Lekha Books

A+ A A-

மாத்தனின் கதை

maathanin kathai

“அம்மா, அப்பா இன்னைக்கும் வர மாட்டாரா?”

பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதற்கு மத்தியில் திரேஸ்யா தன் தாயைப் பார்த்துக் கேட்டாள்.

பிரார்த்தனைக்கு மத்தியிலும் படகுத் துறையில் நீர் மோதும் சத்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தாள் மரியா. அவள் சொன்னாள்: “வருவாரு மகளே! இன்னைக்கு எப்படியாவது வருவாரு.”

மரியா மீண்டும் அன்றைய உணவிற்காக கடவுளிடம் பிரார்த்தித்தாள். கிடைத்த உணவிற்காகக் கடவுளுக்கு அவள் நன்றி சொன்னாள். திரேஸ்யா அவள் சொன்னதைத் திரும்பச் சொன்னாள். கைகளை நீட்டி தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து வைத்துக்கொண்டு, அணிந்திருந்த ஆடைகள் அவிழ, ஒட்டிய வயிறுடன், பாதி திறந்த உதடுகளுடன், பாதியாக மூடிய விழிகளுடன் மேல்நோக்கிப் பார்த்தவாறு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த உருவத்தை திரேஸ்யா கூர்ந்து பார்த்தாள். திரி கரிந்து எரிந்து கொண்டிருந்த விளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் அந்த உதடுகள் அசைவதைப் போல் அவளுக்குத் தோன்றியது. கடவுள் என்னவோ கூற நினைக்கிறார்.

“கருணை மனம் கொண்டு காப்பாற்றணும்” என்று அவளுடைய தாய் மீண்டும் பிரார்த்தித்தாள். அதை திரேஸ்யா திரும்பச் சொல்லவில்லை.

பக்கத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ரோஸா முனக ஆரம்பித்தாள். திரேஸ்யா மீண்டும் கேட்டாள்: “அப்பா வரலைன்னா நாம எப்படிம்மா சாப்பிட முடியும்?”

அதற்கு அந்த குடும்பத் தலைவி சொன்னாள்: “வருவாரு மகளே.”

“விளக்கு அணையப் போகுது அம்மா.”

மரியா விளக்கை எடுத்துத் திரும்பவும் குலுக்கினாள்.

மாலை மயங்கியது. மழைச்சாரல் விழ ஆரம்பித்தது. அதோடு சேர்ந்து காற்றும் பலமாக வீச ஆரம்பித்தது.

அவர்கள் அமைதியாகக் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பிரார்த்தனை இன்று வரை எழுதப்படவில்லை. ஆள் உயரத்திற்கு அலைகள் உயர்ந்து கொண்டிருக்கும் ஏரிகளைக் கடந்து நதியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நீரோட்டத்திற்கு எதிரில் பயணம் செய்து மலையின் அடிவாரத்திற்கு அவளுடைய கணவன் போயிருக்கிறான். ஏரியின் கரையைப் பார்க்க முடியாது. மானும் மனிதனும் இல்லை. ஆற்றில் சுழல்களும், அலைகளும் இருக்கின்றன. கையிலிருக்கும் மரத்துண்டு சிறிது ஒடிந்தால்... மரியா கர்த்தரின் பாதத்தை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

திரேஸ்யா கேட்டாள்:

“அப்பா இந்த நேரம் மழையிலும் காற்றுலயும் சிக்கி அவதிப்பட்டுக்கிட்டு இருப்பாரு. காய்ச்சல் வந்திடாதா, அம்மா?”

மரியா கண்களைத் திறந்தாள். அதைத்தான் அவளும் இப்போது நினைத்துக் கொண்டிருந்தாள்.

விளக்கு இப்போது அணைந்துவிடும். படகுத் துறையில் நீர் மோதும் சத்தம் கேட்பதைப்போல் இருந்தது. தாயும், மகளும் வெளியே பார்த்தார்கள். கடுமையான இருட்டு! எதையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் சத்தம்.

“அப்பாதான் அம்மா...”

“மகளே! திரேஸ்யாம்மா”

வெளியே யாரோ அழைத்தார்கள்.

“அந்த விளக்கைக் கொஞ்சம் காட்டு, மகளே!”

“அந்த விளக்குல ஒண்ணும் இல்லப்பா.”

எனினும் திரேஸ்யா விளக்கை எடுத்து திண்ணைக்குக் கொண்டு வந்தாள். அப்போது அது அணைந்துவிட்டது.

மாத்தன் திண்ணையை நோக்கி வந்தான். கையில் ஒரு தட்டும் ஒரு பெரிய பொட்டலமும் இருந்தன.

“விளக்கைக் கொஞ்சம் கொளுத்து மகளே!”

“நெருப்பு இல்லைப்பா.”

திரேஸ்யா தன் தந்தையைக் கட்டிப் பிடிப்பதற்காகத் தன்னுடைய இரண்டு கைகளையும் நீட்டி காற்றில் தேடினாள். ஆனால், அவளுடைய தந்தை எங்கு இருக்கிறான் என்பதுதான் தெரியவில்லை. ரோஸாவும் கண்விழித்து விட்டாள். அவள் தன் தந்தையை அழைத்தாள். தந்தை மகளின் அழைப்பைக் கேட்டான். தந்தையைக் கட்டிப் பிடிக்கும் முயற்சியில் ரோஸாவின் தலை திரேஸ்யாவின் உதட்டில் மோதியது.

“அடுப்புல நெருப்பு இல்லையா மகளே?” - மாத்தச்சன் கேட்டான்.

“இன்னைக்கு நெருப்பு பற்ற வைக்கவே இல்லப்பா.”

மாத்தச்சனின் உடல் முழுக்க ஒரு வெப்பம் பரவியது. இன்று அடுப்பில் நெருப்பு எரியவில்லை!

“என் பிள்ளைங்க எதுவும் சாப்பிடலையா? இவங்களுக்கு எதுவும் தரலையாடீ?”

“அப்பா. நீங்க நனைஞ்சிருக்கீங்க.”

முதலில் தன் தந்தையைத் தொட்டுவிட்ட ரோஸா சொன்னாள். மாத்தச்சன் ரோஸாவைக் கைகளில் தூக்கினான்.

“இவங்களுக்கு காலையிலயும் மத்தியானமும் கொடுத்தேன். சாயங்காலம் கொடுக்குறதுக்கு எதுவும் இல்ல...” -மரியா சொன்னாள்.

பக்கத்து வீடுகளிலிருந்து இரண்டு வேளைகளுக்கும் குழந்தைகளுக்குத் தேவையான உணவு கிடைத்தது. அன்று அவளால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. பலத்த மழையும் காற்றுமாக இருந்தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை.

“அப்படின்னா நீ எதுவும் சாப்பிடலையா?”

மாத்தச்சன் தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

அவள் அதன் கதையைக் கூற ஆரம்பித்தாள்: “சுருக்கமாகச் சொல்றதா இருந்தா... இல்ல...”

தன் மகளைக் கீழே இறக்கிவிட்ட மாத்தச்சன் நெருப்பு வாங்குவதற்காகச் சென்றான்.

அன்று நள்ளிரவு நேரத்திற்குப் பிறகுதான் அந்த வீட்டில் வெளிச்சம் அணைந்தது. அதற்குப் பிறகு அங்கு உறக்கமேயில்லை. மனைவியும் கணவனும் பேசிக்கொண்டேயிருந்தார்கள்.

கணவன் சொன்னான்: “மூணு ரூபாய் தந்தாரு. கொடுத்திட்டு அவர் கார்ல ஏறி எர்ணாகுளத்திற்குப் போயிட்டாரு.”

“பிறகு அந்த நாலு சக்கரம்?” (சக்கரம் என்பது பழைய திருவிதாங்கூர் நாணயத்தைக் குறிப்பது.)”

“அது முந்தா நாளு பாலாவுல இருக்குறப்போ காலையில காப்பி குடிக்கிறதுக்காகத் தந்தது. பழைய கஞ்சி இல்ல. நான் காப்பி குடிக்கல.

“அரிசி எங்கே வாங்கினது?”

“அது வழிச் செலவுக்குத் தந்ததுல மிச்சம் பிடிச்சு வாங்கினது. எவ்வளவு இருந்தது?”

“இரண்டு கால் படி.”

மாத்தச்சன் போன பிறகு வீட்டை நடத்திய விதம் குறித்து மரியா சொன்னாள். மற்றைக்காட்டிற்கு ஓலை பின்னுவதற்காக அவள் இரண்டு நாட்கள் வேலைக்குச் சென்றதாகவும், அதில் ஒன்பது சக்கரங்கள் கிடைத்ததாகவும் அவள் சொன்னாள். ஒரு நாள் ஆலைக்கு நெல் குத்துவதற்காகப் போனாள். ஒரு நாள் நான்கு தேங்காய்களை நார் பிரித்தாள். இன்று மழை காரணமாக எதுவும் செய்ய முடியவில்லை.

“நான் பிள்ளைகளைப் பட்டினி போடல.”

“நீ பட்டினி கிடந்தே.”

மீண்டும் சிறிது நேரத்திற்கு அமைதி நிலவியது. ஆனால், அந்த அமைதி விரும்பக் கூடியதாக இல்லை. சிந்தனைகளால் அது நிரம்பியிருந்தது. எந்த நிமிடத்திலும் அந்த அமைதியிலிருந்து சத்தம் உயர வாய்ப்பு இருந்தது.

“இப்போ எவ்வளவு சேர்ந்திருக்கும்?”

“இதையும் சேர்த்தா? பதினாலு ஆகும்.”

“இதை முழுசா கொடுக்கப் போறீங்களா?”

“பிறகு என்னடீ, ஒரு வருடம் முழுக்கச் சேர்த்தே இவ்வளவுதான் நம்மால முடிஞ்சது. அவளுக்கு வயசு எட்டு ஆயிடுச்சே! இனி ஐந்து அல்லது ஆறு வருடங்கள்தான் இருக்கு.”

“இல்ல... முழுசையும் கொடுத்துட்டா, நாளைக்கு என்ன செய்யறது?”

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel