிற நோயாளிகளோ அல்லது நோயாளிகளுடன் வருபவர்களோ நோயைத் தாண்டி ஏதாவது சில விஷயங்களைப் பேசும்போது அவர் ஒருவகை படபடப்புடன் வெளியே இருக்கும் வராந்தாவில் உலாத்திக் கொண்டிருப்பார். அவரின் காலடிச் சத்தத்தைக் கேட்டு நோயாளிகள் அமைதியாகி விடுவார்கள்.

சந்திரசேகரமேனன் தன்னுடைய மனைவியின் நோயாளிகளிடம் எப்போதும் பேசுவதேயில்லை. அவர்களில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால்கூட, அவர்களைப் பார்த்து சிரிப்பதில்லை. தன்னிடமிருந்து தன்னுடைய மனைவியைப் பிரிக்கிற எதிரிகள் என்ற எண்ணத்தில்தான் அவர்களை அவர் மனதில் நினைத்தார். சுபத்ராவும் தானும் மட்டும் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருப்பது, ஒருவரையொருவர் புத்தகங்களை வாசிக்கச் சொல்லிக் கேட்பது, காலார நடந்து செல்வது, மாலை நேரத்தில் சவாரி போவது- இவைதான் அந்தக் கணவரின் ஆசைகளாக இருந்தன. ஆனால் க்ளினிக்கிற்கு முன்னால் எப்போதும் மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். எப்போது பார்த்தாலும் தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. மருத்துவமனைகளிலிருந்து அவசரத் தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய நோயாளிகளைப் பற்றி மருத்துவமனையில் இருந்தவர்கள் சுபத்ராவுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தனர். சில நேரங்களில் சுபத்ரா நன்றாகத் தூங்கிக் னகொண்டிருக்கும் பொழுது மேனன் தொலைபேசியில் கூறுவார்: "டாக்டர் சுபத்ரா இங்க இல்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel