Lekha Books

A+ A A-

முட்டை இடும் யானை - Page 3

Muttai Idum Yanai

திருமண நாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் நான்கே நாட்கள்தான் இருக்கின்றன என்பதை மனதில் ஒருவித நடுக்கத்துடன் அவன் நினைத்துப் பார்த்தான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாத மனநிலையுடன் இருந்த அவன் பைத்தியம் பிடித்தவனைப் போல் கோபுர வாசல் கதவுகளை வேகமாக தட்டினான்.

மதிய நேரம் ஆனபோது ஒரு பணியாள் அவனை அரசனிடம் அழைத்துச் சென்றான்.

சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசனைப் பார்த்தபோது அவனுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அரசனின் கீரிடத்தில் வைரக் கற்கள் மின்னிக் கொண்டிருந்தன. கால் பாதங்களில் பவளம் கொலித்தது. கழுததில் இரத்தின மாலைகள்.

அவன் அரசனுக்கு முன்னால் போய் நின்று தன் மனதில் உள்ள கவலையைச் சொன்னான். அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்ட அரசன் சொன்னான் :

‘‘முட்டை தர்றேன். ஆனால்...’’

‘‘நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க தயாரா இருக்கேன். முதல்ல முட்டையைத் தாங்க...’’

அரசன் சிம்மாசனத்தை விட்டு எழுந்து இங்குமங்குமாய் நடக்க ஆரம்பித்தான். இரண்டு பக்கங்களிலும் நின்றிருந்த சேவகர்களின் தலைகள் அரசன் நடந்து செல்லும்போது அடுத்தடுத்து குனிந்தன.

இரண்டு முறை நடந்த பிறகு திரும்பி வந்து மீண்டும் அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்தான். அவனுடைய கண்கள் வசந்தனையே உற்றுப் பார்த்தன.

‘‘இரண்டு நிபந்தனைகளின் பேரில் நான் உனக்கு முட்டை தர தயாரா இருக்கேன்.’’

‘‘நீங்க என்ன நிபந்தனை சொன்னாலும் அதை ஏத்துக்க நான் தயாரா இருக்கேன்...’’

வெளியில் ஒரு யானையின் கழுத்து மணியோசையை வசந்தன் கேட்டான். பூமியில் முட்டை போடும் ஒரே யானையின் மணியோசை அது.

‘‘என் மகள் ராஜகுமாரியை நீ திருமணம் செய்யணும்.’’

‘‘ஆனால், நான் ஏற்கெனவே திருமணம் ஆனவனாச்சே !’’

அதை காதில் வாங்காததைப் போல் அரசன் சொன்னான் :

‘‘ராஜகுமாரிக்கு குஷ்டம் இருக்கு.’’

‘‘பிரபு...’’

‘‘நல்லா சிந்திச்சுப் பாரு...’’ - அரசன் சிம்மாசனத்தை விட்டு எழுந்தான். ‘‘சூரியன் மறையிறதுக்குள்ளே பதில் சொல்லணும்’’ - அவன் சொன்னான்.

சிம்மாசனத்திற்குப் பின்னாலிருந்த பட்டு திரைச் சீலைகளை விலக்கியவாறு அரசன் காணாமல் போனான். அமைச்சரும் படைத் தலைவனும் படை வீரர்களும் சேவகர்களும் மறைந்தார்கள்.  வசந்தன் இப்போது தனியே இருந்த சிம்மாசனத்திற்கு முன்னால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றிருந்தான்.

அப்போது அவன் முன்னால் ஒரு கூனன் வந்து நின்றான்.

கூனன் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய வீட்டிற்கு வசந்தனை அழைத்தான்.

அந்த வீட்டில் வைத்துத்தான் வசந்தன் ராஜகுமாரியைப் பற்றியும் யானையைப் பற்றியும் தெரிந்து கொண்டான்.

யானை வருடத்தில் ஒருமுறை மட்டுமே முட்டை போடும். இதுவரை அது பதினேழு முட்டைகள் போட்டிருக்கின்றன. அந்த முட்டைகளை ராஜகுமாரி ஒரு தங்கத்தால் ஆன பெட்டியில் பத்திரமாக வைத்திருக்கிறாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் ஆணுக்கு முன்னால் மட்டுமே அவள் அந்த பெட்டியைத் திறப்பாளாம்.

கூனன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான். வசந்தன் அதை காதிலேயே வாங்கவில்லை. அவன் மனம் முழுக்க சீதாதான் நிறைந்திருந்தாள்.

அவளுக்கு தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். சீதாவின் விருப்பம் நிறைவேற வேண்டும். தான் செய்ய வேண்டிய முதல் வேலை அதுதான். யானை முட்டையைத் தேடித்தான் தான் பயணம் புறப்பட்டதே. அது இல்லாமல் சீதாவிடம் மீண்டும் திரும்பிச் செல்லவே முடியாது.

அதே நேரத்தில் அந்த முட்டைக்காக சீதாவை நிரந்தரமாக இழக்க முடியுமா ? இப்படி பலவிதப்பட்ட சிந்தனைகளும் ஆணியைப் போல் அவனுடைய மனதில் நுழைந்து அவனை பாடாய்படுத்தின. ‘‘என் சீதா...’’ அவன் மனதிற்குள் சொன்னான்.

கூனன் இப்போது நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். வெயிலின் கடுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருவதையும் சூரியன் மேற்கு திசை நோக்கி நகர்வதையும் வசந்தன் மூச்சடைக்க பார்த்துக் கொண்டிருந்தான். அசோக மரங்களின் நிழல்கள் நீண்டு கொண்டிருந்தன.

சூரியன் என்ற பெரிய சிலந்தி சிறிது சிறிதாக நகர்ந்து வானத்தின் விளிம்பை அடைந்தபோது, ஒரு படைவீரன் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றான். அவன் வசந்தனை சிம்மாசனத்திற்கு முன்னால் வரும்படி அழைத்தான்.

‘‘நீ என்ன தீர்மானிச்சே ?’’

அரசன் கேட்டான். அவன் அரசனுக்கு முன்னால் தலைகுனிந்து நின்றான். அவனின் மனக் கண்கள் திறந்திருந்தன. தென்னை மரங்களும், குத்து விளக்குகளும் அநத மனக்கண்ணில் தோன்றின. நிறைய முல்லைப் பூக்களைச் சூடிய சீதாவின் தலையில் அரிசி இருந்தது. கழுத்தில் அவன் அணிவித்த தங்கத் தாலி.

‘‘சொல்லு...’’

அரசனின் குரல் உயர்ந்தது.

‘‘நீங்க சொன்ன நிபந்தனையை நான் ஏத்துக்கறேன்.’’

நம்பிக்கை வராததைப் போல அரசன் அவனுடைய முகத்தையே பார்த்தான்.

அப்போது சிம்மாசனத்திற்குப் பின்னால் பட்டு திரைச்சீலைகள் அசைந்தன. பணியாட்கள் ஒரு பெரிய தங்கப் பெட்டியைச் சுமந்து கொண்டு வந்தார்கள். பெட்டிக்குப் பின்னால் பட்டாடைகளும் பொன் நகைகளும் அணிந்த ராஜகுமாரி வந்தாள். அவளுடைய மூக்கின் ஒரு பக்கம் சப்பிப் போயிருந்தது. இரு கன்னங்களிலும் பரவியிருந்த புண்கள்...

அவள் தங்கப் பெட்டியைத் திறந்தாள்.

பஸ்ஸை விட்டு இறங்கிய வசந்தன் தன் வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். வழியில் பார்த்த யாருக்கும் அவனைஅடையாளம் தெரியவில்லை. அவன் அணிந்திருந்த ஆடைகள் அழுக்காகிப் போய் நாறின. முகத்தில் காடென முடி வளர்ந்திருந்தது. கண்களில் குழி விழுந்திருந்தது.

அவன் தோளில் ஒரு பெரிய பை தொங்கிக் கொண்டிருந்தது.

சீதா உறங்கிக் கொண்டிருந்தாள். நாளை அவர்களின் ஐந்தாவது திருமண நாள். அதன் நினைவு காரணமாக இருக்கலாம் - அவளின் உதடுகளில் புன்னகை முழுமையாக பரவி விட்டிருந்தது.

அவன் அவளுக்கருகில் அமைதியாக நின்றான். குனிந்து அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான். அவளின் கன்னங்களை மெதுவாக தன் விரல்களால் தடவினான்.

கடைசியில் பையைத் திறந்து உள்ளே இருந்த பொருளை எடுத்து அவளுக்கு அருகில் வைத்தான். தூக்கத்தில் தன்னுடைய குழந்தையைப் போல அவள் முட்டையை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

ஒரு நிமிடம் அவள் கண்களை இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு மெதுவாக வெளியே நடந்தான்.

பொழுது புலர்ந்திருக்கும் பாதை வழியே அவன் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான். ‘ஷ’ என்ற நாட்டின் ராஜகுமாரி அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel