Lekha Books

A+ A A-

மாத்தனின் கதை - Page 3

maathanin kathai

என்ன இரக்க குணம்; என்ன கடவுள் நம்பிக்கை! சாக்கோச்சனிடம் செல்வம் சேர்ந்து கொண்டே இருப்பதில் ஆச்சிரியப்பட என்ன இருக்கிறது?

அந்த ஏழையின் கனவுகள் தன்னுடைய மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இருந்தன. அவர்களின் வாழ்க்கையில் உள்ள முயற்சிகள் ஒவ்வொன்றையும் கணக்குப் போட்டுக் கூறிவிட முடியும். அந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. அந்த ரத்தக் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் கைகளையும், கால்களையும் அசைத்தார்கள். கவிழ்ந்து விழுந்தார்கள். உட்கார்ந்து நான்கு கால்களில் தவழ்ந்தார்கள். இப்படியே வளர்ந்து வயதானவர்களாக மாறினார்கள். தாய் - தந்தை மீது அன்பு செலுத்தினார்கள். இப்படியே குழந்தைகள் வளர்ந்தார்கள். அந்த இரத்தக் குழந்தைகள் சிறிய வேட்டியை அணிந்து சிலேட், புத்தகங்களுடன் பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்கள்.

அது மட்டுமல்ல வாழ்க்கையில் நடந்தது. மேலும் கொஞ்சம் அந்தக் குழந்தைகள் வளர்ந்ததோடு சேர்ந்து சிறிதும் மறைந்து போகாத அளவிற்கு ஒரு கணக்கு அவர்களின் மனதில் பதிந்து கொண்டிருந்தது. தேதிப்படி அந்தக் கணக்கு வளர்ந்தது. சாக்கோச்சனிடம் என்றும் ஏதாவது ஒரு தொகையை அவன் கொண்டு போய் கொடுப்பான். அந்த வகையில் அந்தத் தொகையும் வளர்ந்து தொண்ணூறு ரூபாயாக ஆனது.

அந்த வாழ்க்கையின் அடிப்படை கடமை உணர்வாக இருந்தது. தங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற நினைப்பு அவர்களின் உயிர் மூச்சாக இருந்தது. அந்தப் பிள்ளைகளுக்காகத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுக்குகாக மட்டுமே! தினமும் இரவில் தூங்குவதற்காகப் படுக்கும் போது மனைவியும் கணவனும் சேர்ந்து கணக்குப் போடுவார்கள். இப்படியே தொகை வளர்ந்து கொண்டு போவதைப் பற்றி அவர்கள் மனதில் மகிழ்ச்சியடைவார்கள். ஆமாம்... அது கூடிக்கொண்டே இருந்தது. இப்படியே கூடி.... கூடி...

மனைவி தன்னுடைய கணவனிடம் கேட்பாள்: “எவ்வளவு பணம் இருந்தா, நல்ல ஒரு பையன் கிடைப்பான்?”

“பத்தாயிரம் சக்கரங்கள் இருந்தா, நல்ல ஒரு பையன் கிடைப்பான்.”

அந்தப் பெண் மீண்டும் கணக்குக் கூட்டுவாள். அந்தத் தொகையைச் சேமிக்க இன்னும் எவ்வளவு வருடங்கள் ஆகும்!

இப்படி தங்களின் மகளுக்காகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அந்த வாழ்க்கையில் சந்தோஷத்தை உண்டாக்கியது. பட்டினிக்கு மத்தியில்கூட அவர்களிடம் எந்தவித முணுமுணுப்பும் இல்லை. எப்போதும் அவர்கள் மகிழச்சியாக இருந்தார்கள். காரணம் - மகளுக்குத் திருமணம் செய்து வைக்க அவர்களிடம் பணம் இருந்தது.

மாத்தச்சனின் சந்தோஷமான போக்கு ஊர் முழுக்க நன்கு தெரிந்த ஒரு விஷயமாக இருந்தது.

திரேஸ்யா தினமும் இரவு வேளையில் தன்னுடைய தந்தைக்கும் தாய்க்குமிடையில் நடக்கும் அந்த உரையாடலை கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பாள். ஒவ்வொரு நாளும் அவர்களின் சேமிப்புத் தொகை கூடிக்கொண்டு வரும் விஷயம் அவளுக்கு நன்கு தெரியும். சில வேளைகளில் அவர்களின் கணக்கு தப்பாக இருக்கும். நான்கும் மூன்றும் சேர்ந்தால் எட்டாகும். அது தப்பு என்று அவளுக்குத் தெரியும். அதைச் சொல்வதற்காக அவளுடைய நாக்குத் துடிக்கும். ஆனால், குரல் வெளியே வராது! வயதில் சின்னவள் என்றாலும், அவள் ஒரு பெண்ணாயிற்றே!

எனினும், திரேஸ்யாவிற்கு ஒரு சந்தோஷம் இருந்தது. திருப்தி இருந்தது. அவளுடைய நிலைமை அந்த அளவிற்குப் பாதுகாப்பு இல்லாமல் இல்லை.

மீன்காரன் தோம்மாவின் மகள் ஒரு நாள் சொன்னாள்: “நாங்க ஏழைங்க...”

அதற்கு திரேஸ்யா சொன்னாள் : “நாங்க ஏழைங்கன்னாலும் இல்ல...”

அதன் அர்த்தம் புரியாமல் சாக்கோச்சனின் மகள் விழுந்து விழுந்து சிரித்தாள். மிடுக்கான குரலில் திரேஸ்யா திரும்பவும் அதைச் சொன்னாள்.

ஆமாம்? திரேஸ்யாவிற்கு மட்டும் அதன் அர்த்தம் தெரியும். வேற யாருக்கும் அது புரியாது.

ஒரு நாள் மதிய வேளையில் பள்ளிக்கூடத்தின் வாசலில் இருந்த மாமரத்திற்குக் கீழே திரேஸ்யாவும் அவளுடைய தோழிகளும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பேண்ட் வாத்தியத்தின் ஓசையைக் கேட்டு அவர்கள் படகுத் துறையை நோக்கி ஓடினார்கள். அது ஒரு திருமண ஊர்வலமாக இருந்தது.

திருமணம் முடிந்து தேவாலயத்தை விட்டு அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். மரியாவிற்கு அவர்களைப் பற்றித் தெரியும். அவள் சொன்னாள்:

“அது எங்களின் கிழக்குப் பக்கம் இருக்குற அன்னம் அக்கா. பையன். அமிச்சேரியைச் சேர்ந்தவன்.”

மணப் பெண் அவளைப் பார்த்தாள். மரியா சிரித்தாள்.

திரேஸ்யா கேட்டாள் : “வரதட்சணை எத்தனை சக்கரம்?”

“அதுவா? அது எவ்வளவுன்னு எனக்குத் தெரியாது” மரியா சொன்னாள்.

“வரதட்சணை எத்தனை சக்கரம்?”

திரேஸ்யா அந்தத் திருமண ஊர்வலத்தைப் பார்த்தவாறு என்னவோ நினைத்துக்கொண்டு ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள். அவள் இந்த உலகத்தில் இல்லை. அருகில் நடந்துகொண்டிருப்பது எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. அந்த பேண்ட் வாத்திய சத்தத்துடன் அவளுடைய மனம் இரண்டறக் கலந்துவிட்டிருந்தது.

சினேகிதிகள் எல்லாரும் போய்விட்டார்கள். சிறிது தூரம் போன மரியா பின்னால் திரும்பி நின்று திரேஸ்யாவை அழைத்தாள். திரேஸ்யா சுய உணர்விற்கு வந்தாள். அவள் தன் தோழிகளை நோக்கி ஓடினாள்.

ஒரு சினேகிதி சொன்னாள்: “அவ அங்கே கல்யாணத்தை நினைச்சு நின்னுக்கிட்டு இருந்தா.”

அப்போது வேறொருத்தி கேட்டாள்: “பையன் எந்த ஊரு?”

வேறொருத்தி கேட்டாள்: “வரதட்சணை எவ்வளவு?”

அதைக் கேட்டு திரேஸ்யாவிற்குப் பிடிவாதமும் கோபமும் உண்டாயின. அவள் அவர்களைப் பார்த்து வக்கனை காட்டினாள். அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

திரேஸ்யா சொன்னாள்: “எதுக்குச் சிரிக்கிறீங்க? எனக்கு வரதட்சணை இருக்கு. என் அப்பாவும், அம்மாவும் அதைத் தயார் பண்ணுறாங்க.”

திரேஸ்யா அங்கிருந்து நடந்தாள்.

வருடங்கள் சில கடந்தன. மாத்தச்சனின் தினசரி வரவு-செலவு கணக்கு கூடிக்கொண்டிருந்தது. அத்துடன் திரேஸ்யாவின் உடம்பும் மனமும் வளர்ந்தன. அவள் ஒரு இளம்பெண்ணாக ஆனாள். அந்தச் சேமிப்புப் பணத்தைத் திரும்ப வாங்குவதற்கான நேரம் நெருங்கியது. அவர்களைப் போன்ற ஏழைகளான பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் தன்னுடைய பிள்ளைகளைப் பற்றி அக்கறையுடன் இருந்ததைப் பார்த்து மாத்தச்சன் மிகவும் சந்தோஷப்பட்டான். தன்னுடைய மகளுக்கு ஒரு நல்ல கணவன் கிடைப்பான் என்பதில் அவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தான்.

மனைவியும், கணவனும் சேர்ந்து கணக்குக் கூட்டும் போது தூங்குவதற்காகப் படுத்திருந்த திரேஸ்யாவின் மனம் விசாலமான உலகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும். எங்கேயோ ஒரு ஆண் அவளுக்காக இருக்கிறான். அவன் எப்படி இருப்பான்? இப்போது அவன் என்ன செய்து கொண்டிருப்பான்? நல்ல ஆடைகள் அணிந்து தலையில் தொப்பி வைத்து கழுத்தில் தாலி கட்டுவதற்காகத் தேவாலயத்திற்கு அவன் வரும் காட்சியை அவள் கற்பனை பண்ணிப் பார்ப்பாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel