Lekha Books

A+ A A-

தண்ணீர்... தண்ணீர்... - Page 2

Thanneer... Thanneer...

முதலில் எதை மறக்கக் கூடாதோ, அதை மறந்து விட்டனர் அவளின் பிள்ளைகள். ஐயர் வீட்டு எச்சில் பண்டங்களும், இந்தக் கருங்கல் திண்ணையுமே அவளின் தற்போதைய நண்பர்களாகிப் போயின.

அவளின் அடிவயிற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வலி மேல் நோக்கி எழுந்து அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. தலை பயங்கரமாக கனத்து அவனை உட்கார விடாமல் செய்து கொண்டிருந்தது.

ஆமாம்... இந்த ஜனங்கள் ஏன் இப்படி கூச்சலும் ஆரவாரமும் எழுப்பிக் கொண்டு திரிகிறார்கள்? கோவிலுக்குக் கடவுளைத் தேடி வரும் நேரத்திலாவது அவர்களால் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாதா? ஒரு நிமிடம் கூட வாயை மூடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்களே!

ஜனங்களின் சத்தமும், ஆரவாரமும் ஒரு பக்கம் அவளின் மனதில் வெறுப்பை உண்டாக்கியது.

இந்த நகரத்திலேயே என்றாவதோர் நாள் அவள் உயிர்விட நேர்ந்தால், அவளைப் பற்றி கவலைப்பட இங்கு யார் இருக்கிறார்கள்? ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் பேசாமல் சகித்துக் கொண்டு கிராமத்திலேயே இருந்திருக்கலாம். கிராமத்தில் அவள் சாகக் கிடக்கும் நேரத்தில் கூட ஒரு வாய் தண்ணீர் தர ஆள் இருக்கிறார்கள். இங்கிருக்கும் இத்தனை லட்சம் உயிர்களில் அவளுக்கென்று சொந்தமென்று கூற- அவள் மேல் அக்கறை செலுத்த யார் இருக்கிறார்கள்?

மணி அனேகமாக இப்போது ஐந்தரையைக் கடந்து விட்டிருக்கும். ஐயர் வீட்டுக்கு சாயங்காலம் வேலைக்குப் போவதென்றால்... நேரமாகிவிட்டது. இனி அங்கு போய் பயன் இல்லை. எழுந்து நிற்கக் கூட அவளுடைய உடம்பில் தெம்பு இல்லை. உடம்பு எழுந்து நடமாடக்கூடிய அளவில் இருந்தால், ஒரு நாளும் வேலைக்குப் போகாமல் அவள் இருக்க மாட்டாள்.

வேலைக்குச் செல்லாமல் முதல் தேதி வந்ததும் சம்பளம் வாங்கும் வழக்கம் என்றுமே கண்ணம்மாவுக்கு இருந்ததில்லை.

மக்கள் கூட்டம் நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே இருந்தது. கூட்டத்தைக் காணக் காண அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

அவளுக்குத் திருமணம் நடந்த புதிதில் அவளையும் மாரியம்மன் திருவிழாவுக்கு அழைத்துக் கொண்டு போயிருந்தான் அவளின் கண்வன்.

அதை இப்போது அவள் நினைத்துப் பார்த்தாள். அன்று அவளுக்கு சுமார் பதினான்கு இருக்கும். நடக்கும்போது காலில் அணிந்திருந்த கொலுசு 'சல் சல்' லென்று ஓசையெழுப்பி சுற்றி இருந்தவர்களின் கவனத்தை அவள் பக்கம் ஈர்த்தது : அன்று ஜாக்கெட் அணியவில்லை. மஞ்சள் கறை போட்ட சிவப்பு வர்ண சேலை அணிந்துதான் திருவிழாவுக்குப் போயிருந்தாள். கண்மை, நெற்றியில் குங்குமம் - இந்தக் கோலத்துடன் அவளைப் பார்க்கும்போது மங்களகரமாக இருக்கும்.

அவள் கணவன் அன்று அவளின் விருப்பப்படி கண்ணாடி வளையல்கள் வாங்கிக் கொடுத்தான். வறுத்த பட்டாணியையும், நிலக்கடலையையும் தின்றவாறு தங்களை மறந்து இருவரும் நடந்து திரிந்தார்கள்.

மலர்கள் கொண்டும், நகைகள் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்ட மாரியம்மன் விக்கிரகத்தை அன்று பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். திருவிழா என்றால் அதுதான் திருவிழா. இதைப்போய் திருவிழா என்கிறார்களே!

இறந்து போன தன் கணவனின் முகத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்து கொண்டாள் கண்ணம்மா. கருங்கல்லால் ஆனது போன்ற உறுதியான உடலுக்குச் சொந்தக்காரன் அவன். இரண்டு காளைகள் இழுக்கவே கஷ்டப்படும் பாரம் ஏற்றிய வண்டியை அவன் ஒருவனே சர்வ சாதாரணமாக இழுத்து விடுவான். வயலில் இறங்கினான் என்றால் நான்கு ஆட்கள் செய்யும் வேலையை அவன் ஒருவனே செய்வான். அப்படிப்பட்ட அவன் இரண்டு நாள் காய்ச்சலில் இறப்பான் என்று யாரும் கனவில்கூட கருதியதில்லை. யாருடைய கையையும் எதிர்பார்க்காத மனிதன், பிறருக்கு கேடு செய்ய வேண்டும் என்று கனவில்கூட கருதாதவன், நிலம் சம்பந்தமாக பக்கத்து வீட்டு முத்துவுடன் சண்டை உண்டான போது, கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓடிய காட்சி இன்னும் அவள் மனதின் அடித்தளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. அன்று அவனைத் தடுத்து வீட்டுக்கு இழுத்துக் கொண்டு வருவதற்குள் கண்ணாம்மாவுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.

அவளின் இரண்டு மகன்களில் ஒருவனாவது தங்களின் தந்தை மாதிரி இருந்திருக்கக் கூடாதா? அவளால் ஏங்கத்தான் முடிந்தது.

“சே... பெண்புத்தி பின்புத்தின்றது சரியாத்தான் இருக்கு. இல்லாட்டி பெத்த பிள்ளைங்க மேல கோவிச்சுக்கிட்டு பிறந்த கிராமத்தை விட்டு அனாதை மாதிரி இந்த ஊரைத் தேடி வருவேனா?" என்று மனதிற்குள் தன்னையே திட்டி தீர்த்து கொண்ட கண்ணம்மா தன் கிராமத்து சிந்தனையில் தன்னை மறந்து லயித்துப் போனாள்.

உயரமாக வளர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கரும்பனை மரங்கள், அவற்றுக்கு மத்தியில் வைக்கோல் வேயப்பட்ட குடிசைகள்... குடிசைகளாக இருந்தால்தான் என்ன சாப்பாட்டுக்கும், தண்ணீருக்கும் கஷ்டமே இல்லை என்கிற போது?

அவளிடம் அந்த இரண்டு எருமை மாடுகளும் இருக்கும்போது, பணம் கொஞ்சம் தாராளமாகவே அவளின் கையில் புழங்கியது. பாலில் கொஞ்சம் தண்ணீர் கலந்து விற்கவும் அவள் தயங்கவில்லை. அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு காதுக்கு சிவப்பு வர்ணத்தில் கல்வைத்த கம்மல்கள் வாங்கி அணிந்து கொண்டாள்.

அதையெல்லாம் பின்னர் விற்றுத் தீர்த்து விட்டார்கள் அவளின் பிள்ளைகள்.

அன்று  அந்த கிராமத்தில் கண்ணம்மா மிகவும் முக்கியமான ஒரு நபராக இருந்தாள். பிரசவம் ஒன்று ஊரில் நடக்கிறதென்றால், அங்கு கண்ணம்மா நிச்சயம் இருப்பாள். சாவு நடக்கும் இடத்திலும் கண்ணம்மாவின் தலையைக் கட்டாயம் பார்க்கலாம்.

ம்... அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது! சூரியன் மறைந்து எவ்வளவோ நேரம் ஆகிவிட்டது. மின்விளக்குகள் 'பளிச்' எனப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. கோவிலிலும் இப்போது முழுமையாக மின்விளக்குகள் தாம். எல்லாம் கால மாற்றத்தில் ஏற்பட்ட வளர்ச்சி.

'ம்... சரியா மூச்சுவிடக்கூட முடியலியே... இங்கேயே நான் செத்துப் போயிடுவேனோ? என்ன இருந்தாலும், கிராமத்தை விட்டு நான் வந்தது என் தப்புதான்.' தனக்குள் முனகிக் கொண்டாள் கண்ணம்மா.

பத்து நாட்களில் ஐயர் வீட்டில் சம்பளம் கிடைக்கும். அதை வாங்கிக் கொண்டு தன்னுடைய கிராமத்திற்கே திரும்பிப் போய்விட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள் கண்ணம்மா. வீட்டை விட்டு புறப்பட்ட போது மூத்த மகன் அவளைத் தடுத்து ஒரு வார்த்தை கூறவில்லை.

"என்னம்மா எங்கே போறே?" என்று அவன் தடுத்திருக்கலாம். ஒரு வேளை தன் தாய் அப்படி எங்கே போய் விடப் போகிறாள்" கிராமத்துக்கு வெளியே கொஞ்ச தூரம் போய்விட்டு திரும்பவும் வந்து விடுவாள் என்று அவன் நினைத்திருப்பானோ?

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel