Lekha Books

A+ A A-

தாமரைத் தொப்பி

thamarai thoppi

ல வருடங்களுக்கு முன்பு மன்னன் ஒருவன் இருந்தான். மன்னனுக்கு ஒரு மகாராணி இருந்தாள். அவளைத் திருமணம் செய்தவுடன் மன்னன் தன்னுடைய மற்ற வைப்பாட்டிகளையெல்லாம் வேண்டாமென்று உதறிவிட்டான். ராணி மீது அவனுக்கு அந்த அளவிற்கு அதிகக் காதல் இருந்தது. அதற்குக் காரணம் இருந்தது. அவள் பிறப்பிலேயே ராணி இல்லை. மன்னன் ஒருநாள் மாலை நேர சவாரி போக வேண்டுமென்று குதிரைமீது ஏறிப் பயணித்தான்.

மாலை நேரத்தில் - மஞ்சள் நிறக் கதிர்கள் மறையப்போகும் நேரத்தில் மன்னன் ஒரு சிறு கிராமத்தை அடைந்தான். மன்னனும் குதிரையும் மிகவும் களைத்துப் போயிருந்தார்கள். அவன் குதிரையை விட்டு இறங்கி சுற்றிலும் பார்த்தான். பரந்து கிடக்கும் நெல் வயல்கள் மட்டும் தெரிந்தன. அவன் தன் குதிரையை ஒரு மரத்தில் கட்டிவைத்து விட்டு தான் மட்டும் தனியே கிராமத்திற்குள் நுழைந்தான். அங்கு ஒரு இளம்பெண் கிணற்றிலிருந்து நீர் எடுத்துக்கொண்டிருக்கும் காட்சியைத்தான் அவன் முதன்முதலாகப் பார்த்தான்.

“அழகியே, எனக்கு ரொம்பவும் தாகமா இருக்கு. கொஞ்சம் நீர் தரமுடியுமா?” - மன்னன் கேட்டான்.

“எவ்வளவு வேணும்னாலும் தரலாமே!”- அவள் தொடர்ந்து சொன்னாள்: “பிறகு... என் பேரு அழகி ஒண்ணும் இல்ல. என் பேரு தாமரை.”

“தாமரை, கொஞ்சம் தண்ணி தா.”

மன்னன் கைகளைக் குவித்தவாறு அவளுக்கு முன்னால் குனிந்து நின்றான். தாமரை ஸ்படிகத்தைப் போல தெளிவாக இருந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினாள். அதோடு சேர்ந்து தன்னுடைய நிலவைப் போன்ற புன்சிரிப்பையும் மன்னனின் முகத்தின்மீது சிந்த விட்டதை அந்த இளம்பெண் உணரவில்லை.

வயிற்றின் தாகம் தீர்ந்தவுடன் மன்னனின் இதயத்தின் தாகம் ஆரம்பமானது.

“தாமரை, நீ யாரு?” - மன்னன் கேட்டான்.

“நான் இந்த கிராமத்தில் விவசாயியாக இருக்கும் நீலனோட கடைசி மகள்!”

அதற்குமேல் அவளிடம் என்ன கேட்பது என்று மன்னனுக்குத் தெரியவில்லை. அவன் தயங்கியவாறு அங்கு நின்றிருந்தான்.

“ஏன் தயங்குறீங்க?”

“தாமரை, நான் யாருன்னு தெரிஞ்சுக்கணும்ன்ற ஆர்வம் உனக்கு இல்லையா?”

“சொன்னா கேட்டுக்குறேன்!”

“நான் கொஞ்சம் தூரத்துல இருந்து வர்றேன். என் பேரு மன்னன்.”

“நீங்க மன்னரா?”- அவளுடைய நீள விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன. அந்த விரிந்த விழிகளை ரசித்தவாறு மன்னன் பதில் சொன்னான்: “என்னை மக்கள் மன்னன்னுதான் கூப்பிடுவாங்க.”

“ஓ... விஷயம் அவ்வளவுதானா? எங்க மாமாவோட மகன் ஒருத்தன் இருக்கான். அவன் பேரு சக்கரவர்த்தி. ஆனா, அரை காசுக்குக்கூட அவன் லாயக்கு இல்ல.”

அவள் அந்த நிலவு ஒளியைப் போன்ற புன்னகையை மீண்டுமொருமுறை சிந்தினாள். அது மன்னனின் மனதை என்னவோ செய்தது. அவன் கேட்டான்: “தாமரை, நான் ஒண்ணு கேட்கட்டுமா?”

“என்ன? உங்களுக்குச் சாப்பிடுறதுக்கு ஏதாவது வேணுமா? நான் உடனே கொண்டு வர்றேன்.”

“வேண்டாம். என் இதயத்துலதான் தாகம் இருக்கு.”

“அப்படின்னா பசுவோட பாலைக் கொண்டு வர்றேன்.”

“அது தாகத்தை அதிகப்படுத்தும்...”

“அடக் கடவுள்களே! அப்படின்னா நான் என்ன செய்றது? தயிரையும் சர்க்கரையையும் கலந்து தர்றேன்... வாங்க...”

“அது எதுவும் எனக்கு வேண்டாம்.”

“பிறகு?” - அவள் வேகமாகக் கண் இமைகளை வெட்டியவாறு மன்னனின் முகத்தை ஒரு குழந்தையைப் போல பார்த்தவாறு நின்றிருந்தாள்.

“அழகி...”

“என் பேரு தாமரை!”

“தாமரை, நீ என் கூட வர்றியா?”

“எங்கே?”

“என் வீட்டுக்கு என் கூட வாழறதுக்கு...”

அடுத்த நிமிடம் தாமரையின் முகம் மாறியது. அவளுடைய விழிகளில் ஒன்றிரண்டு இடி மின்னல்கள் தோன்றி மறைந்தன.

“டேய், பிணமே!”

அவ்வளவுதான்- மன்னன் அதிர்ச்சியில் உறைந்து போனான். திறந்த வெளியில் அவன் இப்படியொரு பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“டேய், பன்னி! உனக்கு வெட்கமா இல்லையா? நான் யாருன்னு நீ நினைச்சே? காட்டுப் பன்னி! உன் தலையை நான் அடிச்சுப் பிளக்கப் போறேன். இதுதான் உன் தாகம். அப்படித்தானே? நீ ஒரு மனிதன்னு நினைச்சுத்தானே நான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தேன்! டேய் கரடி, என் அப்பாவுக்குத் தெரிஞ்சா உன் தலை உன்கிட்ட இருக்காது. ம்... ஓடு. பின்னாடி திரும்பிப் பார்க்காதே.”

அதற்குப் பிறகும் அவள் விடாமல் அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

“தாமரை, என்னை மன்னிச்சிடு. நான்...”

“கழுதை... ஒழுங்கா இங்கேயிருந்து போ. இல்லாட்டி நான் என் அப்பாவைக் கூப்பிடுவேன்.”

“நான் சொல்றதும் அதுதான்.”

“எதுக்குடா பிணமே?”

அவள் திட்டியது மன்னனை மேலும் உற்சாகப்படுத்தியது மாதிரி இருந்தது. அவனுடைய மனதின் அடித்தளம் வரை அவள் பேசியது என்னவோ செய்தது. அவன் அந்தக் கணமே சொன்னான்:

“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்.”

“அப்படியா?”- தாமரை ஆச்சரியத்துடன் கேட்டாள்: “என் அப்பாகிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லிட்டு, என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியா?”

“ம்...” - மன்னன் உறுதியான குரலில் சொன்னான்.

அதைக்கேட்டு தாமரை தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“தாமரை, என் செல்லமே... நீ எதுக்கு அழணும்?”- மன்னன் அவளைத் தேற்ற முற்பட்டான்.

“நான் எப்படியெல்லாம் உங்களைத் திட்டினேன்! இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா உங்களைத் திட்டியிருப்பேனா? என் மேல கடுகு அளவு பிரியம் இருந்திருந்தா, நான் இப்படியெல்லாம் உங்களைத் திட்டும்படி என்னை விட்டிருப்பீங்களா?”

“என் செல்லமே! பரவாயில்ல... விடு... நீ என்னைத் திட்டினதை நான் ரொம்பவும் ரசிச்சேன். நாம் உன் அப்பாகிட்ட போவோம்.”

“அப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற விஷயத்துல நீங்க உறுதியா இருக்கீங்க?”- அவள் கேட்டாள்.

“ஆமா...”

“என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”

“நீ என்னோட உயிர்.”

“நான் சொல்றதைக் கேட்பீங்களா?”

“கட்டாயம்...”

“கட்டாயமா?”

“கட்டாயம்...”

“இனி வார்த்தை மாறக்கூடாது...”

“இல்ல...”

அவள் கண்ணீரைத் துடைத்து, புன்னகைத்தவாறு- அந்த முழு நிலவைப் போன்ற சிரிப்பைச் சிந்தியவாறு - குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு முன்னோக்கி நடந்தாள். மன்னன் அவளைப் பின்பற்றி நடந்தான்.

தாமரையின் தந்தையிடம் சென்று எல்லா விஷயங்களையும் சொன்னான். கிழவனுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி உண்டானது. தன் மகளை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்ட அவன் மன்னனை வணங்கினான். அவர்கள் மறுநாள் அரண்மனைக்குச் சென்றார்கள்.

இப்படித்தான் தாமரை மகாராணியாக ஆனாள். மன்னனைப் பொறுத்தவரையில் அவள், ஆசைப்படுகிற அளவிற்குச் சக்தியைத் தருகின்ற ஒரு போதைப் பொருளாக இருந்தாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel