Lekha Books

A+ A A-

படகு - Page 5

padagu

அன்று இரவு அவன் வெற்று வயிற்றுடனும் குழம்பிப்போன சிந்தனையுடனும் கையைத் தலைக்கு வைத்து ஒரு கடைத்திண்ணையில் படுத்துக்கிடந்தான்.

ஹாஜியார் படகுத் துறையை அடைத்துவிட்டுப் போய் சிறிது நேரம் ஆகிவிட்டது. நள்ளிரவு தாண்டிவிட்டிருந்தது. அப்போது ஒரு உருவம் அந்தப் படகுத் துறையை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது.

பார்த்தால், ஒரு பேயைப்போலவே நமக்கு அது தோன்றும். மிகவும் சோர்ந்து மெலிந்து போய்ப் பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு இருந்த அந்த உடல் படகுத்துறையின் அறைக்குப் பக்கத்தில் வந்து நின்று நான்கு பக்கங்களிலும் பார்த்தது. 

மழை முழுமையாக நின்றுவிட்டிருந்தாலும் வானம் இன்னும் தெளிவாகாமல் இருந்தது. நிலவு மேகங்களுக்குப் பின்னாலிருந்து லேசாக முகத்தைக் காட்டிக் கொண்டிருந்ததால் மங்கலான நிலவொளி எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. அந்த மங்கிய நிலவு வெளிச்சத்தில் சுற்றிலுமிருந்த இடங்கள் இதற்கு முன்பு பார்த்த இடங்கள் என்பதைப்போல் தோன்றின.

நதி ஆவேசத்துடன் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கருமேகங்கள் கூட்டம் கூட்டமாகமேற்குப் பக்கத்திலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு உள்ளே ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டிக்கொண்டு கீழே பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு சூறாவளி உண்டாகப் போவதை முன்கூட்டியே அறிவிப்பது மாதிரியான ஒரு பயங்கரமான அமைதி சுற்றிலும் நிலவிக் கொண்டிருந்தது.

அந்த உருவம் மீண்டும் ஏதோ உள்ளுணர்வால் உந்தப்பட்டு நான்கு பக்கங்களிலும் பார்த்தது.

படகுத்துறைக்கு அருகில் படகு ஒரு தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்தது. சொடக்கு போடும் நிமிடத்தில் அந்த உருவம் அந்த இடத்தை அடைந்தது. அந்தப் படகு அந்த உருவத்தை யாரென்று புரிந்துகொண்டு விட்டதைப்போல நீரில் லேசாகத் திரும்பிக் குலுங்கியது. மெதுவாக அசைந்து அசைந்து அந்த உருவத்தை நோக்கி படகு நகர்ந்தது. அதற்கு உயிர் இல்லை என்று யார் சொன்னது?

அந்த உருவம் அந்தப் படகின் முன்பக்கத்தைப் பிடித்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டது. அதன் பலகையில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை அந்த உருவம் பார்த்தது. அடுத்த நிமிடம் அதன் கண்கள் நீரால் நிறைந்தது.

மம்மு கிட்டத்தட்ட ஒரு உயிரற்ற உடலைப்போலவே இருந்தான். ஒரு இடத்தில் கூட நிற்காமல் ஐம்பது மைல் தூரம் அவன் நடந்து வந்திருக்கிறான். அவன் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. அவன் கட்டியிருந்த துணியும் சட்டையும் செம்மண் படிந்திருந்தன.

அவன் படகுத்துறையில் இருந்த அறையைப் பார்த்தான். அந்தத் திண்ணையின் மீது ஒரு தகரவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதையொட்டி விரிக்கப்பட்டிருந்த பாயில் ஒரு பெட்டியைத் தலைக்கு வைத்து தாடி வளர்த்திருந்த ஒரு குள்ளமான முஸ்லீம் உரத்த குரலில் குறட்டை விட்டவாறு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.

தன்னுடைய இப்போதைய நிலை என்னவென்பதை அவன் நன்கு அறிவான். அந்தப்படகு இப்போது அவனுக்குச் சொந்தமானது இல்லை. அந்தப் படகுத்துறையில் அவனுக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்குப் படகில் போக வேண்டுமென்றால் அவனும் கூலியாக முக்கால் பைசா தந்தாக வேண்டும். அவன் பொறாமையுடனும் வெறுப்புடனும் அந்தக் குறட்டைவிட்டுக் கொண்டிருக்கும் காக்காவையே பார்த்தான். இந்த ஜந்து எங்கேயிருந்து வந்தது?

அலைகளின் இரைச்சல் தொடர்ந்து கேட்டவண்ணம் இருந்தது. அடியில் நீர் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நதியின் மேற்பகுதியில் விழுந்து கொண்டிருந்த நிலவொளியை ஒரு 'க்லகள' சத்தத்துடன் ஏற்றுக்கொண்டு ஆயிரம் அலைகள் நடனமாடிக் கொண்டிருந்த அந்தக் காட்சி அவனுடைய இதயத்தில் ஒருவித உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்தது. நதியின் அக்கரையிலிருந்த குடிசைகளையும் தென்னந்தோப்புகளையும் இருண்ட நிழல் வடிவத்தில் அவன் பார்த்தான்.

அவன் மெதுவாகப் படகில் ஏறினான். அதில் தேங்கியிருந்த தண்ணீரை எடுத்து வெளியேற்றினான். பிறகு படகின் கட்டை அவிழ்த்து அதில் காலை நீட்டி உட்கார்ந்து மேற்குப் பக்கமிருந்த கடலை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தான்.

அவனுடைய இதயத்தில் ஒரு புதிய துணிவு உண்டாகியிருந்தது. அவன் மனம் பலவித சிந்தனைகளிலும் மூழ்கியது. அவன் உயிரோட்டமுள்ள ஒரு பாடலாக மாறினான்.

'எதற்காக பூங்கொத்தே

பன்னிரண்டு ஆக வேண்டும்?

எப்போது இப்பூமரம் விரிந்து

நான் தேன் குடிப்பது?’

மகிழ்ச்சியான எண்ணங்களில் மூழ்கிப்போன அவன் மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டேயிருந்தான்.

படகின் வேகம் கூடியது. தொடர்ந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அலைகளின் சத்தம் படிப்படியாக அவன் செவிகளிலிருந்து மறைந்தது. அது அவனுக்கு ஒரு ஆபத்தை அறிவிப்பதைப் போல் இருந்தது.

வானம் இருண்டது. காற்று ஆவேசமாக வீசத் தொடங்கியது. முழுக்கடலும் நுரைகள் சகிதமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அலைகள் மயமாக இருந்தது. அந்தப் படகு கடலும் தநதியும் சந்திக்குமிடத்தில் ஒரு குதி குதித்தது.

மம்மு சுக்கானைக் கீழே இறக்கிவிட்டு புன்சிரிப்பு தவழ படகின் இரண்டு பக்கங்களையும் பிடித்தவாறு முன்னால் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த நீர்ப்பரப்பைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

இரண்டு முறை அந்தப்படகு நீரில் உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. அந்த இறுதிக் கட்டம் வந்தது. ஒரு பெரிய அலை அவனை 'வா' எனஅழைத்தது.

கர்ஜித்து வரும் சிங்கத்தைப் போல பயங்கர ஆவேசத்துடன் பாய்ந்தோடி வரும் ஒவ்வொரு அலையும் அங்கிருந்த பாறைகள் மீது மிகவும் பலமாக மோதியவுடன் உண்டான ஆயிரக்கணக்கான நீர் முத்துக்கள் நான்கு பக்கங்களிலும் சிதறின.

அந்தப் படகு சாய்ந்து ஆடிக்கொண்டே சிறிது தூரம் பயணித்தது. அடுத்த நிமிடம் உயரமாக எழுந்து ஆர்ப்பரித்துக்கொண்டு வந்த ஒரு அலை அதைப் பின்னோக்கி ஒரு அடி அடித்தது.

மறுநாள் புதிய படகோட்டி முஸ்ஸஹாஜி முதலாளியின் அருகில் சென்று பதைபதைப்புடன் சொன்னான்: "முதலாளி, நேற்று வீசின பலமான காற்று, மழையால் நம்ம படகு கயிறு அறுந்து தண்ணியில போயிருச்சு..."

ஹாஜியார் கவலையுடன் உட்கார்ந்திருந்தாரே தவிர, அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கடல்

கடல்

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel