Lekha Books

A+ A A-

படகு - Page 4

padagu

அதில் அமர்ந்துகொண்டு பாடவில்லை. ஒரு இயந்திரத்தைப் போல அவனுடைய கைகள் இயங்கிக் கொண்டிருந்தன.

வானம் நன்கு வெளுத்திருந்தது. நிலவு ஒரு நீர்க்குமிழியைப் போல காணாமல் போயிருந்தது.

படகு மூன்றாவது முறையாக ஆற்றின் நடுப்பகுதியை அடைந்த போது, பாலத்தின் மீது புகைவண்டி போய்க்கொண்டிருக்கும் சத்தம் அவனுடைய காதுகளில் விழுந்தது. புகைவண்டி அவளையும் ஏற்றிக் கொண்டு கோழிக்கோட்டை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

அவன் அமைதியாய் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று முதல் மம்முவின் நடவடிக்கை ஒவ்வொன்றும் மாற ஆரம்பித்தன. அவனிடமிருந்த உற்சாகம் முற்றிலும் காணாமல் போயிருந்தது. தமாஷாகப் பேசுவதும் பாடுவதும் முழுமையாக நின்றுவிட்டிருந்தது. படகில் பயணம் செய்பவர்கள் தங்களுக்குள் தமாஷாகப் பேசிக் கொள்ளும்போது, அதில் அவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதேயில்லை. யாரிடமும் அவன் பேசுவதே கிடையாது. அவன் எப்போது பார்த்தாலும் தீவிர சிந்தனையில் இருப்பது மாதிரியே இருந்தான்.

பல புதிய ஆசைகளும் நோக்கங்களும் அவனை வந்து ஆக்கிரமித்தன. அவன் பல புதிய காட்சிகளைக் கண்டான். புதிதான ஒரு ஆனந்தமயமான பாடல்வரிகள் எங்கோ தூரத்திலிருந்து அவனைத் தடவிச் சென்றன. மரணமடையாத பலப்பல இனிய நினைவுகளில் அவன் மூழ்கிக் கிடந்தான். உயிருள்ள பல கனவுகள் அவன் கண்களில் குடிகொள்ள ஆரம்பித்தன. மம்முவிடம் உண்டான இந்த மாறுதல்களை ஹாஜியார் கவனிக்காமலில்லை. "என்ன... நம்ம மம்முவோட குணம் எவ்வளவோ மாறினது மாதிரி இருக்கே?" என்று ஹாஜியார் ஒருநாள் விசாரித்தார். ஆனால், அதற்கு மம்மு எந்த பதிலும் கூறவில்லை.

மூன்று நாட்கள் கடந்தன. நான்காம் நாள் காலையில் மிகவும் மனவருத்தத்துடன் தயங்கியவாறு மம்மு ஹாஜியாரைத் தேடிச் சென்றான். மிகவும் சோர்ந்து போய்க் காணப்பட்ட அந்த உடலையே ஹாஜியார் உற்றுப் பார்த்தார்.

முந்தைய நாள் தரவேண்டிய பணத்தை ஹாஜியாரிடம் ஒப்படைத்த மம்மு சொன்னான்: "முதலாளி, நீங்க என் படகை வாங்கிக்கோங்க..."

ஹாஜியார் ஆச்சரியம் மேலோங்க அவனைப் பார்த்தார்.

"என்ன மம்மு, உனக்கு ஏதாவது செலவுக்குப் பிரச்சினையா?"

"இல்ல... நான் இங்கேயிருந்து போகப்போறேன்."

"எங்கே?"

"கோழிக்கோட்டுக்கு..."

"எதுக்கு?"

அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

ஹாஜியார் அதற்குப் பிறகும் அவனைப் பார்த்து பல கேள்விகள் கேட்டார். ஆனால், மம்மு கவலையுடன் தலையைக் குனிந்து கொண்டு எதுவுமே பேசாமல் நிற்க மட்டுமே செய்தான்.

கடைசியில் ஹாஜியார் பெட்டியைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டையும் ஒரு ஐந்து ருபாய் நோட்டையும் எடுத்து அவன் கையில் தந்தார். முந்தைய நாள் தரவேண்டிய அவனுடைய கூலி ஐந்தணாவுடன் இனாமாக ஒரு ரூபாய் சேர்த்து இரக்க குணம் கொண்ட அந்த முதலாளி அவனிடம் தந்தார். கண்ணீருடன் மம்மு அவரிடம் விடைபெற்றான். அந்தப் பணத்தைக் கையில் இறுகப் பிடித்தவாறு தன்னுடைய செல்லமான படகை கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்ப்பதற்குக் கூட தைரியமில்லாமல் தலையைக் குனிந்தவாறு அவன் நேராக ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தான். அன்று மதிய நேரத்தில் அவன் கோழிக்கோட்டை அடைந்தான். அந்தப் புதிய நகரத்தைப் பார்த்து அவன் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டான். தான் பிறந்து வளர்ந்த பகுதியைச் சுற்றியுள்ள இடங்களைத் தவிர, ஒரு சிறு நகரத்தைக் கூட அவன் தன் வாழ்க்கையில் அதுவரை பார்த்ததில்லை. கோழிக்கோடு நகரத்தின் ஜனக் கூட்டத்தையும், ஆடம்பரத்தையும் சாலைகளில் வந்து கொண்டிருந்த வாகனங்களையும் உயர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கட்டிடங்களையும் வியப்பைத் தரும் காட்சிகளையும் நவநாகரீகமாக இருந்து மக்களின் ஆடைகளையும் பார்த்து அவன் திகைத்துப்போய் நின்று விட்டான். நுரை எழுந்து கொண்டிருக்கும் மதுவில் சிக்கிக்கொண்ட ஒரு ஈயைப்போல அவன் குழப்பமடைந்து நின்றான்.

அவன் சிறிது நேரம் உட்காரலாம் என்ற எண்ணத்துடன் ஆளில்லாத ஒரு கடைத்திண்ணைப் பக்கமாகச் சென்றான். காலில் நாற்றமெடுத்த புண்களைக்கொண்ட ஒரு பிச்சைக்காரனும் அதே நேரத்தில் அந்தக் கடைத் திண்ணையைத் தேடி வந்தான். அவ்வளவுதான்- மம்மு அந்த இடத்தைவிட்டு அப்போதே புறப்பட்டு விட்டான்.

நகரத்தின் ஆரவாரமும் தூசிப் படலமும் அவன் மனதை நோகடித்தன. எங்கு பார்த்தாலும் இருந்த கெட்ட நாற்றமும் ஈக்களின் கூட்டமும் அவனை வெறுப்படையச் செய்தன.

அவனுக்குப் பசியே தோன்றவில்லை. இருந்தாலும், சாப்பிட வேண்டும் என்பதற்காக சாப்பிட நினைத்தான். யாரோ ஒரு பெரிய ஹோட்டலை அவனுக்குக் காட்டினார்கள். அவன் அங்கு நுழைந்து சாப்பிட உட்கார்ந்தான்.  பத்துப் பன்னிரண்டு பாத்திரங்களில் என்னென்னவோ வைத்து அவனுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தார்கள். அவன் அவற்றில் எதையும் தொட்டுக்கூட பார்க்காமல், ஒருபிடி சோற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு எழுந்து கையைக் கழுவினான். ஹோட்டல் பணியாட்கள் அவனைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்தார்கள்.

சாப்பிட்டதற்குக் கட்டணம் எட்டு அணா.

தனக்கு ஒரு புதிய துணியும் சட்டையும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். முதலில் பார்த்த ஒரு துணிக்கடைக்குள் அவன் நுழைந்தான். கடைசியில் வேலை பார்ப்பவர்கள் அவனுக்கு என்னென்னவோ துணிகளைக் காட்டி ஆறு ரூபாய் அவன் செலவழிக்கும்படி செய்துவிட்டார்கள்.

புதிய ஆடையும் சட்டையும் தொப்பியும் பச்சை நிற பெல்ட்டும் தலைப்பாகையும் அணிந்து அவன் நகரத்தில் சுற்றித் திரிந்தான்.

அவனுக்கு எதுவுமே புரியவில்லை. அறிமுகமான முகங்கள் இல்லை. சொல்லித் தருவதற்குக்கூட ஆள் இல்லை. கடைகள் இருக்குமிடங்களிலும் ஒவ்வொரு தெருக்களிலும் அந்தப் பாழும் ஏழை யாரையோ தேடினான். ஒவ்வொரு வீடுகளின் வாசலையும் அவன் ஆர்வத்துடன் பார்த்தான். பல அழகான முகங்களைக் கண்டான். ஆனால், அந்த ஒரு அழகான முகத்தை மட்டும் அவனால் பார்க்கவே முடியவில்லை. அந்தப் பெரிய நகரம் அந்த முகத்தை முழுமையாக விழுங்கி விட்டிருந்தது. அவன் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் அதைத் தேடி அலைந்தான்.

அன்று இரவு படுப்பதற்கு அவன் ஒரு ஹோட்டலைத் தேடிச் சென்றான். ஆனால், ஒரு பொட்டு கூட அவன் தூங்கவில்லை. வெளியில் மூட்டைப்பூச்சிகளும், கொசுக்களும் உள்ளே நினைவுகளும் அவனைப் பாடாய்ப்படுத்தின. சிறிது நேரம் புரண்டும் திரும்பியும் படுத்துப் பார்த்தான். கடைசியில் பாயை விட்டு எழுந்து உட்கார்ந்தான். அந்த இருட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டு பொழுது புலர்வது வரை அவன் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான்.

இப்படியே பதினைந்து நாட்கள் ஓடி முடிந்தன. அவன் கையிலிருந்த கடைசி காசும் செலவானது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel