Lekha Books

A+ A A-

படகு - Page 3

padagu

அவனுடைய இதயம் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப்போய் நின்றுவிடும் போலிருந்தது. அவன் ஒரு நீண்ட பெருமுச்சை விட்டான்.

படகு மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

மம்மு தூரத்தில் தெரிந்த கடலைப் பார்த்தான். விரிந்து கிடந்த கடல் நிலவொளியில் ஆகாயத்தின் தொடர்ச்சியைப் போல் தோன்றியது. அவன் அக்கரையைப் பார்த்தான். நட்சத்திரமொன்று கண்சிமிட்டியவாறு அந்தத் தென்னந்தோப்பில் போய் விழுந்தது. அவன் அந்த அழகிய பெண்ணின் முகத்தைப் பார்த்தான். அவளும் அந்த நட்சத்திரம் விழுவதைப் பார்த்துக் கொண்டுதானிருந்தாள்.

படகு கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் குழந்தையை மடியிலிருந்து தூக்கி முத்தமிட்டு கீழேவிட்டான். படகு இன்னும் முழுமையாக நிற்கவில்லை. அந்த இளம் பெண் குழந்தையை எடுப்பதற்காக படகில் நடந்ததும் படகின் ஒரு பக்கம் சாய, அவள் கால் தடுமாறி முன்னோக்கி- மம்முவை நோக்கி - விழுந்ததும், அவன் தன்னுடைய இரண்டு கைகளாலும் அவளை இறுகப் பிடித்ததும் ஒரே நேரத்தில் நடந்து முடிந்தன. ஒரு நிமிடம்... அவள் பின்னோக்கி நெளிந்தாள்.

மம்மு அதிர்ச்சியில் உறைந்து போய் ஒருவித உணர்ச்சிவசப்பட்ட நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் சிலையென அதே இடத்தில் நின்றிருந்தான்.

அவள் கரையில் கால் வைத்து குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு, புடவையின் முந்தானையிலிருந்து முக்கால் பைசாவை எடுத்து மம்முவிடம் நீட்டினாள்.

அதை அவன் வாங்கிக் கொள்ள வேண்டியது முறையான ஒன்று தானே! அவன் கையை நீட்டி அந்தக் காசை வாங்கிக் கொண்டான்.

விடைபெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் மம்முவைத் திரும்பிப் பார்த்த அவள் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு நடந்தாள்.

அந்த இரவு நேரத்தில் அவள் அப்படி தனியாக நடந்து போவதைப் பார்த்த மம்முவிற்கு என்னவோ போல் இருந்தது. எனினும் அவளைப் பின்பறற்றி நடந்து செல்லும் தைரியம் அவனுக்கு இல்லை.

அவள் நடந்துபோன பாதையைப் பார்த்தவாறு அவன் அதே இடத்தில் சிறிது நேரம் அசையாமல் நின்றிருந்தான். அதிகாலைக் கோழி அப்போது கூவியது. அவன் கனவிலிருந்து திடுக்கிட்டு எழுவதைப் போல சுயநினைவிற்கு வந்து படகில் போய் உட்கார்ந்தான். அப்போது படகில் என்னவோ மினுமினுப்பாக கிடப்பதை அவன் பார்த்தான். அவள் அமர்ந்திருந்த பாயில் ஒரு தங்க வளையல் கிடந்தது- அவன் அந்த வளையலைக் கையில் எடுத்துக்கொண்டு கரையில் குதித்தான். அவள் நடந்து போன திசையில் அவன் வேகமாக ஓடினான். ஒரு மைல் தூரம் ஓடியபிறகு அவன் அவளைப் பார்த்தான். மூச்சிரைக்க தன்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் மம்முவைப் பார்த்த அவள் வாய்விட்டு கத்திவிட்டாள். ஆனால் அவன் அந்தத் தங்கவளையலை நீட்டிவாறு மூச்சுவிட்டுக் கொண்டே தெளிவில்லாமல் ஒன்றிரண்டு வார்த்தைகளைச் சொன்னவாறு தனக்கு முன்னால் சற்று தயக்கத்துடன் நின்றிருந்ததைப் பார்த்ததும், அவள் முகத்தில் ஒருவித பிரகாசம் உண்டாக ஆரம்பித்தது.

அவள் கேட்டாள்: "ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போறதுன்னா இன்னும் ரொம்ப தூரம் போகணுமா?"

மம்மு சொன்னான்: "இன்னும் ரெண்டு மைல் தூரம் போகணும்." தொடர்ந்து தன் மனதில் சொல்ல நினைத்த விஷயத்தை தயங்கிய குரலில் தட்டுத்தடுமாறி மெதுவாக அவன் சொன்னான்: "வழி தெரியலைன்னா நான் கூட வந்து காட்டுறேன்."

அவள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள்.

புழுதி நிறைந்த அகலமான ஒரு பாதை அது. கண்ணாடித் துகள்களைப் போலிருந்த அந்த மண்ணில் நிலவொளி பிரகாசித்தது. இரு பக்கங்களிலும் இருந்த உயரமான வேலிகளில் மருதாணிச் செடிகள் வளர்ந்து படர்ந்து காணப்பட்டன. அங்கு அரிப்பூச் செடிகளும் தெச்சி மரமும் மிகவும் நெருக்கமாகக் காணப்பட்டன. அந்த அமைதியான சூழ்நிலையில் அந்தத் தன்னந்தனியான பாதையில் என்னவோ பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் மெதுவாக நடந்து சென்றார்கள். குளிர்ச்சியான அதிகாலைக் காற்று அவர்கள்மீது பட்டு போய்க் கொண்டிருந்தது.

ஆமினா அந்த இளம்பெண்ணின் இடுப்பிலிருந்து மம்முவிடம் வருவதற்கு என்னென்னவோ சாகசங்களைச் செய்து கொண்டிருந்தாள்.மம்மு கையை நீட்டினான். அவள் தன் குழந்தையை அவனிடம் தந்தாள்.

அருகிலிருந்த ஒரு நெல்லி மரத்தின் மீதிருந்த குருவியும் புறாவும் அதிகாலை நேரம் வந்துவிட்டதை அறிவிப்பதற்காக சத்தமிட ஆரம்பித்தன.

அவர்கள் ரயில்வே ஸ்டேஷனை நெருங்கினார்கள். மம்மு மனமே இல்லாமல் ஆமினாவைத் திரும்பவும் அந்த இளம் பெண்ணின் கையில் கொடுத்தான். அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் இப்படி முடிந்தது:

"ஆமா... நீங்க எங்கே போகணும்?"

"கோழிக்கோட்டுக்கு..."

"அங்கே யாரு இருக்காங்க?"

"அண்ணன்..."

"கோழிக்கோட்டுல எங்கே?"

"நகரத்துலதான்..."

"எப்போ திரும்பி வருவீங்க?"

"இப்போ திரும்பி வர்றதா இல்ல..."

சிறிது நேரம் அவர்களுக்கிடையில் ஒரே அமைதி நிலவியது.

பிறகு அவள், "நீங்க செய்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன். ஆமா... நீங்க எப்பவாவது கோழிக்கோட்டுக்கு வருவீங்களா?" என்று கேட்டாள். மம்மு சிறிது நேரம் என்னவோ சிந்தித்தவாறு நின்றிருந்தான். பிறகு வருத்தம் தோய்ந்த குரலில் அவன் சொன்னான்: "நான் வந்துட்டா இங்கே யாரு படகு ஓட்டுவாங்க?"

மீண்டும் அமைதி.

மம்மு மிகவும் தயங்கியபடி தடுமாறிய குரலில் மெதுவாக அவளைப் பார்த்துக் கேட்டான்: "உங்க பேரு என்ன...?"

அவள் சிறிது நேரம் தயங்கியபடி எதுவும் பேசாமல் நின்றாள். மம்முவின் முகத்தில் ஒருவித பிரகாசம் உண்டானது. 

பிறகு அவள் மெதுவான குரலில் "அலீமா" என்றாள்.

'அலீமா! அலீமா!'- மம்மு மனதிற்குள் கூறிப் பார்த்தான். அவர்கள் அதற்குள் ரயில்வே ஸ்டேஷனுக்கு மிகவும் நெருக்கமாக வந்திருந்தார்கள். "அதுதான் அலுவலகம் நான் புறப்படுகிறேன். சந்தையில இருந்து வர்றவங்க சுமைகளோட படகுத்துறையில காத்திருப்பாங்க..."

பிரிந்துபோகும் அவனையே அலீமா ஒருவகை ஆர்வத்துடன், ஈர்ப்புடன் பார்த்தாள். 

மம்முவின் இதயம் நீரில் மூழ்க வைத்த பூசணிக்காயைப் போல மேலே வர முயற்சித்துக் கொண்டிருந்தது. அவன் திரும்பிப் பார்க்காமல் தலையைக் குனிந்தவாறு நடந்தான். சிறிது தூரம் நடந்தபிறகு அவனால் திரும்பிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. உள்ளே எழுந்த ஒருவகை உணர்வுடன் அவன் திரும்பிப் பார்த்தான். அலீமா அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள். அவன் தன்னைப் பார்ப்பதைக் கண்டவுடன் அவள் ஆமினாவின் பிஞ்சுக் கரங்களைக் கையிலெடுத்து அவற்றால் அவனை அழைத்தாள்.

மம்மு படகுத் துறையை நோக்கி சிரமமான மனதுடன் நடந்தான்.

அக்கரையில் இருந்த சுமை வைத்திருந்தவர்கள் உரத்த குரலில் அவளை அழைத்தார்கள். அவன் படகை நகர்த்தினான். ஆனால், எப்போதும் போல அதில் வேகமாக அவன் பாய்ந்து உட்காரவில்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel