
சுசிலா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவலிங்கத்தின் மனதில் உறுத்தல் ஏற்பட்டது. ‘அடிக்கடி எனக்குள்ளே தோன்றும் புஷ்பாவின் நினைவுகளும், அதன் பிரதிபலிப்பான என்னோட மெளனமும், இந்த அளவுக்கு சுசிலாவை பாதிச்சிருக்கு! ஏற்கெனவே புஷ்பாவுக்கு நான் செஞ்ச துரோகம் ஒரு பாவம். இப்ப சுசிலாவோட மனக்குறைக்கு காரணமாகி அது வேறு பாவம்! சிந்தனைகளுக்குள் சிக்கினார். ‘புஷ்பா... என் அன்பே... காதலிக்கும்போது அப்பாவின் கண்டிப்பு, ஏழைகள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பு, இதையெல்லாம் மீறி, உன்னைக் காதலிச்ச நான், அவர் என் கல்யாணப் பேச்சை எடுத்தப்ப புத்தி பேதலிச்சுப் போய் அவர்கிட்ட நம்ம காதலை மறைச்சுட்டேனே... நீ என்னைப் பிரிஞ்சு எவ்வளவு வேதனைப்படறியோ?’
“பார்த்தியா, எதையோ யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு. இது எனக்குப் பல வருஷமா பழகிப் போச்சும்மா.”
“சுசிலாவின் சலிப்பான குரலால், தன் சிந்தனை வெள்ளத்திலிருந்து மீண்டார் சிவலிங்கம்.”
கையில் ஒரு பார்பி பொம்மையை வைத்துக் கொண்டிருந்தாள் மாலு. மாலதி, மாலுவாக அழைக்கப்படுபவள். பன்னிரண்டு வயது மாலு, பார்பி பொம்மையின் தலைமுடியைப் பிரித்து, தன்னுடைய இஷ்டப்படி அதற்கு ஹேர் ஸ்டைல் செய்து கொண்டிருந்தாள். பொம்மையுடன் கூடவே கொடுக்கப்பட்ட சிறிய, அழகிய ப்ளாஸ்டிக் சீப்பினால் ஹேர் ஸ்டைல் செய்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏ மாலு, கூப்பிடறது காதுல விழலியா? சின்னக் குழந்தை மாதிரி எப்பப் பார்த்தாலும் அந்த பொம்மையை வச்சுக்கிட்டு அதுக்கு சீவி சிங்காரிச்சுக்கிட்டு... பிறந்து கொஞ்ச நாள்ல பெத்தவங்களை முழுங்கிட்ட துக்கிரி... இன்னும் யாரை முழுங்க காத்துக்கிட்டிருக்கியோ தெரியலை. துஷ்டை... இன்னும் டிபன் சாப்பிடாம கெடக்க... வா. வந்து கொட்டிக்க.”
மாலுவின் பாட்டி சீதம்மா கத்தினாள். சீதம்மா மாலுவின் சொந்தப்பாட்டி அல்ல. சொந்தம் என்று சொல்லிக் கொண்டு வந்த தூரத்து உறவு. இளம் வயதிலேயே வாழ்க்கையை இழந்துவிட்ட சீதம்மாவை மாலுவின் அம்மா கெளரிதான் அனுதாபத்துடன் அழைத்து வந்து ஆதரித்தாள். ஆகவே, கெளரி மீது சீதம்மா அளவற்ற பாசம் வைத்திருந்தாள். உற்றார் உறவினர்கள் கைவிட்டுவிட, பெற்ற தாயைப் போல கவனித்துக் கொண்ட கெளரி மீது, கொள்ளைப் பிரியம் வைத்திருந்தாள்.
கெளரிக்குத் தலைப்பிரசவம் நிகழ்ந்து, தியாகு பிறந்த போது சீதம்மாதான் வீட்டுப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டு, கெளரியையும் கண்ணின் கருமணி போல கவனித்துக் கொண்டாள்.
தியாகுவை தன் மடிமீதும், தோள்மீதும் போட்டு அவனைத் தரையில் விடாமல் தாங்கித் தாங்கி வளர்ந்தாள். கெளரியின் கணவன் மூர்த்தி, திருச்சியில் பெயிண்ட் ஏஜென்ஸி எடுத்து பெரிய அளவில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தான். ஆரம்பத்தில் குறைந்த அளவில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தான். ஆரம்பத்தில் குறைந்த அளவில் நடைபெற்ற அவனது பெயிண்ட் விற்பனை, நாளடைவில் அமோகமாக உயர்ந்தது. வீட்டில் செல்வம் கொழித்தது. தியாகு பிறந்து வளர வளர வீட்டில் செல்வ வளமும் வளர்ந்தது.
இதற்கெல்லாம் காரணம் தியாகு பிறந்த ராசிதான் என்று சீதம்மா நம்பினாள். இந்த எண்ணத்தை கெளரியின் மனதிலும் விதைத்தாள். நல்ல விஷயங்களைச் சொல்லும்பொழுது, அதை அப்படியே ஏற்றுக் கொண்டு சந்தோஷப்படுவது மனித இயல்பு! எனவே, கெளரியும், சீதம்மாவின் நம்பிக்கையை தனக்குள்ளும் வளர்த்துக் கொண்டாள்.
மூர்த்தி, அவனுடைய நிறுவனத்தில் அவ்வப்போது கிடைக்கும் பெரிய ஆர்டர்கள், விற்பனை இவற்றால் கிடைக்கும் லாபங்களைப் பற்றி சொல்லும்போது ‘பேரன் பிறந்த நேரம் நல்ல நேரம், அவனுடைய ராசிதான் அவற்றிற்கெல்லாம் காரணம்’ என்று சொல்வதே சீதம்மாவிற்கு வழக்கமாகி விட்டது.
மூர்த்தி பல முறை சொல்லிப் பார்த்தான்.
“அத்தை, தியாகுவோட ராசிதான் என்னோட முன்னேற்றத்துக்குக் காரணம்னு நீங்க சொல்றது சரி இல்லை. அது மூட நம்பிக்கை. என்னோட உழைப்பினாலதான் இந்த உயர்வு. உழைப்பு மட்டுமில்ல, கடவுள் அருளும் கூட. நீங்க பெரியவங்க. உங்களுக்குத் தெரியாதா?”
“சாமியோட அருளோ, உங்க உழைப்போ அதெல்லாம் வர்றதுக்குக் காரணம் தியாகுவோட ராசிதான் தம்பி. அவன் பிறந்த பொன்னான நேரம்தான் தம்பி.” மருமகன் உறவு என்றாலும், மூர்த்தியை ‘தம்பி’ என்றுதான் அழைப்பாள் சீதம்மா. ஆணித்தரமாய் பேசிய சீதம்மாவின் வெகுளித்தனமான பேச்சைக் கேட்கும் மூர்த்திக்கு சிரிப்பு வந்தது. ‘பழங்காலத்துப் பெண்மணி, இவரிடம் எப்படி எடுத்துச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை’ என்று எண்ணியபடி அதோடு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் மூர்த்தி.
தியாகு செல்லமாக வளர்க்கப்பட்டாலும், நல்ல பழக்க வழக்கங்கள் மேற்கொள்ளும்படி அவனை வளர்த்தாள் கெளரி. இந்த விஷயத்தில், மூர்த்தி கண்டிப்பானவன். எனவே, அவனுக்குப் பயந்து தியாகுவை நன்றாக வளர்த்தாள். சீதம்மாவின் அளவற்ற பாசம், தன் மகனின் குண நலன்களைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான் மூர்த்தி. மூர்த்தியின் மனப்போக்கை அறிந்து கொண்டாள் கெளரி. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட மனம் ஒத்த தம்பதிகளாய் வாழ்ந்தனர், கெளரியும், மூர்த்தியும்.
தியாகு பிறந்த பன்னிரண்டு வருடங்கள் ஆன பிறகு, கெளரி மறுபடியும் குழந்தை உண்டானாள். சீவி முடித்து சிங்காரித்து அழகு பார்க்க ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டாள் கெளரி.
அவளது ஆசைப்படியே, அழகான பெண் குழந்தை பிறந்தது. கெளரிக்கு கொள்ளை மகிழ்ச்சி. அவளைவிட அதிகமாக ஆனந்தப்பட்டவன் தியாகு. பட்டு ரோஜா போன்ற தன் தங்கையைப் பார்த்து ரசித்தான். கொஞ்சி மகிழ்ந்தான்.
தென்றல் உலா வந்த அந்தக் குடும்பச் சோலையில், சூறாவளிப் புயல் ஒன்று அந்த பூஞ்சோலையை புழுதிக்காடாக மாற்றப் போவது விதிக்கு மட்டும்தானே தெரியும்?
மாலு பிறந்த மூன்று மாதங்கள் மகிழ்ச்சிப் பூக்களால் மனம் நிறைந்து வாழ்ந்தனர், அனைவரும். ஒரு நாள் நள்ளிரவு, அழுத குழந்தைக்கு பால் காய்ச்சுவதற்காக ஸ்டவ்வில் பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றினாள் கெளரி. படுக்கையில் அறையில் மூர்த்தி, குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். நாள் முழுதும் எதற்கெடுத்தாலும் நான் நான் என்று ஓடி ஆடி வலிய வந்த வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்யும் சீதம்மா, இரவில் கும்பகர்ணனின் தங்கையாய்த் தூங்குவாள். எனவே கெளரி பாலைக் காய்ச்சுவதற்காக சமையலறைக்கு வந்தாள்.
இரவில் நைட்டி அணியும் வழக்கம் உள்ள கெளரி, அன்று சுடிதாருடனே படுத்து விட்டாள். அறையை விட்டு வெளியே வரும்பொழுது துப்பட்டா போட்டு மூடாமல் எப்போதும் வரமாட்டாள். அதே பழக்கத்தில் அந்த இரவிலும் துப்பட்டாவைப் போட்டுக் கொண்டு வந்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook