
சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கல்தூண் ஒன்றில் சாய்ந்தவாறு, தன்னைச் சுற்றிலும் ஒரு முறை அவள் தன் தளர்ந்து போன கண்களால் நோட்டம் விட்டாள். அவளுக்கு மிகவும் அருகில் கோவில் கோபுரம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. பல வகைப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படும் கடைகள் இருக்கும் இரு வீதிகளும் இங்கிருந்தே அவளின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தன.
எந்தப் பக்கம் பார்த்தாலும் கோவிலுக்குத் தரிசனம் பண்ண வந்தவர்களின் கூட்டமாகவே இருந்தது.
நாதஸ்வர இசையும், மேள சத்தமும் காற்றில் மிதந்து வந்து அவளின் காதுகளில் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தன. மக்களின் ஆரவாரம், கேலி. சிரிப்பு, கும்மாளம், குழந்தைகளின் அழுகைக் குரல்கள் - இவை நிறைந்த கோவில் சுற்றுப்புறம் இதற்கு முன் அவள் கண்டிராத ஒரு புதிய சூழ்நிலையை உண்டாக்கியது. கோவில் பிரகாரத்தில் பூசாரி உச்சரிக்கும் அடுக்கடுக்கான மந்திரிங்களும், தீபாராதனை செய்யும்போது அடிக்கப்படும் மணியோசையும் அவளுக்குத் தெளிவாகக் கேட்டன. அதனுடன், சந்தன மணமும், மலர்களின் இனிய நறுமணமும், கற்பூர வாசனையும் கலந்து வந்து அவளின் நாசிக்குள் நுழைந்து அவளிடம் ஒருவகை புத்துணர்வை உண்டாக்கிக் கொண்டிருந்தன.
இந்த தன்னுடைய அறுபத்தைந்து வருட வாழ்க்கையில் இந்த மாதிரி எத்தனையெத்தனை திருவிழாக்களை அவள் கண்டிருப்பாள்!
இன்று கூட திருவிழா கோலாகலமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அவளின் உள்ளத்தின் அடித்தளத்தில் இனம் புரியாத ஒரு குறை... சலனம்.
வாழ்க்கையே ஒரு பெரிய புதிரைப் போல் தோன்றியது அவளுக்கு.
அவள் அமர்ந்திருந்த அந்த சதுர வடிவுள்ள கருங்கல் மண்டபம், கோபுரத்திற்கு நேர் எதிராக அமைந்திருந்தது. அங்கும் பக்தர்களின் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் புளியோதரையையும், அதிரசத்தையும் சாப்பிட்டு விட்டு அவர்கள் விட்டெறிந்த எச்சில் இலைகள் கூட்டம் கூட்டமாக மண்டபத்தை சுற்றிலும் கிடந்தன.
அந்த இடத்தில் கூட அவளைத் தனியாக, நிம்மதியாக உட்கார அவர்கள் விடவில்லை.
நேற்று இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. அடிவயிற்றில் ஒரே வலி. என்னவோ கனமாக அடியிலிருந்து மேல்நோக்கி புறப்பட்டு வருவதைப் போல் ஒரு தோணல். மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு அப்படியொரு அவஸ்தை. யாரோ கழுத்தைப் பிடித்து நெறிப்பதைப் போலிருந்தது அவளுக்கு.
இருந்தாலும், வழக்கம்போல விடிந்தும் விடியாமலும் இருக்கும் பொழுதே காலை ஐந்து மணிக்கு எழுந்து ஐயர் வீட்டுக்கு அவள் வேலை செய்ய போய்விட்டாள். குளிர் காலமாக இருந்ததால் குளிர் தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. அவள் அதை கொஞ்சமேனும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சேலைத் தலைப்பால் தலையை முழுமையாக மூடிக் கொண்டு 'விசுக் விசுக்' கென்று நடக்க ஆரம்பித்தாள். வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து, கோலம் போடுவதில் ஈடுபட்டிருந்தனர் சில பெண்கள். அவர்களைப் பார்த்தவாறு அவள் தெருவில் நடந்து சென்றாள். கார்ப்பரேஷன் விளக்குக் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த எருமைகள் தங்களுக்கு முன்னால் கூடையில் வைக்கப்பட்டிருந்த வைக்கோலை அசைபோட்டு நின்று கொண்டிருந்தன.
ஐயர் வீட்டு கொல்லைப்புறத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள் அவளுக்காக காத்திருந்தன. அவை ஒவ்வொன்றையும் சுத்தமாகத் துலக்கி வைக்க வேண்டும். கொஞ்சம் அழுக்கு இருந்தாலும், ஒரு வசை கவியே பாடி விடுவாள் ஐயரின் மனைவி. அவள் அப்படி திட்டும்போது அவளின் காதுகளிலிருக்கும் வைரக் கம்மல்களின் பிரகாசம் அவளுடைய கன்னத்தில் தெரியும்.
இன்று வெள்ளிக்கிழமையாதலால் வேலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வீடு முழுவதையும் சுத்தமாகக் கழுவித் துடைப்பதற்குள் அவளுக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. எங்காவது ஒரு சிறு கறை இருந்தால் கூட போதும் - "கண்ணம்மா, நீ என்ன கழுவியிருக்க? இவ்வளவு வயசானதுதான் மிச்சம். வீட்டை எப்படி சுத்தமா வைச்சிருக்கிறதுன்னு கொஞ்சமாவது தெரிய வேண்டாமா?' என்று பொரிந்து தள்ள ஆரம்பித்து விடுவாள் ஐயரின் மனைவி.
ஐயர் எப்போது பார்த்தாலும் பூஜை அறையில்தான் இருப்பார். ஏதாவது மந்திரங்களைக் கூறிக் கொண்டே அவர் அமர்ந்திருப்பார். தன் மனைவியைப் போல கோபப்பட அவருக்குத் தெரியாது என்றாலும், சில நேரங்களில் அவளுக்கு அவர் புத்திமதி கூறுவதுண்டு.
முதல் நாள் மீதமாகிப் போன சாதத்தையும், குழம்பையும் கொண்டு வந்து கொடுத்த போது, அவளுக்கு என்னவோ போலிருந்தது. அதை சாப்பிடுவதைவிட பட்டினி கிடப்பது எவ்வளவோ மேல் என்று நினைத்த அவள் அருகிலிருந்த குப்பைக்குள் அதைக் கொட்டினாள். அதை அவளுடைய துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்- வாசலருகில் நின்றிருந்த ஐயர் பார்த்துவிட்டார். அங்கிருந்தவாறே "கண்ணம்மா, சாதத்தைக் குப்பையில் போடாதே. அன்னம் பிரம்மம்னு பெரியவங்க சொல்லுவாங்க" என்றார்.
கெட்டுப் போன அந்த சாதத்தில் என்ன இருக்கிறது என்று ஐயர் கூறினார்? எவ்வளவு யோசித்துப் பார்த்தும் அவளால் அதை ஞாபகப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை.
இருந்தாலும், ஐயரின் மனைவியின் மேல் அவளுக்கு எப்போதும் ஒரு விசுவாசம் உண்டு. ஐயரின் வீடு மட்டும் இல்லாமல் போயிருந்தால், என்றோ பட்டினியின் கொடும்பிடியில் சிக்கி அவள் இந்த உலகத்தை விட்டே போயிருப்பாள்.
கிராமத்தை விட்டு புறப்பட்டு வந்து இரண்டு மாதங்களும் இருபது நாட்களும் ஆகிவிட்டன. அப்பப்பா.... காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது!
மரத்தைப் போன்ற இரண்டு ஆண் பிள்ளைகளை அவள் பெற்றெடுத்து என்ன பயன்? ஒன்றுக்குமே உதவாத தறுதலைகள். கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் கஷ்டப்பட்டு வளர்த்த அவளுக்கு அவர்கள் பிரதிபலனாகக் கொடுத்த பரிசு இதுதான்.
ம்.... பெற்ற பிள்ளைகளுக்கே தாய் வேண்டாதவளாகி விட்டாள்.
சேலைத் தலைப்பால் கண்ணிலிருந்து வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள் கண்ணம்மா. துடைக்கத் துடைக்க கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
பெற்ற தாய்க்கு ஒரு நேர உணவு கொடுத்து வீட்டில் வைத்து காப்பாற்றும் எண்ணம்கூட அந்தப் பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விட்டது. மகன்கள், மகன்களின் மனைவிமார்கள். அவர்களின் குழந்தைகள் எல்லாம் சேர்ந்து குடும்பம் பெரிதாகி விட்டது. எப்போது பார்த்தாலும் ஒரே சண்டைதான், அழுகைதான். உறவுக்காரர்களுடன் கூட நாளடைவில் அவர்களுக்குத் தொடர்பு என்ற ஒன்றே இல்லாமல் போய் விட்டது.
ம்.... அவர்களைக் குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்?
மூத்தவனுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். இளையவனுக்கு நான்கு. அவர்களையெல்லாம் இந்தக் கஷ்ட காலத்தில் காப்பாற்றுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? பெற்ற தாயை அதற்காக மறக்க வேண்டுமா என்ன?
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook