Lekha Books

A+ A A-

படகு - Page 2

padagu

ஒரு தாயும் அவளின் இடுப்பில் ஒரு குழந்தையும்!

"எங்களை அந்தக் கரையில கொண்டுபோய் விடணும்."

அந்தச் சலனம் உண்டாக்கக்கூடிய இனிமையான வார்த்தைகள் அவன் மனதில் ஒரு சிறு பாதிப்பை உண்டாக்கியது. அவன் மனதில் இருந்த சந்தேகம் முழுமையாக நீங்கிவிட்டது. ஆனால், ஆச்சரியம் அவனைவிட்டு சிறிதும் நீங்கவில்லை. அவன் அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்தான். வெண்மையான துணியால் தலை வரை அவள் மூடியிருந்ததால் அவளுடைய முகத்தை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. அந்த முகமோ முழு நிலவைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்தது. குழந்தையை இறுக அணைத்திருந்த அவளின் இடதுகை நிறைய தங்க வளையல்களும் கைவிரல்களில் கல்வைத்த தங்க மோதிரங்களும் ஒளிர்ந்து கொண்டிருந்தன. மருதாணி போட்டு சிவப்பாக இருந்த கால் பாதங்களில் பாதி மணலில் மறைந்திருந்தது. ஒரு பட்டுக் குடையை விரித்துப் பிடித்திருந்ததில் அவள் அதற்குப் பின்னால் அவ்வப்போது மறைந்து கொண்டிருந்தாள்.

மொத்தத்தில் அவள் தாமரை இலைக்குப் பின்னால் தலையை மறைத்துக்கொண்டிருக்கும் ஒரு அன்னப் பறவையைப் போல் இருந்தாள். அவளை அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர மம்முவால் எதுவும் பேசமுடியவில்லை. கடைசியில் மம்மு கேட்டான்: "தன்னந்தனியா இந்த ராத்திரி நேரத்துல நீங்க எங்கே போறீங்க?"

அவள் தலையைக் குனிந்தவாறு பதில் சொன்னாள்: "நிலவைப் பார்த்துட்டு பொழுது விடிஞ்சிருச்சுன்னு நினைச்சு வீட்டை விட்டு கிளம்பிட்டேன். நாங்க ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகணும்."

மம்மு அதற்குமேல் அவளிடம் எதுவும் விசாரிக்கவில்லை. அவள் ஒரு கையால் புடவையைச் சற்றுத் தூக்கிப் பிடித்து, முழங்கால்வரை இருக்கும் தண்ணீரில் படகை நோக்கி நடந்தாள்.

மம்மு படகில் ஏறி அதிலிருந்த தண்ணீரை வெளியேற்றி ஒரு பாயை விரித்துப் போட்டான். அவள் குழந்தையைப் பாயில் படுக்க வைத்து சற்று குனிந்து கணுக்கால்களை உயர்த்தியவாறு அதே இடத்தில் நின்றிருந்தாள்.

மம்மு படகை அவிழ்த்து முன்னால் உட்கார்ந்து துடுப்பைப் போட்டு துழாவி படகைச் செலுத்தினான். பலம் படைத்த அவனுடைய கைகள் தொடர்ந்து செயல்பட அந்தச் சிறிய படகு நிலவொளியில் உணர்ச்சிவசப்பட்டுக் கிடக்கும் நதியின் விரிந்த மார்பின் வழியாக நீந்திக் கொண்டிருந்த இதயபூர்வமான காட்சியைப் பார்ப்பதற்கு வானத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?

இதற்கு முன்பு அனுபவித்திராத ஒரு புதிய ஆனந்தத்தின் ருசியை அனுபவித்தவாறு அவன் படகைச் செலுத்தினான். அந்த ஆனந்தம் ஆயிரம் மடங்காகப் பெருகி அவனுடைய உள்மனதில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது.

தான் இப்போது கண்டுகொண்டிருக்கும் காட்சியை அவனால் சிறிதுகூட நம்ப முடியவில்லை. நிலவொளியில் மூழ்கிக் கிடக்கும் பொழுது புலராத நேரம். எல்லாரும் ஆழமான தூக்கத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஒரு உயிரின் சத்தமோ, அசைவோ அப்போது கேட்கவேண்டுமே! தூரத்தில் கடலிலிருந்து தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் இரைச்சல் சத்தம் மட்டும் கேட்ட வண்ணம் இருந்தது. தூக்கத்தில் மூழ்கிவிட்டிருக்கும் இயற்கையின் குறட்டை ஒலியைப் போல அது இருந்தது. அவனுடைய சிறு படகு நதியின் குளிர்ச்சியான மார்பின் வழியாக மெதுவாக நீந்திக் கொண்டிருந்தது. அதில் துணைக்கு என்று யாருமில்லாத ஒரு அழகான இளம்பெண் அமர்ந்திருக்கிறாள். அவள் உலகில் வந்து விழுந்த தேவகன்னிகளில் ஒருத்தியாக இருப்பாளோ என்று அவன் நினைத்தான். அவன் அவளைப் படகில் உட்கார வைத்து அதைச் செலுத்திக் கொண்டிருந்தான். அவர்கள் நதியின் மையப்பகுதியில் இருந்தார்கள். தூரத்தில் பாறைமீது அலைகள் விடாமல் மோதிக் கொண்டேயிருந்தன. மெல்லிய குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. பலவிதமான இனிய விஷயங்களும் ஒன்று சேர்ந்து படகை நதியில் நீந்தச் செய்து கொண்டிருந்தன. 'க்ல-களக்ல' என்ற ஒலி அவனுடைய காதுகளில் ஒலித்து அவனை புதுவகையான ஒரு உணர்வுக்கு ஆளாக்கியது. கனவு உலகத்தை நோக்கி ஆயிரம் வெள்ளிக் கீற்றுகளைப் பாய்ச்சியவாறு பிறைநிலவு வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மொத்தத்தில் அந்தக் காட்சி மிகவும் இனிமை பயக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. கவிதையின் உயிர்ப்பு கொண்ட ஒரு அழகு ஓவியம் அது!

அவனுக்குப் பாட வேண்டும் போல் இருந்தது. எனினும் வெட்கம் அதைச் செய்யவிடாமல் அவனைத் தடுத்தது.

அவன் அவளைப் பார்த்தான். அவளின் கறுத்த அகலமான கண்கள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன. அவர்களின் பார்வைகள் ஒன்றையொன்று மோதியபோது அவள் ஒரு வகை அதிர்ச்சியுடன் தன் முகத்தை மூடியவாறு தலையைக் குனிந்து கொண்டாள்.

அவளின் அந்தச் செயல் அவனுடைய இதயத்தை என்னவோ செய்தது. நிலவொளியில் வெள்ளரிக்காயைப் போல இருந்த அந்த முகத்தையும் கருகருவென்றிருந்த அந்தக் கண்களையும் ஒரே ஒரு நிமிடம் மட்டுமே அவன் பார்த்தான்.

அவளுடைய குழந்தை மெதுவாக ஊர்ந்துவந்து அவன் காலைப் பிடித்துக்கொண்டு நின்றது. அதைப் பார்த்ததும் அவனுடைய இதயத்தில் ஒருவித உணர்ச்சி கொந்தளித்தது. அவன் குழந்தையின் முகத்தைப் பார்த்தான். அது 'உப்பா' என்று அழைத்தவாறு அவளைப் பார்த்து சிரித்தது. "ஆமினா... ஆமினா... இங்கே வா"- அந்தக் குழந்தையின் தாய் ஆவேசத்துடன் கையை நீட்டி அழைத்தாள். ஆனால், அவள் அழைத்ததை காதிலேயே வாங்கவில்லை ஆமினா. அவள் மம்முவின் கால்களைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

'ஆமினா' என்ற பெயர் மம்முவின் இதயத்தை நிலைகுலையச் செய்தது. அது இறந்துபோன அவனுடைய உம்மாவின் பெயர்.

படகு லேசாகக் குலுங்கியது. அந்தக் குழந்தை எங்கே கீழே விழுந்துவிடப்போகிறதோ என்று நினைத்த மம்மு அவளைத் தன் கால்களுக்கிடையில் இறுகப் பற்றிக் கொண்டான்.

ஆமினா குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு மம்முவின் தொடைகளைக் கைகளால் அடிக்க ஆரம்பித்தாள்.

மம்மு குனிந்து ஒரு கையால் குழந்தையைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு இன்னொரு கையால் படகைச் செலுத்தினான்.

ஆமினா அவனுடைய தாடையைக் கையால் அடிப்பதும் சிரித்துக்கொண்டே கிள்ளுவதுமாக இருந்தாள். அவனுடைய மடியில் அவள் உட்கார்ந்திருக்க, படகு நகர்ந்து கொண்டிருந்தது.

மம்மு குழந்தையைப் பார்த்ததும் உணர்ச்சிமயமாகிவிட்டான். அவன் ஆமினாவின் தடித்த உதடுகளிலும் சதைப்பிடிப்பான கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டான்.

மம்மு கேட்டான்: "ஆமினா, உனக்கு உப்பா இல்லியா?"

"இல்ல..."- வருத்தம் கலந்த குரலில் அந்தப் பெண் பதில் சொன்னாள்: "அவர் இறந்து மூணு மாசமாச்சு. உப்பான்னு நினைச்சுத்தான் அவ உங்கக்கிட்ட இவ்வளவு நெருக்கமா இருக்கா."

மம்மு ஆமினாவை மீண்டுமொருமுறை முத்தமிட்டான். அவள் அலைகளைப் போல குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு தன்னுடைய பிஞ்சு விரல்களை மம்முவின் வாய்க்குள் வைத்தாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel