Lekha Books

A+ A A-

மாத்தனின் கதை - Page 4

maathanin kathai

கணவனின் வீடு எப்படிப்பட்டதாக இருக்கும்? ஒன்று மட்டும் உண்மை. அந்த வீடும் நிலமும் அவர்களுக்குச் சொந்தமானவை. அவள் அவன் மீது அன்பு செலுத்துவாள். அவனைக் கவனத்துடன் பார்த்துக்கொள்வாள். அதற்குப் பதிலாக அவன் அவள்மீது அன்பு செலுத்துவானா? ம்... அவள் தாயாக ஆவாள். இப்படிப் பலவிதப்பட்ட சிந்தனைகளில் மூழ்கியிருந்தாள் திரேஸ்யா. சிந்தித்தவாறு உறங்கும்போது உறக்கத்தில் யாரென்று தெரியாத அந்த ஆண் அவளை எழுப்புவான். திரேஸ்யா வெட்கப்பட ஆரம்பிப்பாள்.

திருமணம் ஆவதற்கு என்ன வயது வேண்டும்? பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்ட பலரையும் அவள் நினைத்துப் பார்த்தாள். அவளுக்குப் பதினேழு வயது ஆகிவிட்டது. ஒருவேளை அவளுக்குத் தற்போது என்ன வயது நடக்கிறது என்ற விஷயம் அவளுடைய தந்தைக்குத் தெரியாமல் இருக்கலாம். எனினும், அவளுடைய தாய்க்கு அது தெரியுமே!

ஒரு நாள் மரியா மாத்தச்சனிடம்சொன்னாள்: “இப்படியே இருந்தால் நல்லதா? அவளுக்குப் பதினேழு வயது ஆகிவிட்டது!”

அப்பாடா! அதைக் கேட்டு திரேஸ்யாவிற்கு நிம்மதி வந்தது.

மாத்தச்சன் அதற்குப் பதில் சொன்னான்: “என் மனசுல இருக்குடீ... நான் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். நல்ல வசதி படைச்சவனா இருக்க வேண்டாமா? இன்னும் நாலு சக்கரங்கள் அதிகமா இருந்தா நல்லதுதானே!”

அதற்குப் பிறகும் சில நாட்கள் கடந்தன. மாத்தச்சன் பாலாவிற்குச் சென்றான். திரும்பி வந்தபோது அவனிடம் கூறுவதற்கு ஒரு செய்தி இருந்தது. ஆள் கிடைத்தாகிவிட்டது. நல்ல பையன். வயது இருபது இருக்கும். ஒரு பீடி கூட புகைப்பதில்லை. தந்தைக்கும், தாய்க்கும் ஒரே மகன். ஐந்து ஏக்கர் நிலம் சொந்தத்தில் இருக்கிறது. எல்லாவற்றையும் பேசி முடித்தாகிவிட்டது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை பெண்ணைப் பார்ப்பதற்காக அவர்கள் வருவார்கள்.

தாய் கேட்டாள்: “தொகை எவ்வளவு?”

“அய்யாயிரம் ச்ககரம்.”

திரேஸ்யா அந்த நிலத்தையும் வீட்டையும் மனதில் நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு மேலும் ஒரு தந்தையும், தாயும் வந்து சேர்கிறார்கள். அவர்களுடன் அந்த வீட்டில் போய் அவள் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை பெண்ணைப் பார்ப்பதற்காக ஆட்கள் வந்தார்கள். அந்த வகையில் அவளுடைய ஒரு கனவு செயல் வடிவத்திற்கு வந்தது. அவன் தன்னுடைய வரப்போகும் கணவனைப் பார்த்தாள். அவன் அவளையும், திரேஸ்யாவின் மனதில் சந்தோஷம் உண்டானது அவன் வந்துவிட்டானே!

எல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டது. வரதட்சணை ஐய்யாயிரம் சக்கரம். அதைக் கொண்டுபோய் கொடுப்பதற்கான நாளும் தீர்மானிக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் எல்லாருக்கும் தகவல் சொல்ல வேண்டும். அடுத்த ஞாயிற்றுக்கிழமை பணம் கொண்டுவந்து தருவதாக முடிவு செய்யப்பட்டது.

திரேஸ்யாவிற்கு முன்பு இல்லாத ஒரு பிரகாசம் முகத்தில் தோன்றியது. அவளுடைய தோழிகள் எல்லாரும் அவளைக் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவளுடைய சம வயதில் திருமணமானவர்கள் அவளுக்குச் சில பாடங்களைச் சொல்லித் தந்தார்கள். அவள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.

மனைவியும், கணவனும் கணக்குக் கூட்டிக் கொண்டிருந்தார்கள். வரதட்சணை, திருமணச் செலவு, உடனடியாகச் செய்ய வேண்டிய செலவு எல்லாம் போக ஒரு தொகை மீதமிருக்கும். அதைப் பிடித்து வைத்துக்கொண்டு ரோஸாவிற்குச் சேமிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

பாலாவிற்குப் பணம் கொண்டு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆலைப் பக்கம் போயிருந்த மரியா வந்து தன் கணவனிடம் சொன்னாள்:

“சாக்கோச்சன் வந்துட்டாரு. நாளைக்குக் காலையில அவர் சந்தைக்குப் போறாரு. அப்படியே அவர் கோட்டயத்துக்குப் போறாரு. அதுனால இன்னைக்கே போயி பணத்தை வாங்கிடணும்.”

“என்னடி சொல்ற? அவருக்கு ஞாற்றுக்கிழமை பெரு நாளாச்சே!”

“அதற்கு ஏற்பாடு செய்திட்டுத்தான் அவர் போறாரு.”

மாத்தச்சன் நேராக மர ஆலைக்குச் சென்றான். சாக்கோச்சன் பெருநாள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். எனினும் மாத்தச்சனைப் பார்த்ததும் சாக்கோச்சன் சிரித்தார்.

“என்ன மாத்தா, எல்லாம் முடிவாயிடுச்சா?”

மாத்தச்சன் தலையைச் சொறிந்தான்.

“ஆமா... நீங்க வந்த பிறகு நிச்சயம் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன்.”

“அப்படியா? நினைச்சதுக்கு மேல பத்து நாட்கள் அதிகமாக அங்கே தங்கும்படி ஆயிடுச்சு. அதுனால என்ன? சரி... வரதட்சணை எவ்வளவு?”

“அய்யாயிரம் சக்கரம்.”

“அப்படின்னா திருமணச் செலவு எல்லாம் சேர்த்து ஏழாயிரம் வந்திடுமேடா!”

மாத்தச்சன் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினான். சாக்கோச்சன் பையனின் குடும்பத்தைப் பற்றிக் கேட்டார்.

மாத்தச்சன் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னான்.

“அப்படின்னா பணம் எங்கேயிருந்து வந்ததுடா மாத்தா? எல்லாத்தையும் யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருந்தே?”

அதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டான் மாத்தச்சன். மகிழ்ச்சியுடன் நின்றிருந்த அவனுக்குப் பேரிடி வந்து விழுந்ததைப் போல் இருந்தது. என்ன சொல்ல வேண்டும் என்றே அவனுக்குத் தெரியவில்லை. வாய்க்குள்ளிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.

“இங்கே... அப்பப்போ... தந்த சக்கரம்...”

தன்னையும் மீறித்தான் அவனிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்தன.

“அப்பப்போ தந்த சக்கரமா?” - சாக்கோச்சன் கேட்டார். இடி முழங்கியதைப் போல அந்தச் சத்தம் மாத்தச்சனின் காதுகளில் வந்து மோதியது. சாக்கோச்சன் தொடர்ந்து சொன்னார். “எல்லாத்துக்கும் கணக்கு இருக்குடா, மாத்தா. உனக்குத் தெரியும்ல! நீ வாங்கினது போக உன் கணக்குல ரெண்டு ரூபாய் பதினேழு சக்கரம் இருக்கு.”

“வாங்கினதா?”

“ஆமா....”

“நான்... நான்.. வேலை செஞ்சது...”

“நீ இங்கே வேலை செஞ்சியா? கடவுள் மேல பிரியம் வச்சிருக்கிறவங்க யாராவது உன்னை வச்சு வேலை செய்ய முடியுமா? நீ ஒரு அற்ப பிராணி...”

“நான்... ஓலை கீறி... நார் பிரிச்சு...”

அதைக் கேட்டு சாக்கோச்சன் சிரித்தார்: “அதுக்குக் கூலியா மாத்தா?”

மாத்தச்சன் அவர் சொன்னதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டான்.

சாக்கோச்சன் தொடர்ந்தார். “பொண்ணுக்கு நேரம் நல்லா இருந்தா எல்லாம் ஒழுங்காக நடக்கும் மாத்தா. நான் பதினஞ்சு ரூபா தர்றேன். சரியா? எல்லாம் கடவுள் கையில் இருக்குடா மாத்தா.”

யாரோ மூன்று பெரிய மனிதர்களும் தேவாலயத்திலிருக்கும் பாதிரியாரும் படகுத் துறையை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை வரவேற்பதற்காக சாக்கோச்சன் போனார்.

பொழுது நன்றாக இருட்டியது. மாத்தச்சனின் வீட்டில் விளக்கின் திரி எரிந்து கரிந்த பிறகும், மாத்தச்சன் வந்து சேரவில்லை. அந்த விளக்கு அணைந்த பிறகு தாயும் பிள்ளைகளும் அவனை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். உணவு குளிர்ந்து போய் விட்டிருந்தது.

மறுநாள் காலையில் மரியா மர ஆலைக்குச் சென்றாள். தெற்குப் பக்கமிருந்த திண்ணையில் மாத்தச்சன் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பலரும் பார்த்தார்கள்.

அதற்கு மறுநாளும் மாத்தச்சன் வந்து சேரவில்லை. மர ஆலையில் பெருநாள் சம்பந்தமான வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. சாக்கோச்சன் நடத்தும் பெருநாள் கொண்டாட்டம் அன்றுதான். ஒரு பிணம் மாத்தச்சனின் படகுத் துறைக்கு அருகில் கிடந்தது. கால்களும் இரண்டு கைகளும் கயிறால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. அது மாத்தச்சன்தான்.

பெருநாள் கொண்டாட்டத்திற்கு அறிகுறியாகப் போடப்பட்ட வெடிகள் சாக்கோச்சனின் பெருமைகளையும் கடவுள் பக்தியையும் பறைசாற்றிக் கொண்டிருந்தபோது, தாயும், பிள்ளைகளும் அந்தப் பிணத்தைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தார்கள்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel