Lekha Books

A+ A A-

முட்டை இடும் யானை

Muttai Idum Yanai

திருமண நாளன்று ஒரு பரிசு தருவதென்பது எப்போதும் வழக்கத்தில் இருக்கிற ஒன்று.

            ‘‘சீதா, உனக்கு என்ன வேணும் ? - திருமண நாள் நெருங்குகிற வேளையில் அவன் அவளைப் பார்த்து கேட்டான்.

‘‘புடவை வேணுமா ? மாலை வேணுமா ?

சென்ற ஆண்டு கல் பதித்த ஒரு ஜோடி வளையல்களை அவன் அவளுக்கு வாங்கித் தந்திருந்தான்.

இந்த வருடம் அவர்களுக்கு திருமணம் நடந்து ஐந்தாவது வருடம்.

இந்த வருடம் விலை மதிப்புள்ள ஒரு பொருளை அவளுக்கு வாங்கித் தர அவன் விரும்பினான். அவள் என்ன கேட்டாலும் வாங்கித் தர வேண்டும் - அவளின் விருப்பம் எதுவோ அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான்.

அதனால் அவளுக்குத் தெரியாமலே அவன் ஒரு பெரிய தொகையைச் சேமித்து வைத்திருந்தான். பணத்தை வைத்து வாங்கக் கூடிய எந்தப் பொருளையும் இந்த முறை வாங்கிக் கொடுப்பதில் அவனுக்குப் பிரச்னையேயில்லை. இதை நினைத்து நினைத்து அவன் மனதிற்குள் சந்தோஷப்பட்டான்.

அக்டோபர் நான்காம் தேதிதான் அவர்களின் திருமண நாள். ஒரு மாதத்திற்கு முன்பே அவளிடம் பரிசு தரப் போகிற பொருளைப் பற்றி பேசி விட வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான்.

பெரிய விருப்பங்கள் எதுவும் இல்லாத பெண் அவள். இது வேண்டும் அது வேண்டும் என்று அவனை எப்போதும் அவள் கேட்க மாட்டாள். 

நகரத்தில் மயிலிறகுகளை ஞாபகப்படுத்துகிற புடவைகள் கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும்.

‘‘வசந்த் அத்தான், எனக்கு அந்தப் புடவையை வாங்கித் தர முடியுமா ?’’

அவள் இப்படி கேட்க மாட்டாளா என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அவள் கேட்கவில்லை. மயிலிறகுகளை வைத்து நெய்யப்பட்ட புடவையை அணிந்து ஃப்ரில் வைத்த வெள்ளை நிற படுக்கையில் படுத்திருக்கும் சீதாவைக் கனவு கண்டு கொண்டே அவன் நடந்து சென்றான்.

எதையும் விருப்பப்பட தெரியாமல் இருந்தாள் அவள். ஆனால்...

‘‘இந்த வருடம் எனக்கு பரிசா என்ன வாங்கித் தர போறீங்க -?’’ - அவனே ஆச்சரியப்படும் விதத்தில் அவள் கேட்டாள் : ‘‘நம்ம கல்யாண நாள் சீக்கிரம் வருதே !’’

அவள் கடைசியில் பொருட்களை விரும்ப தொடங்கியிருக்கிறாள் என்பதை நினைக்கும்போது அவனுக்கு அளவுக்கதிகமான ஆனந்தம் தோன்றியது.

‘‘என்ன வேணும்னாலும் கேளு, நான் வாங்கித் தர்றேன்.’’

‘‘என்ன வேணும்னாலும் ?’’

‘‘ஆமா...’’

‘‘ஒரு யானை முட்டையை எனக்கு வாங்கித் தர முடியுமா ?’’

வெளியே இரவு முல்லைகள் மலர்ந்து கொண்டிருந்தன. வாசலிலும் சுற்றுப் புறத்திலும் பரவியிருந்த நறுமணம் உள்ளேயும் வந்து கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ செண்பக மலர்கள் பூத்திருந்தன. மோகினிமார்களின், மோகனமார்களின் இரவாக இருந்தது அது.

‘‘நான் சொன்னது காதுல விழுந்தது இல்ல ? என்ன, பதிலையே காணோம் ? நான் என்ன கேட்டாலும் வாங்கித் தருவேன்னு சொன்னீங்க ?’’

‘‘விளையாடாதே சீதா.’’

‘‘நான் ஒண்ணும் விளையாடல. திருமண நாள் வர்றதுக்கு முன்னாடி என் கையில யானை முட்டை இருக்கணும்.’’

அதற்குப் பிறகு அதைப் பற்றி அவர்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கண்ணுக்குத் தெரியாத தூரத்தை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தூங்கும்போது நீராவியைப் போல வெப்பம் நிறைந்த கனவுகள் அவனுக்கு வந்து கொண்டிருந்தன.

மறுநாள் படுக்கையை விட்டு எழுந்தபோது இரவில் நடந்த சம்பவத்தை கிட்டத்தட்ட அவன் மறந்து போயிருந்தான்.

‘‘நான் சொன்னது ஞாபகத்துல இருக்குல்ல -? யானை முட்டையைத் தவிர, இந்த வருடம் எனக்கு வேற எதுவுமே வேண்டாம்...’’

அவன் அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவள் அதை ஞாபகப்படுத்தினாள். அவன் சுய நினைவிற்குத் திரும்பி வந்தான். மனக்கண்களுக்கு முன்னால் ஒரு பயமுறுத்தும் கனவைப் போல, ஒரு அணு குண்டைப் போல பெரிய ஒரு யானை முட்டை.

சாயங்காலம் மீண்டும் ஒரு சம்பவம்.

‘‘தேவையில்லாம விளையாடத’’ - அவன் சொன்னான் : ‘‘இனி இருக்குறதே நான்கு வாரங்கள்தான். தட்டான்மார்கள் வேலையில சுறுசுறுப்பா இருக்குற நேரமிது.’’

போன வருடம் கல் பதித்த வளையல்களை முடித்துத் தர தட்டான் வாசுவிற்கு ஒரு மாதம் ஆனது.

‘‘யாரு தங்கத்துல நகை கேட்டாங்க -? எனக்கு என்ன வேணும்ன்றதை நான் ஏற்கனவே சொல்லிட்டேன். சொன்ன வாக்கை காப்பாத்துற ஆளா இருந்தா, நான் என்ன கேட்டேனோ அதைக் கொண்டு வந்து தாங்க...’’

மை போட்டு கருப்பாக்கிய கண்களில்மிடுக்கின் வெளிப்பாடு தெரிந்தது.

அவனுக்கு தர்மசங்கடமான நிலையாகிவிட்டது. தன்னுடைய குரலை வேண்டுமென்றே சாந்தமாக்கிக் கொண்டு அவன் கேட்டான் :

‘‘யானை முட்டை போடாதுன்ற உண்மை உனக்கு தெரியாதா, சீதா ?’’

‘‘முட்டைபோடுற ஒரு யானை இருக்கு.’’

‘‘எங்கே இருக்கு ?’’

ஆர்வத்துடன் அவன் கேட்டான். யானை ஒரு பால் கொடுக்கும் உயிர் என்பதையும் குட்டிகளை ஈன்றெடுப்பதுதான் அதன் வழக்கம் என்பதையும் அவன் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தான்.

‘‘சொல்லு... எங்கே இருக்கு ?’’

அவன் திரும்பவும் கேட்டான். இலட்சம் போய் கொடுத்தாவது அவன் அந்த யானையின் முட்டையை வாங்கிக் கொண்டு வருவதற்கு தயாராக இருந்தான்.

‘கிழக்கு திசையில் இருக்குற ஏதோ ஒரு இடத்துல அது இருக்கு...’

அவளுக்குத் தெரிந்தது அது மட்டுமே.

கல் வைத்த வளையல் வேண்டுமென்று அவள் சொன்னபோது பணத்தை எடுத்துக் கொண்டு மறு நிமிடமே தட்டானைத் தேடி தான் ஓடியதை அவன் நினைத்துப் பார்த்தான். காஷ்மீர் சில்க்கால் ஆன புடவை வேண்டுமென்று சொன்னபோது நாற்பது மைல் தூரத்தில் இருந்த நகரத்திற்கு தான் ஓடிச் சென்றதை அவன் நினைத்துப் பார்த்தான்.

‘‘இந்த முறையும் நான் உன் விருப்பத்தை கட்டாயம் நிறைவேற்றுவேன். என்கிட்ட உயிர் இருக்குறதுக்குள்ளே உன் காலடியில் அந்த யானை முட்டையைக் கொண்டு வந்து வைப்பேன்...’’ -  அவன் தன் மனதிற்குள் கூறிக் கொண்டான்.

அப்போது கொளுத்திய சிகரெட்டை வீசி கீழே எறிந்தான். லுங்கியை அவிழ்த்துப் போட்டு விட்டு வேஷ்டியை எடுத்து கட்டினான். பனியனுக்கு மேலே சட்டையை எடுத்து அணிந்தான்.

யானை முட்டையைத் தேடிச் செல்லும் நீண்ட பயணம் ஆரம்பமானது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கடல்

கடல்

September 24, 2012

டில்லி 1981

டில்லி 198…

February 15, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel