Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 2

kanavukku en azhudhai

“என்ன? ஆக்ஸிடெண்ட்டா... ஐயோ...”

“என்ன ஆச்சு சுசிலா, யார் போன்ல?” சுசிலாவின் பதற்றம் சிவலிங்கத்தையும் பற்றிக் கொண்டது.

“உங்க... உங்க அண்ணன், அண்ணி, குழந்தை கல்யாணி இவங்க எல்லாரும் இன்னிக்கு இங்கே வர்றதுக்காகப் புறப்பட்டிருக்காங்க. வர்ற வழியில கார் மேல லாரி மோதிடுச்சாம். அந்த இடத்துலயே உங்க அண்ணனும், அண்ணியும் இறந்துட்டாங்களாம். திருச்சிகிட்டயே ஆக்ஸிடெண்ட்டாம். குழந்தை கல்யாணி போலீஸ் பாதுகாப்புல இருக்காளாம்.”

அழுகை மாறாத குரலில் சுசிலா தகவல் சொன்னதும், சிவலிங்கத்திற்கு தலை சுற்றியது. இடிந்து போனவராய் சோபா மீது சரிந்தார். தன்னைச் சமாளித்துக் கொண்ட சுசிலா, அவர் அருகே வந்தாள்.

“எழுந்திருங்க நாம போய் ஆக வேண்டியதைப் பார்க்கலாம்” அவருக்கு தைரியம் சொன்னாள் சுசிலா.

கார் திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. கனத்துப் போன இதயத்துடன் பயணித்துக் கொண்டிருந்தனர் சிவலிங்கமும் சுசிலாவும்...

“உங்க அப்பாவோட நினைவு நாளுக்காக ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்து நம்பகூட சந்தோஷமா இருந்துட்டுப் போற உங்க அண்ணனும் அண்ணியும் நம்மை இப்படி தவிக்க விட்டுட்டாங்களேங்க... அம்மா, அப்பாவை பறிகொடுத்துட்ட சின்னப் பொண்ணு கல்யாணி எப்படித் தவிக்குதோ?”

“திருச்சியில இருக்கற பிஸினஸை எல்லாம் நிறுத்திட்டு இங்கே வரச்சொல்லி அண்ணன்கிட்ட எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். மறுத்திட்டாரு. ஊரை விட்டுத்தான் தள்ளி இருக்கார்னு பார்த்தா, இப்ப இந்த உலகத்தை விட்டே போயிட்டாரே... சுசிலா... அண்ணன், என்னைவிட ரெண்டு வருஷம்தான் மூத்தவர். நாங்க வளரும்போது நல்ல நண்பர்கள் போலத்தான் பழகினோம்...

“எங்க அப்பா திருச்சியில் பிஸினஸ் ஆரம்பிச்சுக் குடுத்ததும், அங்கே போய் ஸெட்டில் ஆயிட்டார். அவருக்கென்னமோ அந்த ஊர் பிடிச்சுப் போச்சு. அப்பாவோட நினைவு நாளுக்கு வர்றப்ப நாங்க எவ்வளவு சந்தோஷமா இருப்போம்? இப்ப... இப்ப... அண்ணனும், அண்ணியும் ஒரே சமயத்துல போயிட்டாங்க. கல்யாணி தாய் – தகப்பன் இல்லாத குழந்தையாயிடுச்சே சுசிலா...” மேலும் பேச இயலாம அழ ஆரம்பித்தார் சிவலிங்கம். அவர் அழுவதைப் பார்த்து சுசிலாவும அழ, கார் திருச்சியை நோக்கி விரைந்தது.

3

ழு வயது நிரம்பிய கல்யாணி, சிங்காரவேலரின் குடும்பத்தின் வாரிசு. சிவலிங்கத்தின் அண்ணன் ராமகிருஷ்ணனுக்குத் திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பின்பே கல்யாணி பிறந்தாள். தாய், தந்தையை ஒரே சமயத்தில் பறி கொடுத்துவிட்ட துக்கத்தில் இருந்து கல்யாணியின் பிஞ்சு உள்ளத்தை சுசிலாவின் தாய்ப்பாசம் ஆறுதல்படுத்தியது. மாம்பழம் போன்ற கன்னக் கதுப்புகள், கருந்திராட்சை போன்ற பளபளக்கும் கண்களென, எலுமிச்சை நிறத்தில் பொம்மை போல அழகாக இருந்த கல்யாணியைத் தன் அருகிலேயே பொத்தி வைத்துக் கொண்டாள் சுசிலா.

திருச்சியில் இருந்த வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டன. மதுரையிலேயே நல்ல கான்வென்ட்டில் கல்யாணியை சேர்த்தனர். சுசிலாவும் படித்த பெண், ஆகையினால், கல்யாணியின் கல்வி, ஒழுக்கம், பேசும் பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் தனி கவனம் செலுத்தி, தான் பெற்ற குழந்தையை வளர்ப்பது போலவே வளர்த்தாள். கல்யாணியை வளர்ப்பதிலேயே தனக்கென்று குழந்தை இல்லாத குறையையும் மறந்தாள்.

‘அம்மா... அம்மா’ என்று தன் காலைச் சுற்றி சுற்றி வந்து வளர்ந்த கல்யாணி பருவம் அடைந்து, படிப்பையும் முடித்துப் பெரியவளாகி நின்றபோது, பிரமித்துப் போனாள் சுசிலா. ‘காலத்தின் சக்கரத்திற்கு இத்தனை வேகமா? பெற்றவர்களை இழந்த சோகம் மாறாத கண்களுடன் ஏக்கமாகத் தன்னைத் தஞ்சம் அடைந்த பிஞ்சுக்குழந்தை கல்யாணி, இன்று உலகம் அறிந்த பெண்ணாக வளர்ந்து நிற்கிறாள். இவளது கல்வி, அழகு, ஒழுக்கம், உயர்வான பண்பு இவற்றிற்கேற்ற மணமகன் ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து இவளது எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் பெரிய கடமை காத்திருக்கிறதே!’ சுசிலா பயந்தாள்.

‘என்ன சுசிலா, உட்கார்ந்துக்கிட்டே தூங்கறியா?’ சிவலிங்கத்தின் குரல் அவளது சிந்தனைகளைக் கலைத்தது. “தூங்கறேனா? நல்லா சொன்னீங்க... நம்ம கல்யாணி வளர்ந்து ஆளாகி நிக்கறா. அவளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டிய பெரிய பொறுப்பைப் பத்தி யோசிச்சுக்கிட்டிருக்கேன்.”

“கல்யாணி மூணாவது வருஷ படிப்புல கால் வச்சதுமே, அவளுக்குக் கல்யாணப் பந்தல் கால் நடணும்ங்கற கவனமும், திட்டமும் எனக்கு வந்தாச்சு. அவளுக்காக என்னோட சில நல்ல நண்பர்கள்கிட்ட மாப்பிள்ளைக்கு சொல்லி வச்சிருந்தேன். அவங்களும் நல்ல குடும்பத்துப் பையன்களைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க.”

“அட, பரவாயில்லையே, என்கிட்ட கூட சொல்லாம மகளுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சிருக்கீங்க. பொறுப்பான அப்பாதான்...”

“கல்யாணியை நல்லவிதமா வளர்க்கற பொறுப்பை நீ எடுத்துக்கிட்ட. அவளோட வளமான எதிர்காலத்தை உருவாக்கற பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன். நமக்குக் குழந்தை இல்லாத குறை தீர்க்க வந்த தெய்வக் குழந்தை கல்யாணி. அவ இங்க வந்தப்புறம் தானே உன் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்க முடிஞ்சது. நீ கவலைப்படாதே. என்னோட நண்பர்கள் கொண்டு வந்த வரன்கள்ல எனக்குப் பிடிச்சமான ஒரு வரன் இருக்கு. இந்தப் பையனைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். பேர் தியாகு. கம்ப்யூட்டர் படிப்புல வித்தகன். சொந்தமா கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்ணிக் குடுக்கற கம்பெனி நடத்தறான்.”

”பையனோட அம்மா, அப்பா? பையன் கூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?”

“பையனுக்கு ஒரே ஒரு தங்கச்சி. இவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் பன்னிரண்டு வருஷ இடைவெளி. அந்தக் குழந்தை பிறந்த கொஞ்ச நாள்லயே பெத்தவங்க இறந்துட்டாங்களாம். தங்கச்சியை இவன்தான் வளர்த்துக்கிட்டிருக்கானாம். பூர்வீக சொத்துன்னு பெரிய அளவுல எதுவும் கிடையாதாம். அவங்கப்பா நடத்தின பெயிண்ட் ஏஜென்ஸியை மூட வேண்டிய நிலை. ஏன்னா, அவர் இறந்தப்ப இந்தப் பையனுக்கு நிர்வாகத்தை கவனிக்கிற அளவுக்கு வயது பத்தாது. ஆனா, இந்தப் பையன் நல்லாபடிச்சு தன்னோட சொந்தக்கால்ல நின்னு உழைச்சு முன்னுக்கு வந்திருக்கான். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாதாம்...”

வியந்து போனாள் சுசிலா. “அட இவ்வளவு விஷயம் சேகரிச்சு வச்சிருக்கீங்க! பையனைப் பத்தின விவரம் கேட்டா, அவனோட வரலாற்றையே சொல்றீங்களே...!”

“அதுக்கு முக்கியமான காரணம் எனக்கு அந்தப் பையனைப் பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு. அதனால பல வழிகள்ல தகவல்கள் சேகரிச்சேன்.”

“உங்களுக்குப் பிடிச்சிருக்கு. நம்ம கல்யாணிக்கும் பிடிக்கணும். அது சரி... நீங்க மாப்பிள்ளை பையனை எங்கே பார்த்தீங்க? அதைச் சொல்லுங்க...”

“சொல்றதுக்குள்ள அவசரப்படறியே? போன வாரம் திருச்சியில நம்ப க்ளையண்ட்டைப் பார்க்கப் போனேன்ல, அப்பத்தான் பார்த்தேன்.”

“என்ன?! திருச்சியிலயா பையன் இருக்கான்? இவ்வளவு நேரம் நீங்க அதைச் சொல்லவே இல்லையே?”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

தோழி

தோழி

August 8, 2012

கடல்

கடல்

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel