Lekha Books

A+ A A-

முட்டை இடும் யானை - Page 2

Muttai Idum Yanai

முதல் விசாரிப்பில் ஒரு விஷயம் அவனுக்குத் தெரிய வந்தது. சீதா சொன்னது உண்மைதான். முட்டை இடும் யானை இருக்கவே செய்கிறது. அது எந்த ஊரில் என்பதுதான் தெரியவில்லை. அதைத்தான் அவன் கண்டுபிடிக்க வேண்டும்.

அவன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகமாக நடந்தான். இரண்டு வாரங்களுக்குள் தன் மனதில் நினைப்பதை நடத்திக் காட்ட வேண்டும். முட்டையுடன் திரும்பி வர வேண்டும். சீதாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக எதையும் செய்ய தான் தயாராக இருக்க வேண்டும். மரணமே நேர்வதாக இருந்தால் கூட - என்றெல்லாம் அவன் மனதில் நினைத்தான்.

இரவு முழுவதும் அவன் நடந்து கொண்டேயிருந்தான். சிறிது கூட அவன் தன் கண்களை மூடவில்லை. உணவு உண்ணவோ நீர் அருந்தவோ கூட இல்லை.

‘‘முட்டை போடுற யானை எந்த ஊர்ல இருக்கு ?’’

வழியில் பார்த்தவர்களிடமெல்லாம் அவன் கேட்டான். அவர்கள் சொன்னார்கள் :

‘‘உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு ?’’

கிழக்கு திசையில் சூரியன் தன் முகத்தைக் காட்டியது. மிகவும் களைத்துப் போய் காணப்பட்ட அவன் பாதையோரத்திலிருந்த ஒரு மர நிழலில் போய் உட்கார்ந்தான். சிறிது நீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். அந்த இடத்தில் ஒரு கிணறோ குளமோ இருப்பது மாதிரி தெரியவில்லை.

மரத்தடியில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்த அவன் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

பார்ப்பவர்களிடமெல்லாம் கேட்பதை நிறுத்தினான். அப்படி கேட்பதால் எந்தவொரு பயனுமில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.

மாலை நேரம் ஆனபோது அவன் ஒரு நகரத்தையும் சில கிராமங்களையும் கடந்திருந்தான். ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மலை அடிவாரத்தில் அவன் இப்போது நடந்து கொண்டிருந்தான். நிழல்விழுந்து கொண்டிருந்த ஒரு மாமரத்திற்கு அடியில் ஒரு ஆட்டு இடையன் உட்கார்ந்திருந்தான்.

இடையனின் புல்லாங்குழல் இசை நின்றது. அவன் எழுந்து புதிதாக வந்து நின்றிருந்த மனிதனின் அருகில் வந்தான்.

‘‘நீங்க யாரு ?’’ - இடையன் கேட்டான்.

‘‘என் பேரு வசந்தன். முட்டை போடுற யானையைத் தேடி நான் வந்திருக்கேன்.’’

அதற்கு மேல் அவனால் எதுவுமே பேச முடியவில்லை. உணவு உண்டு எவ்வளவோ நேரமாகியிருந்தது. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் அவன் வயிற்றுக்குள் சென்றது அருவியொன்றிலிருந்து குடித்த தண்ணீர் மட்டுமே.

அவனுடைய கஷ்ட நிலையைப் பார்த்த இடையனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவன் ஒரு ஆட்டிடம் பால் கறந்தான்.

ஒரு பீங்கான் டம்ளர் நிறைய பாலைக் கொண்டு வந்து அவன் வசந்தனிடம் கொடுத்தான்.

பால் உள்ளே சென்றதும் உயிர் திரும்பி வந்ததைப் போல் உணர்ந்தான் வசந்தன்.

மீண்டும் தன்னுடைய பயணத்தைத் தொடர்வதற்காக அவன் மரத்திற்குக் கீழே எழுந்து நின்றான். அன்று இரவு தன்னுடைய குடிசையில் தங்கி ஓய்வெடுத்துப் போகும்படி சொன்ன இடையனின் வார்த்தைகளை நன்றியுடன் மறுத்தான் அவன்.

‘‘கிழக்கு நோக்கி நடந்தால் பொழுது புலர்ற நேரத்துல ‘க்ஷ’ என்ற கிராமத்தைப் போய்ச் சேர்வீங்க. அங்கே ‘ஸ’ன்ற ஒரு ஆறு இருக்கு’ - இடையன் சொன்னான் : ‘‘அந்த நதிக்கரையில ‘க’ன்ற முனிவர் இருக்காரு. அந்த முனிவரை நீங்க போய்ப் பாருங்க.

வசந்தன் நல்லவனான அந்த இடையனைக் கட்டிப் பிடித்துவிட்டு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான்.

கால்களுக்கு இழந்த பலம் மீண்டும் கிடைத்ததுபோல் இருந்தது. மனதில் மீண்டும் எதிர்பார்ப்புகள் குடிகொள்ள ஆரம்பித்தன. வானத்தில் நட்சத்திரங்களும் நிலவும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. ‘க்ஷ’ என்ற கிராமத்தை நோக்கி அவன் வேகமாக நடந்தான்.

பொழுது புலர்வதற்கு முன்பு அவன் அந்த கிராமத்தை அடைந்தான். ‘ஸ’ என்ற நதியின் கரையில் ஒரு ஏலக்காடு இருந்தது. அங்குதான் ‘க’ என்ற முனிவர் இருந்தார்.

அங்கு அவன் போய்ச் சேரும்போது அவன் பயணத்தைத் தொடங்கி ஐந்து நாட்கள் ஆகியிருந்தன. ஊரும் வீடும் சீதாவும் எத்தனையோ மைல்களைத் தாண்டி தூரத்தில் இருந்தார்கள். ஆனால், சீதா சதா நேரமும் தன்னுடன் கூடவே இருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். அவள் எல்லா நேரமும் அவன் மனதில் யானை முட்டை என்ற ஒன்றை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தாள்.

நதிக்கரையில் ஏலத்தின் வாசனை எங்கும் பரவியிருந்தது. ஏலக்காட்டிலிருந்த பர்ணசாலைக்கு மேலே பஞ்சவர்ணக் கிளிகள் நிறைய உட்கார்ந்திருந்தன.

முனிவர் தியானத்திலிருந்து வருவதுவரை அவன் அவருக்காக வெளியில் காத்திருந்தான். ஒரு பஞ்சவர்ணக் கிளி பறந்து வந்து அவனுக்கு முன்னால் உட்கார்ந்தது. ஏலத்தின் வாசனையால் அவனக்கு பித்து பிடித்ததைப் போல் இருந்தது.

முனிவர் எழுந்து ஆஸ்ரமத்திற்கு வெளியில் வந்தார். ‘‘முட்டை இடுற யானையைத் தேடி வந்திருக்கே... அப்படித்தானே -?’’

முனிவர் புன்னகைத்தார். வசந்தன் வாய் திறக்கவில்லை. முனிவர் அவனின் மனதில் உள்ளதை முன்பே நன்கு அறிந்திருந்தார்.

‘‘எனக்கு உதவணும்’’ - அவன் முனிவரின் கால்களில் விழுந்து வணங்கினான்: ‘‘என்னைக் காப்பாத்தணும்.’’

‘‘கிழக்கு திசையில இங்கேயிருந்து எண்பது மைல்கள் தூரத்துல ‘ஷ’ என்ற ஒரு நாடு இருக்கு. அங்கே இருக்குற அரசனோட அரண்மனையில ஒரு யானையைக் கட்டிப் போட்டு வச்சிருப்பாங்க. அதுதான் உலகத்திலேயே முட்டை போடுற ஒரே யானை...’’

அதைக் கேட்டு அவனுடைய மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது.

முனிவரின் கால்களில் மீண்டும் ஒரு முறை விழுந்து வணங்கிவிட்டு, அவன் கிழக்கு திசையை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

‘ஷ’ என்ற நாட்டின் அரசன் எப்படிப்பட்ட ஆளாக இருப்பான் ? தன் மீது அவனுக்கு இரக்கம் உண்டாகுமா ? இனி இருப்பதே ஒன்பது நாட்கள்தான். அதற்கு முன்பு முட்டை தன் கையில் வந்து சேருமா ?

இப்படி பலவிதப்பட்ட சிந்தனைகளுடன் அவன் ‘ஷ’ என்ற நாட்டை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

நடந்து சென்ற பாதை மிகவும் மோசமானதாக இருந்தது. விரிந்து கிடக்கும் நிலப்பரப்பு, எங்கு பார்த்தாலும் மேடுகளும் மலைகளும். பகல் நேரத்தில் கூட சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவிற்கு இருண்டு போய் காணப்படும் காடுகள். அந்த எண்பது மைல் தூரத்தைக் கடப்பதற்கு அவனுக்கு நான்கு நாட்கள் ஆயின.

ஐந்தாவது நாள் அவன் ‘ஷ’ என்ற நாட்டின் ஆரம்பத்தில் இருந்த கோபுரவாசலில் போய் நிற்கும்போது, அவனுக்குப் பின்னால் பொழுது புலர்ந்து கொண்டிருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel