Lekha Books

A+ A A-

படகு

padagu

துறைமுகத்திற்கு மிகவும் அருகிலேயே இருக்கிறது. அந்தப் படகுத்துறை. அங்குப் படகு ஓட்டும் மம்முவைத் தெரியாத ஆள் அந்தப் பகுதியிலேயே இருக்க முடியாது என்பதுதான் உண்மை. மம்மு அங்கு படகோட்டியாக வந்து ஏழு வருடங்களாகி விட்டன. இப்போது அவனுக்கு இருபத்தைந்து வயது நடந்து கொண்டிருக்கிறது.

மாநிறமாக இருந்தாலும் நல்ல அழகையும், உடல் பலத்தையும், நல்ல உடலமைப்பையும், பிரகாசமான முகத்தையும் கொண்ட மம்முவை ஒரு முறை பார்த்துவிட்டால், அதற்குப்பிறகு அவனை யாரும் மறக்க மாட்டார்கள்.

வேலையில் சேர்ந்ததிலிருந்து இன்று வரை ஒருநாள் கூட அவன் படகோட்ட வராமல் இருந்ததே இல்லை. பொழுது புலரும் நேரத்திலிருந்து நள்ளிரவு ஆகும்வரை அவன் தன்னுடைய படகைவிட்டுப் பிரியமாட்டான். அவனுக்கு வாப்பா, உம்மா யாரும் இல்லை. அவனுக்கு இருந்தது ஒரே ஒரு சகோதரிதான். ஆயிஷாவைத் திருமணம் செய்தது படகுத் துறைக்கு அருகிலேயே வசித்துக் கொண்டிருக்கும் ஒரு மாட்டு வண்டிக்காரனான மாப்பிள்ளைதான்.

படகு மம்முவிற்குச் சொந்தமானதுதான் வாப்பாவின் சொத்திலிருந்து கிடைத்த நாற்பது ரூபாய்க்கு அவன் அதை விலைக்கு வாங்கினான். அந்தப் படகு! அது ஒன்றுதான் அவனுக்கென்று இருக்கும் ஒரே சொத்து! அவனுக்குப் பிரச்சினை இல்லாமல் சாப்பிட உதவியாக இருக்கும் ஒரே கருவி அதுதான். அவனுடைய விலை மதிப்புள்ள விளையாட்டுப் பொருள்கூட அதுதான்.அந்தப் படகில்தான் அவன் தன்னுடைய ஏழு வருட வாழ்க்கையைச் செலவிட்டிருக்கிறான். அந்தப் படகு முழுக்க ஏராளமான நினைவுகள் இருக்கின்றன. அவனைத் தாங்கிக் கொண்டிருக்கும் துணையே அந்தப் படகுதான்.அவனுடைய காதல், இரக்கம், சிந்தனை எல்லாவற்றுக்கும் அந்தப் படகுதான் ஒரே சாட்சியாக இருந்திருக்கிறது. அவனுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. எனினும், அந்த படகின் பலகையில் எழுதப்பட்டிருக்கும் அந்த வெள்ளை எழுத்துக்கள் 'டி.மம்மு' என்பதை அவன் நன்கு அறிவான். அவன் அந்த எழுத்துக்களை ஆச்சரியத்துடனும் மதிப்புடனும் பல நேரங்களில் தன்னையே மறந்து பார்த்துக் கொண்டிருப்பான். அந்தப் படகிற்கு உயிரில்லை என்பதை அவன் நம்பத் தயாராக இல்லை. சூழ்நிலைக்கேற்றபடி இருக்கும் அதன் அசைவையும் குலுக்கலையும் துள்ளலையும் சிணுங்கலையும் கொஞ்சலையும் பார்க்கும்போது அவன் எப்படி வேறு மாதிரி நினைக்க முடியும்?   

ஆறும் கடலும் உயிரோட்டத்துடன் சங்கமமாகிற அந்த இடம். உண்மையிலேய ஆபத்தான ஒரு இடம்தான். இருப்பினும் அந்த இடத்தில் படகோட்டுவது என்பது மம்முவிற்குப் பிடித்த ஒரு விஷயம். அங்கு நீரோட்டத்தால் உண்டான ஆழமும் சுழியும் ஆபத்தும் கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஓடிக் கொண்டிருக்கும் நீரோட்டமும் அவனுக்கு நன்கு பழக்கமானவையே. எவ்வளவு பெரிய அளவில் நீரோட்டமிருந்தாலும் நீரே நோகாதவண்ணம் படகை ஓட்டும் வித்தையை அவன் தெரிந்து வைத்திருக்கிறான். அந்த வித்தை அவனுக்கு மட்டுமே தெரியும்.

எவ்வளவு காற்று வீசினாலும் சரி, எவ்வளவு அலை உண்டானாலும் சரி, எவ்வளவு நேரமானாலும் படகைத் தேடி வந்தவர்களை அக்கரையில் கொண்டுபோய்விட மம்மு தயங்குவதேயில்லை. படகில் ஏறியிருப்பவர்கள் தனக்கு நன்கு தெரிந்தவர்களாக இருந்தால் மம்மு ஒரு 'கெஸ்' பாடுவான். அவனுக்கு நன்றாகவே பாடத் தெரியும்.

படகுத் துறைக்குச் சொந்தக்காரர் முஸ்ஸஹாஜியார் முதலாளி. ஹாஜியாருக்கு படகுத் துறைக்குப் பக்கத்திலேயே அரிசி வியாபாரமும் நடக்கிறது. மம்முவிற்கு ஒவ்வொரு நாளும் ஐந்தணா கூலியாகக் கிடைக்கும். நான்கணா படகு ஓட்டியதற்கான கூலி. மீதி ஒரு அணா படகிற்கான வாடகை. இது தவிர, நல்ல வசதி படைத்த முதலாளிகள் யாராவது படகுத் துறைக்கு வந்தால், அவனுக்கு 'இனாம்' என்ற பெயரில் ஏதாவது கிடைக்கும். ஹாஜியாருக்கு மம்முவை மிகவும் பிடிக்கும். இரவு நேரம் வந்து விட்டால் ஹாஜியார் படகுத் துறையை மம்முவிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்குப் புறப்பட்டு போவார். மறுநாள் காலையில் முதல் நாள் இரவில் கிடைத்த பணத்தில் காலணா கூட குறையாமல் அவன் முதலாளியின் கையில் ஒப்படைப்பான். முதலாளி அந்தப் பணத்தை எண்ணிப் பார்க்கக்கூட செய்யாமல் அப்படியே பைக்குள் போடுவார்.

அவன் மதிய நேரமும் இரவிலும் சாப்பிடுவது தன்னுடைய சகோதரி ஆயிஷாவின் வீட்டில்தான். அதற்காக அவன் தினமும் இரண்டணாவை அவளிடம் கொடுத்துவிடுவான். இரவில் படகுத்துறையிலேயே படுத்துவிடுவான்.

அங்கிருந்து மூன்று மைல் தூரத்தில் இருக்கும் ஒரு பள்ளி வாசலில் ஆண்டுக்கொரு முறை நடைபெறும் திருவிழாவைப் பார்க்க அவன் போவான். அதாவது- வருடத்திற்கொரு முறைதான் அவன் அந்தப் பகுதியைவிட்டே வெளியே செல்வான்.

இப்படியே ஏழு வருடங்கள் ஓடிவிட்டன. பிரகாசமும் குளிர்ச்சியும் நிறைந்த ஏழு வருடங்கள் அவனுடைய வாழ்க்கையை வருடியபடி கடந்தோடிவிட்டன. மிதுன மாதத்தின் ஓர் இரவு. சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் மேகங்கள் எதுவும் இல்லாமல் வானம் மிகவும் தெளிவாக இருந்தது. வெண்பட்டு போல ஒரு நிலவொளி பூமியை மூடிக் கொண்டிருந்தது. அது புழுதியை பளிங்கென பிரகாசிக்கச் செய்தது; கடல் நீரை 'தகதக'வென மின்னச் செய்தது.

மம்மு படகுத் துறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். திடீரென்று தன்னை யாரோ அழைப்பதைக் கேட்டு அவன் கண் விழித்தான். தூக்கத்தின் ஒரு மெல்லிய இனிய அனுபவத்துடன் அவன் கண்களைக் கைகளால் கசக்கியவாறு எழுந்து உட்கார்ந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தான். மறுகரையில் ஆற்றோரத்தில் வெண்மையான ஒரு உருவம் நிற்பதைப் போல் அவனுக்குத் தோன்றியது.

"பொழுது புலர்றதுக்கு இன்னமும் நேரமிருக்கு. இந்த நேரங்கெட்ட நேரத்துல யார் அக்கரையில இருந்து என்னைக் கூப்பிடுறது?" என்று கூறியவாறு அவன் தென்னையுடன் சேர்த்துக் கட்டியிருந்த படகை அவிழ்த்தான். லுங்கியை மடித்துக் கட்டியவாறு படகை நதிக்குள் செலுத்தினான். படகின் முன்பகுதியில் பாய்ந்து உட்கார்ந்து துடுப்பை எடுத்து மெதுவாகத் துழாவ ஆரம்பித்தான்.

தூரத்தில் இருக்கும் பாறைகள்மீது அலைகள் வந்து மோதி உண்டாக்கிய ஓயாத அந்த சத்தம் அவனுடைய காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது. நிலவு வெள்ளி பூசிக்கொண்டிருந்த சிறு சிறு அலைகளைக் கடந்தவாறு படகு மறு கரையை நோக்கி மெதுவாக நீந்திக் கொண்டிருந்தது. அவன் உரத்த குரலில் பாடத் தொடங்கினான்.

'எதற்காக பூங்கொத்தே

பன்னிரண்டு ஆக வேண்டும்?

எப்போது இப்பூமரம் விரிந்து

நான் தேன் குடிப்பது?'

அக்கரையில் படகைக் கொண்டுபோய்விட்ட அவன் கரையில் ஏறினான்.

அந்த உருவம் சற்று தூரத்தில் நின்றிருந்தது. மம்மு அந்த உருவத்தையே உற்றுப் பார்த்தான். ஒருவேளை அது பேயாக இருக்குமோ என்று எண்ணி அவன் திடுக்கிட்டு நின்றான். பின்பு சற்று நெருங்கி நன்றாக உற்றுப் பார்த்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel