Lekha Books

A+ A A-

தண்ணீர்... தண்ணீர்... - Page 3

Thanneer... Thanneer...

அப்போது இளைய மகன் வீட்டில் இல்லை. அவனுடைய மகன் சுப்பு மட்டும் இருந்தான். பாட்டி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் அவன் ஓடி வந்தான். கையைப் பிடித்து அவளை அவன் இழுத்தான். கண்ணம்மாவின் கணவன் ஜாடை அவன். பெரிய ஆளாக வரும் போது நிச்சயம் தன் தாத்தா மாதிரியே இருப்பான் அவன்.

'பாட்டி பாட்டி... நீ போயிட்டா எங்களை யார் கவனிக்குறது?' அவளால் அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு நெஞ்சம் குமுறிக் கொண்டிருந்தது.

சேலைத் தலைப்பால் கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள் கண்ணம்மா.

அப்போதும் சுப்பு போவதாக இல்லை. 'போடா என் ராசா! பாட்டி நான் எங்கே போயிற போறேன்? திரும்பி வந்திருவேன். பேசாம வீட்டுக்குப் போ. என் கூட வந்தா உன் அப்பன் அடிப்பான்' என்றாள் கண்ணம்மா.

'அப்ப... வர்றப்போ எனக்கு அச்சு வெல்லம் வாங்கிட்டு வருவியா?' என்றான் சுப்பு.

தந்தைக்கு பயந்து வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்த சுப்பு அங்கிருந்தவாறே உரத்த குரலில் 'மறந்திராத பாட்டி அச்சு வெல்லம்..." என்றான்.

போன மாதம் வாங்கிய சம்பளம் அவள் சேலை தலைப்பில் பத்திரமாக இருந்தது. அதில் சுப்புவுக்கு நல்ல ட்ரவுசரும், சட்டையும் வாங்க வேண்டும் என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டாள் கண்ணம்மா.

சுப்புவின் முகத்தைக் காண வேண்டும்போல் இருந்தது அவளுக்கு.

இந்த நகரத்தில் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டும் என்பது அவளுடைய தலையெழுத்து, அதுவும் இந்த வயதான காலத்தில்...

இந்த ஊருக்கு வந்த புதிதில் முதல் இரண்டு நாட்கள் அவள் முழு பட்டினி...

உடம்பை கிடத்த ஒரு இடமில்லை. சாப்பாடு வேண்டுமென்றால், பிச்சை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை. அதை நினைத்து பார்த்த போது அவளுக்கே வெட்கமாயிருந்தது.

நான்காவது நாள் ஐயர் வீட்டில் வேலை கிடைத்தது. ஐயர் வீட்டில் ஏதாவது சோறு கிடைக்குமா என்றுதான் முதலில் அவள் போனாள்.

'எனக்கு கூட ஒரு வேலைக்காரி தேவைப்படுது. வேணும்னா நீயே இருந்துர்றியா?' - ஐயரின் மனைவி கேட்டாள்.

முதல் நாள் அவள் வேலைக்குப் போனபோது, ஐயர் தன் மனைவியிடம் கூறி கொண்டிருந்தது அவள் காதில் நன்றாகக் கேட்டது:

'வயசு அதிகமாயிடுச்சு... இனி பயணம் போற வழிதான்.'

வேலை முடிந்ததும், எந்த திண்ணையிலாவது போய் அமர்ந்து விடுவாள். கோவிலின் கிழக்கு கோபுரத்தின் அருகில் உள்ள கருங்கல் மண்டபத் திண்ணையில் தான் அவளின் இரவு நேரப் பொழுது கழியும்.

ஐயர் கூறியது உண்மைதான். அவளுக்கும் வயது அறுபத்தைந்து ஆகிவிட்டது. வேலையைக் கூட ஒழுங்காக, நிதானம் தவறாமல் அவளால் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு உடம்பில் ஒரு தளர்ச்சி...

'ம்.... கிராமத்துக்கு எப்படியும் திரும்பி போயிடணும். செத்தாலும் பெத்த பிள்ளைங்க மடியிலதான் சாகணும். பத்து நாள் தானே? ஒரு நாளு மாதிரி வேகமா ஓடிரும். சுகமா ஊர் போய் சேர்ந்தா, மாரியம்மன் கோவில் உண்டியல்ல ஒரு ரூபா போடணும்' - மனதிற்குள் கூறிக் கொண்டாள் கண்ணம்மா.

தலையைச் சுற்றிக் கொண்டு வருவது போலிருந்தது அவளுக்கு.

'ஒரு சோடா குடிச்சா என்ன? கண்ணாவது சரியா தெரியும். முனுசாமி கடையில சோடா இருக்கும். பத்தடி தூரம் இருக்குமா கடை?' - மெல்ல தூணைப் பிடித்து எழுந்து நிற்க முயன்றாள் கண்ணம்மா.

சேலைத் தலைப்பிலிருந்த முடிச்சை அவிழ்த்து ஒரு பத்து பைசாவை எடுக்க அவள் படாத பாடுபட்டாள்.

அதற்குள் நிலை தடுமாறி திண்ணையில் ' பொத்' தென்று விழுந்து விட்டாள்.

அவளுக்கு ஒரு வாய் நீர் தர அந்த இடத்தில் ஒரு உயிர் இல்லை.

இத்தனை லட்சம் மக்கள் இருக்கின்ற அந்த நகரத்தில் சாகக் கிடக்கும் ஒரு உயிருக்கு ஒரு துளி நீர் கொடுக்க ஒரு ஆள் இல்லை.

அறுபத்தைந்து வருடங்கள் வாழ்ந்து விட்ட கண்ணம்மா - இதோ அனாதையாக - ஆதரவு யாருமில்லாமல் கிடக்கிறாள்.

அவள் மட்டும் இப்போது கிராமத்தில் இருந்திருந்தால்...!

மூச்சு விடவே அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

கல் மண்டபத்தின் கூரைகளில் செதுக்கி வைக்கப்பட்டிருந்த சிற்பங்கள் அவளை நோக்கி இறங்கி வருவது போல் அவளுக்குத் தோன்றியது.

தொண்டை கொஞ்சம் கொஞ்சமாக வறண்டு கொண்டே வந்தது. கோவில் விளக்குகள் முற்றிலுமாக அணைந்து விட்டிருந்தன.

இருட்டு... ஒரே இருட்டு...

'யாராவது கொஞ்சம் தண்ணி தாங்களேன்...' - மெல்ல முனகினாள் கண்ணம்மா.

யாரும் வருவதாகத் தெரியவில்லை. நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பக்தனொருவன் யாரோ தரையில் கிடப்பதைப் பார்த்ததும் அருகில் சென்று மூக்கில் விரலை வைத்து பார்த்து விட்டு மற்றவர்களிடம் கூறினான்: 'பாக்கியவதி... நல்ல நாளு பாத்து போயிருக்கா...'

Page Divider

 

 

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel